நூல் அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூல் அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 23 ஏப்ரல், 2026

Book - Money Tales For Young Minds

It's interesting to know how the money was introduced and how the trade was made before an era when money was not there at all. People are always curious about knowing new things; likewise, when money comes to their village, rules come next, they are interested to use it and trade whatever they like. The story is narrated in the way of easy read, understandable. Each chapter increases eagerness to the next chapter.

I stuck for a while when reading the sentence "A sadness not born from lack, but from a system that made plenty feel like nothing."

The story tells us whenever a new rule comes, it makes difficulties for people. However, their innovative thinking creates some wonders like George did when the bank refused a loan for him.

Oh!! That's interesting—crowd funding and stock market introduced in an easy way. The rules are created when problems arrive and people worry about the market instability.

Old Amma gives us a lesson about wealth and life. I became a kid to receive her words.

A best start for anyone who wants to understand money, wealth, life obviously!!!

புதன், 14 ஜனவரி, 2026

எத்தனை கோணம் எத்தனை பார்வை - ஓவியர் ஜெயகுமார்

தனது ஓவியப் பயணத்திற்கு எழுத்தாளர் ஜெயகாந்தனுடனான நட்பு எவ்வளவு உறுதுணையாக இருந்திருக்கிறது என்பதை ஓவியர் ஜெயகுமார் கட்டுரைகளில் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துவதிலிருந்தே உணர்ந்துகொள்ள முடிகிறது. இவரது கோட்டோவியம் பற்றிய திறனாய்வுக் கட்டுரையில் ஏன் இவர் வண்ணங்களுக்கு வருவதற்கு இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டார் என்பதை எண்ணிப் புழுங்கும் கவிஞர் ரவி சுப்பிரமணியின் சொற்களில் தேங்கி நின்று அவரது ஓவியங்களை வாசித்துப் பார்த்தேன். ஓவியங்களில் ஊடாக ஓடிக் களிக்கும் கோடுகள் தான் வடிவங்களையும் அதை நோக்கும் பாதைகளையும் உள்வாங்க உதவுகிறது வண்ணங்கள் குறியீட்டுத் தன்மையுடன் வேறொரு பரிமாணத்தை நமக்கு வழங்குகிறது. 

ஊர்வலம் சிறுகதையில் ஒரு உவமை "தனது மனைவியின் உடம்பிலிருந்து அவளது உயிரை தனியே பிரித்து அகழ்ந்தெடுத்து அதையே ஒளியாக பக்கத்தே வைத்தது போல் தோன்றியது அவருக்கு" இதை வாசிக்கையில் இவரது கவிதை மனம் பயணம் செய்து லயிக்கும் திசையில் நடந்து பார்ப்பது அழகாக இருந்தது. இரண்டொருமுறை வாசித்தப் பிறகு "தனியே பிரித்து...அதையே" என்ற சொற்கள் அவ்விடத்தில் தேவையில்லையோ என்று எனக்குத் தோன்றியது. 

ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் "அன்று பெய்த மழையில்" திரைப்படத்தில் கலை இயக்குனராக உடன் இணைந்து பணியாற்றும் போது சில்க் சுமிதாவின் தன்னை தீவிரமாக விரும்பும் குணத்தை வெளிப்படுத்துவற்காக நடிகையை நேரடியாக பார்த்து வரைந்து படத்தில் பயன்படுத்தியதை அறிந்துகொண்டதும் அப்படத்தை வலையொளியில் (YouTube) தேடிப் பார்த்தால் இப்படியொரு வயது வந்தோருக்கான படம் வந்திருப்பதை கொஞ்சம் வியப்புடன் கண்டு கண் நகர்ந்தது அந்த ஓவியத்திற்கான தருணத்தைப் பார்த்ததும் நிறுத்திக் கோடுகளில் கண் பதித்தேன் வண்ணங்கள் தெளிவாக இல்லாததால் அதிக கவனம் செலுத்த இயலவில்லை. 

