அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 அக்டோபர், 2025

சுதேசி எனும் பரதேசி

சுதேசி என்ற சொல்லை விளம்பரங்களிலும் சில தனிநபர்களிடமும் கடந்த சில நாட்களாக பார்க்கவும் கேட்கவும் செய்கிறேன். இன்றொரு செய்தித்தாளில் கண்டது நகைப்புக்குரியதாக இருக்கிறது, 110 பேருந்துகளைப் பயன்படுத்தி சுதேசி என்ற சொல்லை ஆங்கிலத்தில் உருவாக்கி மகிழ்ந்திருக்கிறது ஒரு ஆங்கிலப் பள்ளி. ஒரு சுதேசியாக எப்போது இவர்கள் தாய் மொழிக் கல்விக்கு மாறுவார்கள் என்ற சிந்தனை தொக்கி நிற்பது ஒரு பக்கம். கொஞ்சம் புத்திக்கு உரைத்திருந்தாலோ அல்லது எறும்பளவு மூளையில் இடமிருந்திருந்தாலோ தன் தாய்மொழியில் எழுதி மார்தட்டிக் கொண்டிருக்கலாம் ஆனால் அதற்கு வாய்ப்பில்லாமல் பரதேசியாக மாறியிருக்கிறது நம் தமிழ் மனம்.

சனி, 12 அக்டோபர், 2024

தினமலர் எனும் விசம்

வீட்டில் செய்தித் தாள் வாங்கத் தொடங்கிய போது தினமணி நாளிதழை தேர்வு செய்தேன். பிறகு நாவலூரில் பணிக்குச் சென்ற இடத்தில் தமிழ் இந்து வாசிக்கக் கிடைத்தது, ஆர்வமூட்டும் கட்டுரைகள், ஒவ்வொரு நாளும் சிறப்பிதழ் என நன்றாக பழக்கமானது வாசிப்பு. வீட்டிலும் மாற்றிவிட்டேன். இங்குமங்கும் பயணித்தது வாசிப்பு.

நாளடைவில் சில சொற்களை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்காமல் அப்படியே ஒலிக்கச் செய்து அச்சிட்டார்கள் தமிழ் இந்து நாளிதழில். உதாரணத்திற்கு "Seminar, conference" போன்ற ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழ் எழுத்துக்களால் எழுதத் துவங்கியதை ஏற்றுக் கொள்ள இயலாமல் மீண்டும் தினமணிக்கு மாறினேன்.

இன்று தேநீர் கடையில் எதிரில் இருந்தவர் வாசித்த செய்தித் தாளில் "செகண்ட் ப்ரன்ட் பேஜ்" என்று எழுதியிருந்தது. தினமலர் எனும் விசம்.

புதன், 23 ஆகஸ்ட், 2023

தமிழைப் படுகொலை செய்யும் தமிழினத் தலைவர்கள்

கடந்த காரிக்கிழமை (சனி) வள்ளுவர் கோட்டம் சென்று தமிழ் வழிக் கல்விக்கான போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்று கோட்டத்தை சுற்றி வலம் வந்து நின்றால் அதற்கான சுவடே இல்லாமல் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. என்னவாயிற்று என புலனத்தில் (வாட்சப்-புலனம்) தேடினால் எழும்பூர் ராசரத்தினம் விளையாட்டுத் திடல் அருகில் மாற்றியிருக்கிறார்கள் இரவோடு இரவாக.




தமிழ் தமிழ் என முழங்கி ஆட்சியில் இருப்பவர்கள் இப்போது நீட் நீட் எனக் கூவி வியாபாரம் செய்ய ஒருநாள் சந்தைக்காக வள்ளுவர் கோட்டம் ஆயத்தம் ஆவதை தாய்த் தமிழ் பள்ளியினர் உரை விளக்கியது. ஆளும் கட்சி மத்திய அரசை எதிர்த்து மருத்துவக் கல்விக்கான நீதிக்கு போராடத் துணிகிறார்கள், ஆனால் தமிழ்நாட்டு அரசை திராவிட மாடல் அரசை (இந்த மாடல் என்ற சொல்லை தங்கள் கருத்தியலோடு கலந்திருப்பதிலேயே இவர்களது அகம் தமிழிலிருந்து எவ்வளவு விலகியிருக்கிறது என்பதைச் சுட்டுகிறது) எதிர்த்து பதினெட்டு தாய்த்தமிழ் பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பிற தமிழ் இயக்கத்தினர் கலந்துகொண்ட இந்த அறப்போராட்டம் அரசின் செவிக்குச் சென்று சேராமலா இடத்தை மாற்றியிருப்பார்கள்.

நாங்கள் என்ன வேற்று மாநிலத்திலா தமிழ் மொழியை கட்டாயப் பயிற்று மொழியாக்கக் கூறுகிறோம், எம் நிலத்தில் எங்களுக்கான முதன்மை உரிமையை பெற ஏங்கி நிற்க வைத்தது யார். இருக்கும் அத்தனை அரசுப் பள்ளிகளையும் ஆங்கிலவழிக் கல்வி முறைக்கு மாற்றவும் ஒட்டு மொத்த மக்கள் திறனையும் உலகத்திற்கு அடிமையாக்க ஒப்பந்தமிட்டுச் செயல்படும் இவர்களுக்கு வெட்கமில்லையா தமிழினத் தலைவர் எனக் கூறிக் கொண்டு திரிவதற்கு. 

போராட்டத்தில் ஓர் இயக்கத்து அன்பர் உரைத்தது "ஏன் அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாயப் பாடமாக்க தயக்கம் என கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது கேட்டதற்கு முரசொலி மாறன் "ஆங்கிலப் பள்ளிகளின் எண்ணிக்கை கூடுகிறது, இப்போது நீங்கள் தமிழை கட்டாயமாக்கினால் இவர்களின் வாக்குகள் சிதறிவிடுமென்று" அறிவுரை சொல்லியிருக்கிறார், வாக்கிற்காக நாக்கை அழுகக் கொடுப்பவர்கள்.






