புதன், 30 டிசம்பர், 2015

டார்வின் ஸ்கூல் - வாசிப்பு

அன்றைய விலங்கியல் செய்முறைக்கூடத்தில் இல்லை அறிவியல் செயற்கூடம் என்றுதான் சொல்லவேண்டும் ஏனென்றால் அரசுப்பள்ளியில் அனைத்து இயல்களுக்கும்   இங்குதான் செயல்வடிவம் காண்பிக்கப்படுகிறது. விலங்கியல் தாவரவியல் வேதியியல் இயற்பியல் வேறுபாடெல்லாம் கிடையாது.


குளோரபார்ம் கலந்த நீரில் மிதந்து கொண்டிருந்த அந்த எலியை கண்ணாடி புட்டிக்கு வெளியில் எடுக்கும் பொழுது "இன்னைக்கி ரெண்டு எலிதாம்டே எடுக்கணும், ஏல வடமல புரியுதா" ன்னு விலங்கியல் ஆசிரியை உரத்த குரல் கொடுத்தார். எலி பூனைக்கு இரையாகும் நெல் மூட்டையையும் சுவற்றையும் துளைபோடும் என்பதைத்தவிர அதன் தோற்றமோ உயிரியல் பரிமாணத்தின் பங்கோ யானறியேன். ஏன் எங்கள் அறிவியல் பிரிவு பனிரெண்டாம் வகுப்பே அறிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஏனென்றால் நாங்கள் அல்லது நாம் பயின்றது மனப்பாடக்கல்வி எனும் அறியவகை கல்விமுறை அப்படித்தான் வழிநடத்தியது.


செயற்கூடத்தைவிட்டு எலியின் வால்பிடித்து தூக்கிவந்த போது ஏனைய பிரிவு மாணவர்களுக்கு அது வேடிக்கையாக இருக்க, நாங்கள் அறுவை சிகிட்சை செய்யத்தொடங்கினோம். ஆசிரியை மூக்கை  கைக்குட்டையால் மூடி நின்றிருந்தார். பிளேடு கொண்டு அதன் மார்பைக் கிழித்துவிட்டு, தலையை தனியாக துண்டித்தேன். தலை மிக நுட்பமாக இருக்கும் அதன் பாகங்களை பிரித்துவைப்பது அத்தனை எளிய காரியமல்ல உடல் உறுப்புகளை பிரிப்பதுபோல.


பனிரெண்டு முடித்ததும் அறிவியலை கைகழுவிவிட்டு தொழில்நுட்பம் பயில கிளைதாவிவிட்டேன். அதன்பிறகு பயன்பாட்டு மின்னணுவியலில், தொலைத்தொடர்பில் கவனம். வாரத்திற்கு இரண்டுமுறை வீட்டு ரேடியோ பெட்டியை கழட்டியும் மாட்டியும் அதை உருக்குலைத்து, பலதரப்பட்ட மின்னணு சுற்றுக்களை பரிசோதித்து உளபுளகாங்கிதம் அடைந்து இறுதியில் பண்பலை உருவாக்கத்தில் ஒரு செயல்திட்டம் உருவாக்கி மூன்றுவருடத்தை கடந்தபின் இப்பொழுது உயிரியல் நோக்கி கவனம் திரும்பியதற்கு வாசிப்புதான் மிக முக்கிய காரணம்.


இயற்கையின்றி மனிதனில்லை என அறிந்தாலும் இன்னும் பிறக்காத தலைமுறைக்காக என்ற புத்தகத்தை வாசித்த பின்னரே உயிரியல் மற்றும் காடுகளின் அவசியம் பற்றிய புரிதல் உருவாக ஆரம்பித்தது.


ஒரு சிறுவனின் அறிவியல் முயற்சிகள் அவனுக்கே ஆச்சரியமளிக்கும் வகையில் கற்றுக்கொடுக்கும் அறிவுலகத்தில் பயணிக்கின்றான். அதற்கு அவனின் அப்பா உயிரியல் பற்றி எழுதிவைத்திருக்கும் நாட்குறிப்புகள் உதவியாக இருக்கின்றன. மேலும் சில உயிரிகளோடு அவர்களின் மொழியிலேயே தொடர்பு கொள்ளவும் முடிகின்ற இவனுக்கு ஆந்தை "மாரி", முயல் "கவி பாரதி" நாய் "ரிச்சட் பார்க்கர்" போன்ற நண்பர்கள் இருக்கிறார்கள். இவர்களோடு ஓர்இரவின் நடுவில் அம்மாவிற்கு தெரியாமல் வீட்டைவிட்டு கிளம்பி டார்வின் ஸ்கூல் என்ற ஓர் அதிசய பள்ளிக்கூடத்தினை காண புறப்படுகிறார்கள். இந்த பயணத்தின் வழி நெடுகிலும் சிறுவனுக்கு உதவும் பற்பல உயிரிகளைப் பற்றிய தகவல்கள் டார்வின் உருவாக்கிய பரிணாமக்கோட்பாட்டில் அந்தந்த உயிர்களின் பங்கு போன்ற பல உயிரியல் அடிப்படைத்தகவல்களை சிறுவன் கூறுவதாகவும்   அப்பாவின் குறிப்பில் வாசித்தவைகளை தான் நிகழ் உலகில் உணர்பவைகளை எண்ணி களிப்புறுகின்றான். இடையிடையே அப்பாவின் குரல் அவனை வழிநடத்துகிறது. அந்த குரல் மற்றும் மேலும் பல தகவல்கள் ஒரு மின்னணு சில்லில் பதிவு செய்து பொருத்தப்பட்டிருப்பதுதான் உயிரிகளின் மொழியை இவன் அறிய காரணம்.


காட்டின் நில வடிவமைப்பை ஐந்தடுக்குகளாக பிரித்து வகைப்படுத்தி எழுதியிருப்பது அறிய வேண்டிய தகவல்.


எது கல்வி என்ற சரியான புரிதல் இல்லாமல், படித்தால் வேலை அதற்கான சம்பளம் என்ற அளவீட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் கல்விமுறை நம்மை அடிப்படை அறிவியல் அறிவில்லாத தொழில்நுட்பவாதிகளாக உருவாக்கியிருக்கிறது இன்னும் உருவாக்கிக்கொண்டிருக்கின்றது. சிறார்கள் மற்றும் மாணவர்கள் அடிப்படை அறிவியலை புரிந்துகொள்ள டார்வின் ஸ்கூல் போன்ற அறிவியல் கதைகளின் தேவை மிக அவசியம்.


ஆயிஷா நடராஜன் சிறுவர்களுக்கான இலக்கியங்கள் உருவாக்குவதில் பல முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறார். நான் வாசித்த அவருடைய முதல் நூல், சிறுசிறு தகவல்களும் என்னை அறிவியல் சிறுவனாக மாற்றி பால்யத்தின் உயிரியல் சார்ந்த பக்கங்களுக்கு அழைத்துப் போனது, மேற்கூறிய அறிவியல் செயற்கூடம் போன்ற நினைவுகள் உதாரணம்.


வாசித்து முடிக்கும் போது இதை யாரேனும் பள்ளிச் சிறுவருக்கு பரிசளிக்க எண்ணியது மனம். ஆனால் உறவினர் ஒருவர் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார் அவரிடம் ஒப்படைத்துவிட்டேன்.

1 கருத்து:

'பரிவை' சே.குமார் சொன்னது…

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.