வியாழன், 27 ஜூலை, 2017

சித்திரங்களில் விசித்திரங்கள் - வாசிப்பு

வெர்மரின் ஓவியங்கள் பற்றிய கட்டுரையை வாசிக்கும்முன் "Girl with s pearl earring" திரைப்படம் பார்த்துவிட்டு சிறு குறிப்பு ஒன்றை எழுதியிருந்தேன்.
http://pandianinpakkangal.blogspot.com/2017/07/Girl-With-A-Pearl-Earring.html?m=1

பிக்காசோ, லியோனார்டோ, பால் காகின், செசான், ஃப்ரைடா, வான்கா, ரெம்ராண்ட், டாலி என ஓவியர்களை அறிமுகம் செய்து அவர்களின் ஓவியங்கள் வழி பிறந்த திரைச்சித்திரங்களை முன்வைத்து எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள் ஒளியினையும் ஓவியங்களை பற்றியுமான பரிதல்களுக்கு உதவுகிறது.

இந்திய ஓவியர்களின் வாழ்வில் எம்.எஃப் உசேனின் வாழ்கை புத்தகமாக வந்திருக்கிறது. அதுபோல் இன்னும் எத்தனையெத்தனை ஓவியர்களோ அவர்களை அறியவும் சமகாலத்தைய படைப்புகளையும் அறிந்துகொள்ள மறைவான உந்துதலை அளிக்கிறது புத்தகம்.

திங்கள், 24 ஜூலை, 2017

ஊரோடு ஒத்து வாழாதே சிலநேரங்கள் மட்டும்

இன்று திங்கள் கிழமை வார விடுமுறைக்குப்பின் அலுவலகத்தின் நெடியடிக்கத் துவங்கும் நாள், வீட்டில் தொடர் நாடகங்களின் பேயாட்டம் மட்டுமே பிரதானம் பிக்பாஸ் என்றால் அது என்ன என கேட்பவர்கள் தான் அம்மாவும் மனைவியும் திரைப்பட நடிகர்களை அதிகம் அறியாத அம்மா அதை பார்பதற்கு ஆவல் கொள்ளமாட்டாள் என்பது ஒருபக்கமிருந்தாலும் பக்கத்துவீட்டு அக்காள்கள் அந்நிகழ்ச்சி பற்றி இன்னும் ஏதும் பேசவில்லை என்று நினைக்கிறேன் இல்லையென்றால் என்னிடம் கேட்டிருக்க வாய்ப்புண்டு. என்னிடம் கேட்டால் மட்டும் என்ன சொல்ல முடியும்.

ஆனால் அலுவலகத்தில் அப்படியல்ல தொடர்ந்த விவாதங்கள், போதாததிற்கு யூடியூப் காணொளிகள் சத்தம் என அரக்கப்பரக்கிறார்கள். அநேகமா பல "session" உருவாக வாய்ப்பிருக்கிறது.

"ஊரோடு ஒத்து வாழ்" என்பது அனைத்திற்கும் பொருந்துவதில்லையாதலால் வெகுமக்கள் ஊடகத்தோடு (தேவையற்றவையோடு மட்டும்) ஒன்றாமல் இருப்பது வாழ்வை எளிய புன்னகையோடு கடந்துபோக உதவும்.

எங்க வாத்தியார்

எங்களுக்கு பள்ளியில் பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியர் சந்தானம் அவர்களின் உருவப்படம் பென்சிலால் தீட்டியது. ஊர் கீழப்பாவூர்,  திருநெல்வேலி மாவட்டம்.

சனி, 15 ஜூலை, 2017

சிறுநீரின் நிறம்

டச்சு நாட்டைச் சேர்ந்த ஓவியர் ஜோகான்ஸ் வீர்மீர் பற்றிய திரைப்படம் "Girl with a Pearl Earring" இது அவர் வரைந்த ஓவியத்தின் தலைப்புமாகும்.

படத்தின் ஒளிப்பதிவே ஓவியம் போல விரிந்து தொடர்ந்தது, பணிப்பெண் "க்ரீட்" ஓவியரின் வீட்டில் வேலைசெய்ய புறப்படுவதில் கதை தொடங்குகிறது. அவளின் தந்தையும் ஓவியராக இருந்து பின் பார்வை இழந்தவர் அதனால் ஓவிய நுட்பங்களை அறிந்தவளாக இருக்கிறாள். ஒரு காட்சியில் வீர்மீரின் ஓவிய அறையினை சுத்தம் செய்யச் செல்லுமுன் அவரது மனைவியிடம் சாளரத்தின் கண்ணாடிகளை துடைக்கவேண்டுமா எனக்கேட்கிறாள், நிச்சயமாக இதிலென்ன கேள்வி என பதில்வருகிறது. எந்த சலனமுமின்றி க்ரீட் சொல்கிறாள் "அதனால் வெளிச்சம் மாறுபடலாம்" என்று, சிலிர்ப்பை உண்டாக்கியது அந்த சொல்.

