ஞாயிறு, 25 டிசம்பர், 2022

மழை

அவரவர் மழை
அவரவர் தலைக்கு மேல்
சிலருக்கு மனதுக்குள் 

புதன், 21 டிசம்பர், 2022

உன் குரல்

யார் யாரோ
வரைகின்ற ஓவியத்தை
எப்போதும் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்
உன் குரல் ஒதுங்கும் ஓவியத்தை
நீயே அடைந்துகொள்

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

முகங்(கலை)தல்



 கலை அப்படின்னா என்ன அதுவொரு மாய உலகமா எளிதில் எட்டி விடாதா தொலை தூரத்தில் உள்ளதா, எது கலைப் படைப்பு எதனால் அது கலைப் படைப்பாகிறது, எது அழகு எதனால் அது அழகு , எந்த இடத்தில் கலை உருவாகிறது யார் உருவாக்குகிறார்கள் என பலதரப்பு கேள்விகள் நம்மைச் சூழலாம் அல்லது இவை எதுவும் என்னவென்றே அறியாது ஒதுங்கி நிற்கலாம் அப்படி நிற்பதில் கூட கலைக்கான செயல்பாடு எதாவது இருக்குமானால் இருக்கலாம் அதை அறியாததால் என்னவென்றே தெரியாததால் அது காற்றில் கலந்து விடுகிறது அந்த காற்றை எல்லாருமே உள்ளிழுப்பதால் யாருக்காவது அதாவது கலை பற்றிய தேடலில் வானத்தைப் பார்த்து புலம்பிக் கொண்டிருக்கும் உயிரான ஒன்று அதை இழுத்துக் கொள்வதால் ஒரு புன்னகையில் அக்காற்றை வெளியிடுகிறது அல்லது வேக வேகமாக தாளை எடுத்து எதையும் எழுதவோ வரையவோ துணியாமல் மீண்டும் வானத்தையே பார்க்கத் தொடங்கினால் வேரொரு உயிர் தூரிகையால் வண்ணங்களை குதப்பி அப்புகிறது என்னவென்று கேட்டால் தெரியவில்லை என உரத்துச் சிரிக்கிறது வேறு சில அவ்வுயிரியை நவீனம் என்கிறது. நவீனம் பெருங் குழப்பமடைந்து ஆமாம் ஆமாம் என்று தான் தெரியவில்லை புரியவில்லை எனச் சொன்ன வண்ணங்களுக்கு புது மொழி பெயர்ப்பு செய்கிறது, ஆமாம் எழுத்தைத் தானே மொழி பெயர்ப்பார்கள் இதுயென்ன ஓவியத்தையும் பெயர்க்கிறது. கலை என்பதற்கு வடிவம் எதுவுமில்லை அதுவொரு உணர்ச்சிக் கடல் அது எந்த உயிருக்கும் உண்டு இன்னாருக்கு உண்டு இன்னாருக்கு இல்லை என்று எதுவுமேயில்லை. வரைவதும் எழுதுவது இசைப்பதும் நடிப்பதும் ஆடுவதும் மட்டுமே கலையா. கனவிலும் உணர்வுண்டு கழிப்பறையிலும் உணர்வுண்டு என மேம்போக்காக சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால் பொது உயிரிகளிடம் பேசும் போது முகஞ்சுழிக்கக் கூடுமாகையால் இன்னும் கொஞ்சம் விளக்கியும் விலக்கியும் கூறவேண்டியதாகிப் போகிறது. அந்த உயிரி வரைந்த கரிக்கோல் ஓவியத்தை இரண்டு நாள் கழித்து பார்த்துவிட்டு இதை ஏன் வரைந்தேன் என நொந்தது, மீண்டும் ஒரிரு மாதம் கழித்து அதே ஓவியத்தை பார்த்ததும் அதிலுள்ள கோடுகளெல்லாம் தெரிந்தது அட இந்தக் கோடு எவ்வளவு ஒயிலாக திசை மாறுகிறது என்றெல்லாம் தனக்குத் தானே கேட்டுவிட்டு இணையத்தின் ஊடாக சில ஓவியங்களை பார்க்கிறது அங்கேயும் கோடுகளை மேய்கிறது, அப்பாடா என்று இன்னும் சில முகங்களை கோடுகளாக்குகிறது. ஆமாம் எது கலை எது அழகு எது படைப்பு.