ஓவியர் திரு.ஜெயகுமார் அவர்களை சந்திக்கும் ஒவ்வொரு பொழுதும் படைப்பு உருவாக்கம் பற்றிய அறிதலுக்கான வழியையும் உள்ளார்ந்த ஆற்றலையும் பெற்றுக் கொண்டேயிருப்போம். இப்போது அவரது "எத்தனை கோணம் - எத்தனை பார்வை" நூலை வாசிக்கும் போது கலை சார்ந்து அவருக்குள் விளைந்த வகைமைகளை எண்ணிப் பார்ப்பதும் அதனை மூலமாகக் கொண்டு கணக்கற்று விரியும் நமது புரிதல் படிநிலைகளும் பேரனுபவமாக உள்ளது. தனது கலை நுட்பங்களை வெளிப்படுத்த அவர் இன்னும் பல நூல்கள் படைக்க வேண்டும்.

செவ்வாய், 2 ஜூலை, 2024

க்ளிக்

புகைப்படங்களின் ஆரம்ப கால வரலாற்றில் தொடங்கி எப்படி ஒரு ஒளிப்படக்கருவி செயல் படுகிறது, காட்சி எவ்வாறு படமாக இக்கருவி உதவியுடன் பதிவு செய்யப்படுகிறது, அதிலுள்ள அனைத்து பாகங்கள் மற்றும் குவியாடிகளின் வகைகள் என ஒளிப்பட நுட்பங்களை விரிவாக அலசி எவரும் எளிதாக புரிந்து கொள்ள ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது "க்ளிக்" புத்தகம்.

ஒளி குவியாடியின் வழியே புகுந்து செல்லும் அளவைப் பொறுத்து கிடைக்கும் படங்களுக்கான அளவீடுகள் பற்றி வாசிக்க வாசிக்க நானும் ஒளிப்படக் கலைஞன் ஆகிவிடலாம் என்ற ஆர்வத்தை விதைக்கிறது. ஒளியினைப் பயன்படுத்தி அவர் வரைந்த ஓவியம் புதிதாகவும் வியப்பளிக்கக் கூடியதாகவும் உள்ளது.

அழகுணர்ச்சி கொண்ட கட்டமைப்பை உருவாக்க ஓவிய வாசிப்பின் அவசியத்தை உணர்த்தி அதற்கான விதிகளை வரையறை செய்து கொடுத்திருப்பது கற்றலின் பெருவெளி. இத்தனை ஆண்டுகள் இந்த புத்தகத்தை வாசிக்காமல் வைத்தது பெருந்தவறு என்பதை உணர்ந்த தருணம். இப்புத்தகத்தை எழுதியதற்கு ஒளிப்பதிவாளர் சி.ஜெ.ராஜ்குமார் அவர்களுக்கு நன்றி பாராட்ட வேண்டும்!!




செவ்வாய், 2 மே, 2023

The Whiskey Whispered - Short stories

ஒரு சிறுகதை அளவிலும் கருவிலும் வெளிப்படும் விதத்தில் அடுத்த கட்ட உரையாடலுக்குள் நுழையும், அவ்வாறு புகாமல் விலகிப் போகும் கதைகள் காகிதத்தில் எழுத்தாக மட்டுமே உறைந்து போகும். எழுத்தாளர் அமல் மோகன் அவர்களுடைய "The Whiskey Whispered" ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பிலுள்ள முதல் கதையினை மற்ற கதைகளுக்கு பிறகே வாசித்தேன். நினைவுகளில் கரைந்து உருகும் கதைகளில் இந்த "Meraki" வலிகளையும் சொற்களற்ற காற்று வெளியையும் நம்முள் கடத்துகிறது.

குறிப்பிட்ட நிலையான காதல் என்றொன்று இல்லை என்பதை நிரூபிக்கும் கதைப் போக்கு இந்த தொகுப்பின் ஒட்டுமொத்தக் கருவாக பிணைந்திருக்கிறது என்று சொல்லலாம். அதே போல ஒவ்வொரு கதையும் அடுத்த கட்ட வாசிப்புக்குள் நம்மை இயல்பாக நகர்த்துவதை தவிர்க்க இயலாது.