மற்றொரு தோழர் பேசுகையில் கூறினார் "ஏன் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழை கட்டாயமாக்கச் சொன்னதற்கு ஆறாம் வகுப்பு வரை மட்டும் செய்திருக்கிறீர்கள் என கருணாநிதியிடம் கேட்டதும், அமைச்சர் பொன்முடியை பதில் சொல்ல அழைத்ததும் "ஆங்கில பள்ளிக்காரன் ஆறாம் வகுப்பு வரைக்கும் தமிழை கட்டாயமாக்குனதுக்கே வழக்கு தொடுத்துவிட்டான், நீங்க போங்கப்பா" எனச் சொல்லி ஒதுக்கியிருக்கிறார்கள். தற்போதைய ஆட்சியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவிடம் கேட்ட போது "செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம் ஆனால் எப்படிச் செய்வது எனத் தெரியவில்லை" என்றிருக்கிறார். என்னக் கொடுமை இது, தெரியவில்லை என்றால் இருக்கும் தாய் தமிழ் பள்ளி முதல்வர்களிடமும் கல்வியியலாளர்களிடமும் கருத்து கேட்டு நடைமுறைப் படுத்தலாம் அதைக் கூடவா செய்யத் தெரியாமல் பொறுப்பில் இருக்கிறார்கள், ஒருவேளை மத்திய முதலாளி இப்படித்தான் பேசவேண்டுமென்று உத்தரவு கொடுத்திருப்பாரோ. மாதிரிப் பள்ளிகள் அமைப்பதற்கு டெல்லி செல்கிறார் முதல்வர். ஆச்சரியமாக இருக்கிறது கூடவே கோவமாகவும்.

 இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் தமிழை படுகொலை செய்தவர்களைக் கண்டு வெகுமக்கள் எதிர்ப்பதற்கு மாறாக ஆங்கில வழிக் கல்வியை  ஏற்றுக்கொள்ள வைத்திருப்பதை இனி எங்கனம் புரிந்து விழிக்கும். 




வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

வாடகை மானுடம்

 ஒரு மாலையில் தெருவாசல் ஓரம் குழந்தைகளோடு இறகுப் பந்து விளையாடிவிட்டு உட்செல்ல எத்தனிக்கையில் இருசக்கர வண்டியில் பின்னாலிருந்தவர் இறங்கி வந்து இந்த பகுதியில் இடம் எவ்வளவு போகிறது என்றார். சரியாகத் தெரியவில்லை ஆனால் விளம்பரங்களை பார்க்கையில் நான்காயிரத்து ஐநூறு கிட்ட ஒரு சதுர அடி இருக்கலாம் என்றேன். எவ்வளவு ஆண்டாக இங்கே இருக்கீங்க என்றதும் எட்டு எனச் சொன்னேன், எட்டு ஆண்டுகளா வாடகை வீட்டுலயா என்று எடை போட்டார். இப்போது வண்டியை ஓட்டி வந்தவர் இறங்கினார் அவரது பையனாக இருக்கலாம் எனத் தோன்றியது, சாலையோரம் கட்டடங்களை இடித்திருக்கிறார்களே எதற்காக என்றார், சாலை விரிவாக்கம் என்று கூறுகிறார்கள் ஆனால் உறுதியாக தெரியவில்லை என்றதும். பின்னாலிருந்தவர் இடத்தோட விலை கூடுமா என்றார், மின்ன இருந்ததுக்கும் இப்போதைக்குமே கூடியிருக்கு என புன்னகை உதிர்த்து ஆனால் தெரியவில்லை என்று உட்புகுந்தேன்.


நாங்கள் இங்கு குன்றத்தூரிலிருந்து பல்லாவரம் போகும் பாதையில் உள்ள மணிகண்டன் நகருக்கு வந்த புதிதில் இப்போது குடியிருக்கும் வீட்டுக்குப் பின்புறத்தில் பெரியதொரு தோல் தொழிற்சாலை இருந்தது அதன் சுற்றுப்புறச் சுவரை அடுத்து சாலையோரம் மக்கள் பல தலைமுறைகளாக குடிசையில் வாழ்கிறார்கள். இந்த இடத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு "கம்பெனி" என்றே பெயர். சில ஆண்டுகளுக்கு முன் இந்நிறுவனம் இழுத்து மூடப்பட்டது, மக்கள் குடியிருப்புக்கள் மணிகண்டன் நகரில் அதிகமானதால் இத்தொழிற்சாலை சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் விளைவிப்பது அதற்கான காரணமாகச் சொல்லப்பட்டது.


சில மாதங்களுக்கு முன்பு "G square" என்ற வீட்டு மனைகள் விற்கும் நிறுவனம் இந்த இடத்தினை மனைகளாக மாற்றி விற்கத் தொடங்கியது, அதிலிருந்து சில நாட்களில் சாலையோரம் உள்ள குடியிருப்புக்களை அகற்றுவதற்கு காவலர்கள் துணையாக பெருத்த ஊர்திகள் வந்து முதலில் கடைகளை மட்டும் அகற்றிவிட்டு அடுத்த வாரத்தில் வீடுகள் அகற்றப்படும் என எச்சரித்துச் சென்றிருக்கிறார்கள், இதற்கான காரணம் சாலை விரிவாக்கம் என்று கூறுகிறார்கள் ஆனால் பல்லாவரம் தொடங்கி குன்றத்தூர் வரை நீளும் இச்சாலையில் வேறெங்கும் இடிக்க முனைப்பு காட்டாமல், ஏன் எதிர் பக்கம் ஒரு நூலளவு கூட கை வைக்காமல் குறிப்பிட்ட இப்பகுதியை அப்புறப்படுத்துவதில் மட்டும் அரசு அக்கரை காட்டுவது மக்களுக்கு வினாக்களை ஏற்படுத்தியது. உண்மையில் அரசுதான் இதற்கு காரணமா என போராட்டமும் வினாக்களுமாக ஒவ்வொரு நாளும் விடியல் கொள்கிறது.

இன்னொன்று சொல்லவேண்டும், இந்த சாலையோர கட்டிடங்கள் இடிக்கத் தொடங்கிய மறுநாள் அடையாறு கரையோரம் இருந்த தென்னத்தோப்பு மொட்டையடிக்கப்பட்டு முழித்துக் கொண்டிருக்கிறது.