புதன், 17 ஆகஸ்ட், 2022

தொடர் வரைவு ஏழும் புத்தகங்களும்

ஒவ்வொரு நாளும் வேறு வேறு ஓவிய வகைமைகளை வரைந்து பார்க்க வேண்டுமென்று நேற்று காலையில் ஒரு எண்ணம் விரிவடைந்தது. முகம், முழு உருவம், நோக்குநிலையில் காணும் பொருளை அல்லது இடத்தை வரைவது, அரை மணி நேரத்தில் ஒரு வண்ண ஓவியம் என ஒரு நாளுக்கு ஒன்று என வரைந்து பார்க்கலாம்.

முகத்தை படம் பார்த்து வரைந்துவிடலாம். கற்பனையிலும் அதேபோல வரைந்து விடலாமே என்று தான் மனத்தில் தோன்றும், ஆனால் உண்மை அப்படியிருப்பதில்லை, கண் மூக்கு வாய் காது தாடை நெற்றி என வரைந்து விட்டாலும் அதை முப்பரிமாண எல்லைக்குள் இழுத்துச் செல்லவும் பயிற்சி வேண்டும். இதற்கு மனித முகம் மற்றும் உருவ அமைப்புகள் குறித்த ஓரளவு புரிதல் இருக்க வேண்டும். எல்லாம் இருப்பது போல் இருந்தாலும் அதிலொரு மேதமை வடிவத்தை உருவக்கத் தேவையான அடிப்படை புரிதலை அடைய வேண்டும், அதற்கான தினப் பயிற்சியாக ஒளி நிழல் பிரித்து முப்பரிமாணத்தை குறுகிய கோடுகளில் அழைத்துவரும் முயற்சி.

நேற்று வரைந்த இவ்விரண்டு முகங்களும் கற்பனை முகங்கள் மற்றும் சில அடிப்படை புரிதலுக்கு என்னை ஆட்படுத்திக் கொண்டு ஒளி நிழல் பிரித்துப் பார்த்தேன், அவ்வளவு துல்லியமாக வரவில்லையென்றாலும் சுமாராகவும் வரவில்லை என்பதே எனது எண்ணம். இதே முறையினை வண்ணத்திலும் பயன்படுத்திப் பார்க்க வேண்டும்.





இப்பதிவு எழுதும் சில நிமிடம் முன் வரைந்தது, போன வாரம் குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்த போது எதேச்சையாக ஒரு கருப்பு தூவல் (பேனா) கண்ணில் பட்டது (Goldex என்று அதன் மீது எழுதியிருக்கிறது, இதுவரை பார்த்திராத கேள்விப் படாத நிறுவனம்), எதிர்பார்த்ததை விட நன்றாகவே இருக்கிறது படம் வரைவதற்கு. எங்கள் வீட்டு அலமாரியில் ஓவியங்களை வைக்க இடம் கொடுத்து கட்டிலில் காத்திருக்கும் கனவான்கள் இப்புத்தகங்கள். தடித்த புத்தகங்களுள் பாகீரதியின் மதியம் மனதுக்கு மிக நெருக்கமான புதினம். பக்கங்கள் அதிகமானாலும் அது கொடுக்கும் பயணம் பேரானந்தம்.



திங்கள், 8 ஆகஸ்ட், 2022

தொடர் வரைவு ஆறு

 இன்று காலை எழுந்ததும் சாரல் பொசுங்கி தெரு மெல்ல தன் மீது நீர் மொட்டுக்களை கோலத்தின் புள்ளியாக்கி பரப்பியிருந்தது பார்வையில் விழவும் வெளியே செல்ல மனமின்றி வாசிக்கலாம் என மூன்றாவது வரியில் இருந்தபோது மூடிவிட்டு நடக்கப் போய்விட்டு வந்ததும் ஒரு கையளவுள்ள வரைவுத்தாளில் எதிரேயிருக்கும் புங்க மரத்தைக் கண்டேன்.


