சனி, 27 மே, 2023
காக்கைகள் இல்லாத ஊர்
செவ்வாய், 2 மே, 2023
The Whiskey Whispered - Short stories
செவ்வாய், 29 மார்ச், 2022
வலி - விமலாதித்த மாமல்லன்
சனி, 9 நவம்பர், 2019
மின்னூல் உருவாக்கம்
அவ்வப்போது எனது வலைப்பூவில்(BLOG - https://pandianinpakkangal.blogspot.com/?m=1) எழுதிய சில பக்கங்களை மின்னூலாக மாற்றலாம் என்ற எண்ணத்தை இச்சையெனக் கடந்து போகாமல் திட்டமிடத் தொடங்கியிருக்கிறேன். விரைவில் வெளிவருமென நம்பலாம்!
நன்றி Vimaladhitha Maamallan அமேசானில் இ-புத்தகம் வெளியிடுவது எப்படி
https://www.amazon.in/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-publish-ebook/dp/B07XWD47FT/ref=sr_1_1?crid=1O59BZLJDU1D0&keywords=vimaladhitha+maamallan&qid=1573312906&sprefix=vimaladhith%2Caps%2C292&sr=8-1
வியாழன், 8 செப்டம்பர், 2016
கதவு - சிறுகதை தொகுப்பு
நேற்றுதான் கி.ராவுக்கு விருது வழங்கும் விழாவில் எஸ்.ராமகிருஷ்ணன் பேசிய உரையை கேட்டேன். கி.ராவின் படைப்பில் அவர் பேசிய கோபல்லபுரத்து மக்கள் புதினத்தை வாசித்திருக்கிறேன். இப்பொழுது கதவு சிறுகதை தொகுப்பு. பதிமூன்று சிறுகதைகள் உள்ளடக்கம். முதல் சிறுகதை கதவு, மனதிற்கு மிகநெருக்கமானதாக ஓர் உணர்வு. இதற்கு முன் வாசித்தது போன்ற நினைவெழுந்தது, எங்கள் வீட்டிலும் கதவுக்கும் எங்களுக்குமான உறவு அகக்கிளர்ச்சி நிறைந்தது, அதுவொரு காரணமாயிருக்கலாம். சீனிவாசனும் லட்சுமியும் தொலைத்தது போல நாங்களும் சிலவற்றை தொலைத்திருக்கிறோம்.
இரண்டாவது கதையில் புல்லை (மாடு). சீதனமாக கிடைத்த மாடு இறந்தபின் அயிரக்கா மனமுடைந்து கிடப்பதும், பக்கத்துவீட்டு முத்தையா வந்து திட்டித் தீர்த்து தொட்டண்ணனை அழைத்துக்கொண்டு கோவில்பட்டி போய் மருத்துவரை கூட்டிவர கிளம்புகிறார்கள் மருத்துவர் வர இயலாத சூழலில் ஊர்வந்த பொழுதில் புல்லை கண்மூடியிருந்தது. கூட்டு மாடு சேர்ந்து உழுதவனுக்கு வாக்கு தவறாமல் மூன்று நாள் பிறகு மாட்டிற்கு பதிலாக நுக்காலை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு அவனோடு போவதும் அதை அயிரக்கா பார்த்து முகம் புதைத்து கொள்வதுமாக கதை முற்றுகிறது.
மின்னல் கதை கிராமத்து பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளை பற்றி எழுதியிருப்பது. ஒரு பெண்ணும் குழந்தையும் அந்த சூழலில் பொருந்தும் பொழுதும் விலகிப்போகும் போதும் பேருந்துக்குள் நிகழும் சூழல் மாற்றங்களை ஓவியம் போல் வரைந்திருப்பார்.
படித்ததில் பிடித்தது என்பதைவிட பாதிக்கும் சில கதைகள் இருக்கும் சாவு, மாயமான் மற்றும் கரண்டு அந்த வகையில் சேர்க்கலாம். சுமங்கலியின் கோலம் கணவனை இழந்தபின் பதினாறாம் பக்கம் நாடகம் போல நிகழ்ந்து கலைக்கப்படும் நெஞ்சறுக்கும் பொழுதை சாவில் சொல்லியது போலவே. அரசு கொடுக்கும் உதவித்தொகையை நம்பி கிணறு வெட்டி விவசாயத்தில் தோல்வியுற்று சொத்தை இழந்து ஊர்விட்டு ஊர் பிழைக்கப்போகும் குடும்பத்தை பற்றியது மாயமான் கதை.