சிலர் அடையாறு எங்க குன்றத்தூருக்கு வந்ததுன்னு கேக்கலாம், இந்த ஆற்றின் தலை செம்பரம்பாக்கம் ஏரி, அங்கிருந்து வெளியேரும் நீர் இவ்வழி வந்து சென்னைக்குள் சென்று கடலில் கலக்கிறது. அனகாபுத்தூர் குன்றத்தூர் இடையே எல்லை போல் ஓடும் இவ்வாற்றைக் கடக்க தரைப்பாலம் ஒன்றிருக்கிறது, பாலத்திற்கு இந்தப்பக்கம் குன்றத்தூர் காஞ்சிபுர மாவட்டத்தில் அடங்கும், அந்தப் பக்கம் அனகாபுத்தூர் செங்கல்பட்டு மாவட்டம்.


சனி, 27 மே, 2023

காக்கைகள் இல்லாத ஊர்

ஒரு மனிதரோடு பழகும் போதோ ஒரு புத்தகத்தை வாசிக்கையிலோ அங்கே வெளிப்படும் சொற்களை நம் வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்து எண்ணங்களை விரிவாக்கிக் கொள்வதுண்டு. "காக்கைகள் இல்லாத ஊர்" என்றொரு சிறுகதை காகங்கள் இல்லாமல் போவதற்கான காரணமாக அவ்வூரில் ஒழிந்துபோன அதற்கு உணவளிக்கும் சடங்கைச் சொல்லும் சூழலை எண்ணும் போது காக்கைகளுக்கு எந்த ஊரில் யார் சோறு வைக்கிறார்கள் என்ற கேள்வியில் எங்கள் ஊர்ப் பகுதியில் உணவு வைத்ததாக ஞாபகப் படுத்த எவ்வளவு முயற்சி செய்தாலும் தாத்தா இறந்த பின் முப்பதாம் நாள் கோயில் போகும் முகமாக குற்றாலம் சென்ற அந்த காலையில் சிவனடியார்களுக்கு அன்னம் (சமைத்த உணவு என்றெண்ண வேண்டாம், அரிசி முதல் உப்பு வரை சோற்றுக்கும் குழம்புக்குமான உணவுப் பொருட்களை அவர்களது திருவோட்டில் தானம் கொடுப்பது) வழங்கியதும் அவர்கள் அதிலிருந்து ஒவ்வொரு பிடி எடுத்து "நாளை வீட்டில் சமைத்து காக்காவுக்கு வைத்தபின் எல்லோரும் சாப்பிடுங்க" என்று சொன்னச் சொற்களும் மீதியான பழையச் சோற்றில் உள்ளியை நறுக்கிச் சேர்த்து உருண்டை பிடித்து ஓட்டில் காய வைக்கும் போது வரும் காகங்களுமே எஞ்சி நிற்கின்றன.

ஊரில் இப்படி முப்பதாம் பக்கம் கோயிலுக்கு போவது என்றால் குற்றாலம் அல்லது பாபநாசம் போவார்கள், அந்த ஒருநாள் சனிக்கிழமை விடியுமுன் கிளம்பி இருட்டிய பின் ஊருக்கு திரும்புவது வழக்கம், இப்போது இதன் தோற்றங்கள் மாறியிருந்தாலும் நிகழ்கிறது. இந்த சூழலில் கோயிலுக்கு செல்லும் போது அங்குள்ள சிவன் ஆலயத்திற்குள் நுழைவதேயில்லை, ஆற்றிலோ அருவியிலோ தலை நனைப்பதோடு சிவனடியார்களுக்கு அன்னம் கொடுத்த பின் உணவு சமைத்து உண்டு உறங்கி திரும்புவதே வாடிக்கை. இந்த நாள் என்றில்லை அருவியில் தண்ணீர் கொட்டும் நாட்களில் அங்கு குடும்பத்தோடு சென்றாலும் பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைப்பதோடு வழிபாடு முடித்து வைக்கப்பட்டு, சிவன் ஆலயத்திற்குள் ஒரு நாளும் சென்றதில்லை. ஏன்னென்று கேட்டிருந்தால் பதில் அப்படியொன்றும் விளக்கமாக வந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் சென்னை அப்படியல்ல இங்கே காக்கைக்கு உணவு வைப்பவர்கள் அதிகம், அமாவாசைச் சடங்குக்கு தெருவில் பூசணிக்காய் உடைத்துப் போடுவது என அதிகம் கண்டிராத சடங்குகள். ஒவ்வொரு பகுதிக்கும் சடங்குகளில் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். மாநகரம் எல்லாச் சடங்குகளையும் தக்கவைத்திருக்கிறது அதன் மனிதர்களோடு.

கதைக்கு வருவோம், யதார்த்தங்களை மீறிய கற்பனையில் எழும்பி நின்று எண்ணங்களா தத்துவங்களா எதுவாகினும் அதிலுள்ள முரண்பாடுகளையும் அதனால் ஏற்படுத்தப் படும் மனித விளைவுகளையும் பேசும் இப்புனைவு எழுத்தாளர் ஜீவ கரிகாலனின் "கண்ணம்மா" தொகுப்பில் வருகிறது, இந்த புத்தகத்திலுள்ள கதைகளை வாங்கிய நாளில் ஒருமுறை வாசித்திருந்தாலும் கடந்த வாரம் அலமாரியைச் சரி செய்தபோது மீள் வாசிப்பிற்காக எடுத்து வைத்திருந்தேன். இரண்டு நாள் முன் வரையத் தொடங்கி பல அடுக்கு வண்ணத் தொகுப்பிற்குப் பிறகு காக்கையொன்று வந்தமர்ந்து உரையாட ஆரம்பித்ததை (இன்னும் முடிவுராத ஓவியம் கீழே) எனது கைகளில் ஏந்தி வருடிக்கொண்டிருந்த அன்றைக்கு மறுநாள் தொலைக்காட்சி மேசைக்கு கீழுள்ள அடுக்கிலிருந்து எடுத்து புரட்டியபோது "காக்ககள் இல்லாத ஊர்" வாசிக்கக் கிடைத்தது எதன் விளைவு என ஓடும் கேள்வியும் கதையின் ஊடே பதிப்புக்குள்ளாகியிருக்கும் ஓவியர் விஜய் பிச்சுமணியின் காகங்கள் என என்னை வட்டமடிக்கத் தொடங்கியிருக்கும் இப்பறவையின் இறகுகளுக்கிடையே உலவும் காற்றை கையிலேந்த காத்திருக்கிறேன்.