 தற்கால வாழ்வு என்பது பெரும் வினாக்களோடு போராடுவது, கடந்த காலங்களில் வழி மாறிய காட்சிகளை மறு உருவாக்கம் செய்து கொள்வது எனப்  பொருந்தா வெளியில் உணர்வுகளைத் தேடித் திரியும் அகதியாக நிற்கிறோமா. இன்னாருக்கு இந்த உணர்வு மட்டும் என்று கட்டமைக்கப்படாத பிரபஞ்சத்திலும் கட்டமைக்கப்பட்ட சமூகத்திலும் வாழ்வதா வாழ்க்கை. ஒரு உயிர் மற்றொன்றுடன் பொருந்தும் நோக்கில் பற்றிக் கொள்ள பிடி தேடும் கொடி போலத் தான் படைக்கப் பட்டிருக்கிறதா என அடுத்தடுத்து விடை தேடும் முடிச்சிகளைக் கொண்ட கதைகள். ஒரு உயிர் மற்றொன்றுடன் எதனால் ஈர்க்கப் படுகிறது எந்த புள்ளியில் அது விலகிப் போகிறது. சாதி மதம் பார்க்காமல் வாழத் தெரிந்தவனுக்குள் நிறமும் உருவமும் எப்படி குரோதத்தை விதைக்கிறது.

"Girl on the other end" கதையில் தொலைபேசி உரையாடல் குரலில் அவனது பழைய காதலியின் சாயலை உணரும் பெண்ணின் உருவம் பற்றி முதலில் எந்த விவரிப்பும் இன்றி அவர்களின் சந்திப்பின் போது சொல்லப்படும் அவளின் உருவமும் நிறமும் கதையின் போக்கிற்கு ஏற்ற வடிவத்தில் அமைந்துள்ளது.

ஆண்களுக்கு அழுகையை வெளிப்படுத்த உரிய சூழல் நம்மிடம் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. அன்பிற்காக ஏங்கி அழும் ஆண்கள் கதையில் கலந்திருக்கிறார்கள். மகிழ்ச்சியாக இல்லாதிருப்பதில் மகிழ்ச்சி எனும் கூற்றை முன்வைக்கும் "Director's cut" கதையில் மகிழ்வை வெளிப்படுத்தும் ஓவியத்தை வரையச் சொல்லும் பெண்ணைப் பற்றிய தனது திரைக்கதையில் இறுக்கமான காட்சியில் தனது திரைப்படத்தை முடிப்பது கூற்றை மெய்ப்பிக்கும் தளம்.

புதன், 8 ஜூன், 2022

நீர் நிலம் வனம் - கடல்

கடலை கடலோடியிடம் விட்டுவிடுங்கள் எனும் வறீதையா கான்ஸ்தந்தின் குரல் காது வழி மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மீனவன்னு செய்தில எழுதுறீங்களே அதுவே தப்பு நாங்கள் கடலோடிகள் என்பவரது குரலை மறுக்கவும் மறக்கவும் இயலுமா. ஒரு நகரத்தாளுக்கு ஒட்டுமொத்த விவசாய நிலத்தையும் விவசாய நிலமாகவும், கடல் சாராத ஆளுக்கு ஒட்டு மொத்த கடலும் ஒரே கடலாகவும் புரிதலுக்குள்ளாக வாய்ப்பிருப்பதும் அதை நாம் அல்லது குறைந்தபட்சம் இந்நாட்டின் அரசு அறியாதிருப்பது எவ்வளவு அயற்சியானது.

ஒவ்வொரு விவசாய நிலமும் வெவ்வேறு பண்புகளைக் கொண்டிருப்பது போல் கடலிலும் பல பண்புகள் நிறந்த பகுதிகள் இருப்பதை இந்த நூல் வாசிப்பிற்கு பிறகே அறிதலுக்குள்ளாகிறது. கடலில் மிதப்பது படகு அல்லது கப்பல் என்பதைக் கடந்து அதன் உண்மையான பெயர்கள் புலப்படவும் கடலோடிகளின் வாழ்வைப் புரிந்து கொள்ளவும், கடல் வாணிபத்தில் கொழிக்கும் மனிதர்களையும், இலங்கை ராணுவம் ஏன் கடல் எல்லை தாண்டியதாக தமிழர்களைச் சுடுகிறது, கச்சத்தீவை ஏன் இலங்கை ஈர்த்துக் கொண்டது, தமிழ் நிலத்திற்கும் இலங்கைக்குமுள்ள ஆதி உறவு  மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் நிலமும் கொண்டிருக்கும் வெவ்வேறு பண்புகளை உணர்ந்து கொள்ளவும் மிகப் பெரும் உந்துதலை வழங்குகிறது இந்நூல்.