பலாப்பழம் கதையில் வருவதுபோல் உண்மையில் நிகழுமா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும், அதில் அனுபவமுண்டு என்பதால் அப்படி கூறமுடிகிறது. ஆமாம் மசக்கை பெண் கேட்பதை வாங்கிக் கொடுக்கவில்லையென்றால் பிறக்கும் குழந்தைக்கு சீழ் வடியுமா?!. பலாப்பழப் கதையில் வடிவதை சிரித்துக்கொண்டேதான் வாசித்தேன். கி.ரா பெரும்பாலும் சிரிக்க வைப்பவர் ஏனென்றால் அவர் எழுதுவது கிராமத்து வெள்ளந்தி உள்ளங்களை. பாலியல் கதைகளை தொகுத்து புத்தகம் எழுதியிருக்கிறார், வாசிக்கணும். நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது.
திங்கள், 1 ஆகஸ்ட், 2016
எதற்கோ எப்படியோ
மதியிடம் கேட்டிருந்தேன் இரண்டு கிராம் அளவில் சிறுவர்கள் அணிந்துகொள்ளும் மோதிரம் ஒன்று வாங்கிவர முடியுமா என்று. இதுவரையில் நகை வாங்க போனதில்லை எனக்கு எப்படித் தெரியுமென்று சொன்னபிறகு மீண்டும் கேட்டால் சரிவராது என்ற எண்ணத்தில்தான், இரண்டுபேரும் சேர்ந்து போகலாம் என்று கூறியிருந்தேன்.
எனக்குள் மிகப்பெரிய தயக்கம். புதிதாக ஒரு பொருளை தான் அதுவரை தனியே சென்று வாங்கியிராத ஒன்றை விலைபேசி வாங்குவதற்கு ஏற்படக்கூடிய கூச்சம், அச்சம் எல்லாம். மேலும் நகைக்கடைகள் காட்டும் பிரம்மாண்டத்தின் மீதான, நகைகளின் மீதான பேரச்சம். திங்கள் கிழமை மாலையில் மூக்கொழுகிக்கொண்டும் உடல் அசதியும் அந்த நாளை தள்ளிப்போட்டது. வியாழன் வரை காலம் இருக்கிறது என்ற எண்ணம் செவ்வாய்க்கிழமையையும் தள்ளிப்போட வைத்தது. மீண்டும் மதியை அழைப்பதில் இருக்கும் சங்கடம் மற்றும் முதன் முதல் நகைக்கடைக்கு போவதற்கு முன் ஏற்படும் குழப்பநிலையே உண்மையான காரணமாக இருக்கக்கூடும்.
புதன்கிழமையை விட்டால் வியாழனும் ஓடிப்போக வாய்ப்புண்டு என்பதனால் தனியாகவே கடைக்கு பிரவேசம் செய்ய முடிவு. மாலையில் வேலை முடிந்ததும் பாதிவழியில் பல்லாவரத்தில் இறங்கி வாங்கிவிடலாம் என்ற நினைப்பில் வந்தபோது, திருநீர்மலை சாலை முகப்பிலேயே இறங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. நடக்கத்துவங்கினேன் வலதுபக்கம் பிரதான சாலை இடது பக்கத்தில் பற்பல கடைகளின் அணிவகுப்பு. நிச்சயமாக அங்கு நகைக்கடை கிடையாதென்பது உறுதி. பழைய இரும்புக்கடை, டூவீலர் மெக்கானிக், பலசரக்குக்கடை. இடையில் ஓரிடத்தில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள். இதற்குமுன் அவ்விடம் எதை சுமந்து கொண்டிருந்தது என்பதை நினைவின் அடியாழத்திலிருந்து கொணர்வது இயலாத காரியம்.
