ஞாயிறு, 12 டிசம்பர், 2021

இரு கண்கள்

நேற்றைய வகுப்பில் எதிர்பாராத விதமாக ஒரு கருப்பு வெள்ளையில் பெண் ஓவியம் வரைய பயிற்சி சொல்லித் தரத் தொடங்கினார் ஆசான். காலதாமதமாக இணைந்ததால் வேக வேகமாக கருப்பு மசியினால் அளவுகளை குறித்துவிட்டு அவரைப் பின் தொடர வேண்டியிருந்தது. சமயத்தில் நம்மையும் அறியாமல் கீறப்படும் கோடுகள் சற்று சிறப்பாகவே வந்துவிடுவதுண்டு. ஓரளவு திருப்தி தரக்கூடிய அளவுகளை குறித்திருந்ததால் அடுத்து ஒளி நிழல் பிரிக்க அவ்வளவு கடினம் தெரியவில்லை, இருந்தாலும் படத்தின் சிறு பகுதியை வரைய இடமில்லாமல் போனது வருத்தம். இருப்பதை ஒழுங்காக்கிக் கொள்வது என்ற எண்ணத்தில் தொடர்ந்ததும் அவரோடு சேர்ந்தே வரைய முடிந்தது.



              நேற்று அவர் கூறியதற்கிணங்க பின்புலத்தில் என்ன வரையலாம் என்ற எண்ணம் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. கோயில் தூண், படிக்கட்டு, செடி என கட்டங்கள் விரிந்தாலும் வெறுமனே இலைகளை தீட்டி பின் இரு செம்பருத்திப் பூவினை வரைந்து விடலாம் என்று மதியம் அமர்ந்து முடித்ததும். அடுத்ததாக கண் மூக்கு வாய் இவற்றையெல்லாம் தனித்தனியாக வரைந்து பழக வேண்டுமெனெத்  தோன்றியது, அடுத்த வாரத்தில் இதைச் செய்து பார்க்க வேண்டும்.



இது தவிர நோக்கு முறையில் எதையேனும் செய்தாக வேண்டும் என்பதில் இந்த வாரம் எனது கையை அக்ரிலிக் வண்ணத்தில் வரைந்து பார்த்தது கீழே.


ஞாயிறு, 5 டிசம்பர், 2021

முடிவு முடியாதது

                             இந்த வாரமும் வண்ணத்தை பயன்படுத்தி ஏதேனும் செய்தேனா என்றால், ஆம் கொஞ்சம் முயற்சித்திருக்கிறேன் என்றே பார்க்க முடிகிறது. போன வார வகுப்பில் மாட்டு வண்டியை மையமாக வைத்து ஓவிய படைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய சவால், மாட்டையும் வண்டியையும் வரையும் வரை அதற்கப்பால் என்ன வரைந்து முழுமையாக்குவது என்பது மனதில் ஓடிக் கொண்டிருந்தாலும், வண்ணம் பற்றிய பயம் வேறு தொற்றிக் கொண்டது. மாட்டின் வண்ணம் வெள்ளையா, மஞ்சள் அல்லது பச்சை கலந்த வெள்ளையா என ஊடாடிய மனது வண்ணத்தில் கை வைத்ததும் மஞ்சளை தெரிவு செய்து வெள்ளையில் குறைவான அளவு கலந்து பூசத் தொடங்கியதும் இதுவல்ல சரியான வண்ணம், ஒருமுறை இதை பூசிவிட்டு பின் மாற்றிக் கொள்ளலாம், இதுவும் அதுவும் கலந்து நிறைவான நிறங்கள் வந்து சேரும் என்றொரு எண்ணம்.


                 அன்றைய வகுப்பிலேயே முடிக்க இயலவில்லை மறுநாள் காலையில் நேரம் ஒதுக்கி முடிக்க இயன்றது. அத்தனை துல்லியமாக வரவில்லையென்றாலும் பரவாயில்லை ஓரளவு வண்ணத்தில் படம் தெளிவாக வந்தது மகிழ்ச்சிதான்.

                 கடந்த வாரம் சொன்னது போல தொடர்ந்து தினமொரு உருவப் படங்களை வரைகிறேன், இது நேரடியாக தூவல் (பேனா) கொண்டு வரைவதால் கோடு பற்றிய பயம் தெளியத்தொடங்குகிறது, ஆரம்பத்தில் இப்படி தினந்தோறும் ஏதேனும் பொருளைப் பார்த்து நேரடியாக வரையும் பொழுதில் ஒற்றைக் கோட்டை பயன்படுத்தாமல் பல கீறல்களுக்கு பின்னே படத்தை நிறைவு செய்திருப்பேன் (https://pandianinpakkangal.blogspot.com/2021/11/Oviyangal.html). பொருள் பார்த்து வரைவதை தினப் பயிற்சியாக செய்து வந்தது இப்போது உருவப் படம் வரைவதால் நின்று போய்விட்டது, ஆனால் நிறுத்துவது நல்லதல்ல என ஒரு சிறு பொறி தட்டியது இந்த வார நாட்களில், தொடர்ந்து இதையும் சேர்த்தே செய்ய வேண்டும்.






                      வாரம் ஒரு முகமாவது வண்ணத்தில் தீட்டி பார்ப்பது நல்ல பயிற்சியாக இருக்கும், இது மிக மிக சொற்பமான எண்ணிக்கை (எண்ணிக்கை என்று சொல்லவே கூச்சமாக இருக்கிறது), அதிகரிக்க வேண்டும். நேற்று எதுவும் சிறப்பாக வரைந்து விட முடியவில்லை இன்று முடித்த ஓவியத்திற்கான அடிப்படை கோடுகளைத் தவிர. மழை நாட்களில் வெளியில் செல்ல இயலாமல் போனதால் பல்லாவரம் பூங்காவுக்கு கட்டாயம் செல்ல வேண்டிய நிலைக்கு குழந்தைகள் தள்ளியதால் அங்கு சென்று சில கிறுக்கல்கள் மட்டுமே வாய்த்தது.




                     இன்று மதியம் அமர்ந்து தோராயமாக நான்கு மணி நேரத்தில் தீட்டி முடித்த பெண்ணின் முக ஓவியம் தொடக்கத்தில் தடுமாறவைத்தது, வேறென்ன வண்ணம் தான் பூச்சாண்டி காட்டுகிறது. ஆனால் முதல் முறை பூசும் பொழுது இருந்த கலக்கம் இரண்டாவது முறையில்லை. சோதனைதானே எல்லாம் என்ற எண்ணம் தொடர்ந்து நிறங்களை குழப்பி அப்பிவிடச் சொன்னது, போதுமைய்யா கரிக்கோல் மட்டுமே பயன்படுத்தி வரைந்து விட்டு போயிரலாமென இன்றும் தோன்றியதில் வியப்பேதுமில்லை, ஆனால் அதற்காக விட்டு விட முடியுமா. தூரிகையை கீழே வைத்து விட்டு தூரமாக சென்று சில நிமிடம் பார்த்துவிட்டு பின் வரைய உட்கார்ந்ததும் தூரிகை நிறங்களை பரப்புவதை கவனிக்கத் தொடங்கி ரசனை வளரத்தொடங்கியது. முடிவு முடியாதது.

அக்ரிலிக் ஓவியம் (Acrylic Painting)


வரும் வாரம் முதல் ஒரு ஓவியரை பற்றிய சிறு குறிப்பையும் அவர்களது ஓவியம் தரும் அனுபவத்தையும் பகிரலாம் என்றிருக்கிறேன்.