வியாழன், 4 ஆகஸ்ட், 2022

தொடர் வரைவு நான்கும் - கல்வியும்

 பொதுவாக நாம் எல்லோரிடமுமே (அரசியல் கட்சியின் பக்தர்கள் தவிர்த்து) அரசாங்கம் பற்றிய ஒவ்வாமையும், அரசின் திட்டங்களை பெற்றுக் கொள்வதிலிருந்து ஒதுங்கும் தன்மையும் இருக்கும். அரசாங்கப் பள்ளியில் படிப்பதற்கு பணம் கட்டத் தேவையில்லையாமே என்று ஒருவர் கேட்டதும் எனக்கு பரிதாபமாக இருந்தது அவரின் நிலையை எண்ணி, இது ஒவ்வாமையில்லை முற்றிலுமாக அறியாமை, அவ்விடம் விட்டு அவர் கிளம்பும் போது அவரது இரு சக்கர வாகனத்தில் காவல் என ஆங்கிலத்தில் எழுதியிருந்ததை கவனித்தேன், பரிதாபம் மேலும் கூடிவிட்டது. இப்பாது அரசு பள்ளிகளில் குழந்தைகள் சேர்வதற்குச் சென்றால் நேரடியாக ஆங்கில வழி வகுப்பிலேயே அமர்த்தி விடுவார்கள் என்றே தோன்றுகிறது, இரு வருடம் முன்னர் ஆங்கில வழியில் அரசு உதவி பெறும் நான் படித்த பள்ளியில் படிக்கும் நண்பனின் மகள் புத்தகத்தை காணும் போது அதிர்ச்சி, ஆங்கிலத்தில் இருப்பதை இப்பிள்ளைகள் வாசிக்க தமிழை ஆங்கிலத்தில் அச்சிட்டிருந்தார்கள், இது என்னடா நம் பிள்ளைகளுக்கு வந்த சோதனை என்று மனம் புழுங்கியது.

இப்பாது அதே போன்ற புத்தகம் கிடைக்குமா என இணையத்தில் தேடிப் பார்க்கிறேன் கிடைக்கவில்லை. நேரடி வகுப்பில் கொடுத்திருக்கிறார்களா எனக் கேட்டுப் பார்க்க வேண்டும்.




நேற்று ஒரு எண்ணெய் வண்ண ஓவியம் தொடங்கியிருக்கிறேன், அதன் முதல் கோட்டு வரைவு கீழே.

தொடர்ந்து இதன் அடுத்தடுத்த வரைவுகளை பகிர்கிறேன்.



ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

இது யாருடைய வகுப்பறை - வாசிப்பு


எப்பவுமே புதினம் வாசிக்கயிலதான் நினைவுகளின் பக்கம் ஓடியோடி மனம் துள்ளிக் குதிக்கும், ஆனால் அதற்கு நேர்மாறாக இது யாருடைய வகுப்பறை?” என்ற தலைப்புடைய கல்வி சார்ந்த இந்நூலின் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு நினைவுகளை முன்காட்டி வியக்க வைக்கிறது. எவருக்கும் மகிழ்வான இக்கட்டான நிகழ்வுகளை உள்ளடக்கிய காலமாக அவர்களுடைய பள்ளி மற்றும் கல்லூரிப் பருவம் இருக்கும். அந்த சூழ்நிலையில் என்னோடிருந்த முகங்கள், ஆசிரியராகட்டும் அல்லது உடன் படித்த நண்பர்களாகட்டும் அவர்களோடு மானசீகமாக உரையாடியபடியே வாசித்துக் கொண்டிருந்தேன்.




நமது இன்றைய கல்விச் சூழலை புரிந்துகொள்ள அதன் தோற்றம் முதல் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு கல்விக் குழுவின் செயல்பாடுகளையும் உள்ளடக்கி, பல்வேறு கல்வியலாளர்கள் முன்வைத்த கருத்தியல்கள், ஆசிரிய மாணவ உறவுகளின் இன்றைய தேவையென சிறப்பான குழந்தை/மாணவ மைய கல்விக்கான தீர்வை நோக்கி பயணிக்கிறது நூல். மிகப்பெரிய உரையாடலுக்கான களம் கல்வி என்பதை உள்வங்கிக் கொள்ள உதவும் நூல்.


நுலாசிரியர்: ஆயிசா இரா.நடராசன்




சனி, 9 நவம்பர், 2019

மின்னூல் உருவாக்கம்

இந்த புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கும் பொழுதில் பேராசையொன்றை கிளர்த்திவிட்டது.

அவ்வப்போது எனது வலைப்பூவில்(BLOG - https://pandianinpakkangal.blogspot.com/?m=1) எழுதிய சில பக்கங்களை மின்னூலாக மாற்றலாம் என்ற எண்ணத்தை இச்சையெனக் கடந்து போகாமல் திட்டமிடத் தொடங்கியிருக்கிறேன். விரைவில் வெளிவருமென நம்பலாம்!

நன்றி Vimaladhitha Maamallan அமேசானில் இ-புத்தகம் வெளியிடுவது எப்படி



https://www.amazon.in/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-publish-ebook/dp/B07XWD47FT/ref=sr_1_1?crid=1O59BZLJDU1D0&keywords=vimaladhitha+maamallan&qid=1573312906&sprefix=vimaladhith%2Caps%2C292&sr=8-1

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

பிக்பாஸும் நான்குகாலிகளும் (நாற்காலி)

அலுவலக தோழி ஒருவர் மதிய இடைவேளையின் பொழுதில் அரசியல் பற்றிய பேச்சு வந்தபோது ஸ்டாலினுக்கு முதல்வராகும் ராசியேயில்லை என்றாள். நண்பரொருவன் அதற்கு அவர் ஒரு "சொல்புத்தி" பிள்ளை என எண்ணுகிறேன் என்றான். அதை ஆமோதித்தது போல அவளும் தலையாட்டி உச்சி கொட்டினாள்.

