புதன், 25 அக்டோபர், 2017

வெளித்தள்ளவும் உள்தள்ளவும்

குறிப்பிட்ட சிலருக்கு அதிகாரமோ ஆதிக்கமோ இருக்குமிடத்தில் அவர்களினிடத்தில் நாம் இருந்தால் கிடைக்கும் சலுகைகளை எண்ணிப் பாரக்காத மனமென்று ஒன்று இருக்குமா. அதிலும் திரைக் கதாநாயகர்களின் குணம்போல் உருவாகிவிட எத்தனிப்பது தமிழகத்தில் வெகு பிரபலம்.

சென்னையிலிருந்து பேருந்தில் ஊர் போகும் நெடுஞ்சாலை ஓரமுள்ள உணவகங்களில் ஒண்ணுக்கோ ரெண்டுக்கோ போக ஐந்து ரூபாய் கொடுத்தும் மிகையாய் புளித்த அல்லது புளிக்கவே புளிக்காத மாவில் சுட்ட இல்லை சுட்டது போன்ற தோசையை அறுபது ரூபாய் கொடுத்தும் வெளியேற்றவும் உட்கொள்ளவும் வேண்டிய அங்கு அதனை பணம் செலுத்தாமலே உண்டும் வெளியேற்றவும் செய்யும் ஓட்டுனராகவோ நடத்துனராகவோ ஆகிவிட்டாலென்ன என எண்ணுவதும் முதலில் சொன்னதோடு சேர்ந்ததுதானே.

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

நாம் கூத்தாடிதான்... எல்லோரும் சொல்லும் பாட்டு

பாடல்கள் கேட்பது வெகுவாக குறைந்துவிட்டது கடந்த சில வருடங்களில், வாசிப்பு நேரத்தை எடுத்துக்கொள்வதால் பாடல்களும் திரைப்படங்களும் விலகியே இருக்கின்றன. கடந்த மாதம் அத்தை மகன் திருமணத்திற்காக ஊருக்கு சென்றிருந்த பொழுது, பாபநாசம் அருகிலுள்ள சிவந்திபுரம் மணமகள் வீட்டிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தோம். மனம் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் நிழலாட்டங்களில் மயங்கிக்கிடந்தது வில்லுப்பாட்டு ஒலி கேட்டதும் காது அதற்கு இசைந்தது "கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ" எனும் பாடல், வாகனத்தின் குலுக்கலும் பாட்டின் துள்ளலும் சேர்ந்து மனம் ஒரு சிற்பத்தை கற்பனை செய்யத் தூண்டியது.


மறுநாள் சென்னை வந்ததும் பாடலை யூட்யூப்பில் திரும்பத் திரும்ப கேட்டு தொடர்ந்து முணுமுணுத்துக் கொண்டிருந்தேன். இன்று காலை விழித்தவுடன் பாயிலிருந்து எழும்புவதற்கு முன்னே "நாம் கூத்தாடிதான்... எல்லோரும் சொல்லும் பாட்டு ..." என்ற வரிகள் குறுக்கும் நெருக்கும் ஓடிக்கொண்டிருந்ததன. என்னடா இந்த வரி என்று மீண்டும் மீண்டும் பாடிப்பார்த்தும் இவ்வரிகளைத் தாண்டி எதுவும் புலப்படவில்லை. எங்கிருந்து வந்து காலையிலேயே சோதனை செய்யுதென்று கூகுளில் தேடினால் மறுபடியும் படத்திலுள்ள பாடல். அடடா!! என்று கேட்கத்தொடங்கிவிட்டேன்.


ஓவியர் அரவக்கோன் - தன்வரலாறு - வாசிப்பு

ஓவியம் பற்றி தேடல்களில் காலத்தை செலவு செய்து கொண்டிருப்பதால் பேஸ்புக்கில் அறிமுகமான அ.நாகராஜன் (அரவக்கோன்) அவர்களின் தன்வரலாற்றுப் புத்தகம் சமீபத்திய சென்னை புத்தகக்காட்சியில் கிடைத்தது. சிறுவயதின் நிகழ்வுகளை அடுக்கிக்கொண்டு போகிறவர் வழியே சென்னை அடையாற்றின் பழைய முகத்தினை காட்சியாக்கி பக்கங்களை புரட்டுகிறார். ஓவியம் வரையத்துவங்கிய காலம் பற்றி இடையில் பேசும் பொழுதில் மெல்ல எனது காகிதங்களையும் பேனாக்களையும் தேடி ஓடியது மனது. மேலும் நகரத்தில் மனிதர்கள் வீடு வீடாக மாறிப்போவது எவ்வளவு எளிதாக நிகழ்ந்துவிடுகிறது. இதுவரை எத்தனை வீடு மாறியிருப்பார் என எண்ணக் கேட்டது மனது பாதி பக்கங்களுக்கு மேல் கடந்தபின்னர்.