பல்லாவரம் - குன்றத்தூர் சாலை. இங்கு சில நகைக்கடைகளுண்டு. ஒரு கடையை தேர்வுசெய்து உள்நுழைந்ததும் மிதமாக குளிர்சேர்ந்த காற்று வியர்வையை ஒழித்துவைத்தது. அச்சப்பட தேவையற்ற மிகப்பெரியதுமல்லாத சிறியதுமல்லாத நடுத்தரக்கடை. இடதுபக்கம் சில பெண்கள் சில பெண்களுக்கு வெள்ளிப்பொருட்கள் விற்பனை செய்யும் முயற்சியில். வலதுபக்கம் கல்லாவிலிருந்த முகங்களை பார்த்தேன், என் வருகை அவர்களுக்கு வியப்பையோ விருப்பத்தையோ ஏற்படுத்த எவ்வித காரண காரியமும் இல்லாததால் அமைதியாக அமர்ந்திருந்தனர். ஒருமுறை கடையை சுற்றிப்பார்த்தேன் நீலம் பாய்ந்த சேலைகளில் வரிசையாக பெண்கள் நகைகளை விற்பனை செய்ய பணியில் இருந்தனர். நடுவில் இரு ஆண்கள் சட்டையை இடையில் சொருகி சப்பாத்து அணிந்து கைகளை கட்டிக்கொண்டு நின்றனர். ஏன் அப்படி என்று அவர்களை கேட்கவோ இல்லை எதையாவது புனைந்து கொள்ளவோ விருப்பமில்லை.
சபாரி அணிந்த பெரிய மனிதர் ஒருவர் வந்து வணக்கம் வைத்தார். கைக்கூப்பி மோதிரம் வேண்டும் என்றதும், ஒருபெண்ணைக் காட்டி "அங்கே போங்க" என்றார்.
ஐந்தடி உயரமும் சற்று குண்டான உடல்வாகு கொண்ட இருபத்தைந்து மதிக்கத்தக்க பெண். "எத்தனை க்ராம்" என்று கேட்டாள். "இரண்டு இல்லன்னா மூணு க்ராமுல வேணும்" என்றேன்.
பெரிய மோதிரமாக காண்பித்து "மூன்றரை க்ராம்" என்றாள். "சின்னப்பையனுக்கு போடுவதற்கு" என்றதும். இரண்டு கிராமுக்குள்தான் சின்னதான மோதிரம் கிடைக்கும் என்பதாக கூறி என்னை உற்று பார்த்தாள். கண்ணாடிப்பெட்டிக்குள் இருக்கும் பலவகைப்பட்ட கணையாழிகளை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தபோது, "இதப்பாருங்கு இரண்டரை க்ராம்ல கிடைச்சிருச்சி" என்று எடையில் போட்டுக் காண்பித்தாள். அது உண்மையிலேயே தங்கம்தானா இல்லை வேறேதும் உலோகத்தை அப்படிச்சொல்லி விற்கிறார்களா. இதை எப்படி சோதனை செய்வதென்பது மனக்கேள்விகளாக மட்டும் ஒலித்தபோது. நான் அந்த மோதிரத்தை வாங்குவதாக உறுதியளித்துவிட்டேன்.
இப்பொழுது எனது அடையாள அட்டை, வங்கி பற்று அட்டை என்னிடமிருந்து வாங்கப்படன. மேலும் இரண்டு பெண்கள் அருகில் வந்ததும் "வாரச்சீட்டு, மாதச்சீட்டு போடுங்க சார் பிரயோஜனமா இருக்கும்" என்றாள் முதல் பெண். கண் இமைகளுக்கு அழகாக மை தீட்டியிருந்தாள் எனக்கு பைக்குள்ளிருக்கும் பேனாவை எடுத்து அவள் கண்களை வரைந்துவிடவேண்டுமென்ற எண்ணம் மேலோங்கியது. கருப்பான பெண். முகத்திலிட்ட பூச்சுகளின் திட்டு அவ்வறையின் சிபிஎல் வெளிச்சத்தில் சிலிர்ப்பை உயிர்ப்பித்தது. இரண்டொரு நொடிகளுக்குப்பின் அவள் கண்ணாடிச்சட்டத்தின் பக்கமாக திரும்பி எதையோ முணுமுணுத்தாள். இரண்டாமவளின் குரல் மீண்டும் சந்தாக்களை அறிமுகம் செய்தது. இம்முறை பதிலளித்தேன் வேண்டாமென்று, கூடவே சொன்னேன் இதற்கு பிறகு எப்போ நகை வாங்குவேனென்று எனக்கே தெரியாதென்று. "இப்போ வாங்கிட்டீங்கல்ல இனி வாங்குவீங்க சார்" என்று முதலாமவள் சொன்னாள். அவளை மீண்டும் பார்த்தேன். பார்க்க மட்டுமே செய்தேன்.
மோதிரம் சின்னதொரு ஞெகிழிப்பெட்டியிலிருந்து சற்று குண்டான அந்த பெண்ணால் வெளியில் காண்பித்து பின் பூட்டப்பட்டது. எனது அட்டைகளையும், மோதிரப்பையையும், பல் தெரியா அப்பெண்ணின் வலிந்த சிரிப்பையும் எடுத்து வெளியில் வந்தேன். ஒழிக்கப்பட்ட வியர்வை ஊற்றிக்கொட்டியது.