பிக்பாஸ் பற்றிய பேச்சு வந்ததும் தீவிரமான குரலில் இன்னொரு நண்பன் கமலுக்காகவே அந்த நிகழ்ச்சியை பார்ப்பதாகவும் அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்றான். அதை மறுதலித்து அவர் வரமாட்டார் என்றான் ஸ்டாலினை சொல்புத்தி என்று சொன்னவன். அதெப்படி நிச்சயமாக வருவார் என்று நெஞ்சு புடைக்க கத்தினான் என்றே சொல்ல வேண்டும்.

மூன்று நாள் கழித்து முரசொலி பவளவிழா முடிந்த மறுநாள் மாலையில் சாலையோர பெட்டிக்கடையில் நான் ஃகாபியும் மற்றவர்கள் இஞ்சி தேனீரோடு புகைக்குழலையும் உறிஞ்சிக்கொண்டிருக்கும் போது அதே தீவிரமான குரலில் சொன்னாலும் வெட்டவெளி என்பதால் குறைவான ஓசையிலேயே காதில் விழுந்தது "கமல் அரசியலுக்கு வருவார் ... வரவில்லை என்றாலும் யாருக்காவது வழிகாட்டுவார்" என ஒலித்து முடித்தான். 

அப்படியெல்லாம் நடக்கவே நடக்காது என்றான் அந்த சொல்புத்தி என்று சொன்னவன். ஏன் நடக்காது அக்காலத்திலேயை கலைஞர் கமலை அரசியலுக்கு அழைத்திருக்கிறார் தெரியுமா. ஆனாலும் அவர் போகவில்லை பதிலும் சொல்லவில்லை என்றும் சொன்னான்.

கலைஞர் கூப்பிட்டே வராத கமல் மற்ற யார் கூப்பிட்டும் வரமாட்டேன் எனக் கூறியதான உள் அர்த்ததில் தான் இதை புரிந்துகொள்ளவேண்டும் என்றும் திமுக ஆட்சியில் அமர்ந்தால் விஸ்வரூபம் இரண்டாவது பாகத்தையும் வெளியிட்டு மற்றைய படங்களில் ஈடுபட ஆரம்பித்துவிடுவார் என்றான். ஆமாம் ஸ்டாலுனுக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிடைக்காமலே போனால் என்னாகும் என்றான் இன்னொருவன்.

திங்கள், 7 ஆகஸ்ட், 2017

அப்படியாண்ணே

என்ன தம்பி பிள்ள நல்லா வளந்துட்டா போலுக்கு, பள்ளியோடத்துல கிள்ளியோடத்துல சேத்துவிடலாம்லா

இப்பதாம்ணே ஒன்றரை வயசாவுது

அது சரிப்பா இந்த "ஃப்ளே ஸ்கூல்"ங்கானுவள அதுல கிதுல

ஃப்ளே ஸ்கூல்னா என்னண்ணே

அதுவந்துடே ஏதோ "கலர் டே"வாம் அன்னைக்கி மாத்திரம் எல்லா பிள்ளியளும் ஒரே கலருல சட்ட போட்டுக்கிட்டு போறதும் கேக் வெட்டி பொறந்தநாள் கொண்டாடுததும் மாதிரி தெரியுதுப்பா.

ஓகோ அப்படியாண்ணேன்...

செவ்வாய், 21 மார்ச், 2017

அடையாற்றில் மலப்புரட்சி

2015 நவம்பரில் வெள்ளம் வந்தபோது வீட்டின் வெளிக்கதவைத் தாண்டி உள்வரவில்லை. சாலையிலிறங்கி முட்டு அளவு ஆழத்தில் நடந்து சென்று வேடிக்கைப்பார்த்தோம். அனகாபுத்தூர் ஆற்றுப்பாலத்தை நெருங்க முடியாத அளவு வெள்ளம். பாலத்தில் நீரில் நிந்தி வந்த எருமைகள் நீரின் போக்கில் நிலைகொள்ள இயலாமல் அடித்துச்சென்றதை உச்சென்று ஒலியெழுப்பி வருந்திக்கொண்டோம். பின் இரண்டாவது வெள்ளம் வந்தபோதைய நிகழ்வுகள் ஒரு நாவலுக்கான அடித்தளம். எப்போது எழுதித் தீர்க்கப்படுமோ தெரியவில்லை.

மழைக்குப்பிறகும் நான்கைந்து நாளாக வெள்ளம் பாலத்திலிருந்து சற்று கீழிறங்கி நெழிந்து சுழிந்து ஓடியதும், நாயொன்று வேடிக்கைப்பார்த்தவர்களை ஏளனப்பார்வையோடு ஒய்யாரமாக நீரில் நகர்ந்துபோனதும் வேடிக்கை மனிதர்களுக்கு உளக்கிளர்ச்சியை உண்டு பண்ணியிருக்க வேண்டும். மொத்தமாக இரைந்தார்கள்.

அந்தப்பக்கம் தினமும் கடந்துபோக தலைப்பட்டிருப்பதால் அருகிலுள்ள கம்பெனிக் கழிவுகள் கலந்த சாக்கடை நீரின் ஓட்டத்தை கண்டு மனம் வெதும்ப வேண்டியுள்ளது. ஆறும் குளமும் குப்பை மேடாகும் கொடுங்கோல் ஆட்சி வேறெதும் நாட்டில் உண்டா எனத்தெரியவில்லை. ஊருக்குள் மீண்டும் பன்றிகள் அட்டகாசம் என வாட்சப்பில் பகிரும் நண்பர்களை எண்ணி நகைப்பதைத்தவிர என்ன செய்ய. தூய்மை இந்தியாவென்று கழிப்பறை கட்ட எத்தனிக்கும் அரசு, கழிப்பறையில் கக்கா இருப்பதையே முன்னேற்றம் என நம்ப வைக்க விளம்பரம் செய்யும் அதே அரசு, அங்கே ஆழ்கிடங்கில் தேங்கியொழுகும் மலநீரை என்ன செய்ய வேண்டுமென அறிவுறுத்துகிறது? அதனை முறைப்படுத்தி எரிவாயு எடுக்க வக்கற்ற அரசு விவசாய நிலங்களை குறிவைத்து தாக்க எத்தனிப்பது ஏன்?

