சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 27 மே, 2023

காக்கைகள் இல்லாத ஊர்

ஒரு மனிதரோடு பழகும் போதோ ஒரு புத்தகத்தை வாசிக்கையிலோ அங்கே வெளிப்படும் சொற்களை நம் வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்து எண்ணங்களை விரிவாக்கிக் கொள்வதுண்டு. "காக்கைகள் இல்லாத ஊர்" என்றொரு சிறுகதை காகங்கள் இல்லாமல் போவதற்கான காரணமாக அவ்வூரில் ஒழிந்துபோன அதற்கு உணவளிக்கும் சடங்கைச் சொல்லும் சூழலை எண்ணும் போது காக்கைகளுக்கு எந்த ஊரில் யார் சோறு வைக்கிறார்கள் என்ற கேள்வியில் எங்கள் ஊர்ப் பகுதியில் உணவு வைத்ததாக ஞாபகப் படுத்த எவ்வளவு முயற்சி செய்தாலும் தாத்தா இறந்த பின் முப்பதாம் நாள் கோயில் போகும் முகமாக குற்றாலம் சென்ற அந்த காலையில் சிவனடியார்களுக்கு அன்னம் (சமைத்த உணவு என்றெண்ண வேண்டாம், அரிசி முதல் உப்பு வரை சோற்றுக்கும் குழம்புக்குமான உணவுப் பொருட்களை அவர்களது திருவோட்டில் தானம் கொடுப்பது) வழங்கியதும் அவர்கள் அதிலிருந்து ஒவ்வொரு பிடி எடுத்து "நாளை வீட்டில் சமைத்து காக்காவுக்கு வைத்தபின் எல்லோரும் சாப்பிடுங்க" என்று சொன்னச் சொற்களும் மீதியான பழையச் சோற்றில் உள்ளியை நறுக்கிச் சேர்த்து உருண்டை பிடித்து ஓட்டில் காய வைக்கும் போது வரும் காகங்களுமே எஞ்சி நிற்கின்றன.

ஊரில் இப்படி முப்பதாம் பக்கம் கோயிலுக்கு போவது என்றால் குற்றாலம் அல்லது பாபநாசம் போவார்கள், அந்த ஒருநாள் சனிக்கிழமை விடியுமுன் கிளம்பி இருட்டிய பின் ஊருக்கு திரும்புவது வழக்கம், இப்போது இதன் தோற்றங்கள் மாறியிருந்தாலும் நிகழ்கிறது. இந்த சூழலில் கோயிலுக்கு செல்லும் போது அங்குள்ள சிவன் ஆலயத்திற்குள் நுழைவதேயில்லை, ஆற்றிலோ அருவியிலோ தலை நனைப்பதோடு சிவனடியார்களுக்கு அன்னம் கொடுத்த பின் உணவு சமைத்து உண்டு உறங்கி திரும்புவதே வாடிக்கை. இந்த நாள் என்றில்லை அருவியில் தண்ணீர் கொட்டும் நாட்களில் அங்கு குடும்பத்தோடு சென்றாலும் பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைப்பதோடு வழிபாடு முடித்து வைக்கப்பட்டு, சிவன் ஆலயத்திற்குள் ஒரு நாளும் சென்றதில்லை. ஏன்னென்று கேட்டிருந்தால் பதில் அப்படியொன்றும் விளக்கமாக வந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் சென்னை அப்படியல்ல இங்கே காக்கைக்கு உணவு வைப்பவர்கள் அதிகம், அமாவாசைச் சடங்குக்கு தெருவில் பூசணிக்காய் உடைத்துப் போடுவது என அதிகம் கண்டிராத சடங்குகள். ஒவ்வொரு பகுதிக்கும் சடங்குகளில் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். மாநகரம் எல்லாச் சடங்குகளையும் தக்கவைத்திருக்கிறது அதன் மனிதர்களோடு.

கதைக்கு வருவோம், யதார்த்தங்களை மீறிய கற்பனையில் எழும்பி நின்று எண்ணங்களா தத்துவங்களா எதுவாகினும் அதிலுள்ள முரண்பாடுகளையும் அதனால் ஏற்படுத்தப் படும் மனித விளைவுகளையும் பேசும் இப்புனைவு எழுத்தாளர் ஜீவ கரிகாலனின் "கண்ணம்மா" தொகுப்பில் வருகிறது, இந்த புத்தகத்திலுள்ள கதைகளை வாங்கிய நாளில் ஒருமுறை வாசித்திருந்தாலும் கடந்த வாரம் அலமாரியைச் சரி செய்தபோது மீள் வாசிப்பிற்காக எடுத்து வைத்திருந்தேன். இரண்டு நாள் முன் வரையத் தொடங்கி பல அடுக்கு வண்ணத் தொகுப்பிற்குப் பிறகு காக்கையொன்று வந்தமர்ந்து உரையாட ஆரம்பித்ததை (இன்னும் முடிவுராத ஓவியம் கீழே) எனது கைகளில் ஏந்தி வருடிக்கொண்டிருந்த அன்றைக்கு மறுநாள் தொலைக்காட்சி மேசைக்கு கீழுள்ள அடுக்கிலிருந்து எடுத்து புரட்டியபோது "காக்ககள் இல்லாத ஊர்" வாசிக்கக் கிடைத்தது எதன் விளைவு என ஓடும் கேள்வியும் கதையின் ஊடே பதிப்புக்குள்ளாகியிருக்கும் ஓவியர் விஜய் பிச்சுமணியின் காகங்கள் என என்னை வட்டமடிக்கத் தொடங்கியிருக்கும் இப்பறவையின் இறகுகளுக்கிடையே உலவும் காற்றை கையிலேந்த காத்திருக்கிறேன்.




செவ்வாய், 2 மே, 2023

The Whiskey Whispered - Short stories

ஒரு சிறுகதை அளவிலும் கருவிலும் வெளிப்படும் விதத்தில் அடுத்த கட்ட உரையாடலுக்குள் நுழையும், அவ்வாறு புகாமல் விலகிப் போகும் கதைகள் காகிதத்தில் எழுத்தாக மட்டுமே உறைந்து போகும். எழுத்தாளர் அமல் மோகன் அவர்களுடைய "The Whiskey Whispered" ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பிலுள்ள முதல் கதையினை மற்ற கதைகளுக்கு பிறகே வாசித்தேன். நினைவுகளில் கரைந்து உருகும் கதைகளில் இந்த "Meraki" வலிகளையும் சொற்களற்ற காற்று வெளியையும் நம்முள் கடத்துகிறது.

குறிப்பிட்ட நிலையான காதல் என்றொன்று இல்லை என்பதை நிரூபிக்கும் கதைப் போக்கு இந்த தொகுப்பின் ஒட்டுமொத்தக் கருவாக பிணைந்திருக்கிறது என்று சொல்லலாம். அதே போல ஒவ்வொரு கதையும் அடுத்த கட்ட வாசிப்புக்குள் நம்மை இயல்பாக நகர்த்துவதை தவிர்க்க இயலாது.



 தற்கால வாழ்வு என்பது பெரும் வினாக்களோடு போராடுவது, கடந்த காலங்களில் வழி மாறிய காட்சிகளை மறு உருவாக்கம் செய்து கொள்வது எனப்  பொருந்தா வெளியில் உணர்வுகளைத் தேடித் திரியும் அகதியாக நிற்கிறோமா. இன்னாருக்கு இந்த உணர்வு மட்டும் என்று கட்டமைக்கப்படாத பிரபஞ்சத்திலும் கட்டமைக்கப்பட்ட சமூகத்திலும் வாழ்வதா வாழ்க்கை. ஒரு உயிர் மற்றொன்றுடன் பொருந்தும் நோக்கில் பற்றிக் கொள்ள பிடி தேடும் கொடி போலத் தான் படைக்கப் பட்டிருக்கிறதா என அடுத்தடுத்து விடை தேடும் முடிச்சிகளைக் கொண்ட கதைகள். ஒரு உயிர் மற்றொன்றுடன் எதனால் ஈர்க்கப் படுகிறது எந்த புள்ளியில் அது விலகிப் போகிறது. சாதி மதம் பார்க்காமல் வாழத் தெரிந்தவனுக்குள் நிறமும் உருவமும் எப்படி குரோதத்தை விதைக்கிறது.

"Girl on the other end" கதையில் தொலைபேசி உரையாடல் குரலில் அவனது பழைய காதலியின் சாயலை உணரும் பெண்ணின் உருவம் பற்றி முதலில் எந்த விவரிப்பும் இன்றி அவர்களின் சந்திப்பின் போது சொல்லப்படும் அவளின் உருவமும் நிறமும் கதையின் போக்கிற்கு ஏற்ற வடிவத்தில் அமைந்துள்ளது.