கடல் புறத்தில் சுற்றுலாவை மேம்படுத்தினால் கிடைக்கும் பொருளாதாரத்தில் அங்கிருக்கும் பெரும் சுரண்டல் ஆலைகளை இல்லாமல் ஆக்கிவிடலாம் எனும் கடலோடியின் குரலை கேட்பாரில்லை என்றே தோன்றுகிறது. 

எங்கிருந்து நம் நிலங்களுக்கான விடுதலையை சுய பண்புகளை வளர்த்தெடுக்க வேண்டும் என எண்ணும் போது நமது கல்வி முறையில் உரிய மாற்றங்களைச் செய்யாமல் இது சாத்தியமில்லை, எப்படி ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்த பண்பிருக்கிறதோ அதை அடிப்படையாகக் கொண்டு அந்தந்தப் பண்பிற்கேற்ற பள்ளிக் கல்வியை ஊக்குவிக்கவும் உருவாக்கவும் வேண்டும். ஆனால் நாம் ஒற்றை கல்விக் கொள்கை எனும் சுருக்கும் கயிற்றில் தொங்கத் தொடங்கிவிட்டோம்.

கொற்கை புதினம் வெளியான நாள்முதல் அதை எப்படியும் வாங்கி வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும் போதெல்லாம் அதன் விலை மீது மாறாத பயமொன்றை சுமந்து கொண்டிருந்தேன். அந்தச் சுமையை புறந்தள்ளி வாசிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் நிற்கிறேன்.



திங்கள், 10 மே, 2021

ஓவியர் ஆதிமூலம்

சிறுபிள்ளையில் எவருக்குமே உள்ள தன்மையோடு கையில் கிடைக்கும் எழுது பொருள் வழியே கோடுகளை கிறுக்கும் தனது ஆர்வத்தை அடுத்தடுத்து நகர்த்தும் எண்ணத்தில் மளிகைக் கடையை புறந்தள்ளி சென்னைக்கு பயணித்தவர் ஓவியர் ஆதிமூலம். பி.எஸ். செட்டியார் என்பவரது வழிகாட்டலில் சிற்பி தனபால் அவர்களை அடைகிறார். இவரது வழிகாட்டலில் ஓவியக் கல்லூரிக்குள் நுழையும் ஓவியர், பயிலும் காலத்திலேயே தனக்கென தனி பாணியை உருவாக்கி அதில் தொடர் பயணம் செய்தது போல புரிந்துகொள்ள முடிகிறது.

கோட்டுச்சித்திரங்களில் இவர் நிகழ்த்தியிருக்கும் நிழல் ஒளியில் கிட்டும் அதிகமான இருளுக்குள் மிளிரும் ஒளி, ஓவியத்தை காணும் பொழுதில் உள்ளிழுத்து நகரவிடாமல் செய்துவிடுகிறது. தத்ரூபமான படங்கள் தீட்டியிருக்கிறாரா எனத் தேடியதில் ஒரு பெண்ணின் முகம் தவிர்த்து எதுவும் கிடைக்கவில்லை. கோடுகளிலிருந்து வண்ணக் கலவை புரியும் அரூப ஓவிய முறைக்குள் சென்று தனது படைப்புகளை உருவாக்கியிருக்கிறார். இவரது சில படைப்புகளை "ஆதிமூலம் அழியாக் கோடுகள்" என்ற புத்தகத்தில் வெவ்வேறு ஆளுமைகளின் கட்டுரைகளோடும், பத்திரிக்கைகளில்  வெளிவந்த இவரது பேட்டிகளோடும் வெளியிட்டிருக்கிறார்கள்.

பயிற்சிக்காக இவரது இரண்டு ஓவியங்களை வரைந்து பார்த்ததில் இதுவரை செல்ல மறுத்த இருளுக்குள் சென்று மீண்ட உற்சாகமொன்று தோளில் செல்லமாக தட்டிவிட்டது.