வீடுவந்ததும் "மொதமொதலா நகைக்கடைக்கு பேட்டு வந்துட்டிய" என்றாள் சித்ரா. "ம்" என்று, மெல்ல கண் அயர்ந்தேன் கட்டிலில், கோடுகள் தீட்டிய கண்கள் என்றேன் மெல்லியதாய். என் விரலிடுக்கில் பென்சிலொன்று நடுங்கிக்கொண்டிருக்கும் உணர்வு.
வெள்ளி, 3 ஜூன், 2016
தாகம்
முருங்கைவிதைகளை நீருக்குள் இட்டு பின் வடிகட்டி குடிப்பதால், கிருமிகளை விலக்கி சுத்தமான நீரை பருகலாம் என்ற தகவலை இணையத்தில் வாசித்துக் கொண்டிருந்தபோது. "என்ன புழுக்கம் புழுங்குது" என்ற முணுமுணுப்போடு வாசலில் என்னருகில் வந்தமர்ந்தாள்.
"தண்ணீ தாகமே நிக்கமிண்டக்கிடா, உனக்கெப்படியிருக்கு" என்றாள்.
"மண்பானைத் தண்ணீ நல்லாத்தாம்ம இருக்கு, கொஞ்சநாள்ல பழகிரும். இனி துட்டு குடுத்து தண்ணி வாங்குததா உத்தேசமில்லம்ம" என்றதோடு "முருங்க வெத போட்டு குடிச்சா கிருமி போயிருமாம், இதுல போட்ருக்கான்" என்றதும்.
"முருங்க வெதைக்கி மரம் வளக்கியாங்கோம்" என்று கூறிவிட்டு காற்றுக்கும் மரமில்லாத இடத்தில் தன்முந்தானையே சுழற்றி கொஞ்சம் காற்றினை உற்பத்தி செய்தாள். நான் அம்மாவைப் பார்த்தேன் லேசாக சிரித்தாள். அது என்னை கேலி செய்வதானவொரு மன உழற்றியை உண்டுபண்ணியது.
இரவில் தூங்குமுன் "உங்கம்ம பக்கத்துவீட்ல போய் தண்ணீ வாங்கி குடிக்காவ" என்றாள் தனம், என் மனைவி.
"ம்" என்றேன் யோசனையோடு.
"அந்தம்மா நேத்து சாய்ங்காலம் யாங்கிட்ட சொல்லுது, நல்ல தண்ணீ வாங்கி குடிக்கலாம்லா. நான் வேணும்னா கேன் போடச் சொல்லவான்னு"
நான் மீண்டும் "ம்" என்றேன்.
திரும்பிப் படுத்துக்கொண்டாள். சாளரம் திறந்திருந்தும் வராத காற்றில் வியர்த்துக்கொண்டிருந்தது.
இரண்டாவது நாள் சனிக்கிழமை மாலை ஞெகிழி டப்பாவை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். நீரோடு திரும்பினேன். "ஏன் ராசா தண்ணீ கொண்டாந்துட்டான்" என்றாள். பால்யத்தின் கிராமத்து வீட்டிற்கு இரண்டு குடம் கட்டி அய்யனார் கோவிலிலிருந்து நீர் எடுத்துவந்த போது அவள் உதிர்த்த இதே வார்த்தைகள் நினைவில் ஒழுகியதும் அவளைப்பார்த்தேன் மெல்லச் சிரித்தாள்.
புதன், 16 டிசம்பர், 2015
இருண்ட நூலகம் - சிறுகதை
சனி, 17 அக்டோபர், 2015
மாலைப்பொழுதின் நிறம் - சிறுகதை
தலைக்குமேல் கொடூரமான பழகிப்போனதொரு பெருத்த சத்தத்தோடு, உண்மையிலேயே விமானமொன்று பறக்கத்தான் செய்தது. மனதைத் தொலைக்கும் கேள்வியை அதில் ஏற்றி விட்டுவிட்டு பார்த்துக் கொண்டிருந்தேன், அதன் வேகத்தைப் பொருத்து அதன் அளவு குறைந்தது போலவே தன் போலியான நிறத்தை விடுத்து பொதுவான நிறத்தை பூசிக்கொண்டு துகள் அளவுக்கு சிறுத்தது. அதற்குமேல் இல்லாமல் போனது. அது தொலைந்து போனது என்றுதான் என்னால் சொல்லமுடியும்,
வெள்ளி, 31 அக்டோபர், 2014
நிலப்படமும் நண்பனும்
நிதானித்துக் கொண்டவன், நிலப்படத்தில் சென்று சேர வேண்டிய இடத்தில் புத்தகநிலையத்தின் பெயரை ஆங்கிலத்தில் எழுதியதும் இவன் நிற்கும் இடத்திலிருந்து மெல்லிய கருவண்ணத்தில் பாதையை அடையாளப் படுத்தியது.
