திங்கள், 10 நவம்பர், 2025

பாதுகாப்பான இருள் தேவை

தொலைவிலிருந்து பார்க்கும்போது அந்தப் பையன் சுவரில் ஏதோ எழுத முயற்சிக்கிறான் என்றெண்ணும் போதே அருகில் வரவும் பார்த்த காட்சி நகைப்புக்குரியதாக இருந்தது. அவனது தோழியா காதலியா எனத் தெரியவில்லை அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல தேர்ந்தெடுத்த இடம் சென்னை திருச்சி நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள துணைச் சாலை (தரப்பாக்கம்). மேம்பாலச் சுவரில் வண்ணச்சரிகை தாள்கள் கொண்டு இரண்டடி கால்வாய்க்கு இப்புறம் நின்று தோராயமாக அறுபது டிகிரி கோண‌அளவில் சாய்ந்து பணி செய்து கொண்டிருந்தான். உடன் வந்த பெண் உற்சாகத்தில் துள்ளிக்குதிக்க காத்திருந்ததுபோலத் தெரிந்தது.

பக்கத்திலோ தூரத்திலிருந்தோ  வீடுகளில் சேகரித்து வந்த மலக்கழிவுநீரை இந்த கால்வாயில் தான் திறந்துவிடுகிறார்கள். இவர்கள் அறியாத மற்றொரு பகலில்.

இரவில் இந்த சாலையில் குறிப்பிட்ட இடைவெளியில் பல இணைகளைப் பார்க்கமுடியும். சிலர் வண்டியின் முன் விளக்கை ஒளிரவிட்டு ஒளிந்துகொண்டு பேசிக் கொண்டிருப்பார்கள் (அப்படியே கற்பனை செய்து கொள்ளலாம்). இவர்களுக்குப் பாதுகாப்பான இருளை அமைத்துக் கொடுக்க வேண்டிய கடமை நம் குமூகத்திற்கு உள்ளதாக எண்ணவேண்டியிருக்கிறது அவ்வளவுதான்.

சனி, 4 அக்டோபர், 2025

சுதேசி எனும் பரதேசி

சுதேசி என்ற சொல்லை விளம்பரங்களிலும் சில தனிநபர்களிடமும் கடந்த சில நாட்களாக பார்க்கவும் கேட்கவும் செய்கிறேன். இன்றொரு செய்தித்தாளில் கண்டது நகைப்புக்குரியதாக இருக்கிறது, 110 பேருந்துகளைப் பயன்படுத்தி சுதேசி என்ற சொல்லை ஆங்கிலத்தில் உருவாக்கி மகிழ்ந்திருக்கிறது ஒரு ஆங்கிலப் பள்ளி. ஒரு சுதேசியாக எப்போது இவர்கள் தாய் மொழிக் கல்விக்கு மாறுவார்கள் என்ற சிந்தனை தொக்கி நிற்பது ஒரு பக்கம். கொஞ்சம் புத்திக்கு உரைத்திருந்தாலோ அல்லது எறும்பளவு மூளையில் இடமிருந்திருந்தாலோ தன் தாய்மொழியில் எழுதி மார்தட்டிக் கொண்டிருக்கலாம் ஆனால் அதற்கு வாய்ப்பில்லாமல் பரதேசியாக மாறியிருக்கிறது நம் தமிழ் மனம்.