நாங்கள் தற்போது வசிக்கும் பகுதி குன்றத்தூரின் கிழக்கு எல்லை, அடையாறு ஆற்றுப்போக்கிற்கு அரை கிலோமீட்டர் தொலைவிலேயே உள்ளது. இங்கு எந்த தெருவிலும் முறையான வாரங்கால் அமைப்பு கிடையாது, (சி.எம்.டி.ஏ எதை வைத்து வீடுகட்ட அனுமதிக்கிறதோ? பணம்தானே என ஒருகுரல் ஒலிக்கிறது) அந்தந்த வீட்டின் அருகிலிருக்கும் காலி மனை எனக்கூறப்படும் முன்னாள் குளமோ விளைநிலமோ சாக்கடைக்குளமாக நவீன மாற்றமடைந்திருக்கிறது. தற்போது காந்தி சாலை எனப்படும் பிரதான சாலை மட்டும் சாக்கடைக் கால்வாய் அமைத்து பல்லாவரம் சாலையின் ஓரமாக காவல் மையத்தின் பின்புறமாக சென்று அடையாறு ஆற்றினில் தன்னை இணைத்துக்கொள்கிறது, அடடா!! என்னவொரு திட்டம். புல்லரிக்கிறது.

அடுத்தது, இந்த பகுதியின் அடுக்ககங்களின் கழிப்பறை கழிவுகள் மாதமொரு முறையேனும் வெளியேற்றவேண்டிய கட்டாய நிலை இல்லையென்றால் ?! மூடிக்கொள்ள வேண்டியது மூக்கை மட்டுமல்ல. இந்த மலநீர் எங்கே போகிறது? பெரிய வேலையெல்லாம் இல்லை, குத்தகைக்காரன்கள் லாரியில் பிடித்ததை அப்படியே ஆற்றில் திறந்துவிட்டு விட்டு அடுத்த அடுக்ககத்தின் வாசலில் பணியினை தொடரமுடியும். இதை மறைமுகமாக அவர்கள் செய்யவில்லை மிகவெளிப்படையாக செய்கிறார்கள் கற்றறிந்த மூடர் கூட்டம் "சொசைட்டி" என்ற பெயரில் கைதட்டி கும்மாளமடிக்கிறது.

திங்கள், 20 பிப்ரவரி, 2017

அரசியல்வாதிகளின் அந்தரங்கம்

நேற்றுவரை எதிர்த்தவர்கள் இன்று புகழுரைக்கிறார்கள், எது நல்லது எது கெட்டது என்பதெல்லாம் கரை சென்றுவிட்ட காலத்தில் குறைந்தபட்சம் என்ற சொல்லாடல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது. குறைந்தபட்ச மக்கள் நலன், குறைந்தபட்ச பகுத்தறிவு இப்படி சிலபல உண்டு. இப்பொழுது அதுவும் இல்லை நேற்று ஏமாற்றியவன் இன்று ஏகநாயகன் ஆகிறான்.

அரசியல் பேசுவதென்றாலே அரசியல்வாதிகளைப்பற்றி பேசுவது என்றாகவே இருந்து வருகிறது. ஏனென்றால் மக்கள் நலன் என்பதை மக்களே ஏற்றுக்கொள்ளாத ஒரு முட்டாள் சமூகம் ஒன்று கட்டமைக்கப்பட்டுள்ளது. எல்லாம் பணம் எல்லோரும் கொள்ளையர்கள் இங்கே யாரும் விதிவிலக்கல்ல. மக்கள் மக்களாக இல்லை கட்சியவாதியாக, பச்சோந்தியாக, போலியாக வாழ்கிறோமென்று பிழைப்புவாதத்தில் புரள்கிறோம்.

அரசியல் பேசுகிறோமென்று அரசியல்வாதிகளின் அந்தரங்கங்களை வார்த்தைகளால் தொட்டு உணர்சிகளை வெளிப்பபடுத்திக்  கொண்டிருக்கிறோம் இவைகளே வரலாறாகவும் எழுதப்படுகிறது.

நூறு செயற்கைக்கோள்களை இராக்கெட் மூலம் விண்ணில் விடுவதெல்லாம் சாதனையா? சாக்கடைகளை, முறையான வடிகால்களை உருவாக்குவதன் தேவையை, தாம் வாழும் நிலப்பரப்பில் நீராதாரத்தை பேணுவதற்கு சிந்திக்காத மூளை நிலாவுக்கும் செவ்வாய்க்கும் இயந்திரங்களை அனுப்பி அங்கொரு இயந்திரங்களின் குப்பைத்தொட்டியை உருவாக்க எத்தனிப்பது ஏன்?

சனி, 31 டிசம்பர், 2016

அடையாளத்திற்கு முன் சில கேள்விகள்

பெயரில்லா அழைப்பு வந்தது மனைவியின் கைப்பேசியில், "புது நம்பரா இருக்கு" என்று தொடர்ந்தவளிடமிருந்து புரிந்துகொள்ள முடிந்தது பேசுவது அவளது அப்பாவென்று. அனைத்து அழைப்புகளுக்கும் பத்து பைசா எனக் கூவி விற்றதால் வாங்கியிருக்கிறார், இதுபோல் அவர் வாங்கி பயன்படுத்தி தூக்கியெறிந்த சிம்கார்டுகளின் எண்ணிக்கை கணக்கிலடங்கக் கூடியதுதான் என்றாலும் நினைவில் இல்லை. மோடியின் ஆதரவாளர், பேசத்தொடங்கினால் கொட்டாவி விட்டபின்னரே நம்மை விடுதலை செய்வார்.

ரிலையன்ஸ் ஒரு ஆதார் அட்டைக்கு மூன்று சிம் கொடுப்பதாக தகவல் உலாவுகிறது, வெளிப்படையாக மூன்று என்றால் மறைமுகமாக எத்தனையோ. இதேபோல் மற்ற நிறுவனங்கள் அதனதன் தகுதிக்கு ஏற்றதுபோல் கொடுக்கலாம். கொடுக்கிறது. தெருவுக்குத் தெரு நிறுத்தத்திற்கு நிறுத்தம் குடை விரித்து, ஆதார் அட்டை மட்டும் போது "No Photo, No Proof" என கூவிக்கூவி விற்கிறார்கள், வாங்கிய 05 நிமிடத்தில் "சிம்" பயன்படுத்தலாம், எவ்வளவு வேகம்!.