காணொளி வடிவில்


திங்கள், 18 மே, 2020

ஒளியிலே தெரிவது - வாசிப்பனுபவம்

எந்த புத்தகக்காட்சியில் வாங்கியதென்று நினைவில் இல்லை, ஆனால் முதல் கதையான "சிநேகிதிகள்" கதையினை எப்பொழுதோ வாசித்தது போல உணர்வு, ஒருவேளை படித்துறையை காட்சிப் படுத்தும் வேறேதேனும் வண்ணதாசன் எழுதுயிருந்தாலும் இருக்கலாம். "கழுத்துக்கு மேல் முகம் கல்சிலையாகி விட்டதுபோலப் போய்க்கொண்டு இருக்கும்" சேதுவின் இடத்தில் என் தலையை பொருத்திப்பார்த்துக் கொண்டேன். சிநேகிதிகளால் நிரம்பிய கதை, சில நாட்கள் முன் இதுவரை சிரிக்காத முகத்தைப் பார்த்துச் சிரித்ததையும் சிரிக்காமல் கல்லாகிச் சென்றதையும் மனதில் ஓட்டியது.

"இமயமலையும் அரபிக்கடலும்" வாசிக்கத் தொடங்குமுன் தலைப்பை கண்டுகொள்ளாமல் கதைக்குள் தஞ்சமடைவது இயல்பு, பின் முதல் வார்த்தையோ ஏதேனும் காட்சி ஏற்படுத்தும் சிறு சலனமோ பக்கத்தை புரட்டி தலைப்பை அண்ணாந்து பார்க்கச் சொல்லும், இந்நிகழ்வு சிறுகதை வாசிப்பின் பொழுதில் மட்டுமே வெளிப்படும். சோதனைக்குட்பட்டது. "லெக்கு" என்ற வார்த்தையைக் கண்டதுமே ஓர் பேருணர்வு, தன் ஆழ்மனத்தில் காணாமல் கசங்கிக் கிடக்கும் காகித இடுக்குகளில் சிக்கிய ஓர் சொல், இன்று இக்கதையின் வழி தன்னை விடுவித்து கும்மாளமிட்டு குதூகலிக்கிறது. அச்சொல்லை அப்படியே கடந்துவிட விருப்பமின்றி மனைவியிடம் ஓரிரு வரிகள் புலம்பிவிட்டு புத்தகத்துக்குள் வந்தால் மனதுக்குள் பல்வேறு உரையாடல்கள் அத்தனையும் "லெக்கு"வை மையமாக வைத்து நிகழ்பவை. இரண்டு நாளுக்குப் பிறகே கையிலெடுக்கிறேன். நடைபயணத்தின் வழியில் தங்கத்திற்கு ஏற்படும் எண்ணவோட்டங்கள் அவளின் வேலை இடதத்திற்கான லெக்கை (திசையை) மறக்கடிக்கின்றன, இறுதியில் மிதிவண்டிக்காரர் தன் புழுங்கிய உடலை துடைத்துக்கொண்டே தன் பூவிழுந்த கண்ணால் அவளைக் கண்டதோடில்லாமல், அவர் செய்த சிரிப்பும் பள்ளிக்கூடத்துக்கு போயிருக்கியா என்ற கேள்வியும் அவளை உலுக்கிவிடுகின்றன. கதைக்கான எழுத்துகள் நிறைவடைந்த இடத்தில் அடைந்த சிறு குழப்பம், என்னடா கதையிது என்று உள்ளுக்குள் கதைத்துவிட்டு படுத்ததும், கதை அதன் போக்கில் ஒரு ஓட்டம் ஓடியதும் படக்கென கிளர்ந்தது ஓர் உணர்வு.