படம் ஒன்றை கண்டு வரைந்தது இவ்வம்மாவும் இக்குழந்தையும்.

கொரோனா முடக்கத்திற்கு பிறகு இரு ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணாநகர் கோபுரப் பூங்காவிற்கு (tower park என்று சொல்வார்கள்) சென்று ஆசானும் நானும் நேற்று வரைந்தோம். இது என்னுடைய பங்களிப்பு. 

கடந்த பதிவில் எண்ணெய் ஓவியம் வரையத் தொடங்கி விட்டதாக பதிவிட்டிருந்தேன் அதன் அடுத்தடுத்த படிநிலையில் நேற்று வரையிலான படம். கோட்டு வரைவுக்குப் பின் முதல் நிலை வண்ணமிடுதலை நேரலையில் முகநூலில் காண்பித்திருந்தேன். அதற்கான சுட்டி https://m.facebook.com/story.php?story_fbid=757354832152752&id=100000025390787

இன்று காலையில் கொஞ்சம் வரைந்திருந்தேன், நாளை இதன் அடுத்த கட்டத்தினை பகிர்கிறேன். 



வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

தொடர் வரைவு ஐந்து இயலோடு

 இன்று இயல் (இளைய மகள்) பள்ளிக்குச் செல்லாததால் தானும் வரைவேன் என தூவலை (பேனா என்று சொன்னால், இல்லப்பா இது தூவல் என்பாள் தமிழில்) எடுத்துக் கொண்டாள், உருவப்படம் ஒன்றை தினந்தோறும் வரைவது போல தொடங்கினேன், அவளும் அதையே வரைவேன் என ஒவ்வொரு கோடாக என்னோடு வந்தாள்.

அவளுக்கு அது சோர்வை தந்தவுடன், எனக்கு பிடித்ததாக வரையலாம்பா என்றவளிடம் நாய் குட்டி வரையலாம் என்று ஒரு பஞ்சு போல் இருந்த குட்டியை தேர்வு செய்து, தொடங்கினோம், என்னப்பா உனக்கு வரையவே தெரியல, என்னைய பாரு அழகா வரஞ்சிருக்கேன் என்று சிரித்தாள். படம் பார்த்து வரைய வேண்டாம் என முடிவு செய்து வலது பக்கமிருக்கும் இரு சின்ன உருவங்கள் அவள் கண்களை மூடிக் கொண்டு வரைந்தவை. இன்னொரு படம் இருவரும் கண்களை மூடி வரையலாமா என்று கேட்டதும் குதூகலமானாள்.


அடுத்த பக்கத்தில் முதலில் அவளும் பின் நானும் கண்களை மூடி வரைந்து பார்த்தோம். அவள் வரைந்ததன் பக்கம் பெயர் எழுதச் சொன்னதும் இயல் என எழுதிய பின் நான் வரைந்ததன் மேல் என்னுடைய பெயரையும் அவளே "பா" வுக்கு துணைக் கால் உண்டாப்பா என ஒவ்வொரு எழுத்தையும் கேட்டு எழுதினாள்.




வியாழன், 4 ஆகஸ்ட், 2022

தொடர் வரைவு நான்கும் - கல்வியும்

 பொதுவாக நாம் எல்லோரிடமுமே (அரசியல் கட்சியின் பக்தர்கள் தவிர்த்து) அரசாங்கம் பற்றிய ஒவ்வாமையும், அரசின் திட்டங்களை பெற்றுக் கொள்வதிலிருந்து ஒதுங்கும் தன்மையும் இருக்கும். அரசாங்கப் பள்ளியில் படிப்பதற்கு பணம் கட்டத் தேவையில்லையாமே என்று ஒருவர் கேட்டதும் எனக்கு பரிதாபமாக இருந்தது அவரின் நிலையை எண்ணி, இது ஒவ்வாமையில்லை முற்றிலுமாக அறியாமை, அவ்விடம் விட்டு அவர் கிளம்பும் போது அவரது இரு சக்கர வாகனத்தில் காவல் என ஆங்கிலத்தில் எழுதியிருந்ததை கவனித்தேன், பரிதாபம் மேலும் கூடிவிட்டது. இப்பாது அரசு பள்ளிகளில் குழந்தைகள் சேர்வதற்குச் சென்றால் நேரடியாக ஆங்கில வழி வகுப்பிலேயே அமர்த்தி விடுவார்கள் என்றே தோன்றுகிறது, இரு வருடம் முன்னர் ஆங்கில வழியில் அரசு உதவி பெறும் நான் படித்த பள்ளியில் படிக்கும் நண்பனின் மகள் புத்தகத்தை காணும் போது அதிர்ச்சி, ஆங்கிலத்தில் இருப்பதை இப்பிள்ளைகள் வாசிக்க தமிழை ஆங்கிலத்தில் அச்சிட்டிருந்தார்கள், இது என்னடா நம் பிள்ளைகளுக்கு வந்த சோதனை என்று மனம் புழுங்கியது.