ஆண்களுக்கு அழுகையை வெளிப்படுத்த உரிய சூழல் நம்மிடம் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. அன்பிற்காக ஏங்கி அழும் ஆண்கள் கதையில் கலந்திருக்கிறார்கள். மகிழ்ச்சியாக இல்லாதிருப்பதில் மகிழ்ச்சி எனும் கூற்றை முன்வைக்கும் "Director's cut" கதையில் மகிழ்வை வெளிப்படுத்தும் ஓவியத்தை வரையச் சொல்லும் பெண்ணைப் பற்றிய தனது திரைக்கதையில் இறுக்கமான காட்சியில் தனது திரைப்படத்தை முடிப்பது கூற்றை மெய்ப்பிக்கும் தளம்.

செவ்வாய், 29 மார்ச், 2022

வலி - விமலாதித்த மாமல்லன்

ஒரு சிறுவனின் பார்வையில், அவனுடைய சென்னையிலுள்ள தாத்தாவை காணப் போகும் பயணத்தை எண்ணி குதூகலித்து தன் பக்கத்து வீட்டு அக்காவிடமும் தன் நண்பனிடமும் பகிர்ந்து மகிழ்பவனுக்கு அப்பாவிடமும் அம்மாவிடமும் அக்குதூகலத்தை காணாதது கண்டு வியப்பிற்கும், தனக்குள் எழாத அல்லது எழுந்த விசாரணைக்கும் பதிலாக தனது தாத்தாவை காண்பதே கதையின் முடிச்சு.

பயணம் என்றதும் சிறுவர்களுக்கு ஏற்படும் குதூகலமும், அதனை தனது பக்கத்து வீட்டு உறவுகளுக்கு தெரிவித்து பெருமையடித்துக் கொள்வது. சன்னல் வழியாக நண்பன் வீட்டை எட்டிப் பார்ப்பதும், அக்காவிடமான உரையாடலும் அவள் அன்பின் வெளிப்பாடாக இவனுக்கு கிடைக்கும் முத்தமென அழகியல் வடிவங்களுக்கு அப்பால் தலைப்பை சுமந்து நடக்கும் கதை எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனின் வலி சிறுகதை. 

இதற்கு பிறகு அச்சிறுவன் தனது தாத்தா பற்றிய பிம்பத்தை எப்படி மறு கட்டமைப்பு செய்வான்அத்தை பற்றிய எண்ணங்களை எப்படி வடித்துக் கொள்வான் என்பதில் மனம் சற்று மௌனித்துக் கிடக்கிறது.






சனி, 9 நவம்பர், 2019

மின்னூல் உருவாக்கம்

இந்த புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கும் பொழுதில் பேராசையொன்றை கிளர்த்திவிட்டது.

அவ்வப்போது எனது வலைப்பூவில்(BLOG - https://pandianinpakkangal.blogspot.com/?m=1) எழுதிய சில பக்கங்களை மின்னூலாக மாற்றலாம் என்ற எண்ணத்தை இச்சையெனக் கடந்து போகாமல் திட்டமிடத் தொடங்கியிருக்கிறேன். விரைவில் வெளிவருமென நம்பலாம்!

நன்றி Vimaladhitha Maamallan அமேசானில் இ-புத்தகம் வெளியிடுவது எப்படி



https://www.amazon.in/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-publish-ebook/dp/B07XWD47FT/ref=sr_1_1?crid=1O59BZLJDU1D0&keywords=vimaladhitha+maamallan&qid=1573312906&sprefix=vimaladhith%2Caps%2C292&sr=8-1

வியாழன், 8 செப்டம்பர், 2016

கதவு - சிறுகதை தொகுப்பு

நேற்றுதான் கி.ராவுக்கு விருது வழங்கும் விழாவில் எஸ்.ராமகிருஷ்ணன் பேசிய உரையை கேட்டேன். கி.ராவின் படைப்பில் அவர் பேசிய கோபல்லபுரத்து மக்கள் புதினத்தை வாசித்திருக்கிறேன்.  இப்பொழுது கதவு சிறுகதை தொகுப்பு. பதிமூன்று சிறுகதைகள் உள்ளடக்கம். முதல் சிறுகதை கதவு, மனதிற்கு மிகநெருக்கமானதாக ஓர் உணர்வு. இதற்கு முன் வாசித்தது போன்ற நினைவெழுந்தது, எங்கள் வீட்டிலும் கதவுக்கும் எங்களுக்குமான உறவு அகக்கிளர்ச்சி நிறைந்தது, அதுவொரு காரணமாயிருக்கலாம். சீனிவாசனும் லட்சுமியும் தொலைத்தது போல நாங்களும் சிலவற்றை தொலைத்திருக்கிறோம்.

இரண்டாவது கதையில் புல்லை (மாடு). சீதனமாக கிடைத்த மாடு இறந்தபின் அயிரக்கா மனமுடைந்து கிடப்பதும், பக்கத்துவீட்டு முத்தையா வந்து திட்டித் தீர்த்து தொட்டண்ணனை அழைத்துக்கொண்டு கோவில்பட்டி போய் மருத்துவரை கூட்டிவர கிளம்புகிறார்கள் மருத்துவர் வர இயலாத சூழலில் ஊர்வந்த பொழுதில் புல்லை கண்மூடியிருந்தது. கூட்டு மாடு சேர்ந்து உழுதவனுக்கு வாக்கு தவறாமல் மூன்று நாள் பிறகு மாட்டிற்கு பதிலாக நுக்காலை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு அவனோடு போவதும் அதை அயிரக்கா பார்த்து முகம் புதைத்து கொள்வதுமாக கதை முற்றுகிறது.

மின்னல் கதை கிராமத்து பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளை பற்றி எழுதியிருப்பது. ஒரு பெண்ணும் குழந்தையும் அந்த சூழலில் பொருந்தும் பொழுதும் விலகிப்போகும் போதும் பேருந்துக்குள் நிகழும் சூழல் மாற்றங்களை ஓவியம் போல் வரைந்திருப்பார்.

படித்ததில் பிடித்தது என்பதைவிட பாதிக்கும் சில கதைகள் இருக்கும் சாவு, மாயமான் மற்றும் கரண்டு அந்த வகையில் சேர்க்கலாம். சுமங்கலியின் கோலம் கணவனை இழந்தபின் பதினாறாம் பக்கம் நாடகம் போல நிகழ்ந்து கலைக்கப்படும் நெஞ்சறுக்கும் பொழுதை சாவில் சொல்லியது போலவே. அரசு கொடுக்கும் உதவித்தொகையை நம்பி கிணறு வெட்டி விவசாயத்தில் தோல்வியுற்று சொத்தை இழந்து ஊர்விட்டு ஊர் பிழைக்கப்போகும் குடும்பத்தை பற்றியது மாயமான் கதை.

பலாப்பழம் கதையில் வருவதுபோல் உண்மையில் நிகழுமா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும், அதில் அனுபவமுண்டு என்பதால் அப்படி கூறமுடிகிறது. ஆமாம் மசக்கை பெண் கேட்பதை வாங்கிக் கொடுக்கவில்லையென்றால் பிறக்கும் குழந்தைக்கு சீழ் வடியுமா?!. பலாப்பழப் கதையில் வடிவதை சிரித்துக்கொண்டேதான் வாசித்தேன். கி.ரா பெரும்பாலும் சிரிக்க வைப்பவர் ஏனென்றால் அவர் எழுதுவது கிராமத்து வெள்ளந்தி உள்ளங்களை. பாலியல் கதைகளை தொகுத்து புத்தகம் எழுதியிருக்கிறார், வாசிக்கணும். நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது.

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

எதற்கோ எப்படியோ

மதியிடம் கேட்டிருந்தேன் இரண்டு கிராம் அளவில் சிறுவர்கள் அணிந்துகொள்ளும் மோதிரம் ஒன்று வாங்கிவர முடியுமா என்று. இதுவரையில் நகை வாங்க போனதில்லை எனக்கு எப்படித் தெரியுமென்று சொன்னபிறகு மீண்டும் கேட்டால் சரிவராது என்ற எண்ணத்தில்தான், இரண்டுபேரும் சேர்ந்து போகலாம் என்று கூறியிருந்தேன். 

எனக்குள் மிகப்பெரிய தயக்கம். புதிதாக ஒரு பொருளை தான்  அதுவரை தனியே சென்று வாங்கியிராத ஒன்றை விலைபேசி வாங்குவதற்கு ஏற்படக்கூடிய கூச்சம், அச்சம் எல்லாம். மேலும் நகைக்கடைகள் காட்டும் பிரம்மாண்டத்தின் மீதான, நகைகளின் மீதான பேரச்சம். திங்கள் கிழமை மாலையில் மூக்கொழுகிக்கொண்டும் உடல் அசதியும் அந்த நாளை தள்ளிப்போட்டது. வியாழன் வரை காலம் இருக்கிறது என்ற எண்ணம் செவ்வாய்க்கிழமையையும் தள்ளிப்போட வைத்தது. மீண்டும் மதியை அழைப்பதில் இருக்கும் சங்கடம் மற்றும் முதன் முதல் நகைக்கடைக்கு போவதற்கு முன் ஏற்படும் குழப்பநிலையே உண்மையான காரணமாக இருக்கக்கூடும்.