உறவுகளுக்குள் எத்தனை சாரங்கள், சுந்தரம் மாமாவுக்கும் அவளுக்குமான வெளிப்படையான பகிர்தலுக்கான பொழுதும், தந்தைக்கு மகளிடம் இருக்குமோர் விலகல் மனோபாவம், சரோ அத்தைக்கும் அம்மாவுக்குமுள்ள உறவால் வெளிப்படும் அளப்பரிய உணர்வு, சுந்தரம் மாமா கோடுகளை கிழித்து காகமாக்கிய பொழுதிலிருந்து பொங்கலிடும் வாசலில் கோலமிடும் வரையுள்ள கலையோடு அவருக்குள்ள உறவு, தந்தைக்கும் மாமாவுக்குமான நட்பு.
இத்தனைக்கும் மேலாக காகத்தினை கண்டதும் கா..கா..எனக் கத்தியவனுக்கும் அந்த ஓவியத்துக்குமான உறவே பேரின்பப் பெருவெள்ளம் அதில் மிதக்கும் கப்பல்களே உறவுகள்.

புதன், 13 மே, 2020

கதைகள் உருவாக்கும் பாதை

மூத்தவள் (ஜெபரத்திகா) நடக்க ஆரம்பிக்கும் முன்னால் நெஞ்சின் மீது படுத்துக்கொண்டு அணில் போல என் கண்களை அவதானிப்பாள், சிரித்தால் அவள் வெடித்துச் சிரிப்பாள். கி.ரா-வின் தாத்தா சொன்ன கதைகள் (தலைப்பு சரியாக நினைவில் இல்லை அதோடு இப்புத்தகம் இப்போது யாரிடம் உள்ளது என்றும் நினைவில்லை) என்ற புத்தகத்தில் மொச்சைக் கொட்டையின் வயிறு வெடிப்பது போல் ஒரு கதையின் காட்சி வரும், அதைச் சொல்லி "ட்டமார்" னு வெடிச்சிட்டுன்னு சொன்னால், உரத்தச் சிரிப்பொலி கேட்கும், பொக்கை வாய் சிரிப்பு.

வேலை முடித்து வீடடைய பத்தரைக்கு மேல் ஆகிவிடுமென்பதால், அப்போதெல்லாம் பெரும்பாலான நாட்கள் உறங்கிவிடுவாள், பள்ளி செல்லும் நாட்களில் மட்டும். அதற்குமுன் அதாவது பள்ளியில் சேரும் முன், சில இரவுகள் பன்னிரண்டு மணிவரைக்கும் நீளும் கதையாடலும் விளையாட்டுமாக, இப்போது இரு மாதமாக தொடர்ந்து வீட்டிலிருந்து பணி செய்வதால் ஒன்பதரை மணிக்குப் பாய் விரித்துவிடுவது வழக்கமாகி விட்டது. 

ஒவ்வொரு நாளும் கதைப் பேச்சிற்கு பிறகே உறக்கம் என ஆகிவிட்டது, இளையவளும் (இயல்) இந்த கதைப் பொழுதில் இணைந்துவிட்டாள் வெகு இயல்பாக இவளின் பெயருக்கேற்ப, குழந்தைகளுக்கென வாங்கிய புத்தகங்கள் பெரும்பாலானவை அதன் முகமிழந்து, பின் கை கால் என அத்தனை அங்கங்களும் அற்றுப் போயின இவள்களின் சாகசத்தால், எஞ்சியது குன்றத்தூர் பாவேந்த பள்ளியின் சில புத்தகங்கள், அவை வண்ணமும் கிறுக்கலும் பெற்று கிழிதலிலும் தோற்கவில்லை. மிஞ்சியவை சில கதைப்படங்களும் பாடல்களும்.

சில கதைகளை நானே உருவாக்கி நேரத்திற்கேற்ப கதையை நீட்டி முழக்குவேன், சலிப்பு தட்டிவிடும் பொழுதில் முதல் காட்சியை நானும் அடுத்த காட்சியை அவளுமாக மாற்றி மாற்றி உருவாக்குவோம், இந்த மாதிரியான கதை உருவாக்கலுக்கு முன் ஓரிரு குட்டிக் கதைகளை அவளுக்கு பரிசளிக்க வேண்டும், (சமயத்தில் குட்டிக் கதைகளினூடே தூக்கம் அவளை அள்ளி அணைத்துக் கொள்ளும்). அதற்கு சிறுவர்களுக்கான எழுத்தாளர் விழியன் "வாட்சப் (புலனம்)" வழியே நாள் தோறும் பதிவிடும் கதைகளையும், பாவேந்தர் பள்ளியின் முதல்வரும் கதைசொல்லியுமான ஐயா வெற்றிச்செழியன் அவர்களின் கதையாடல் வலையொளித் (யூ ட்யூப்) தொடரில் சொல்லப்படும் கதைகளையும் வாசித்தும் கேட்டும் மகள்களிடம் கடத்துகிறேன்.