இப்பாது அதே போன்ற புத்தகம் கிடைக்குமா என இணையத்தில் தேடிப் பார்க்கிறேன் கிடைக்கவில்லை. நேரடி வகுப்பில் கொடுத்திருக்கிறார்களா எனக் கேட்டுப் பார்க்க வேண்டும்.




நேற்று ஒரு எண்ணெய் வண்ண ஓவியம் தொடங்கியிருக்கிறேன், அதன் முதல் கோட்டு வரைவு கீழே.

தொடர்ந்து இதன் அடுத்தடுத்த வரைவுகளை பகிர்கிறேன்.



புதன், 3 ஆகஸ்ட், 2022

தொடர் வரைவு -3ம் வண்ணதாசனும்

ஏன் வண்ணதாசனை எப்போதுக்குமான வாசிப்பில் வைத்திருக்கிறேன் என்று எண்ணுவதுண்டு, முதன்முதல் ஒரு சிறுகதை புத்தகம் என்று வாங்கியது அவருடைய ஒரு சிறு இசை தொகுப்புதான், 2013 அல்லது 14 ஆக இருக்கக்கூடும். அடர்த்தி குறையாத எழுத்து ஓட்டம், கவிதைகளை கையோடு கொண்டுவரும் உரைநடை, தேவையற்ற சொல் என்று எதுவுமே கதைகளில் தென்படாத எழுத்து உபசரிப்பு. எதுவுமற்ற குடத்தில் நீர் நிரப்புவது போல மனதில் நினைவுகளை பரப்பும் அவரது காட்சிகள். கடந்த ஒரு மாதமாக விளையாட்டாக ஏதேனும் ஒரு பக்கத்தை புரட்டி அதிலிருந்து வாசிக்கிறேன், அவை கோடுகளாக வண்ணங்களாக என் மீது படர்கிறது. ஆழ்ந்த ஒரு மூச்சிக் காற்று எனது தேவையாகிறது.


இன்றைய தொடர் வரைவில் முகமும் உருவமும். நேற்று ஒரு எண்ணம், ஏன் ஒரு முகம் எப்படி வரைய வேண்டும் என்பதை ஒவ்வொரு படியாக இந்த வலையில் வரையக் கூடாது என.





செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

தொடர் வரைவு -2ம் கொஞ்சம் வாசிப்பும்

நேற்றைய தொடர்ச்சியாக இன்றைய பதினைந்து நிமிட கோட்டு வரைவுகள்.

முகத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க இயலாது என எண்ணிக் கொண்டேயிருந்தது மனது, முழு உருவம் வரைவதில் இன்னும் சிக்கல் இருக்கிறது.




இப்போது ஒரு எண்ணெய் வண்ண ஓவியமொன்றும் வரைந்து கொண்டிருக்கிறேன், அதன் முதல் கோட்டு வரைவும் நிறமும் சரவணன் அண்ணன் (ஆசான்) முடித்துவிட்டு, என்னிடம் அதன் அடுத்த அடுக்கினை வரையச் சொல்லி கொடுத்து மாதம் இரண்டிருக்கும், இன்னும் அப்படத்திலுள்ள தெப்பத்தின் தாமரைகளை வரைய வரைய மாற்றிக் கொண்டேயிருக்கிறேன் முடிந்தபாடில்லை, இந்த வாரத்திற்குள் முடிக்க வேண்டும். இந்த ஓவிய அனுபவம் பற்றி கொஞ்சம் எழுத வேண்டும் என எண்ணமுள்ளது.


