திங்கள், 26 ஜூன், 2023

மிதவை மீள் வாசிப்பு

மிதவை வாசித்து ஏழு ஆண்டுகள் இருக்கும் இன்னும் இரண்டாயிரத்து பதினைந்து வெள்ளத்தின் ஈரம் காய்ந்த பூஞ்சை தன்மீது படர்ந்திருக்க மீண்டும் கையிலெடுத்திருக்கிறேன் புதிதாக வாசிப்பது போலிருக்கிறது சண்முகம் பயணிக்கும் தண்டவாளங்கள் தடதடக்கும் பாதையிலிருந்து மீண்டதனாலோ என்னவோ நெருக்கமான புதினமாக என்னிடமுள்ள மறக்கவே இயலாத புத்தகம் என் பிறப்புக்கு ஓராண்டு முன் முதல் பதிப்பு கண்டது என நேற்றுதான் கவனித்தேன் இக்கதையில் சண்முகம் பட்டப் படிப்பில் இரண்டாவதாக வந்து வெற்றி பெற்றதை விவரிக்கும் இடத்தில் "மனம் தண்ணீரில் சிறகு முக்கிப் படபடத்தது" என்றொரு சொல்லாடல் எழுதப்பட்டிருக்கும் அதை இரண்டு நாட்களாக கடன் வாங்கியிருக்கிறேன் முதலில் வாசிக்கும் போது என்ன உணர்வில் இருந்தேன் என்பதை எண்ணினால் ஓரிரு காட்சிகளைத் தவிர்த்து எதுவும் நினைவுகளில் வர மறுக்கிறது சின்னதாக ஒரு குறிப்பு எழுதிய ஞாபகம் அதைத் தேடிப் பார்க்க வேண்டும் வேலையில்லா பட்டதாரிகள் இல்லாத காலமென்று ஏதேனும் உண்டா ஒருவேளை பட்டதாரிகள் இல்லாத காலத்தில் இருக்கலாமோ அங்கும் உணவுக்கும் உடைக்கும் எதற்கும் போராடவேண்டிய சூழல் எப்போதும் இருக்கத்தான் செய்யும் போல. எழுத்தாளர் நாஞ்சில் நாடன் சொல்லாடலில் நிகழ்வுகள் எவ்வித மிகைப்படுத்தலுமின்றி அதற்கான சித்திரங்களை கண்முன் நிறுத்துவதும் உணர்வுகளை நம்முள் கடத்துவதும் இயல்பாக இருக்கிறது.


  வாழ்வை ஒருவித விமர்சனப் பார்வைக்குள் புகுத்தி தன்னைத் தானே விடுவித்துக் கொள்ளும் முனைப்புடன் நகரும் கதையில் வழிநெடுக ஊடாடும் மனித வாழ்வினை எள்ளலுடன் நடைபாதையில் இருந்து விலகி அதனை பார்க்கச் சொல்லும் சொற்கள்.

மிதவை முதல் வாசிப்பின் போது எழுதிய சிறு குறிப்பு இந்த சுட்டியில்

சனி, 24 ஜூன், 2023

தூவல்

என் முதல் இருப்பிடம்
எதுவென்று தெரியவில்லை
அவசரத்திலோ அவசரமில்லாமலோ
அவனுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை
உன்னோடு 
சென்னையின் தண்டவாளம்
அடுத்தடுத்து நிறைய தண்டவாளங்கள்
உனது அறையை எங்கேயும் 
எப்போதும் இருப்பிடமாக்கி
ஒரு கோடு கிழிக்க வக்கில்லாமல்
தன்னிலை பழகாமல் என்ன வாழ்வு
எந்த நிறமானாலும் 
இன்றேனும் ஒரு சொட்டு மை  ஊற்றிப்பார்