இரண்டு நாட்களாக ரத்திகா கேட்கிறாள் "அப்பா இந்த சிங்கங்கத மாட்டுக்கத மீன்கத அப்றோம் காக்கா கதல்லாம் எங்கப்பா படிச்ச" 

"புத்தகத்துல தாம்டே படிச்சேன்"

"எனக்கு காமியேன்"

"அது செல்லுல இருக்குமா, கடையெல்லாம் துறந்தொடனே புத்தகமா வாங்கித்தாரேன் சரியா, இதுல எழுத்தா இருக்கு பாரு, படமே இல்ல, ச்சீ" என்று செல்லை நீட்டியதும் சிரித்துக்கொண்டே ஓடினாள். 

அப்போ இவள்கள் செல்பேசியில் எதுவுமே பார்ப்பதில்லையா எனக் கேட்டால் அதுவும் உண்டு, அதற்கான அடாவடித்தனங்களுமுண்டு. 
@

எழுத்தாளர் விழியனின் கதைகளை தினமும் வாசிக்க, உங்கள் பெயர் மற்றும் ஊர் உடன் ஒரு வாட்சப் தகவலை "90940 09092" எண்ணுக்கு அனுப்புங்கள். கதைகள் கொட்டும்.

ஐயா வெற்றிச் செழியன் அவர்ளுடைய கதையாடல் தொகுப்பில் இதுவரை இருபத்தியாறு கதைகள் வந்துவிட்டது, அதற்காக சொடுக்குங்கள் https://www.youtube.com/playlist?list=PLh6l104YXvxLkFyFG3NECtykhyqX99DgU

கதைகள் ஒலிக்கட்டும்

சனி, 9 மே, 2020

நினைவுகளின் சுவட்டில்

அங்கங்கே வெங்கட் சாமிநாதன் அவர்களின் சில கட்டுரைகளையும், கலைவெளிப் பயணங்கள் எனும் கட்டுரைத் தொகுப்பை மட்டுமே வாசித்திருந்தாலும், அதிலிருந்த கருது பொருள் மற்றும் மாற்றுச் சிந்தனை  வியப்பிலாழ்த்தியது உண்மை. 

இந்த தன் வரலாற்று நூலை வாசிக்க இருமுறை கையிலெடுத்து ஒருவரி கூட வாசிக்காமல் அலமாரியில் வைத்துவிட்டு, சென்ற வாரம் மீண்டும் எடுத்தேன் சிற்பி தனபால் அவர்களின் தன்வரலாறு வாசிப்பிற்கு பிறகு, அதற்கும் இதற்கும் கலை சார்பு இருக்குமென்ற கருதுதலே இப்போது வாசிக்கத் தொடங்கியதன் காரணமென எண்ணத் தோன்றுகிறது.

முன்னும் பின்னுமாக காட்சி சித்தரிப்புகளைக் கொண்ட அவரின் வாழ்வு நாவலுக்குரிய தன்மையில் இருந்ததாகப்பட்டது, அதனாலோ என்னவோ தொடர்ந்து வாசிக்க அதன் போக்கில் உள்ளிழுத்துக் கொண்டது. சுதந்திரத்துக்கு முன் மற்றும் பின்னான காலகட்டத்தின் முக்கிய நிகழ்வுகளோடு ஊடோடி வாழ்ந்த இவ்வாளுமையின் ஓட்டம் சுவாரசியமும் வலியும் மிக்கதாகவுள்ளது. ஒரு காலகட்டத்தின் பயணங்கள் எத்தகையதாக இருந்தது என்பதை வாசிக்கையில் அக்காலத்திற்கான ஆவணமாகவும் இப்படைப்பை கொண்டாட முடியும்.