உச்ச நீதிமன்றம் ஆதார் அட்டையினை பயன்படுத்த மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்கிறது, மறுபக்கம் மத்தியரசு வலிய வலிய அரசுத்திட்டங்களில் இதனை உள்ளீடு செய்ய பணிக்கிறது. அத்தனை திட்டங்களையும் முறைப்படுத்த முனைவதாக அரசை எண்ணும் பொழுதில் மேற்கொண்ட சிறு உதாரணம் வழியாக மாபெரும் சீரழிவிற்கு விதை போடுவதாகவே கருதவேண்டிய நிலை ஏற்படுகிறது.

ஒன்றரை வருடப் போராட்டத்திற்குப் பிறகு (குடும்ப அட்டையை வாங்க பட்ட பாட்டினை சொன்னால் அது பெருங்கதை), கிடைத்ததை பதிவு செய்ய ஆதார் கட்டாயம் வேண்டுமாம். இப்போ நீ எடுத்துத்தானே ஆகணும் என்ற ரீதியில் சிலர் சிரிப்பது போல தோன்றியது. நிச்சயமாக பிரம்மையோ பிசாசோ அல்ல. இணையத்தில் விண்ணப்பிக்கலாமென்று துளாவியபோது படிவம் மட்டுமே சிக்கியது. இணையமாக்கலை இங்கிருந்தே தொடங்கியிருக்கலாம், இதிலேதும் சிக்கலிருக்குமானால் ஆதாரும் பெருஞ்சிக்கலாகவே இருக்க முடியும்?

நேற்று பல்லாவரம் அல்லது பல்லவபுரம் நகராட்சிக்கு சென்றபோது, குறுக்குமறுக்காக சிலர் நடமாடுகிறார்கள் நம் காதுகளுக்கு கேட்குமட்டும் "ஆதார் அப்ளையா....ஆதார் அப்ளையா...." என்று ஆட்டோ வேணுமா எனக் கேட்பவரைப் போல விசாரிக்கிறார்கள். அவர்களில் ஒருவரிடம் சென்று கேட்டதும் "ஐ.டி புரூப்லாம் வச்சிருக்கியா.... மூணுமாசத்துல வாங்குறியா உடனே வேணுமா" என்றார். உடனே என்றால் எப்படி என வினாவவும் சிரித்தார் அருகிலிருப்பவரைப் பார்த்து. அங்கிருந்து விலகி வெளியிலிருந்த கடையில் படிவம் இருபது ரூபாய்க்கு வாங்கும்போது, ஒருவர் ஒரு பெண்ணை அழைத்துவந்து "இவங்ககிட்ட எரணூறு ரூவாக்குடு நாளைக்கே முடிச்சிவிடும்" என்றார். (அவரின் சிரிப்பிற்கான பதில் வெளிப்படையாக இங்கே) இணையமயமாக்கலின் அடிப்படையே ஊழலில்தான் துவக்கம் கொள்கிறது.

இப்பொழுது சில கேள்விகள். தீவிரவாதமில்லா இந்தியா? இணையமயமான இந்தியா? பணமற்ற பரிவர்த்தனை பொருளாதாரம்?
ஊழலற்ற இந்தியா?

பதில் உங்களிடம்.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

நவீனநகரமெனும் உலகமகா புழுகல்

நவீன நகரமாக (ஸ்மார்ட் சிட்டி) உருமாறப்போகும் நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது, இந்த கவர்ச்சியான வார்த்தை நமக்கு அளிக்கப்போவது என்ன?

நவீன திட்டங்களால் மேம்படுத்தப்படும் என செய்திகளின் வாயிலாக அறியும் வேளையில்  நடைமுறையில் இருக்கும் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா எனும் கேள்வி எழுகிறது. மேலும் இத்திட்டம் மக்களின் அன்றாட வாழ்வில் ஏதும் மாற்றத்தை நிகழ்த்துமா இல்லை முகத்துச்சாயம் பூசிக்கொள்ளும் நடிகைகள் போல நகரம் தன்மீது  கட்டடங்களையும், விளக்குகளையும் அணிந்துகொண்டு அமைதியாகிவிடுமா?.

எதை மேம்படுத்தப் போகிறது அரசு சாலையில் பள்ளங்களையா? பேருந்தின் உடைந்த இருக்கையையா , துருப்பிடித்து தொங்குகின்ற ஏறும் இறங்கும் படிகளையா? இல்லை
நகரத்து சுவர்கள் அனைத்திலும் "நவீன நகரம் தந்த நமோவே அம்மாவே" என்றும்  இன்னபிற அரசியல் வியாதிகளை, சினிமா போலி புரட்சியாளனை தாங்கி ஒட்டிக்கொண்டிருக்கும் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு தடை உருவாகுமா? அதற்கு சாத்தியமுண்டா நவீன நகரத்தில்?

இந்த செய்தியின் மறுபக்கம் வெளியாகியிருக்கும் அல்லது வெளியாகாமல் கரைந்துபோன அசம்பாவிதங்கள் நடைபெறாமலிருக்க ஏதும் செய்வார்களா?

முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போல் இருப்பதை விட்டு இல்லாததை பற்றிக்கொள்ள அரசு துடிப்பதன் காரணமென்ன?

இருக்கும் திட்டங்களால் எஞ்சி கிடக்கும் ஏரியும் குளமும் சமவெளியும் காடுகளும் இத்திட்டத்தால் மூடுவிழா காண நேரிடுமோ?

தொலைநோக்கு திட்டமாக உருவாக்கப்பட்ட 4000 அணைகள் இருந்தும் தற்போது  நீருக்காக விழி பிதுங்குகிறோமே, இதே நிலை அல்லது இதைவிட மோசமான நிலை இந்த நகரத்தால் உருவாகினால் அதை எவ்விதம் ஏற்றுக்கொள்ளப் போகிறோம்?.

விவசாயத்தை ஊக்குவிக்க ஏன்  தயங்குகிறார்கள்? ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்தின் பயிர்  மற்றும்   காய்கனிகளில் நச்சுத்தன்மை இருப்பதை சுட்டிக்காட்டுகிறதே அதைப்பற்றி அறிக்கை விடத் தயங்குகிற அரசு நவீன நகரத்தில் உருவாக்கப் போவது என்ன? நிச்சயம் விவசாயத்திற்கும் இத்திட்டத்திற்கும் நேரடி உருவாக்கத்திற்கான தொடர்பு இல்லையென்றாலும் மறைமுகமாக மிகப்பெரிய அழிவு இருக்கிறது என்பதை மறுக்க இயலாது.