புதன்கிழமையை விட்டால் வியாழனும் ஓடிப்போக வாய்ப்புண்டு என்பதனால் தனியாகவே கடைக்கு பிரவேசம் செய்ய முடிவு. மாலையில் வேலை முடிந்ததும் பாதிவழியில் பல்லாவரத்தில் இறங்கி வாங்கிவிடலாம் என்ற நினைப்பில் வந்தபோது, திருநீர்மலை சாலை முகப்பிலேயே இறங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. நடக்கத்துவங்கினேன் வலதுபக்கம் பிரதான சாலை இடது பக்கத்தில் பற்பல கடைகளின் அணிவகுப்பு.  நிச்சயமாக அங்கு நகைக்கடை கிடையாதென்பது உறுதி. பழைய இரும்புக்கடை, டூவீலர் மெக்கானிக், பலசரக்குக்கடை. இடையில் ஓரிடத்தில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள். இதற்குமுன் அவ்விடம் எதை சுமந்து கொண்டிருந்தது என்பதை நினைவின் அடியாழத்திலிருந்து கொணர்வது இயலாத காரியம்.

பல்லாவரம் - குன்றத்தூர் சாலை. இங்கு சில நகைக்கடைகளுண்டு. ஒரு கடையை தேர்வுசெய்து உள்நுழைந்ததும் மிதமாக குளிர்சேர்ந்த காற்று வியர்வையை ஒழித்துவைத்தது. அச்சப்பட தேவையற்ற மிகப்பெரியதுமல்லாத சிறியதுமல்லாத நடுத்தரக்கடை. இடதுபக்கம் சில பெண்கள் சில பெண்களுக்கு வெள்ளிப்பொருட்கள் விற்பனை செய்யும் முயற்சியில். வலதுபக்கம் கல்லாவிலிருந்த முகங்களை பார்த்தேன், என் வருகை அவர்களுக்கு வியப்பையோ விருப்பத்தையோ ஏற்படுத்த எவ்வித காரண காரியமும் இல்லாததால் அமைதியாக அமர்ந்திருந்தனர். ஒருமுறை கடையை சுற்றிப்பார்த்தேன் நீலம் பாய்ந்த சேலைகளில் வரிசையாக பெண்கள் நகைகளை விற்பனை செய்ய பணியில் இருந்தனர். நடுவில் இரு ஆண்கள் சட்டையை இடையில் சொருகி சப்பாத்து அணிந்து கைகளை கட்டிக்கொண்டு நின்றனர். ஏன் அப்படி என்று அவர்களை கேட்கவோ இல்லை எதையாவது புனைந்து கொள்ளவோ விருப்பமில்லை.

சபாரி அணிந்த பெரிய மனிதர் ஒருவர் வந்து வணக்கம் வைத்தார். கைக்கூப்பி மோதிரம் வேண்டும் என்றதும், ஒருபெண்ணைக் காட்டி "அங்கே போங்க" என்றார்.

ஐந்தடி உயரமும் சற்று குண்டான உடல்வாகு கொண்ட இருபத்தைந்து மதிக்கத்தக்க பெண். "எத்தனை க்ராம்" என்று கேட்டாள். "இரண்டு இல்லன்னா மூணு க்ராமுல வேணும்" என்றேன்.

பெரிய மோதிரமாக காண்பித்து "மூன்றரை க்ராம்" என்றாள். "சின்னப்பையனுக்கு போடுவதற்கு" என்றதும். இரண்டு கிராமுக்குள்தான் சின்னதான மோதிரம் கிடைக்கும் என்பதாக கூறி என்னை உற்று பார்த்தாள். கண்ணாடிப்பெட்டிக்குள் இருக்கும் பலவகைப்பட்ட கணையாழிகளை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தபோது, "இதப்பாருங்கு இரண்டரை க்ராம்ல கிடைச்சிருச்சி" என்று எடையில் போட்டுக் காண்பித்தாள். அது உண்மையிலேயே தங்கம்தானா இல்லை வேறேதும் உலோகத்தை அப்படிச்சொல்லி விற்கிறார்களா. இதை எப்படி சோதனை செய்வதென்பது மனக்கேள்விகளாக மட்டும் ஒலித்தபோது. நான் அந்த மோதிரத்தை வாங்குவதாக உறுதியளித்துவிட்டேன்.

இப்பொழுது எனது அடையாள அட்டை, வங்கி பற்று அட்டை என்னிடமிருந்து வாங்கப்படன. மேலும் இரண்டு பெண்கள் அருகில் வந்ததும் "வாரச்சீட்டு, மாதச்சீட்டு போடுங்க சார் பிரயோஜனமா இருக்கும்" என்றாள் முதல் பெண். கண் இமைகளுக்கு அழகாக மை தீட்டியிருந்தாள் எனக்கு பைக்குள்ளிருக்கும் பேனாவை எடுத்து அவள் கண்களை வரைந்துவிடவேண்டுமென்ற எண்ணம் மேலோங்கியது. கருப்பான பெண். முகத்திலிட்ட பூச்சுகளின் திட்டு அவ்வறையின் சிபிஎல் வெளிச்சத்தில் சிலிர்ப்பை உயிர்ப்பித்தது. இரண்டொரு நொடிகளுக்குப்பின் அவள் கண்ணாடிச்சட்டத்தின் பக்கமாக திரும்பி  எதையோ முணுமுணுத்தாள். இரண்டாமவளின் குரல் மீண்டும் சந்தாக்களை அறிமுகம் செய்தது. இம்முறை பதிலளித்தேன் வேண்டாமென்று, கூடவே சொன்னேன் இதற்கு பிறகு எப்போ நகை வாங்குவேனென்று எனக்கே தெரியாதென்று. "இப்போ வாங்கிட்டீங்கல்ல இனி வாங்குவீங்க சார்" என்று முதலாமவள் சொன்னாள். அவளை மீண்டும் பார்த்தேன். பார்க்க மட்டுமே செய்தேன்.

மோதிரம் சின்னதொரு ஞெகிழிப்பெட்டியிலிருந்து சற்று குண்டான அந்த பெண்ணால் வெளியில் காண்பித்து பின் பூட்டப்பட்டது. எனது அட்டைகளையும், மோதிரப்பையையும், பல் தெரியா அப்பெண்ணின் வலிந்த சிரிப்பையும் எடுத்து வெளியில் வந்தேன். ஒழிக்கப்பட்ட வியர்வை ஊற்றிக்கொட்டியது.

வீடுவந்ததும் "மொதமொதலா நகைக்கடைக்கு பேட்டு வந்துட்டிய" என்றாள் சித்ரா. "ம்" என்று, மெல்ல கண் அயர்ந்தேன் கட்டிலில், கோடுகள் தீட்டிய கண்கள் என்றேன் மெல்லியதாய். என் விரலிடுக்கில் பென்சிலொன்று நடுங்கிக்கொண்டிருக்கும் உணர்வு.

வெள்ளி, 3 ஜூன், 2016

தாகம்

முருங்கைவிதைகளை நீருக்குள் இட்டு பின் வடிகட்டி குடிப்பதால், கிருமிகளை விலக்கி சுத்தமான நீரை பருகலாம் என்ற தகவலை இணையத்தில் வாசித்துக் கொண்டிருந்தபோது. "என்ன புழுக்கம் புழுங்குது" என்ற முணுமுணுப்போடு வாசலில் என்னருகில் வந்தமர்ந்தாள்.

"தண்ணீ தாகமே நிக்கமிண்டக்கிடா, உனக்கெப்படியிருக்கு" என்றாள்.

"மண்பானைத் தண்ணீ நல்லாத்தாம்ம இருக்கு, கொஞ்சநாள்ல பழகிரும். இனி துட்டு குடுத்து தண்ணி வாங்குததா உத்தேசமில்லம்ம" என்றதோடு "முருங்க வெத போட்டு குடிச்சா கிருமி போயிருமாம், இதுல போட்ருக்கான்" என்றதும்.

"முருங்க வெதைக்கி மரம் வளக்கியாங்கோம்" என்று கூறிவிட்டு காற்றுக்கும் மரமில்லாத இடத்தில் தன்முந்தானையே சுழற்றி கொஞ்சம் காற்றினை உற்பத்தி செய்தாள். நான் அம்மாவைப் பார்த்தேன் லேசாக சிரித்தாள். அது என்னை கேலி செய்வதானவொரு மன உழற்றியை உண்டுபண்ணியது.

இரவில் தூங்குமுன் "உங்கம்ம பக்கத்துவீட்ல போய் தண்ணீ வாங்கி குடிக்காவ" என்றாள் தனம், என் மனைவி.

"ம்" என்றேன் யோசனையோடு.

"அந்தம்மா நேத்து சாய்ங்காலம் யாங்கிட்ட சொல்லுது, நல்ல தண்ணீ வாங்கி குடிக்கலாம்லா. நான் வேணும்னா கேன் போடச் சொல்லவான்னு"

நான் மீண்டும் "ம்" என்றேன்.

திரும்பிப் படுத்துக்கொண்டாள். சாளரம் திறந்திருந்தும் வராத காற்றில் வியர்த்துக்கொண்டிருந்தது.