நிலப்படத்தை துண்டிக்காமல் கைபேசியை உள்ளங்கையில் கிடை பக்கமாக வைத்துக்கொண்டு சாலையில் தொடர்ந்து நடந்தான், வானநீலப் பொட்டும் நகர்ந்து கொண்டே வந்தது.
மழைமேகங்கள் நான்கு மணியை ஆறு மணி சாயலுக்கு மாற்றியிருந்த நேரம், சாலையோரத் தேநீர் கடையில் வாழைக்காய் கடலைமாவுடன் கொதிக்கும் எண்ணையில் புணர்ந்து கொண்டிருந்ததும் இவனுக்கு குழம்பியின் மேல் உவகை ஏற்பட்டது.
தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்தவன் பழக்கடையில் மாதுளம் பழங்களின் அடர்சிவப்பு விதைகளை பிரித்து நெகிழி கொள்கலனில் அடைத்து வைத்திருந்ததை கவனித்ததும். அந்த விதைகள் பற்களாக உருவங்கொண்டு ஓட்டமும் நடையுமாக செல்லும் நுகர்வோரை பார்த்துச் சிரித்து ஏளனம் செய்வதுபோல் இருந்தது இவனுக்கு.
இப்போது நிலப்படத்தின் வானநீலப் பொட்டு சாலையின் வலதுபுறம் திரும்பும் தெருவின் முனையை அடைந்திருந்தது, இவனும் தான்.
தெருவின் இடது பக்கத்தை பிடித்து நகரத்தொடங்கியவன், கைபேசியை தன் கால்சராயின் இடதுபையில் சொருகிக் கொண்டான்.வரும் சந்திப்பில் இடதுபுறம் திரும்பிய பின் முனிசாமி சாலையை அடையவேண்டுமென்பது நிலப்படத் தகவல்.
இடதுபக்கம் திரும்பும் முன்னரே இவனுக்கு மூத்திரம் முட்டிக்கொண்டு வந்தது, சாலையில் இடதுபக்கம் திரும்பியதும் அமைந்திருந்த கடையில் பழச்சாறு, தேநீர், குழம்பி எல்லாம் கிடைக்கும் போல் தெரிந்தது. முட்டிக்கொண்டிருந்த மூத்திரம் கண்களை திருப்ப எதிர்புறத்தில் கட்டணக் கழிப்பிடத்தை கண்டதும் யப்பா என்று இருந்தது.
காசு கொடுத்தாலும் மூக்கை பிடித்துக்கொண்டுதான் உள்ளே நுழைய வேண்டும் என எண்ணிக் கொண்டான். மூச்சை விட்டும் விடாமலும் தவித்துக்கொண்டே சிறுநீரை வெளியேற்றினான். சிறுநீரகக் குப்பியின் நேர்மேல் எழுதப்பட்ட எழுத்துக்கள், எழுதியவனின் மன ஊனத்தை எள்ளி நகையாடிக் கொண்டிருந்தது இவனுக்கு கவிஞர் விக்ரமாதித்யனின்
நக்கவும் தெரியாது
சில ஜென்மங்கள் இருப்பது
சொல்லமுடியுமா எதற்கென்று"
மாலை நேரத்தில் குழம்பியால் கூடுதல் இன்பம் சேர்க்கப்படுவது தனி சுகம் தான், தேநீரோடு இந்த தன்மையை இவன் ஒருபோதும் உணர முடிந்ததில்லை.