வாசிப்பு: போன வாரம் இறுதியில் தொடங்கிய புத்தகம் "கூவம் நதிக் கரையினிலே" பத்திரிக்கையாளர் அல்லது எழுத்தாளர் சோ எழுதியது, அரசியல் நையாண்டி இதுபோல் யாராலும் எழுத இயலுமா என்று தெரியவில்லை. தமிழக இந்திய கட்சிகளையும் திரைப்படம் உருவாகும் விதத்தையும் எள்ளி நகையாடியிருப்பது வாசிக்க வேடிக்கையாகவுள்ளது. துக்ளக் பத்திரிக்கை ரசிகர்களை படு பயங்கரமாக சிரிக்க வைத்திருப்பார் போலத் தெரிகிறது.

திங்கள், 1 ஆகஸ்ட், 2022

தொடர் வரைவு

ஒவ்வொரு நாளும் எதையாவது வரைய வேண்டுமென்று இருந்தாலும் தொடர் பயிற்சியாக எதையாவது செய்ய வேண்டுமென்று அவ்வப்போது மனதில் எழுதும் போதெல்லாம் அது ஓரிரு நாளில் ஆழ் மனதுக்குள் சென்று படிந்து கொள்ளும்.
இனி...

அதிகப்படியாக பதினைந்து நிமிடத்தில் ஒரு கோட்டு வரைவை முயன்று பார்க்க வேண்டும், இந்த வரைவை மூன்று வகையாக பிரித்து வரையலாம். முதலில் முழு மனித உருவம் இரண்டு அதன் சரியான அளவில் வரைய வேண்டும் (ஒவ்வொரு பதினைந்து நிம்மிடத்திற்கும் ஒரு படம் என்று எண்ணியிருந்தேன், இன்று வரைந்து பார்த்த போது இரண்டையும் இந்த குறிப்பிட்ட நேரத்தில் வரைந்து விட முடிந்தது), அடுத்த பதினைந்து நிமிடத்தில் அப்படங்களை மெருகேற்ற முயற்சி செய்து பார்க்கலாம்.

இரண்டாவது முகம், எவருடைய முகமாகவும் இருக்கலாம் அதே 15 நிமிட நேரத்தில் முடிக்க வேண்டும். மூன்றாவது ஒரு கோட்டு வரைவு சுற்றியுள்ள எதையேனும் நேரடியாக கண்டு வரைதல். இன்று அடுத்தடுத்து வரைய நேர்ந்ததால் கொஞ்சம் பொறுமை இழந்தது போலத் தெரிந்தது, நாளை சற்று இடைவெளி விட்டு வரையலாம் என்று எண்ணுகிறேன்.

இதனால் என்ன பயன் என்பதையும், தோன்றும் எண்ணங்களையும் குறித்து எழுத முயற்சிக்கிறேன்.



புதன், 8 ஜூன், 2022

நீர் நிலம் வனம் - கடல்

கடலை கடலோடியிடம் விட்டுவிடுங்கள் எனும் வறீதையா கான்ஸ்தந்தின் குரல் காது வழி மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மீனவன்னு செய்தில எழுதுறீங்களே அதுவே தப்பு நாங்கள் கடலோடிகள் என்பவரது குரலை மறுக்கவும் மறக்கவும் இயலுமா. ஒரு நகரத்தாளுக்கு ஒட்டுமொத்த விவசாய நிலத்தையும் விவசாய நிலமாகவும், கடல் சாராத ஆளுக்கு ஒட்டு மொத்த கடலும் ஒரே கடலாகவும் புரிதலுக்குள்ளாக வாய்ப்பிருப்பதும் அதை நாம் அல்லது குறைந்தபட்சம் இந்நாட்டின் அரசு அறியாதிருப்பது எவ்வளவு அயற்சியானது.