க்ரீட் கண்ணாடியினை துடைத்துக் கொண்டிருப்பதை காணும் வீர்மீரின் பார்வையில் அடுத்த ஓவியத்திற்கான பொருள் கிடைத்துவிட்டதெனும் ஆர்வம். அவளை சில நொடி நிற்கவைத்து பின் போகச்சொல்கிறான். ஓவியம் மெல்ல மெல்ல மெருகேருகையில் அவளுக்கு அதனை காணும் வாய்ப்பு கிட்டுகிறது. அக்காட்சியில் ஒளிநிழல்களை பற்றி ஓவியன் விவரிப்பதை கவனிக்கிறாள் ஆனால் அவளால் புரிந்துகொள்ள இயலவில்லை என்பதை அவதானித்தவுடன் சாளரத்தை திறந்து வான்மேகத்தைக் காட்டி அதன் நிறத்தைக் கேட்டவுடன் முதலில் "வெள்ளை" என்கிறாள் பின் அதை மறுத்து சில நொடி பார்வைக்குப்பின் "மஞ்சள், ஊதா, சாம்பல், மேகங்களில் வண்ணங்கள் உள்ளன" என்கிறாள், புன்னகையோடு புரிந்ததா என அவன் கேட்கவும் மேகத்திரள்கள் திரையில் விரிகிறது.




படத்தின் இருபதாவது நிமிடத்தில் வரும் விருந்துக்காட்சியில் வீர்மீரின் ஓவியமொன்று முதல்முறையாக காட்சிப்படுத்துகிறார்கள் அதை விமர்சிக்கும் மற்றொருவர் அதிலுள்ள நிறத்தினை பார்த்து "இந்திய மஞ்ச"ளா என்று கேட்கிறான் ஆமாம் என்ற பதிலுக்குப்பின் தொடர்கிறான் "மாவிலைகளை மட்டுமே உண்ட பசுவின் சிறுநீர் நிறம்".

வெள்ளி, 14 ஜூலை, 2017

அவளுக்கு தலைவலி

"வாரயிறுதியில் என்ன செய்றீங்க" என்பது உரையாடலின் போது இரண்டாவது கேள்வியாக இருந்தது, முதல் கேள்விக்குள் புகுவது காலவிரையம் எனப்படுவதால் இங்கிருந்தே கதைக்க விரும்புகிறேன். வெளியில் செல்லும் பழக்கமிருந்தாலும் வீட்டில் உறவுகளை விட்டுவிட்டுச் செல்வதற்கு மனதொப்பாததால் வாசிப்பும் வரைதலுமே வழக்கமாகியிருக்கிறது மாறாக உறவுகள் ஊர் சென்றுவிட்டால் வீட்டிலிருக்கும் அவசியமில்லாமல் போவதும் உண்மையே.

உங்க மனைவி எதுவுமே சொல்வதில்லையா என்றவள் (அவள் என்பவள் அலுவலக தோழி) கேட்டதற்கு,  சொல்லாமலில்லை என்பதைத்தவிர சொல்வதற்கு நிறைய இருந்தும் கூறவிருப்பில்லாமல் நழுவினேன்.
நானும் வாசிப்பேன் தெரியுமா என்றவள் தொடர்ந்தபோது ரமணிச்சந்திரனையும் ராஜேஷ்குமாரையும் கடந்து வேறொரு எழுத்தாளரையும் பற்றி பேசவில்லை. நாவல் ஏதாவது இருந்தால் கொடுங்களேன் வாசித்துப் பார்க்கிறேன் என்றதும் சுஜாதாவின் எழுத்துக்களை கொடுக்கலாமென்றால் புத்தகம் தற்போது கைவசமில்லை, ஆதலால் வைரமுத்துவின் "வில்லோடு வா நிலவே" புதினம் நினைவிற்கு வந்தது.

வீடடைந்தபின் அதோடு "தண்ணீர்" புதினத்தையும் சேர்த்து பைக்குள் வைத்துவிட்டேன். தண்ணீர் குறைந்த பக்கங்கள் என்பதாலும் அதிகம் குழப்பாத எழுத்தாகையாலும் அத்தேர்வு.
 
வைரமுத்துவா இவரோடது புரியாதே (இவருடையதே புரியாதா என்றெண்ணி அசோகமித்திரனை வெளியிலெடுக்கவில்லை), வேறெதுவுமிருக்கா, அசோகமித்திரனை கொடுத்தேன். பின்னட்டையை பார்த்துவிட்டு "ஓ.. இவருதானா" என்றிழுத்தாள் குரலை.

அவ்வாரயிறுதிக்கு பின் இரண்டு நாள் கழித்து தண்ணீரை வந்தவேகத்தில் மேசை மீது வைத்தவள் "மொக்கையா" இருக்கு என்றாள்.

ஏன்?

தண்ணீர் பிரச்சனையை பற்றியே உரையாடுகிறார்கள் என்றவளிடம் எத்தனை பக்கங்கங்கள் வாசித்தாய் எனக்கேட்டதற்கு தொண்டையிலிருந்தொரு ஓசையெழுப்பிச் சிரித்தாள். மாலை காஃபி நேரத்தில் கூறினேன் "இப்பொழுது வேண்டாம் ஓரளவு பழக்கம் ஏற்பட்டதும் தண்ணீரை வாசித்துப்பார்". தலையை மேலும் கீழும் அசைத்து ம்ம் என்றொலித்தாள்.

நேற்று தலைவலி என்று புலம்பியவளிடம் அடுத்த இருக்கை நண்பர் இரவு திறன்பேசி பார்ப்பதை குறைக்க அறிவுருத்தினார். அவள் "இன்னைக்கு போய் இவரு குடுத்த புத்தகத்த படிக்கணும், தன்னால தூக்கம் வந்துரும்" என்றாள்.