இந்த நகரத்தில் மக்களின் பங்கு என்னவாக இருக்கும்? விதிமுறை மீறலை ரத்தத்தில் இறவாது கலந்தவர்கள்தான் நாம்.  ஓட்டுப்போடவும், மாநாட்டிற்கும், மறியலுக்கும் ஐநூறோ ஆயிரமோ வாங்கி நக்கிக்கொள்வதோடு அரசியல் கடமை முடிந்துவிட்டது என்ற மட்டமான எண்ணம். படித்து பட்டம் வாங்கியவர்களே இப்படி மனநோய் பிடித்துத் திரிந்தால் பட்டறிவை பாடையில் ஏற்றிவிட்ட டாஸ்மாக் பாமரனை என்ன சொல்ல?.

அரசியல் பேசுங்கள் சமுதாயம் முன்னேற முயற்சி செய்யுங்கள் என நண்பர்களிடம் கூறவிளையும் போது, சமுதாயமே வேண்டாம் வேறு ஏதேனும் பேசுங்களேன் என்று கூப்பாடு. நாளைய பிள்ளைகள்  நம்மைக் காறி உமிழும், அதிலேனும் மேனியிலுள்ள அழுக்கை சுத்தம் செய்யத் தயாராக இருப்போம். அரசை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை.

நவீனநகரம் உலகத்தரம் என்கிறார்கள், இதுவரை சந்தையில் உலாவும் உலகத்தரங்கள் நமக்கு அளித்த வாழ்வியல் நன்மை என்ன?

உலகத்தரமென்பது உலகமகாப் புழுகல் என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.

புதன், 20 மே, 2015

பதாகை பக்கிரிகள்

வளர்சியின் பாதையில் மூழ்கிப்போன அந்த ஓட்டுவீட்டின் எஞ்சியிருந்த சுவரில், அரசியல் தலைவர் ஒருவரின் உருவத்திற்கான கோடுகளை வரைந்து கொண்டிருந்தார். வேகத்தடை உயர எழுப்பி பின் அமர்த்தும் போதும், இறங்கிச் சென்று அவரது கோடுகளின் நுணுக்கங்களை கவனிக்க வேண்டுமெனத் தோன்றியது.

பள்ளியில் படிக்கும் போது படிப்பு எதற்காக, பாடம் எதற்காக என்று எரிச்சலுற்றிருப்போம், வளர்ந்து இந்த வயதில் வேலை எதற்காக, சம்பளம் எதற்காக என நினைக்க வைக்கிறது கலைகளின் மீதுள்ள அவதானிப்பும், ஆர்வமும். ஆனால் கலைகளை வளர்க்கவும் காசு வேண்டும் என்பது தான் நடைமுறை. இந்த கோடுகளையும் வண்ணங்களையும் குழைத்து இவர் உருவாக்கும் முகம் காசுக்காக மட்டுமே என்பதை தெளிவுபடுத்திக் கொண்டு மனமும் பேருந்தும் பல பள்ளங்களில் விழுந்தும் எழுந்தும் பம்மலைக் கடந்து ஊர்ந்து கொண்டிருந்தது.

இரண்டு நாள் கூட்ட நெரிசலில் படத்தின் அடுத்தடுத்த கோணங்களை பார்க்க முடியாமல் போனது வருத்தம் தான். மூன்றாம் நாள் முடிவடைந்திருந்தது. தலைவனை மூன்று கோணத்திலும், இரு பக்கத்தின் ஓரத்தில் வேறு வேறு இரு உருவங்கள், அதில் ஒருவர் இந்த தொகுதியின் ச.ம.உ, கிட்டத்தட்ட இருபத்தினான்கு பற்களும் தெரியுமளவு சிரித்துக் கொண்டிருந்தார். இவரது தலைவரை போலவே இவரும் செயல்படாத ச.ம.உ என்றே நினைக்கத் தோன்றுகிறது.

ஒன்றரை வருடத்திற்கும் மேலாக இந்த குன்றத்தூர்-பல்லாவரம் சாலையில் பயணித்து வருகிறேன். மேடு பள்ளங்கள் மிக அதிகமான ஒழுங்கற்ற சாலை, மழை பெய்தால் சாலையும் சாக்கடைதான். சில மாதங்களாக தண்ணீர் குழாய் பதிக்கிறேன் என்று சாலை மேலும் பலத்த சேதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இதற்கான அனுமதி கிடைத்தது 2009-ஆம் வருடம், செயல்படுத்தப் படுவதோ 2015-ஆம் வருடம் என ஒரு தகவல் வேறு, மக்கள் பிரச்சனையெல்லாம் மயிறு போலத்தான் இவர்களுக்கு. தன் மகளின் திருமணத்திற்கு வீட்டிலிருந்து விமான நிலையம் வரை தலைவனை வரவேற்க பதாகைகள் வைக்கத் தெரியும், ஆனால் பாமரனின் நிலையை புரிந்துகொள்ளத் தெரியாது, தெரியாதா இல்லை தெரியாதது போல நடிக்கிறார்களா?.

இதே கட்சியை சேர்ந்த நண்பர் ஒருவரிடம் பேசியபோது, இங்கு நடப்பது வேறு ஆட்சி நாங்கள் வெறும் ச.ம.உ ஆக இருந்து எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறோம் என்றார். கட்சியின் தலைவரும் இதே வாதத்தைத் தான் முன் வைக்கிறார், “சட்டமன்றம் போனால் மட்டும் பேச விடுவார்களா” என்று பத்திரிக்கை கூட்டத்தில் கதைக்கிறார். பொது இடத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு தெளிவான பதில் உரைக்க வார்த்தைகள் அற்றவர், சட்டமன்றத்தில் மட்டும் என்ன சாதித்துவிட முடியும் ?!.

வெறும் வண்ணங்களையும், எழுத்துப் பதாகைகளையும் கொண்டே அரசியல் பிழைப்பு செய்யலாம் என இவர்கள் இருக்கிறார்கள், நாமளும் அப்படித்தான் இருக்கிறோமா?