ஒவ்வொரு விவசாய நிலமும் வெவ்வேறு பண்புகளைக் கொண்டிருப்பது போல் கடலிலும் பல பண்புகள் நிறந்த பகுதிகள் இருப்பதை இந்த நூல் வாசிப்பிற்கு பிறகே அறிதலுக்குள்ளாகிறது. கடலில் மிதப்பது படகு அல்லது கப்பல் என்பதைக் கடந்து அதன் உண்மையான பெயர்கள் புலப்படவும் கடலோடிகளின் வாழ்வைப் புரிந்து கொள்ளவும், கடல் வாணிபத்தில் கொழிக்கும் மனிதர்களையும், இலங்கை ராணுவம் ஏன் கடல் எல்லை தாண்டியதாக தமிழர்களைச் சுடுகிறது, கச்சத்தீவை ஏன் இலங்கை ஈர்த்துக் கொண்டது, தமிழ் நிலத்திற்கும் இலங்கைக்குமுள்ள ஆதி உறவு  மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் நிலமும் கொண்டிருக்கும் வெவ்வேறு பண்புகளை உணர்ந்து கொள்ளவும் மிகப் பெரும் உந்துதலை வழங்குகிறது இந்நூல்.

கடல் புறத்தில் சுற்றுலாவை மேம்படுத்தினால் கிடைக்கும் பொருளாதாரத்தில் அங்கிருக்கும் பெரும் சுரண்டல் ஆலைகளை இல்லாமல் ஆக்கிவிடலாம் எனும் கடலோடியின் குரலை கேட்பாரில்லை என்றே தோன்றுகிறது. 

எங்கிருந்து நம் நிலங்களுக்கான விடுதலையை சுய பண்புகளை வளர்த்தெடுக்க வேண்டும் என எண்ணும் போது நமது கல்வி முறையில் உரிய மாற்றங்களைச் செய்யாமல் இது சாத்தியமில்லை, எப்படி ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்த பண்பிருக்கிறதோ அதை அடிப்படையாகக் கொண்டு அந்தந்தப் பண்பிற்கேற்ற பள்ளிக் கல்வியை ஊக்குவிக்கவும் உருவாக்கவும் வேண்டும். ஆனால் நாம் ஒற்றை கல்விக் கொள்கை எனும் சுருக்கும் கயிற்றில் தொங்கத் தொடங்கிவிட்டோம்.

கொற்கை புதினம் வெளியான நாள்முதல் அதை எப்படியும் வாங்கி வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும் போதெல்லாம் அதன் விலை மீது மாறாத பயமொன்றை சுமந்து கொண்டிருந்தேன். அந்தச் சுமையை புறந்தள்ளி வாசிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் நிற்கிறேன்.



ஞாயிறு, 22 மே, 2022

க(ன்)னி

எட்டாத கனியொண்ணு
ஏக்கமா தொங்குதாம்
தோரணத்து இலை பறிக்க
வந்தவன் கை 
வச்சவொடனே
உனக்கு கனி கேக்குதோ
கால்வாய் படியில
கன்னி கண்ட 
கண்ணுக்கு கனி 
இனிக்குமோன்னு மாவிலை
சலசலத்ததாம்
யாரு யாருன்னு
இவனுக்கு வேத்துப் போனதும்
காயொண்ண பறிச்சி
காம்புப் பால் வச்சி
"க(ன்)னி"ன்னு மரத்துல எழுதிட்டு
ஓடிட்டானாம்

வியாழன், 28 ஏப்ரல், 2022

ஓவியம் தொப்புள் கொடி உறவு

 எல்லாருமே வரையக் கூடியவர்கள் தான் ஆனால் அதைத் தொடர்வதில்லை, வரைதல் என்பது தொப்புள் கொடி உறவு போல நம்மாடு பிணைந்து இருப்பதுதான் என்றாலும் அந்த இணைப்பு பற்றிய சிந்தனை நம்மில் பலரிடம் மறைந்து ஒழிந்து கொள்வதுண்டு. சிலருக்கு அதைப் பற்றிய எண்ண ஓட்டங்கள் ஏதேனும் ஒரு வடிவில் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். வெளிப்படுதல் என்பது பெரிய பெரிய ஓவியங்கள் தீட்டுவதோ அதை காட்சிக்கு வைத்து பெயர் அறியச் செய்வதோ அல்ல. யாரிடமோ அலைபேசியில் பேசும் பொழுதில் எவ்வித புற அழுத்தமும் இன்றி காகிதமொன்றில் கிறுக்குவது கூட ஒரு வகையான வெளிப்பாடு என்றே கருதலாம்.

