ஞாயிறு, 31 டிசம்பர், 2017

சொற்களில் அந்நியம்- ரமேஷ் ரக்சனின் "ரகசியம் இருப்பதாய்"

கதைகளுக்கு துறை சார்ந்த கலைச்சொல் அவசியமில்லையா மொழியை அடுத்த படியில் நகர்த்தி வைக்க அவை தேவை இல்லையா, ஆங்கில வார்த்தைகளை தமிழ் எழுத்துக்கள் சேர்த்து எழுதினால் போதுமா என தொடர் கேள்விகள் அழுத்திக் கொண்டிருக்கின்றன ரக்சனின் "ரகசியம் இருப்பதாய்" சிறுகதைத் தொகுப்பை வாசிக்கும் பொழுதில்.

மடிக்கணினி என எழுதியிருக்கும் போது வீடியோ, கேமரா போன்ற எளிமையான சொற்களை ஏன் தமிழ் சொல்லாக்காமல் கடந்து போயிருக்கிறார். நடுத்தர வர்க்கம் என்ற சொல் தமிழுக்கு பழைய சொல்லே அப்படி இருக்கையில் மிடில்கிளாஸ் என்று ஏன் எழுத வேண்டும். இப்படி பல எளிமையான தமிழ் கதைகளில் புழக்கத்திலிருக்கும் சொற்களையே தவிர்த்திருப்பதாகத் தெரிகிறது, இது பிழைதானா என்ற அச்சம் மனதில் உழல்கிறது. கதை கூறுபவனின் நோக்கம் மொழியை அறிமுகம் செய்வதும் தானே, இவ்வாறு தான் அறிமுகம் நேர வேண்டுமா வாசகருக்கு.

"எழிலின் அப்பா" கதை, சொல்லாமலும் சொல்லியும் வலியை கடத்தியது, இத்தொகுப்பின் முக்கியமான கதையாக பார்க்கிறேன், இருந்தும் கவித்துவமாய் நகர்ந்திருக்க வேண்டிய இடத்தில் "ஏதோ எமோஷனலாய் போகிறது" என மிகச் சாதாரணமாக கடந்து போவது சோர்வை அளிக்கிறது. பொழுதுபோக்கிற்கென வாசிப்பவருக்காக எழுதப்பட்டிருக்குமா எனக் கேட்டால் நிச்சயமாக இல்லை ஏனென்றால் அவர்களுக்கான மொழியில்லை.

நிகிதா கதையில் வரும் தாராவிக்கும் சைனுக்குமிடையிலான நடைப்பாலம் எனது எண்ணங்களில் நிறைந்திருப்பவை அக்காட்சியை வாசித்ததும் உற்சாகம் கொண்டவனாய் அமர்ந்தேன் ஆனால் அதிகம் சித்தரிக்கப்படவில்லை எனக்குள் நெடுநாளுக்குப் பிறகு அப்பகுதியை பற்றிய சித்திரத்தை கடத்திவிட்டமைக்கு நன்றி.

ரமேஷின் மொழி வளமடைய வாழ்த்துகள்,

திங்கள், 11 டிசம்பர், 2017

தேரிக்காட்டு இலக்கியங்கள் - வாசிப்பு

இன வரலாறு அல்லது இனவரைவியல் எனத் தேடும் பொழுது அது எவ்வளவோ தொலைவுகள் இடம்பெயர்ந்திருக்கின்றன என்பதை வியப்பிற்கு பின்னே தொடர்ந்து பயணம் செய்ய இயலும். மக்கள் தான் வசித்த இடத்திலிருந்து காணா தொலைவு கடந்து வந்தாலும் அவர்கள் மறக்க மறுப்பது தன் மூத்தோர் பெயரையும் குலதெய்வ வழிபாட்டையும், அது கொடுக்கும் பிணப்பை நம்பிக்கையை எப்படி விட்டுவிட்டு நகர இயலும். தனிமனிதனுக்கு இவை தேவையற்றதாகக் கூடும் ஆனால் இனம் என்னும் குழுவிற்கு அதன் தேவை இருக்கிறது.

தேரிக்காட்டை பற்றி வாசிக்க எத்தனை வரிகள் கிடைத்தாலும் அது அமுதமாக உள் வாங்கப்படுகிறது. கீழப்பாவூரில் வசிக்கும் நாடார் சமூகத்து மக்களின் குலதெய்வங்கள் வசிக்குமிடம் தேரிக்குடியிருப்பு அது வரலாற்றின் தொற்று என்பதே முதற்காரணம். "தேரிக்காட்டு இலக்கியங்கள்" எனும் ஆய்வு நூலில் மக்கள் இடப்பெயர்ச்சி பற்றிய சிறு குறிப்பே முதல் கட்டுரையில் எஞ்சியுள்ளது ஆனால் இதில் அதிகமாக எதிர்பார்த்தது இதை பற்றிய முழு தகவலை அல்லது முடிந்தளவிலான விபரங்களை, அது இல்லை.

இரண்டாவது கட்டுரையில் திறனாய்வு செய்யப்பட்டிருக்கும் "பனையண்ணன்" நாவல் வாசிக்கப்படவேண்டிய நூல். கள்ளர்வெட்டு திருவிழாவின் வாய்மொழி கதையின் வழியாக நிகழ்வுகளை புரிந்துணரும் வரிகள் மிக முக்கியமானவை. வலங்கைமாலை புராணத்தினை பனையண்ணன் நாவல் வழியாக தொழில் மற்றும் சமூகங்களின் தோற்றங்களை அறிவதை விடுத்து விவிலியத்தை நாடிச் சென்றது ஏன் என கேள்வி எழுப்பப்படுகிறது. கால்டுவெல்லின் வரலாற்றை எழுதியிருப்பவர்கள் பெரிதாக ஆய்வு செய்ததாக தெரியவில்லை, மிக முக்கியமாக பஞ்சத்தில் உதவினார்கள் கிறுத்துவ பாதிரியார்கள் என்றால் பஞ்சம் உருவானதனை பின்னணியோடு கூறக் கடமை உள்ளதாக எண்ணவேண்டி உள்ளது. ஆனால் சிலச்சில குறிப்புகளை மட்டுமே அடுக்கிச் செல்கிறார் கட்டுரையாளர். இதன் தொடர்ச்சியாக பஞ்சத்தின் வரலாற்றை அறியவேண்டியது அவசியம்.

ஜி.யு.போப் பற்றிய கட்டுரையும் பல தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது. தாமரை செந்தூர்பாண்டி மற்றும் நெல்லை கவிநேசன் எனும் இருவரை தேரிக்காட்டு படைப்பாளிகளாக முன்னிருத்தி அவர்களுடைய படைப்புகளை விமர்சன கட்டுரை எழுதியிருக்கிறார்கள். இன்னும் எழுதியிருக்கலாம் விமர்சித்திருக்கலாம்.