பொதிகை அதிவிரைவு தொடர்வண்டியில் வரும்போது இப்புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தேன் அருகிலிருந்த மலையாளச் சிறுவன்  பின்பக்க அட்டையினை தூக்கிப் பார்த்தான் அதை திருப்பி நேராகக்காட்டியதும் "Flute" என்றான் சன்னமாக சிறிது நேரம் அப்படியே வைத்துக்கொண்டு நானும் பார்த்திருந்தேன். அவன் தந்தை அலைபேசியை கையிலெடுக்கவம் அவரோடு ஒட்டிக்கொண்டான். புத்தகம் வாங்கும்போது அப்பின்பக்க ஓவியத்தை முதல்முதலாக பார்த்தது நினைவில் ஓடியது. இப்புத்தகத்தை கடந்து இவரது வேறு ஓவியங்களை பார்த்ததில்லை மற்ற ஓவியர்களுடையதும் அதே நிலையில் காணக்கிடைக்காமல் உள்ளது. இணையத்தில் ஒருசில ஓவியர்களின் படங்கள் காணக்கிடைக்கின்றன. தமிழக ஓவியர்களின் ஓவியங்களை பற்றி யாரேனும் ஆய்வு செய்ய நேரிட்டால் அதற்கான மூலங்களை பெற பெருஞ்சிரமப்பட வேண்டிய நிலை ஏற்படலாம். அரசின் கலைத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறதோ, அதற்கான மன எழுச்சியும் அகதமிகளின் அரசியல் போக்கையும் கண்டித்திருக்கிறார் இப்புத்தகம் வழியே, செவி கொடுப்போர் உண்டா என்ற கேள்வி அதில் தொக்கி நிற்கிறது.

அவரது படைப்புகளை ஒளிப்படங்களாக மாற்றிக்கொண்டிருப்பதாக பதிவு செய்திருக்கிறார். காத்திருக்கிறேன்.
ஓவியங்களுடான வாழ்க்கை இன்றி வங்கிப்பணி பின்னால் சென்று பின் காலம் கொடுத்த இடைவெளியில் ஓவியத் திறனை மீட்டுருவாக்கம் செய்து ஓவியங்களை காட்சிப்படுத்துவதில் கிடைத்த அனுபவங்களால் தொடர்ந்து ஓவியனாகவே முன்னிருத்திக்கொண்டாலும் பகுதிநேரம் ஓவிய பங்களிப்பு செய்பவர்களை "ஞாயிற்றுக்கிழமை ஓவியர்கள்" என பகுக்கப்படுவதை குறிப்பிடுகிறார். இதேபோல் இலக்கியத்திலும் ஞாயிற்றுக்கிழமை இலக்கியவாதிகள் என்ற சொல்லாடலை கவிஞர் விக்கிரமாதித்யனின் பேட்டியொன்றில் வாசித்த ஞாபகம்.

வாசிப்பின் மீதான இவரது விருப்பங்களினிடையே விமர்சனமும் வைக்கிறார் புதுமைப்பித்தனின் கதைகளான துன்பக்கேணி மற்றும் பொன்னகரம் அவரை கீழிழுக்கும் கதைகள் என்கிறார் ஆனால் அதற்கான விளக்கமில்லை.

தமிழக ஓவிய மரபில் ஒரு தொடர்ச்சியை காணமுடியாது எனக்கூறுவதோடு இயல் இசை நாடகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து முத்தமிழாக சிறப்பித்திருக்கும் தமிழ் மொழி ஓவியத்தை ஏன் கைவிட்டது என கேள்வி எழுப்புகிறார். தேடலுக்கான கேள்வியும் கூட.

நவீன ஓவியங்கள் மூலம் உழைப்பவனுக்கு அதாவது பாமர மக்களுக்கு என்ன கூற விளைகிறீர்கள் என்பதற்கு எதுவுமில்லை என்ற பதிலோடு அம்மக்களுக்கு இதில் எல்லாம் விருப்பம் இருப்பதில்லை அதற்கான நேரமும் அவர்களிடம் கிடையாது அவர்களுக்கேற்றவாடு ஆடியும் பாடியும் களித்துக்கொள்கிறார்கள். கலைஞனானவனுக்கு படைப்புருவாக்கத்தில் உண்டாகும் அனுபவமே தேவையானதாக உள்ளது எனும் கூற்றை முன்வைக்கிறார் இது நவீன ஓவியர்கள் முன்வைக்கும் பொதுக் கருத்தாகவே உள்ளது.