இந்த கிறுக்கல்கள் அளிக்கும் நம்பிக்கை வரைதல் நோக்கிய அடுத்த தளத்திற்கு நம்மை அழைத்துச் செல்லலாம் அல்லது இப்படி கிறுக்குவதே ஒருவித வெளிப்பாடாகி அதில் பல்வேறு முயற்சியை அலைபேசியில் பேசாத  வேறொரு தனிமை பொழுதில் உருவாக்கிப் பார்க்கும் எண்ணமும் ஏற்படலாம். இதற்கு எல்லையில்லை.

ஒருவேளை அடுத்த கட்ட நகர்வு ஒன்று அமைய நேருமானால் நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கும் என்பதை எப்படி மதிப்பீடு செய்வது, எப்படி வரையத் தொடங்குவது என்ற கேள்விகள் எழும். இதற்கு ஒரே விடை முறையாக ஒரு ஆசானிடம் பயிற்சி பெற்றுக் கொள்வதேயாகும். இன்றைய காலம் நமக்கு அள்ளிக் கொடுக்கும் தகவல்கள் ஏராளம், அவையெல்லாம் முறையாக ஒழுங்கு படுத்தப் படுமானால் அதைவிடப் பெரிய ஆசான் இருக்க இயலாது,  ஆனால் இவ்விடம் நமது பலகீனம் ஆற்றல் மிக்கதாக ஆகிவிடக் கூடிய வாய்ப்பு அதிகம் என்பதால் பலம் வலுவிழந்து விடலாம்.

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

வடக்கனிக்கி போன மேகத்த

வெட்டவெளி வானத்துல
போற ஒத்த மேகத்துட்ட
கேட்டானாம் எங்க
போறன்னு
போக்கு தெரிஞ்சா
பொலம்பலுக்கு ஆளாவேனோன்னு
பொசுங்கிச்சாம்
இப்பிடி அழுவுதியே
பொலம்பல்ல இது சேராதான்னான்
போடா போக்கத்த பயலேன்னு
வடக்கனிக்கி போன
மேகத்த கூப்புட்டு 
சொன்னானாம்
கிழக்கனிக்கி போனா
செத்தேன் சொகமாயிருக்கும்லா

திங்கள், 18 ஏப்ரல், 2022

ஆளில்லா காடு

ஆள் அரவமில்லா காட்டுக்குள்ளே
சருகு ஒண்ணு முணுமுணுத்துச்சாம்
யாருடே அதுன்னு
பதிலொலிக்க ஆளில்லாம
பரிதவிச்சிக் கெடந்தத
காலொண்ணு மிதிச்சிப் போனதாம்
மிதிச்ச காலுக்கு
கண்ணில்லயாக்கும்னு கேக்கத்தான்
தெசையில்ல
லெக்கு தெரியாம பறந்து வந்த
பச்சயெலையொண்ணு
காம்போரமா கண்ணீர
ஊத்துதாம்
ஒக்கிட ஆளில்லாம
ஓஞ்ச மரத்துல
ஒடிஞ்ச இலை நான்னு
ஒப்பாரி வச்சிதாம்
ஒலுங்கொண்ணு
ஒய்யாரமா இலைய
பாத்துக் கேக்காம்
இரத்தமுள்ள ஆளில்லயாக்கும்னு 