இரண்டாவது நாள் சனிக்கிழமை மாலை ஞெகிழி டப்பாவை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். நீரோடு திரும்பினேன். "ஏன் ராசா தண்ணீ கொண்டாந்துட்டான்" என்றாள். பால்யத்தின் கிராமத்து வீட்டிற்கு இரண்டு குடம் கட்டி அய்யனார் கோவிலிலிருந்து நீர் எடுத்துவந்த போது அவள் உதிர்த்த இதே வார்த்தைகள் நினைவில் ஒழுகியதும் அவளைப்பார்த்தேன் மெல்லச் சிரித்தாள்.

புதன், 16 டிசம்பர், 2015

இருண்ட நூலகம் - சிறுகதை

அலுவல் முடித்து வீடு திரும்பும் நவீனப்பெண் (புதுமைப்பெண்ணல்ல) செய்துகொள்ளும் ஒப்பனை போல கதிரவன் செம்பழுப்பை தன்மீது பூசியதோடில்லாமல் சூழ்ந்திருக்கும் மேகங்களின் மீது பரப்பியதில் திரள்களின் விளிம்புகள் அப்பெண்களின் முகத்தினை தோல்வியில் ஆழ்த்திக் கொண்டிருந்தன.
“அண்ணா நா ஆண்டாள் குப்பத்துல எறங்கிக்கிறே” னென்று ஓட்டுனரிடம் கூறும் பொழுதில் அனகாபுத்தூர் ஆற்றுப்பாலத்தை கடந்திருந்தார்கள், “என்னாஜி எங்கப்போறீங்க” எனக் கேட்டான் ரவியிடம். இந்த ஜீ எப்போ விட்டொழியுமோ என நினைத்துக்கொண்டே,
வண்டி ஆண்டாள் குப்பத்தின் நவீன பெயரான மேத்தா நகருக்குள் புகுந்து விடும் என்பதாலும், அங்கிருந்து பேருந்தில் சென்றுவிடலாம் என முன்னரே நினைத்திருந்ததாலும் மெதுவாக “குன்றத்தூர்” என்றான் ரவி.
“அன்னிக்கி இன்னான்னா அனகாபுத்தூர்னீங்கோ இன்னிக்கி இன்னான்னா குன்றத்தூர் ன்றீங்கோ, என்னாஜி எதுனா…. மேட்ரா?” என ஏதோ ரகசியம் அறிந்து கொள்ளும் முயற்சியில் பற்சில்லு மாற்றியின் (Gear) நேர் மேலே அவன் பக்கம் லேசாக திரும்பியிருக்கும் குழி ஆடி என்றே நினைக்கிறேன், அது வழியாக பின்னிருக்கையின் இடதுபக்கமிருக்கும் ரவியை தலையை உயர்த்திப் பார்த்தான். உயரம் கொஞ்சம் குறைவு.

ஒளியிலும் மொழியிலும் கெட்டிக்காரர்கள்தான் ஒட்டுநர்களெல்லாம். ரவி அவ்வப்போது கவிதையென்று வார்த்தைகளை மடக்கி மடக்கி எதையாவது எழுதி வைப்பான். "நிலவொளியில்/ ஒளி மொழி பேசுகிறார்/ ஓட்டுநர்" என்று தான் எப்போதோ ஒரு இரவின் விளிம்பிலிருந்த அதிகாலைப்பொழுதில் எழுதியது மனதில் மிகக்குறைவான வேகத்தில் ஊர்ந்து போனது.

“நூலகம் போறேன்”
மீண்டும் கண்ணாடியை எட்டிப் பார்த்துவிட்டு “ம்..லைப்ரேரி..” என்றான். வலதுபக்கமிருந்தவன் ரவியை பார்த்தானே தவிர எதுவும் கேட்கவில்லை. பெரும்பாலானோர் போகாத இடத்திற்கு போவதாகச் சொன்னால் விசித்திரமாகத்தான் பார்க்கிறார்கள். ஒருவேளை டாஸ்மக்குக்கோ, வேசி வீட்டுக்கோ போகிறேனென்றால் மேற்கொண்டு பேசியிருப்பார்களோ என்று நினைத்துக் கொண்டான். இரண்டு நிமிட அமைதிக்குப்பின் மேத்தாநகர் பாதையில் திரும்பி வாகனம் நின்று கொண்டது. இவன் மட்டும் இறங்கிக் கொண்டான்.
வெள்ளை பலகை பேருந்திற்காக காத்திருந்தான். நிறுத்தத்தின் அருகே வலது புறமாக வெள்ளைச் சீருடையணிந்த பள்ளி மாணவர்களும் மாணவிகளும் பானி பூரி வண்டிமுன் நிற்க, எத்தனைபேர் நிற்கிறார்கள் தின்பதற்காக என்ற ரீதியில் ஒருவன் கணக்கிட்டான், அவன் கையில் நூறு ரூபாய் தாளை மடக்கி வைத்திருந்தான்.
இரு ஆசிரியைகள் நிறுத்தத்திற்கு வந்து நின்றார்கள். மாணவர்களிடத்தில் சலனமோ பணிவோ கிஞ்சித்தும் எட்டிப்பார்க்கவில்லை என்பது ஒருபுறம் நிற்க. இவர்கள் நூல் வாசிப்பார்களா, இவர்கள் பள்ளியில் நூலகம் இருக்குமா, மாணவர்களை வாசிப்பின் தளத்திற்கு அழைத்துச் செல்வார்களா என்று கேள்விகள் எழுந்தபோது, சனிக்கிழமை நூலகத்திற்கு சென்றது நினைவில் வந்தது.
சனிக்கிழமை விடுமுறை. இரண்டுநாள் தூக்கமின்மை மதிய உணவிற்கு பிறகு வாசிப்பின் இடையிலேயே படுக்கையில் கிடத்திவிட்டது அவனை. விழித்துப்பார்த்தபோது திறன்பேசியில் ஐந்து நாற்பத்தொன்பதென்று நேரம் காட்டியது. அருகில் தமிழ் இலக்கிய கட்டுரைகள் கவிழ்ந்து கிடந்தது. புத்தகத்தை எடுத்து வைத்துவிட்டு முகம் கழுவி கால்சராய் அணிந்து கொண்டான்.
வெங்கட் சாமிநாதனின் கலைவெளிப் பயணங்கள், உலகத்தமிழ் மாநாட்டில் வாசிக்கப்பட்ட தமிழ் இலக்கிய கட்டுரைகள் இரண்டு நூலையும் எடுத்துக் கிளம்பினான்.
அண்ணனிடம் சென்று “நூலகம் பேட்டு வாரேன்” என்றான்.
“ம்..” என்றான் தூக்க கலக்கத்தில், இரவு அலுவல் அவனுக்கு.
அன்று உடனடியாக பேருந்து கிடைத்தது, ஒருபொழுதும் இப்படி நடக்காது இன்று அரிதாக நிகழ்ந்திருக்கிறது. அதுவும் வெள்ளைப் பலகை பேருந்து.
ஐந்து ரூபாய் நாணயம் கொடுத்தான், நான்கு ரூபாய் சீட்டும் ஒரு ரூபாய் நாணயமும் திரும்பப் பெற்றான். சீட்டில் குன்றத்தூர் என்பதற்கு பதில் “குண்டத்தூர்” என்று அச்சாகியிருந்தது. தமிழையும் தமிழனையும் தமிழக அரசையும் நினைத்து சிரிப்பதை தவிர வேறொன்றும் செய்வதற்க்கில என்று சிரித்துக் கொண்டான்.
குன்றத்தூர் “அறுவத்தியாரு” பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்தான். அறுவத்தியாரு அந்த வழியில் செல்லும் ஊர்ந்துகளின் எண்.
நேராக நடக்கத்துவங்கினால் சிவசிவ என்று எழுதியிருக்கும் கோபுரமொன்று பார்வையில் படும், அந்த தெருவிலேயே தெய்வச்சேக்கிழார் மணிமண்டபமும் இருக்கிறது. அதற்கு சிவனின் வாசல் வரை செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு முன்னரே இருக்கும் மணிமண்டபத்தினுள் நூலகத்திற்கு சிறு கட்டிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. நூலகத்தின் பெயர் “கலைஞர் நூலகம்”.
ரவிக்கு இந்த கட்டிடமே முரண்பாடாகத் தெரியும். பகுத்தறிவாதிகளுக்கும் பகவானுக்கும்  சம்பந்தமில்லையென்றாலும் வாக்குகள் பொறுக்குவதற்கு அதை ஏற்படுத்திக் கொள்ளவேண்டியிருக்கிறது.