பழங்கள் மற்றும் மாச்சில் போத்தல்களுக்கு பின்னால் அமர்ந்திருந்தவரிடம் பத்து ரூபாயை கொடுத்து இரண்டு ரூபாய் சில்லறை வாங்கிக் கொண்டவன், நாவில் ஒட்டிக்கொண்ட குழம்பியின் திரைச் சுவையோடு சாலையில் நடை போட ஆரம்பித்தான். அடுத்த ஐந்து வினாடியில் முனுசாமி சாலையை அடைந்தவன், கைபேசியை உயிர்ப்பித்து புத்தக நிலையத்தின் இருப்பிடத்தை உறுதி செய்து கொண்டான். வானநீலப் பொட்டு இப்பொழுதும் இவனோடு நகர்ந்து வந்திருந்தது. வலதுபுறம் அமைந்திருந்த கட்டடத்தின் ஒரு முனையில் புத்தக நிலையத்தின் பெயர் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டு மேல்தளம் செல்லும் அடையாளம் கண்டவன், தன் கைபேசியில் இணையத்தின் தொடர்பை துண்டித்து விட்டு மேல்தளத்திற்கு படியேறினான், வானநீலப் பொட்டு தன் இருப்பை சாலையோரமே நிறுத்திக்கொண்டது.
புதன், 11 ஜூன், 2014
புரட்டாசித் திங்கள்... ---- சிறுகதை
புரட்டாசி மாதத்தின் முதல் திங்கள் கிழமையின் காலை நேரம், சோம்பல் முறித்து கண் விழித்த சிவராவின் மூளையை ஏதோ நினைவுகள் குடைந்து வேறு சிந்தனைக்குள் புதைத்தது. சிவரா தான் பிறந்து வளர்ந்த கிராமத்திலிருந்து சென்னைக்கு வேலை செய்ய பயணப்பட்டு ஏழு ஆண்டுகளை கடந்து விட்டது.
இப்போது இவன் விழித்ததும் நினைவுகள் இவனை அழைத்துச் சென்றதும் அதே கிராமத்துக்குத் தான், இதே திங்களுடன் சேர்த்து மூன்று நாட்கள் நடைபெறும் ஊர்க்கோவில் திருவிழா இந்த வருடமும் நடைபெறாமல் போனதன் ஏக்கமே அவன் நினைவுகளுக்கு காரணம்.
இந்த மூன்று தினங்களும் உறவுகளுடனும், நண்பர்களுடனும் இவன் கொண்டாடி மகிழ்ந்த அந்த நாட்கள் திரும்பவும் வராதா என்ற ஏக்கம் வெகுவாக பாதித்திருந்தது.மனது திருவிழா நாளில் உழன்று போனதால், விரித்த பாயை சுருட்ட மனமில்லாமல் நினைவுகளின் பாதையிலேயே நடை போட்டான்.
அந்தி சாயும் அழகான திங்கள் மாலை, கதிரவனின் சிகப்புக் கதிர்கள் வீட்டின் ஒட்டுக் கண்ணாடி வழியே சிறிது வெளிச்சத்தை தூவியிருந்தது, வெளிச்சத்தில் உலாவிக்கொண்டிருக்கும் தூசிகளின் பாதைகளை தன் விரலால் விலக்கி விட்டுக் கொண்டே அம்மாவிடம் ஐந்து ரூபாய்க்காக அடம் பிடித்துக் கொண்டிருந்தான்.
"ரூவால்லாம் ராத்திரி ஒங்கப்பா வந்து தருவாரு, பேசாம காப்பிய குடிச்சிட்டு கிட" ன்னு அம்மா அதட்டி விட்டு சமையல் வேலையை தொடர்ந்தாள். கோபம் வந்தால் எப்பவும் போல பேசாம வீட்ட விட்டு வெளிநடப்பு செஞ்சான் சிவரா.
வீட்டுக்கு வெளியில வரவும் " ஏ என்ன சிவரா பள்ளிகூடத்துக்கு லீவுட்டுட்டான்ங்க போல இனிம மூணு நாளைக்கு உன்னைய கையில புடிக்க முடியதடே" மாரி அண்ணன் சொன்னதுக்கும் பதில் ஏதும் இல்லாமலே வீட்டைக் கடந்து போனான்.
திருவிழாவுக்கு வரும் விருந்தினரை கவனிக்க சமையலுக்கான மளிகை சாமான் வாங்க முருகண்ணன் கடையில நல்ல கூட்டம் இருந்தது. கடைக்கு எதிர்பக்கமா இருக்க நல்லம்ம பாட்டி வீட்டு வாசல்ல கீழயிருந்து மேலனிக்கி படர்ந்து நிக்கிற கொடி மரத்தில் விழும் சூரிய ஒளியை வெறுமையோட பார்த்தபடியே நகர்ந்தான்.