"காலி கித்தானும் எனது கோடுகளும்" என்ற ஓவியக்காட்சி இவரது காட்சிப்படுத்துதலில் முக்கியமானதாக இருந்திருக்க வேண்டுமென தெரிகிறது ஆனால் மாதத்தினையும் தேதிகளையும் குறிப்பிட்டவர் வருடத்தினை சொல்லாமல் விட்டிருப்பதாகத் தெரிகிறது, நாட்குறிப்புகளிலும் அதற்கான குறிப்பேதுமில்லை.  நான் எங்கும் தவறவிட்டேனா எனத்தெரியவில்லை.

தன்வரலாற்றுப் பகுதிக்குப் பின் தனது நாட்குறிப்புகளை தொகுத்திருக்கிறார். இங்கு ஓவியம் சார்ந்த இரு முக்கியமான கட்டுரைகளை மொழிபெயர்த்திருக்கிறார், அவை ரவிவர்மாவின் ஓவியங்கள் ,காலண்டர் ஓவியங்கள் மற்றும் அச்சுப்பிரதிகளை பற்றியதாகவும். ரவிவர்மாவின் குறுவரலாறு பற்றியதுமாகும். இதில் திரைப்படங்களுக்காக பேருருவ ஓவியங்கள் வரையப்படும் முறை மற்றும் அதை காட்சிப்படுத்துவதையும் கணினியின் வருகை ஏற்படுத்திய பாதிப்புகள் பற்றியும் விவாதிக்கிறார். 

இந்தியாவிலும் தமிழகத்திலும் வெளிவந்த ஓவியப் பத்திரிக்கைகளை வரிசைப்படுத்தியிருப்பது வரலாற்றுச்சான்று.


ஓவியரின் வாசிப்பனுபவம் தித்திப்பூட்டுகிறது, மிகக்குறைந்த வார்த்தைகளில் புத்தகங்களை கதைகளை விமர்சித்துச் செல்வதும் தன்னை சுய பகடி செய்துகொள்வதும் நிறைந்திருப்பதோடு சதுரங்க விளையாட்டு பற்றிய தெளிவான விரிவான குறிப்புகளை வாசிக்கும் பொழுதில் கல்லூரிப் பருவத்தில் நூலகத்திலிருந்து எடுத்துவந்த சதுரங்க பயிற்சி புத்தகத்திலிருந்த ஆட்ட நகர்வுகளால் விழிபிதுங்கியது நினைவில் ஊடாடியது.

நிறைவுரைக்கு முன்னதாக ஓவியங்களால் நிரம்பியிருக்கின்றன பக்கங்கள். இவர் பறவைகளை தீட்டியிருக்கும் ஓவியங்களில் குழந்தைத் தன்மையை உணர முடிகிறது அதேபோல் குடியிருப்பு ஓவியமும். 

மீள்வாசிப்பிற்குரிய முக்கியமான நூல்.

இவரது "20-ம் நூற்றாண்டில் ஓவிய நிகழ்வுகள்" வாசிக்க காத்திருப்பதுபோல அச்சிலிருக்கும் சித்ரசூத்ரம் மற்றுமிரு நூல்களுக்காகவும் காத்திருக்கிறேன்.

வெள்ளி, 6 அக்டோபர், 2017

மௌனியிடம் பயில்கிறேன்

ஒருசில கதைகளுக்குப் பின் ஓரமாக வைத்திருந்த மௌனியின் படைப்புகளை புரட்ட ஆர்வம் மேலெடுத்தது. மூன்று நாட்களாக ஒவ்வொரு கதையாக (சிகிச்சை, மாபெருங்காவியம், எங்கிருந்தோ வந்தான்) வாசித்து முடித்தேன். மரணத்தை மையங்கொண்டே காதலை அன்பினை வெளிப்படுத்தும் மாந்தர்களை உருவாக்கி தன் புனைவு வெளியை சித்தரிக்கிறார். எங்கிருந்தோ வந்தான் கதையினை வாசிக்கையில் அரூப ஓவியத்தில் ஒழிந்திருக்கும் கீற்றுகளின் ஓட்டங்களை கூர்ந்து நோக்குவதுபோலத்தான் இருந்தது, சமயத்தில் கதையிலிருந்து வெளித்தள்ளி மனதினை காலவெளியில் அலைந்து திரிய விடுகிறது.

இக்கதைகளின் காட்சி சித்தரிப்பில் தேர்ந்த ஒளிப்படக்காரனின் உள்ளுணர்வும் ஓவியனின் பிரதிபலிப்புமாகவே விரிகின்றது.