தெருவின் தொடக்கதிலிருந்தே வரிசையாக மின்கம்பத்தில் கட்டப்பட்ட ஒலிப்பெருக்கியில் மந்திரம்போல தமிழை உச்சரித்து படித்துக்கொண்டிருந்தது ஒரு முதியவரின் குரல்.
மணிமண்டபத்தின் வாயிலில் பத்துக்கு பன்னிரெண்டு அளவில் ஒரு வண்ணப்பதாகை, சாமியார் ஒருவருக்கு குருபூஜை என்று விளம்பரப்படுத்தப் பட்டிருந்தது. இரும்புக் கதவை கடக்கும் போது அதிகமான காலணிகள் கண்ணில் பட்டன. பொதுவாக நூலகத்திற்கு இவ்வளவு காலணிகள் வருவதில்லை.
அங்கிருந்தே நூலகத்தைப் பார்த்தான் வெளிச்சமிருந்தது ஆனால் சாளரம் சாத்தப்பட்டிருந்தது. அருகில் சென்று பார்க்கலாமென்று நகர்ந்தபோது முதலில் இருந்த கட்டிடத்தில் தெய்வச்சேக்கிழார் அமைதியின் வள்ளலாக அமர்ந்திருந்தார். அவர் மட்டுமே இருந்தார். இரண்டாவது அமைந்திருந்த தியான மண்டபத்தில் அந்த சாமியாரின் குருபூஜை நடைபெறுவதற்கான ஆயத்தங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அரங்கு நிறைந்திருந்தது.
அடுத்தது கலைஞர் நூலகம். திறந்திருந்தது. கையெழுத்து போட்டுவிட்டு உள்ளே நுழைந்தான். நூலகர் நாற்பது வயது மதிக்கத்தக்க பெண். வார மாத காலாண்டிதழ்கள் வாசகர்கள் மேசையின் மீது நீச்சலடித்துக்கொண்டிருந்ததை கரை ஒதுக்கினார்.
புத்தகத்தை அறையின் மையத்திலிருக்கும் நூலகரின் மேசையில் வைத்தபோது “க்ளோசிங் டைம் சார், பக்கத்துல திருவிழா நடக்கு, பூட்ட சொல்லிட்டாங்க” என்று ஒவ்வொன்றையும் தனித்தனியாக உச்சரித்துச் சொல்லிக்கொண்டே மேசை பக்கம் வந்தார்.
“அஞ்சே நிமிடம்” என்று சொல்லி உள்ளே புகுந்தான் ரவி.
ஒரு மின்விளக்கு தவிர மற்றவை அணைக்கப்பட்டிருந்தது. இரண்டு நிமிடம் கரைவதற்குள் “என்ன பன்றீங்க அங்க, திருவிழா நடக்கு, நாளைக்கு வாங்க” மீண்டும் ஒரு எச்சரிப்பு, இப்பொழுது அவரது குரலில் எரிச்சலிருந்தது.
இவனுக்கு இரண்டு புத்தகம் எடுத்துவிட வேண்டும் என்ற எண்ணம் மாறவேயில்லை. அட்டகத்தைப் பார்த்தான் பாரதிதாசன் எழுதிய இருண்ட வீடு புத்தகம் புலப்பட்டது. எடுத்துக் கொடுத்தான். அவசரமாக பதிவு செய்து திரும்பக் கொடுத்தார் அந்த அம்மா. 
“ இன்னொண்ணு எடுத்துக்கிறேன்  நாளை என்னால வர முடியாது மேடம்..” என்றான்.
"அதுக்கு நான் என்ன செய்ய முடியும்ங்க" வெளியே வா என்பதுபோல் கையை அசத்துவிட்டு கதவை இழுத்து மூடத்தொடங்கினார்.
இருண்ட வீடு அல்ல இருண்ட நூலகம் என்று நினைத்துக்கொண்டான். கோபம் சேக்கிழார் மீதும் அந்த பாடாவதி சாமியார் மீதும்.
தெய்வங்களெல்லாம் தொலைந்து போனாலென்ன என்றிருந்தது அவனுக்கு. கெட்டவார்த்தைகளை விழுங்கினான்.

நாளை வரமுடியாது திங்கள் கிழமை அலுவலகம் சென்று திரும்பியபின் வரவேண்டும். இவர் இன்று நடந்த அத்தனையையும் மறந்து போய்விட்டால் என்ன செய்வது. சரியாக குறிப்பெடுத்தும் வைக்கவில்லை. தானாவது ஒரு புத்தகத்தை வைத்துவிட்டு ஒன்றை எடுத்து வந்திருக்கலாமோ. என எண்ணங்களை ஒட விட்டுக்கொண்டிருந்தான்.
தெருவைக் கடந்தபோது, 
இறுதியாக அபிராமி அந்தாதியிலிருந்து சில பாடல்களை வாசிக்கிறேன் என்று அதே முதியவரின் குரல் ஒலிப்பெருக்கியில் ஒலித்தது.

இன்றும் வெள்ளைப்பலகை பேருந்தை பிடித்து குன்றத்தூர் வந்து சேர்ந்தால் தெருவின் கடைசியாகத் தெரியும் கோபுரத்திற்கு முன் மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையில், தனது புனைப்பெயரை அரசின் திட்டங்களுக்கு வம்படியாக வைத்துக்கொண்டிருக்கும் முதல்வர் பெரிய அளவில் தெரிந்தார். இதை சாக்குபோக்கு சொல்லி இன்றும் நூலகத்தை அடைத்து விடுவார்களோ என்று நினைத்து வேகமாக நடக்க ஆரம்பித்தான்.
மணிமண்டபத்திற்கு சற்று தள்ளிதான் மேடை அமைத்திருந்தார்கள். மேடையில் இரு பெரியவர்கள் தபேலா ஆர்மோனியப்பெட்டி சகிதம் அமர்ந்து சோதனை ஓட்டமாக “ட்டபட்தோம்…..ட்டபட்தோம்…” என அடித்துக் கொண்டிருந்தார்கள்.
இரும்புக்கதவை தாண்டும் போது காலணிகள் வெகு குறைவு, மூன்று நான்கு சோடி.
நூலகர் செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்தார்.
இரண்டு நாள் இடைவெளி விழுந்ததில் கோபம் முற்றிலும் குறைந்திருந்தது, ஒருவேளை மறந்துவிட்டு விதாண்டாவாதம் செய்தால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணியிருந்தான்.
அருகில் சென்று “சனிக்கிழமை ரெண்டு புத்தகம் விட்டுட்டு போனேன்” தொடர்ந்து கூறுவதற்கு முன் தலையாட்டினார். பரவாயில்லை என்றிருந்தது. இன்னொரு புத்தகம் எடுத்து வந்து பதிவு செய்ய நின்ற போது ஒரு அட்டை இருந்தது, இன்னொரு உறுப்பினர் அட்டையை தேடியும் கிடைக்கவில்லை. புத்தகத்தை பதிவு செய்யத்தொடங்கும் போது, மண்டபத்தின் காவலர் வந்தார்.
இவன் நினைத்தது போலவே வந்தவர் “ஆறரைக்கெல்லாம் மூடிருங்க, மீட்டிங் நடக்குதில்லியா” என்றார்.
நூலகரைப் பார்த்தான், அந்த அம்மாவின் மூக்குக்கண்ணாடி வழியே சோகம், வெளிப்படுத்தமுடியாத கோபம் தெரிந்தது.
“அன்னைக்கும் இப்டித்தான் செஞ்சாங்க, இன்னும் பத்து நிமிசம் அப்புறம் வந்து கத்துவாங்க” என்றார்.

எதுவும் பேசாமல் அவரை பார்த்துக்கொண்டிருந்தான். "எப்டில்லாம் கத்துனாங்க தெரியுமா சார். எப்போ தனிக்கட்டடம் கொடுப்பாங்கன்னு தெரியல" என்றார் அவர்.

“உங்க உயரதிகாரி கிட்ட சொல்லுங்க” என்றான். வேறென்ன செய்ய முடியும். அரசுக்கு எழுதிப்போடுவதில் பிரச்சனைகள் தீர்ந்துவிடுமென்றால் ஏன் இப்படி இருக்கிறது. 

ஆண்டவனும் அப்படித்தான் ஆளுபவனும் அப்படித்தான்.

வெளியில் கட்சி ஆண்டுவிழா தொடங்கியது “ நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற" என்ற வே(வி)சப் பாடலோடு……..

நன்றி: மலைகள்.காம்

சனி, 17 அக்டோபர், 2015

மாலைப்பொழுதின் நிறம் - சிறுகதை

கவிதைத் தொகுப்பின் மூன்றாவது கவிதையை வாசிக்கும் போது புத்தகம் மெல்லிய நடுக்கத்திலிருந்தது கைகளின் உதவியோடு. இதேபோலத்தான் முகநூலின் பதிவுகளை வாசித்தும் வாசிக்காமலும் கடந்து போகும் போது ஒரு படபடப்பு ஏற்படும். ஏன் ஏற்படுகிறது, வாசிப்பு என்பது இல்லாமல் நேரத்தை விரயமாக்கிக்கொண்டு நகர்ந்து போவதனால். கவிதை வாசிக்கப்படுகிறதே பிறகு ஏன் நடுக்கம்? கவிதை என்பது மனஓட்டங்களால் கட்டி இறுக்கப்பட்ட எதுவோ ஒன்று, எதுவிமில்லாமல் இருப்பவனிடம்  வெயிலை முற்றிலும் இழந்துவிட்ட மாலைப்பொழுதின் நிறம் ஏற்படுத்தும் படபடப்பு. இனி இப்படி இருப்பது தவிர்க்கமுடியாத சிலவற்றை ஏற்கும் சூழலை உருவாக்குமென்ற எண்ணம் எழுந்ததால். வெளியே கிளம்பத் தயாரானேன்.