இவனது குடும்பம் வசிக்கும் தெருவின் முனையில் இருக்கும் புளியமரத் தோப்பில், திருவிழாவிற்காக வந்திருந்த கொடராட்டினத்தில் சிறுவர்கள் உற்சாகக் களிப்பில் வட்டமடித்தனர், அருகிலேயே சிறுவர்களுக்கு அவர்கள் பழகிய இடங்களையே வேறு கோணத்தில் காட்டும் உயரமான தொட்டில் ராட்டினம் அப்போதுதான் ஆட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்ததன் இடையே உரக்க ஒலிக்கும் அம்மன் பாடல்கள் இவனது செவிகளைத் திருகின.
வாகனங்கள் இறைந்து கிடக்கும் அம்மன் கோவில் மைதானம் இன்று பந்தலிட்டு வாழைமரத் தோரணங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. புழுதியையும் வெக்கையையும் விரட்ட மண் தரையில் தண்ணீர் தெளித்து மைதானம் இரவுத் திருவிழாவுக்கு தயார் செய்யப் பட்டிருந்தது.
சாலையோரம் தேநீர் விடுதிகள் இன்று முதல் மூன்று நாட்களுக்கான மிட்டாய் கடைகளாக மாறியிருந்தன.
வழக்கமான இடங்களின் அடையாளங்கள் சிறிது மாற்றம் கண்டதாலோ என்னவோ, இவனை அறியாமல் கடந்த வருடத் திருவிழா நாட்கள் நினைவில் வந்து போனது.
தினசரி நாட்களில் இவனும் நண்பர்களும் சேர்ந்து பழகிக் கிடக்கும் இடம் வந்தது, நண்பன் சுடலை இவனுக்கு முன்பே வந்து அமர்ந்திருந்தான், நண்பர்கள் ஏழு பேரும் வந்தவுடன் கோவில் கொடை பற்றியும் அதைக் கொண்டாடுவதையும் சிலாகித்து பேசிக் கொண்டிருந்தனர்.
இரவு திருவிழா நேரம் நெருங்கி வந்தபோது சோறு சாப்பிட்டு விட்டு 10 மணிக்கெல்லாம் திரும்பவும் கூடுவதாக உத்தேசம்.
முதல் நாள் இரவில் பொதுவாக மக்கள் கூட்டம் இரண்டாம் நாளை விட குறைவாக இருக்கும். இதனால் கரகாட்டமும் வெகு விரைவிலேயே முடிவுக்கு வந்துவிடும்.
கோவில் திருவிழா என்றால் செவ்வாய் கிழமை காலை உணவு இட்லியாகத்தான் இருக்கும். ஏனைய நாள் இரவு உணவுகளை பார்க்கும் போது திருவிழா நாளில் பச்சை வாழை இலையில் பரிமாறப்படும் உணவில் கூட்டுப் பொறியல், அப்பளம், சாம்பார், ரசம் என்று ஒரே நேரத்தில் நாவிற்கு உருசி கொடுக்கும்.
இரண்டாம் நாள் சாயுங்காலத்தில் அம்மன் சிலை செவ்வந்திப்பூகள், எலுமிச்சம்பழம் மாலையில் அலங்கரிக்கப்பட்டு தங்கப்பட்டுகள் அடுக்கப்பட்ட சப்பரத்தில் ஊர் வீதியில் பவனி வரும். சப்பர பவனிக்கு முன்னர் ஊர் மக்கள் வீட்டின் முன் மஞ்சள் நீர் தெளித்து, வண்ணக் கோலங்கள் வரைந்து ஒரு தெய்வீகத்தை அழைத்து வந்திருப்பார்கள்.
ஆடி அசைந்து வரும் சப்பரம் சிவராவின் வீட்டின் முன் வந்ததும், அவனது அப்பாவும் அம்மாவும் சேர்ந்து கையிலிருக்கும் தாம்பூலத்தை பூசை செய்பவரிடம் கொடுப்பார்கள். தாம்பூலத்தில் கண் திறக்காத தேங்காய், வாழை பழம், வெத்தலை பாக்கு, பத்தி, சூடம் என பூசைக்குரிய பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும்.
சப்பரத்தை நேர்த்தியோடு நகர்த்திச் செல்ல முன்னாலும் பின்னாலும் சிறாரும் பெரியோரும் மூங்கில் கம்பின் இணைப்பு கொண்டு இழுத்துச் செல்வார்கள்.
நேற்று கிடைக்காத ஐந்து ரூபாய்க்கு வருந்தியவனுக்கு. இன்று இருபது ரூபாய் அப்பா கொடுத்ததில் ஏகத்துக்கும் மகிழ்ந்து போயிருந்தான்.