வியாழன், 14 ஏப்ரல், 2022

தபால் நிலையத்தில் ஒழிந்துகொண்ட கோடுகள்

எப்போதும் மாதத் தொடக்கத்தில் கேட்கப்படும் கேள்விகள் ஒலிக்காமலிருப்பது செயலை நாட்கள் கழித்து செய்ய வைக்குமென்பதில் பிசகு இல்லை. வழக்கத்திற்கு மாறாக தபால் நிலையத்தில் பணம் செலுத்தும் காகிதத்தில் தமிழும் மறுபக்கம் ஆங்கிலமும் கடந்த இரு மாதங்களாக பார்க்க முடிகிறது. அதை பார்த்த பின்னர் வீட்டிற்கு எடுத்துவந்து எழுதிச் செல்லும் பழக்கமும் ஒட்டியிருக்கிறது. நேற்று எழுதுகையில் "என்ன தேதி எழுதாம வச்சிருக்கு" என மாதாமாதம் ஒலித்து இம்மாதம் ஒலிக்காத கேள்விகளின் குரல் கேட்டது. "சமயத்துல கணினி பழுதாயிரும்லா" எனச் சிரித்துக் கொண்டேன். ஒற்றை ஆள் மட்டுமே அந்த அம்மா இருக்கும் மேசையை எட்டிப் பார்க்க இன்று வேலை எளிதாக முடிந்துவிடுமென எண்ணி நுழைந்து இரண்டு வருடங்களுக்கு பிறகு முகக் கவசமில்லாத எனது கற்பனைக் கோடுகள் எங்கோ ஓடி ஒழிந்துகொண்ட அம்முகத்தில் அரசு அலுவலகத்தின் சலிப்பு மட்டும் தீராமல் "அரைமணிநேரம் கழிச்சி வந்து பாருங்க, ஒண்ணும் வேலை செய்யல" . "குடுத்துட்டு போகட்டுமா" எனக் கேட்கவும் "அதெல்லாம் இனிமே கிடையாது" சலிப்பு.

ஆதார் அட்டை பதிவு செய்ய தனியாக கணினி அச்சுப்பொறி என எல்லாம் இருக்கும் மேசை போர்வையா பொன்னாடையா என ஊகிக்க இயலாத துணியால் மூடப் பட்டிருந்தது அதற்குள் அகப்படாமல் கணினிக்குரிய விசைப்பலகையும் அதன் மேலிருந்த பத்து ரூபாய் நாணயமும் புழுதியால் பிணைந்திருந்தது. முகக் கவசத்தை இழுத்து இழுத்து கொட்டாவியை வெளிநடப்பு செய்த அதே அம்மாவிடம் இன்று ஒருமணி நேர காத்திருப்பிற்குப் பிறகு சேமிப்பு புத்தகத்தை நீட்டினேன். எப்படியோ இன்று அச்சுப்பொறி வேலை செய்ததை எண்ணி மகிழ்கையில் முகக்கவசமில்லாத பெண் தபால் காரரை பார்த்ததும் கோடுகள் ஒழிய இடம் தேட மறுத்தது.

செவ்வாய், 29 மார்ச், 2022

வலி - விமலாதித்த மாமல்லன்

ஒரு சிறுவனின் பார்வையில், அவனுடைய சென்னையிலுள்ள தாத்தாவை காணப் போகும் பயணத்தை எண்ணி குதூகலித்து தன் பக்கத்து வீட்டு அக்காவிடமும் தன் நண்பனிடமும் பகிர்ந்து மகிழ்பவனுக்கு அப்பாவிடமும் அம்மாவிடமும் அக்குதூகலத்தை காணாதது கண்டு வியப்பிற்கும், தனக்குள் எழாத அல்லது எழுந்த விசாரணைக்கும் பதிலாக தனது தாத்தாவை காண்பதே கதையின் முடிச்சு.

பயணம் என்றதும் சிறுவர்களுக்கு ஏற்படும் குதூகலமும், அதனை தனது பக்கத்து வீட்டு உறவுகளுக்கு தெரிவித்து பெருமையடித்துக் கொள்வது. சன்னல் வழியாக நண்பன் வீட்டை எட்டிப் பார்ப்பதும், அக்காவிடமான உரையாடலும் அவள் அன்பின் வெளிப்பாடாக இவனுக்கு கிடைக்கும் முத்தமென அழகியல் வடிவங்களுக்கு அப்பால் தலைப்பை சுமந்து நடக்கும் கதை எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனின் வலி சிறுகதை. 

இதற்கு பிறகு அச்சிறுவன் தனது தாத்தா பற்றிய பிம்பத்தை எப்படி மறு கட்டமைப்பு செய்வான்அத்தை பற்றிய எண்ணங்களை எப்படி வடித்துக் கொள்வான் என்பதில் மனம் சற்று மௌனித்துக் கிடக்கிறது.