யாரும் வீட்டில் இல்லை, அவள் இருந்திருந்தால் எதையாவது கேட்டுக் கொண்டேயிருப்பாள். இல்லாமலிருக்கும் போதும் கேட்பாள் அலைபேசி வழியாக “ நான் இல்லன்னொண்ணே சந்தோசமா யிருக்கியளோ “. எப்போதும் இது தவறாமல் ஒலிக்கும். வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே வந்தேன். சிமெண்ட் தரையெங்கும் மணல் வழக்கத்திற்கு அதிகமாகவே சேர்ந்திருந்தது. இதற்கும் அவள் இல்லாததற்கும் நிச்சயம் தொடர்பு உண்டு.

தெருவில் இறங்கி நடக்கும் போது மேற்கே திரும்பிப் பார்த்தால், வானம் கொஞ்சம் செம்பழுப்பு பூசிக்கொண்டிருக்கும். ஏதாவதொரு மிருகத்தின் சாயல் தெரியும் பெரும்பாலும் குதிரை, இன்று வாயைப் பிளக்கும் நாய் போன்றதொரு உருவம். நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை எது என்று. மழை பெய்தால் சிறு சிறு குளங்களில் வானம் அழகு காட்டும். இன்று மழையில்லை வெறும் பள்ளங்கள். வெறுமை அல்லது தெருவின் உடற்புண். தார் கொண்டு அழகு பூசாத முகம் என்று கூட சொல்லலாம். தேசப்பிதாவின் பெயர் கொண்டதாலோ என்னவோ தார் பூசிவிட அலுவலர்களும் அரசியல்வாதிகளும் பெருத்த யோசனையில் இருப்பது போலவே தெரிகிறது. பெயரை மாற்றுவதற்கு ஒரு மனுவைக் கொடுத்துவிடலாம் என்று நினைக்கிறேன். சாத்தியமா எனத் தெரியவில்லை. தார் பூசினால் மழைக்காலத்தில் சாலையெங்கும் ஜனநாயகம் பல்லிளிக்கும் என்பது மட்டும் தெரியும்.

எனக்குத் தெரியும் அவன் கடை வாசலில் இருப்பான் என்று, இருந்தான். புன்முறுவல் செய்தேன். எப்பொழுதும் தலையாட்டிச் சிரிப்பான், இன்று பார்க்காததுபோல் பார்த்து புன்முறுவல்தான் செய்தான். சிரிப்பை எதிர்பார்க்கவில்லைதான், ஆனால் அவனின் மாற்றத்திற்கு சமாதானம் கொள்ளுமளவு காரணமுண்டு. இந்த மாதம் முடிதிருத்த வேறு கடைக்குச் சென்றேன். எல்லாம் ஒன்றுதான் இவன் கத்தியில் கவனம் இல்லாதவன், இன்னொருவனுக்கு சீப்பில். கத்திக்கு சீப்பு தேவலை என்பது என் எண்ணம். மேலும் சில நேர்மையான காரணமும் உண்டு.

எல்லாமே கிடைக்கும் இவரது கடையில் நான் கேட்பதைத் தவிர, அதனால் பால் மட்டும் வாங்கச் செல்வதுண்டு. விரல்கள் இல்லாத கைகளின் உதவியோடு பாலை குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்து தருவார். சக்கரை வியாதிக்காரர் என நினைத்துக் கொள்வேன். இப்போது கால்களிலும் கட்டு போட்டிருக்கிறார். “அங்க போயி எதும் வாங்காத“ என்பாள். அவளுக்குத் தெரியும் தனக்கும் வயது போகுமென்று, இருந்தாலும் சொல்வாள். மனிதன் இப்படித்தான் சிந்திப்பான். காரணத்தை ஆழ்ந்து யோசனை செய்யத் தெரியாமல் புறத்தோற்றத்தில் மயங்குவான் இல்லையென்றால் பயப்படுவான். அது அவனைத் தற்காலிக வெற்றியில் களித்திருக்க உதவி செய்யுமேத் தவிர வேறொன்றுமில்லை என்ற பிரக்ஞை கிடையாது. இவளும் அப்படித்தான். இவரும் அப்படித்தான் பிறர் பற்றிய உணர்வற்றவர்கள். இந்த சமூகக் கட்டமைப்பே அப்படிப்பட்டதுதானே.

வீட்டுக்குள்ளிருக்கும் போது இருண்டது போல் காட்சியளித்த வானம், இப்போது சற்று வெளிச்சமாகத் தெரிகிறது. கண் இருட்டிற்கு மட்டுமல்ல வெளிச்சத்திற்கும் பழக்கப்பட வேண்டும் போலப் புரிகிறது.

கவலைப்படுவதற்கு வேண்டுமானால் தினமும் இருபது நிமிடம் செலவழித்துக்கொள் என்று எங்கேயோ வாசித்தது நினைவில் வரும்போது திடலை நெருங்கி இருந்தேன். மனதைத் தொலைப்பது எப்படி என்றொரு கேள்வி?. கேள்வியோடு அருகிலிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தேன், வெயிலும் அங்கே ஓய்வில் இருந்ததை உணர முடிந்தது. அரைமணி நேரம் தாங்காதா உனது பின்பக்கம் எனும் துணைக்கேள்வி வேறு.

தலைக்குமேல் கொடூரமான பழகிப்போனதொரு பெருத்த சத்தத்தோடு, உண்மையிலேயே விமானமொன்று பறக்கத்தான் செய்தது. மனதைத் தொலைக்கும் கேள்வியை அதில் ஏற்றி விட்டுவிட்டு பார்த்துக் கொண்டிருந்தேன், அதன் வேகத்தைப் பொருத்து அதன் அளவு குறைந்தது போலவே தன் போலியான நிறத்தை விடுத்து பொதுவான நிறத்தை பூசிக்கொண்டு துகள் அளவுக்கு சிறுத்தது. அதற்குமேல் இல்லாமல் போனது. அது தொலைந்து போனது என்றுதான் என்னால் சொல்லமுடியும்,
அருகில் அலோபதி, சித்தா என்று விவாதிக்கும் வயோதிகக் குரல்கள் இரண்டு புலனுக்கு எட்டியது. டாக்டருக்கு தொண்ணூத்தி ரெண்டு வயசு பத்மஸ்ரீ அவார்டு வாங்கியிருக்கார் என்று தொலைக்காட்சி விளம்பரம் போல் ஒருவர் பேச இன்னொருவர் கேட்டுக் கொண்டிருந்தார். மீண்டும் வானைப் பார்த்தேன், தொலைந்து விட்டதே என்று நினைக்கும் போது பின்பக்கம் சுட்டது எழுந்துவிட்டேன்.

http://malaigal.com/?p=7402


நன்றி 
மலைகள்.காம்

வெள்ளி, 31 அக்டோபர், 2014

நிலப்படமும் நண்பனும்

      



                                     ரவி தனது கைபேசியில் இணையத்தை முடுக்கிவிட்டு பேரூந்து நிறுத்தத்திலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தவன், வாகனங்கள் ஒலியெழுப்பிக் கொண்டு முன்னேற முடியாமல் வாகனநெரிசலில் இரைந்து கொண்டிருந்த கணத்தில் இடையில் புகுந்து சாலையின் எதிர்பக்கத்தை அடைந்திருந்தபோது கைபேசியின் வாட்சப் மென்பொருளில் நண்பர்கள் சில தகவல்களை பகிர்ந்திருந்தார்கள்.

         குறுஞ்செய்திகளை தன் இடது கை பெருவிரலால் விலக்கியவன், கூகுள் நிலப்படத்தை அழுத்தினான், அது இவன் நின்றுகொண்டிருப்பது வடபழனி நோக்கி செல்லும் ஆற்காடு சாலை என ஆங்கிலத்தில் காண்பித்ததோடு, அதனை அடையாளப்படுத்தும் விதமாக வான்நீல நிறத்தில் பளபளத்த அந்த பொட்டு வடிவம் குழலியின் நெற்றிப்பொட்டை நினைவுக்குள் அழைத்து வந்தது, ஒரு துளி கண்ணீரையும் விரயமாக்கியது.

        நிதானித்துக் கொண்டவன், நிலப்படத்தில் சென்று சேர வேண்டிய இடத்தில் புத்தகநிலையத்தின் பெயரை ஆங்கிலத்தில் எழுதியதும் இவன் நிற்கும் இடத்திலிருந்து மெல்லிய கருவண்ணத்தில் பாதையை அடையாளப் படுத்தியது.