செவ்வாய், 13 ஜூன், 2023

நகராட்சிப் பூங்கா


என்ன கால்கள் இது மூன்று சுற்றுகளுக்கு மேல் நடக்க மறுக்கிறது ஆற அமர உட்காரலாமென்றால் ஒரு இருக்கை கூட இல்லையே எவன் சிந்தனையில் உதித்த வடிவமைப்பு இதற்குப் பேசாமல் மொட்டை மாடியில் நடந்திருக்கலாம் தான் முட்டி ஒத்துழைக்காதென்று இங்கு வந்தால் நிம்மதியா உட்கார இடமில்லை கழுதை கெட்டால் குட்டிச் சுவரு என்பது போல சுற்றி நடைபாதை ஓரமுள்ள இந்த சிறு திண்டாவது இருக்கிறது இதுயென்ன இளஞ்சிவப்புப் பூ அடடா செம்பருத்திச் செடி வீட்டில் இப்படியொரு பூச்செடி இல்லையே மொத்தத்திற்கு நான்கு பேர்தான் இருக்கிறார்கள் எதிர்த்தால் இருப்பவனோ மரங்களையும் வானத்தையும் வெறிக்கிறான் அவன் மட்டுமா உடற்பயிற்சி என்ற பெயரில் சாய்ந்த இரும்புப் படுக்கையில் கண்மூடிக் கிடக்கும் பெருந்தொப்பை ஊஞ்சலாடும் நரைத்த கிழவிகள் உட்பட யாருமே என்னை பார்க்கப் போவதில்லை மெல்லப் பிடுங்கலாம் எப்படித் தெரியாமல் எடுத்துப்போவது முந்தானை இருக்கிறதே சொருகிக் கொள்ளலாம் ஒரு நாளைக்கு எத்தனை பூக்களோ நான்கைந்து மலர்ந்தால் நன்றாக இருக்கும் திரும்பிப் பார்க்கலாமா வேண்டாம். இன்னும் இரண்டு மூன்று நாட்கள் பூங்காவிற்கு வரக்கூடாது செடிக்கு நீரூற்ற வேண்டும்.

திங்கள், 12 ஜூன், 2023

துள்ளியோடும் நதி

எனக்கான தேடலுக்கான பாதையை எழுத்தில் கண்டு இன்று ஓவியங்களில் தொற்றிக் கொண்டு பயணிக்கிறேன், ஓவியம் வரைதலிலும் அதைப்பற்றிய வாசிப்பிலும் முயன்று அறிய முற்பட்டாலும் பணிச் சூழல் அதிக பொழுதையும் அதற்கான ஓய்வு என்று சில பொழுதையும் உட்கொண்டு விடுவதால் சுய தேடலில் கரைந்து போக மனம் பொருந்தி வருவதில்லை, ஐந்து வருடமாக தீவிர மனோபாவத்தில் தான் ஓவியம் சார்ந்து இயங்க முற்படுகிறேன் ஆனாலும் இலக்கு என்று எதையும் நோக்காமல் நீண்டதொரு பயணமாகவே இதனை பார்க்க எண்ணுவதாலோ என்னவோ அவ்வப்போது கொஞ்சம் இடைவெளி உருவாகிவிடுகிறது, என்னால் எழுதவோ வரையவோ மட்டுமே இயலுமென்பதை உணர்த்தியிருக்கிறது இப்பயணம், ஒவ்வொரு திசையிலிருந்தும் பெறப்படும் அல்லது திணிப்புக்குள்ளாகும் சிந்தனைகளில் எது எனதானது என்பதை கண்டடைவதில் பெருங் குழப்பம் எப்போதுமே இருக்கும், எனக்கான தேடல் எங்கே தேங்கியிருக்கிறது அது எதில் தொடரவேண்டுமென எண்ணற்ற கேள்விகள் எழும், அத்தனை கேள்விகளுமே எதையாவது செய் என்பதில் கொண்டு வந்து நிறுத்தும், இப்படி எதையாவது என்ற போக்கு பெருங்குழப்ப நிலைக்கு ஆட்படுத்துகிறது, திடீரென கிழக்கு பின் வடக்கு அடுத்த நாள் மேற்கு சில மணி நேரத்தில் மேற்கு என திசையறியா பறவை போல மனம் முட்டி மோதும் எதற்கும் முகம் கொடுக்க மறுக்கும்