இரண்டாம் நாள் இரவு, மைதானம் காணாமல் போய்விட்டதோ என்று கூட தோன்றும் புதிதாய் பார்ப்போருக்கு, மக்கள் கூட்டம் வெகுவாய் பரவியிருந்தது.
கரகாட்டகாரியின் மீதுள்ள சபலம் பெருசுகளை திறந்த பொக்கை வாயும்,புதிய வேட்டி சகிதம் அசைய விடாமல் வைத்திருக்கும். அதே நேரம் இளசுகளில் பெண்களும் ஆண்களும் மைதானத்தின் ஓரமுள்ள கிணற்றின் இருபுறமும் பெண்கள் அமர்ந்தும் ஆண்கள் நின்று கொண்டும் பலூனை பறக்க விட்டு, பார்வைக் காதலில் வழிவது கூச்சமின்றி அரங்கேறும். அது எப்படியோ எந்த திட்டமிடலுமில்லாமல் இந்த நிகழ்வுகள் அதன் போக்கில் நிகழ்ந்து விடுகின்றன.
பெருவாரியான இளசுகள் கரகாட்டத்தில் செவி சாய்த்துக் கொண்டே மனதை தொலைக்க மனம் தேடிக்கொண்டே நகர்ந்து கொண்டு இருப்பார்கள்.
"ஏல சுடலை உன் ஆளப் பாத்தியாடே" சிவரா கேட்கும் போது,
சுடலை சொல்வான் " அவள அப்பன்காரன் வீட்டுக்குள்ள பூட்டி வச்சிருக்காம்ல"
"சரிடே விடு நாளைக்கு மதியக் கொடைக்கு வருவால்லா அப்போ பாத்துக்கலாம்" இது சிவரா.
பின் நள்ளிரவில் பெண்கள் நேர்த்திக்கடனுக்காக செய்த மாவிளக்கு, முளைப்பாரியை வீட்டிலிருந்து மேளதாளம், வாணவேடிக்கைகளுடன் கோவிலுக்கு அழைத்து வருவார்கள். இந்த இருள் சூழ் இரவில் விளக்கின் மஞ்சள் ஒளியில் மனம் விரும்பும் அவளை பார்க்கும் போது சிவரா நிற்கும் இடத்தில தேங்கித்தான் போனான்.
புதன் கிழமை மூன்றாம் நாள், வீட்டில் ஆட்டுக் கறி சமைத்து புசித்த பின் மதிய வேளை கடைசி நாள் திருவிழா நடைபெறும். பகல் திருவிழா என்பதனால் அதிகமான பொருள் விற்பன்னர்கள் வரிசையில் இடம் பிடித்திருப்பார்கள். ஒருபுறம் கரகாட்டம் உச்சத்தில் இருக்கும் அதே நேரம், அம்மன் சன்னதி முன் முளைப்பாரி எடுத்த பெண்கள் குலவை சத்தத்துடன் கும்மிப்பாட்டு படித்து, மேளதாளம் மற்றும் இளசுகளின் ஆர்ப்பாட்டத்தோடு ஊரின் பெரிய குளத்திற்கு எடுத்துச் சென்று முளைப்பாரி கழுவும் நேர்த்திக்கடன் நிவர்த்தி செய்யப்படும். பெண்கள் சூடியிருக்கும் மல்லிகை மலர்களோடு முளைப்பாரி பூவையும் சூடியிருப்பது அவர்களை மேலும் அழகுறக் காட்டும்.
திருவிழா முடிந்து மக்கள் வீடு திரும்பும் நேரம் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் சின்ன கலவரம் இந்த வருடம் எதிர் பார்க்கா விதம் பெரிதாகிப்போகிறது. இன்றைய இந்தக் கலவரத்தால் வரும் வருடங்களில் திருவிழா நடைபெறாமல் போய்விடும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
நினைவுகளால் கலங்கிப்போன இந்த திங்களில் படுக்கையிலிருந்து எழ மனமின்றி தயக்கத்துடன் பணிக்குச் செல்ல தயாரான சிவரா, வெறுமையுடன் தனது இருசக்கர வாகனத்தை மிதித்து வசிக்கும் வீட்டிலிருந்து வெளியேறினான். இமை திறந்த கண்களில் ஏதோ நம்பிக்கை மட்டும் கலைந்து போகவில்லை இவனுக்கு..