        நிலப்படத்தை துண்டிக்காமல் கைபேசியை உள்ளங்கையில் கிடை பக்கமாக வைத்துக்கொண்டு சாலையில் தொடர்ந்து நடந்தான், வானநீலப் பொட்டும் நகர்ந்து கொண்டே வந்தது.
மழைமேகங்கள் நான்கு மணியை ஆறு மணி சாயலுக்கு மாற்றியிருந்த நேரம், சாலையோரத் தேநீர் கடையில் வாழைக்காய் கடலைமாவுடன் கொதிக்கும் எண்ணையில் புணர்ந்து கொண்டிருந்ததும் இவனுக்கு குழம்பியின் மேல் உவகை ஏற்பட்டது.

       தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்தவன் பழக்கடையில் மாதுளம் பழங்களின் அடர்சிவப்பு விதைகளை பிரித்து நெகிழி கொள்கலனில் அடைத்து வைத்திருந்ததை கவனித்ததும். அந்த விதைகள் பற்களாக உருவங்கொண்டு ஓட்டமும் நடையுமாக செல்லும் நுகர்வோரை பார்த்துச் சிரித்து ஏளனம் செய்வதுபோல் இருந்தது இவனுக்கு.

      இப்போது நிலப்படத்தின் வானநீலப் பொட்டு சாலையின் வலதுபுறம் திரும்பும் தெருவின் முனையை அடைந்திருந்தது, இவனும் தான்.

      தெருவின் இடது பக்கத்தை பிடித்து நகரத்தொடங்கியவன், கைபேசியை தன் கால்சராயின் இடதுபையில் சொருகிக் கொண்டான்.வரும் சந்திப்பில் இடதுபுறம் திரும்பிய பின் முனிசாமி சாலையை அடையவேண்டுமென்பது நிலப்படத் தகவல்.

     இடதுபக்கம் திரும்பும் முன்னரே இவனுக்கு மூத்திரம் முட்டிக்கொண்டு வந்தது, சாலையில் இடதுபக்கம் திரும்பியதும் அமைந்திருந்த கடையில் பழச்சாறு, தேநீர், குழம்பி எல்லாம் கிடைக்கும் போல் தெரிந்தது. முட்டிக்கொண்டிருந்த மூத்திரம் கண்களை திருப்ப எதிர்புறத்தில் கட்டணக் கழிப்பிடத்தை கண்டதும் யப்பா என்று இருந்தது.

    காசு கொடுத்தாலும் மூக்கை பிடித்துக்கொண்டுதான் உள்ளே நுழைய வேண்டும் என எண்ணிக் கொண்டான். மூச்சை விட்டும் விடாமலும் தவித்துக்கொண்டே சிறுநீரை வெளியேற்றினான். சிறுநீரகக் குப்பியின் நேர்மேல் எழுதப்பட்ட எழுத்துக்கள், எழுதியவனின் மன ஊனத்தை எள்ளி நகையாடிக் கொண்டிருந்தது இவனுக்கு கவிஞர் விக்ரமாதித்யனின்

"ஈனவும் தெரியாது
நக்கவும் தெரியாது
சில ஜென்மங்கள் இருப்பது
சொல்லமுடியுமா எதற்கென்று"


என்ற கவிதையை இந்த பொழுதில் ஞாபகப் படுத்தியது.

     மாலை நேரத்தில் குழம்பியால் கூடுதல் இன்பம் சேர்க்கப்படுவது தனி சுகம் தான், தேநீரோடு இந்த தன்மையை இவன் ஒருபோதும் உணர முடிந்ததில்லை.

     பழங்கள் மற்றும் மாச்சில் போத்தல்களுக்கு பின்னால் அமர்ந்திருந்தவரிடம் பத்து ரூபாயை கொடுத்து இரண்டு ரூபாய் சில்லறை வாங்கிக் கொண்டவன், நாவில் ஒட்டிக்கொண்ட குழம்பியின் திரைச் சுவையோடு சாலையில் நடை போட ஆரம்பித்தான். அடுத்த ஐந்து வினாடியில் முனுசாமி சாலையை அடைந்தவன், கைபேசியை உயிர்ப்பித்து புத்தக நிலையத்தின் இருப்பிடத்தை உறுதி செய்து கொண்டான். வானநீலப் பொட்டு இப்பொழுதும் இவனோடு நகர்ந்து வந்திருந்தது. வலதுபுறம் அமைந்திருந்த கட்டடத்தின் ஒரு முனையில் புத்தக நிலையத்தின் பெயர் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டு மேல்தளம் செல்லும் அடையாளம் கண்டவன், தன் கைபேசியில் இணையத்தின் தொடர்பை துண்டித்து விட்டு மேல்தளத்திற்கு படியேறினான், வானநீலப் பொட்டு தன் இருப்பை சாலையோரமே நிறுத்திக்கொண்டது.






