க்+அலை என இச்சொல்லை பிரிக்கலாமா அதற்கு இலக்கணம் இடம் தருமா என்று தெரியவில்லை ஆனால் அலை என்பது அலைந்து கொண்டே இருப்பதன் சுருக்கமா அப்படியென்றால் கடல் அலை எப்போதும் இங்கும் அங்கும் அலைந்து அலைந்து திரிவதால் ஒருவேளை அதற்கு அலை என்று பெயர் வந்திருக்குமோ. இருக்கட்டும்.
க் என்ற ஒலிப்புக்கு ஏதேனும் பொருள் இருக்குமா உயிர் பெற்ற எழுத்துக்குத்தானே பொருள் உருவாக முடியும். நான் நினைப்பது சரிதானா. அலையும் மனம் கலைக்கானதாக பொருந்தி கலை என்ற சொல்லாகவும் உருமாறியிருக்குமோ. தெரியவில்லை செத்தேங் கொழப்பமாத்தாயிருக்கு.
* * *
காந்தியின் சத்திய சோதனை வாங்கி சில ஆண்டுகள் இருக்கும். அப்போது தொடங்கி சில பக்கங்களுக்கு மேல் தொடர ஆர்வமில்லாமல் வைத்துவிட்டு இந்த கோடையில் மீண்டும் முயன்று தொடர்கிறது வாசிப்பு. தன்னைப் பற்றிய நிலைப்பாடுகளை அப்பட்டமாக பல இடங்களில் முன்வைக்கும் காந்தியின் எழுத்துப் பிடித்திருக்கிறது. பயத்துடன் கூடிய தனது போராட்ட குணத்தை லண்டனிலும் தென்ஆப்பிரிக்காவிலும் வெளிப்படுத்துபவர் ஒவ்வொரு நிகழ்விலிருந்தும் அவரது நிலைப்பாடுகளை மதிப்பீடு செய்து அடுத்தடுத்து பயணிப்பதில் அவரது தேடலின் பிடிமானம் உணரப்படுகிறது. தனக்கு நேரமில்லாத காரணத்தால் கற்க இயலாத தென்மாநில மொழியைப் பேசும் மக்கள் தான் பேசும் மொழியைக் கற்றுக் கொண்டு தன்னோடு உரையாட வேண்டும் என நினைக்கும் இடத்தில் இருந்து இன்றும் தொடரும் இந்தித் திணிப்பின் அடி வேரைப் புரிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும் தனது பயணத்தின் இடையே தமிழ் கற்கும் வாசிப்பை மேற்கொள்கிறார். மீண்டும் தென் ஆப்பிரிக்காவில் என்ன வகையிலான போராட்டம் தொடரும் என்று எதிர்நோக்குகிறேன்.
* * *