புதன், 11 ஜூன், 2014

புரட்டாசித் திங்கள்... ---- சிறுகதை

              
                     புரட்டாசி மாதத்தின் முதல் திங்கள் கிழமையின் காலை நேரம், சோம்பல் முறித்து கண் விழித்த சிவராவின் மூளையை ஏதோ நினைவுகள் குடைந்து வேறு சிந்தனைக்குள் புதைத்தது. சிவரா தான் பிறந்து வளர்ந்த கிராமத்திலிருந்து சென்னைக்கு வேலை செய்ய பயணப்பட்டு ஏழு ஆண்டுகளை கடந்து விட்டது.
                    இப்போது இவன் விழித்ததும் நினைவுகள் இவனை அழைத்துச் சென்றதும் அதே கிராமத்துக்குத் தான், இதே திங்களுடன் சேர்த்து மூன்று நாட்கள் நடைபெறும் ஊர்க்கோவில் திருவிழா இந்த வருடமும் நடைபெறாமல் போனதன் ஏக்கமே அவன் நினைவுகளுக்கு காரணம்.
இந்த மூன்று தினங்களும் உறவுகளுடனும், நண்பர்களுடனும் இவன் கொண்டாடி மகிழ்ந்த அந்த நாட்கள் திரும்பவும் வராதா என்ற ஏக்கம் வெகுவாக பாதித்திருந்தது.மனது திருவிழா நாளில் உழன்று போனதால், விரித்த பாயை சுருட்ட மனமில்லாமல் நினைவுகளின் பாதையிலேயே நடை போட்டான்.
                   அந்தி சாயும் அழகான திங்கள் மாலை, கதிரவனின் சிகப்புக் கதிர்கள் வீட்டின் ஒட்டுக் கண்ணாடி வழியே சிறிது வெளிச்சத்தை தூவியிருந்தது, வெளிச்சத்தில் உலாவிக்கொண்டிருக்கும் தூசிகளின் பாதைகளை தன் விரலால் விலக்கி விட்டுக் கொண்டே அம்மாவிடம் ஐந்து ரூபாய்க்காக அடம் பிடித்துக் கொண்டிருந்தான்.
                   "ரூவால்லாம் ராத்திரி ஒங்கப்பா வந்து தருவாரு, பேசாம காப்பிய குடிச்சிட்டு கிட" ன்னு அம்மா அதட்டி விட்டு சமையல் வேலையை தொடர்ந்தாள். கோபம் வந்தால் எப்பவும் போல பேசாம வீட்ட விட்டு வெளிநடப்பு செஞ்சான் சிவரா.
                    வீட்டுக்கு வெளியில வரவும் " ஏ என்ன சிவரா பள்ளிகூடத்துக்கு லீவுட்டுட்டான்ங்க போல இனிம மூணு நாளைக்கு உன்னைய கையில புடிக்க முடியதடே" மாரி அண்ணன் சொன்னதுக்கும் பதில் ஏதும் இல்லாமலே வீட்டைக் கடந்து போனான்.
                    திருவிழாவுக்கு வரும் விருந்தினரை கவனிக்க சமையலுக்கான மளிகை சாமான் வாங்க முருகண்ணன் கடையில நல்ல கூட்டம் இருந்தது. கடைக்கு எதிர்பக்கமா இருக்க நல்லம்ம பாட்டி வீட்டு வாசல்ல கீழயிருந்து மேலனிக்கி படர்ந்து நிக்கிற கொடி மரத்தில் விழும் சூரிய ஒளியை வெறுமையோட பார்த்தபடியே நகர்ந்தான்.
                   இவனது குடும்பம் வசிக்கும் தெருவின் முனையில் இருக்கும் புளியமரத் தோப்பில், திருவிழாவிற்காக வந்திருந்த கொடராட்டினத்தில் சிறுவர்கள் உற்சாகக் களிப்பில் வட்டமடித்தனர், அருகிலேயே சிறுவர்களுக்கு அவர்கள் பழகிய இடங்களையே வேறு கோணத்தில் காட்டும் உயரமான தொட்டில் ராட்டினம் அப்போதுதான் ஆட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்ததன் இடையே உரக்க ஒலிக்கும் அம்மன் பாடல்கள் இவனது செவிகளைத் திருகின.
                    வாகனங்கள் இறைந்து கிடக்கும் அம்மன் கோவில் மைதானம் இன்று பந்தலிட்டு வாழைமரத் தோரணங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. புழுதியையும் வெக்கையையும் விரட்ட மண் தரையில் தண்ணீர் தெளித்து மைதானம் இரவுத் திருவிழாவுக்கு தயார் செய்யப் பட்டிருந்தது.
சாலையோரம் தேநீர் விடுதிகள் இன்று முதல் மூன்று நாட்களுக்கான மிட்டாய் கடைகளாக மாறியிருந்தன.
                   வழக்கமான இடங்களின் அடையாளங்கள் சிறிது மாற்றம் கண்டதாலோ என்னவோ, இவனை அறியாமல் கடந்த வருடத் திருவிழா நாட்கள் நினைவில் வந்து போனது.
                   தினசரி நாட்களில் இவனும் நண்பர்களும் சேர்ந்து பழகிக் கிடக்கும் இடம் வந்தது, நண்பன் சுடலை இவனுக்கு முன்பே வந்து அமர்ந்திருந்தான், நண்பர்கள் ஏழு பேரும் வந்தவுடன் கோவில் கொடை பற்றியும் அதைக் கொண்டாடுவதையும் சிலாகித்து பேசிக் கொண்டிருந்தனர்.
இரவு திருவிழா நேரம் நெருங்கி வந்தபோது சோறு சாப்பிட்டு விட்டு 10 மணிக்கெல்லாம் திரும்பவும் கூடுவதாக உத்தேசம்.
                 முதல் நாள் இரவில் பொதுவாக மக்கள் கூட்டம் இரண்டாம் நாளை விட குறைவாக இருக்கும். இதனால் கரகாட்டமும் வெகு விரைவிலேயே முடிவுக்கு வந்துவிடும்.
                கோவில் திருவிழா என்றால் செவ்வாய் கிழமை காலை உணவு இட்லியாகத்தான் இருக்கும். ஏனைய நாள் இரவு உணவுகளை பார்க்கும் போது திருவிழா நாளில் பச்சை வாழை இலையில் பரிமாறப்படும் உணவில் கூட்டுப் பொறியல், அப்பளம், சாம்பார், ரசம் என்று ஒரே நேரத்தில் நாவிற்கு உருசி கொடுக்கும்.
                இரண்டாம் நாள் சாயுங்காலத்தில் அம்மன் சிலை செவ்வந்திப்பூகள், எலுமிச்சம்பழம் மாலையில் அலங்கரிக்கப்பட்டு தங்கப்பட்டுகள் அடுக்கப்பட்ட சப்பரத்தில் ஊர் வீதியில் பவனி வரும். சப்பர பவனிக்கு முன்னர் ஊர் மக்கள் வீட்டின் முன் மஞ்சள் நீர் தெளித்து, வண்ணக் கோலங்கள் வரைந்து ஒரு தெய்வீகத்தை அழைத்து வந்திருப்பார்கள்.
              ஆடி அசைந்து வரும் சப்பரம் சிவராவின் வீட்டின் முன் வந்ததும், அவனது அப்பாவும் அம்மாவும் சேர்ந்து கையிலிருக்கும் தாம்பூலத்தை பூசை செய்பவரிடம் கொடுப்பார்கள். தாம்பூலத்தில் கண் திறக்காத தேங்காய், வாழை பழம், வெத்தலை பாக்கு, பத்தி, சூடம் என பூசைக்குரிய பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும்.
              சப்பரத்தை நேர்த்தியோடு நகர்த்திச் செல்ல முன்னாலும் பின்னாலும் சிறாரும் பெரியோரும் மூங்கில் கம்பின் இணைப்பு கொண்டு இழுத்துச் செல்வார்கள்.
             நேற்று கிடைக்காத ஐந்து ரூபாய்க்கு வருந்தியவனுக்கு. இன்று இருபது ரூபாய் அப்பா கொடுத்ததில் ஏகத்துக்கும் மகிழ்ந்து போயிருந்தான்.
இரண்டாம் நாள் இரவு, மைதானம் காணாமல் போய்விட்டதோ என்று கூட தோன்றும் புதிதாய் பார்ப்போருக்கு, மக்கள் கூட்டம் வெகுவாய் பரவியிருந்தது.
             கரகாட்டகாரியின் மீதுள்ள சபலம் பெருசுகளை திறந்த பொக்கை வாயும்,புதிய வேட்டி சகிதம்  அசைய விடாமல் வைத்திருக்கும். அதே நேரம் இளசுகளில் பெண்களும் ஆண்களும் மைதானத்தின் ஓரமுள்ள கிணற்றின் இருபுறமும் பெண்கள் அமர்ந்தும் ஆண்கள் நின்று கொண்டும் பலூனை பறக்க விட்டு, பார்வைக் காதலில் வழிவது கூச்சமின்றி அரங்கேறும். அது எப்படியோ எந்த திட்டமிடலுமில்லாமல் இந்த நிகழ்வுகள் அதன் போக்கில் நிகழ்ந்து விடுகின்றன.
              பெருவாரியான இளசுகள் கரகாட்டத்தில் செவி சாய்த்துக் கொண்டே மனதை தொலைக்க மனம் தேடிக்கொண்டே நகர்ந்து கொண்டு இருப்பார்கள்.
"ஏல சுடலை உன் ஆளப் பாத்தியாடே" சிவரா கேட்கும் போது,
சுடலை சொல்வான் " அவள அப்பன்காரன் வீட்டுக்குள்ள பூட்டி வச்சிருக்காம்ல"
"சரிடே விடு நாளைக்கு மதியக் கொடைக்கு வருவால்லா அப்போ பாத்துக்கலாம்" இது சிவரா.

               பின் நள்ளிரவில் பெண்கள் நேர்த்திக்கடனுக்காக செய்த மாவிளக்கு, முளைப்பாரியை வீட்டிலிருந்து மேளதாளம், வாணவேடிக்கைகளுடன் கோவிலுக்கு அழைத்து வருவார்கள்.      இந்த இருள் சூழ் இரவில் விளக்கின் மஞ்சள் ஒளியில் மனம் விரும்பும் அவளை பார்க்கும் போது சிவரா நிற்கும் இடத்தில தேங்கித்தான் போனான்.
               புதன் கிழமை மூன்றாம் நாள், வீட்டில் ஆட்டுக் கறி சமைத்து புசித்த பின் மதிய வேளை கடைசி நாள் திருவிழா நடைபெறும். பகல் திருவிழா என்பதனால் அதிகமான பொருள் விற்பன்னர்கள் வரிசையில் இடம் பிடித்திருப்பார்கள். ஒருபுறம் கரகாட்டம் உச்சத்தில் இருக்கும் அதே நேரம், அம்மன் சன்னதி முன் முளைப்பாரி எடுத்த பெண்கள் குலவை சத்தத்துடன் கும்மிப்பாட்டு படித்து, மேளதாளம் மற்றும் இளசுகளின் ஆர்ப்பாட்டத்தோடு ஊரின் பெரிய குளத்திற்கு எடுத்துச் சென்று முளைப்பாரி கழுவும் நேர்த்திக்கடன் நிவர்த்தி செய்யப்படும். பெண்கள் சூடியிருக்கும் மல்லிகை மலர்களோடு முளைப்பாரி பூவையும் சூடியிருப்பது அவர்களை மேலும் அழகுறக் காட்டும்.
                திருவிழா முடிந்து மக்கள் வீடு திரும்பும் நேரம் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் சின்ன கலவரம் இந்த வருடம் எதிர் பார்க்கா விதம் பெரிதாகிப்போகிறது.    இன்றைய இந்தக் கலவரத்தால் வரும் வருடங்களில் திருவிழா நடைபெறாமல் போய்விடும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
                நினைவுகளால் கலங்கிப்போன இந்த திங்களில் படுக்கையிலிருந்து எழ மனமின்றி தயக்கத்துடன் பணிக்குச் செல்ல தயாரான சிவரா, வெறுமையுடன் தனது இருசக்கர வாகனத்தை மிதித்து வசிக்கும் வீட்டிலிருந்து வெளியேறினான். இமை திறந்த கண்களில் ஏதோ நம்பிக்கை மட்டும் கலைந்து போகவில்லை இவனுக்கு..

வியாழன், 10 ஏப்ரல், 2014

அழிப்பது அழிவுக்காகத்தான்.. - சிறுகதை

எம் ஏ ஆர் கன்ஸ்ட்ரக்சன் என தங்க நிறத்தால் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் அந்த சொகுசு நான்கு சக்கர வாகனத்தின் முன் நெற்றியில் ஒட்டப்பட்டிருந்தது. அந்த வாகனம் வருவதை பார்க்கும் போதே புரிந்து கொள்ள முடிந்தது அது புதிதாக வாங்கப்பட்டது என்றும் அதை ஒட்டி வருபவர் முறையான பயிற்சி பெறாதவர் எனவும் தெரிகிறது. வாகனம் அருகே வர வர சற்று உள்நோக்கும் போது பின் இருக்கையில் இரு சிறார்கள், ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் மேலும் முன் இருக்கையிலும் ஒரு பெண் குழந்தை, இவர்கள் தன் அப்பா வாங்கியிருக்கும் புது வாகனத்தில் அமர்ந்து மகிழ்ச்சியை துள்ளலுடன் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.