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

இது யாருடைய வகுப்பறை - வாசிப்பு


எப்பவுமே புதினம் வாசிக்கயிலதான் நினைவுகளின் பக்கம் ஓடியோடி மனம் துள்ளிக் குதிக்கும், ஆனால் அதற்கு நேர்மாறாக இது யாருடைய வகுப்பறை?” என்ற தலைப்புடைய கல்வி சார்ந்த இந்நூலின் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு நினைவுகளை முன்காட்டி வியக்க வைக்கிறது. எவருக்கும் மகிழ்வான இக்கட்டான நிகழ்வுகளை உள்ளடக்கிய காலமாக அவர்களுடைய பள்ளி மற்றும் கல்லூரிப் பருவம் இருக்கும். அந்த சூழ்நிலையில் என்னோடிருந்த முகங்கள், ஆசிரியராகட்டும் அல்லது உடன் படித்த நண்பர்களாகட்டும் அவர்களோடு மானசீகமாக உரையாடியபடியே வாசித்துக் கொண்டிருந்தேன்.




நமது இன்றைய கல்விச் சூழலை புரிந்துகொள்ள அதன் தோற்றம் முதல் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு கல்விக் குழுவின் செயல்பாடுகளையும் உள்ளடக்கி, பல்வேறு கல்வியலாளர்கள் முன்வைத்த கருத்தியல்கள், ஆசிரிய மாணவ உறவுகளின் இன்றைய தேவையென சிறப்பான குழந்தை/மாணவ மைய கல்விக்கான தீர்வை நோக்கி பயணிக்கிறது நூல். மிகப்பெரிய உரையாடலுக்கான களம் கல்வி என்பதை உள்வங்கிக் கொள்ள உதவும் நூல்.


நுலாசிரியர்: ஆயிசா இரா.நடராசன்




சனி, 11 ஏப்ரல், 2020

கொரோனா காலம்


கடந்த வருடம் சனவரியில் வாங்கிய ஏ3 அளவிலான 50 பக்கங்களைக் கொண்ட ஒவிய ஏட்டினை போன வாரம்தான் முழுவதுமாக பயன்படுத்தி முடித்தேன். எவ்வளவு குறைவாக வரைந்திருக்கிறேன் என எண்ணிக் கொண்டிருகிறேன். சென்ற வாரம் வாட்சப்-ல் ஒவியம் வரைய நண்பர்களை அவர்களது படங்களை அனுப்பக் கோரியும் முதல் ஐந்து படங்கள் கரிக்கோல் ஓவியமாக்கப்படும் என்ற நிலைத்தகவல் ஒன்றை பதிவிட்டேன், அதன் படி முதல் ஐந்து படங்களை வரைந்து ஏட்டினை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டேன்.

மார்ச் மாதம் அவசரப் பயணமாக ஊருக்குச் செல்கையில் புதிதாக வாங்கிய ஏ4 அளவும் 50-பக்கங்களும் கொண்ட ஏட்டினை தொடர்வண்டியிலிருந்த சில முகங்களை கோடுகளால் கிறுக்கினேன். இதோ பாதி புத்தகத்தினை கிறுக்கித் தள்ளிவிட்டேன் இவை சொற்பமே ஆனாலும் என்னைப் பொறுத்தவரையில் சிறப்பானதும் கூட, ஊரடங்கு முடியுமுன் முடிவுக்கு வந்துவிடும் என்று நினைக்கிறேன், அப்படியாகிவிட்டால் நீர்வண்ண ஓவியம் வரையும் காகிதங்களையும் தூரிகைகளையும் கையிலெடுக்க வேண்டியதுதான், ஆனால் அது அத்தனை எளிதல்ல இரு சிறு பெண்களை வைத்துக்கொண்டு, வண்ணங்கள் அவர்களை ஈர்த்துவிடும்.

பேரமைதியில் வாசிக்க ஏதுவான சூழலை காலையில் ஏற்படுத்திக் கொண்டு குழந்தைகளின் விடியலுக்கு முன் சில பக்கங்களை வாசித்துவிட முடியும், அப்படிச் சில நூல்களை இந்த நாட்களில் வாசித்து முடித்திருக்கிறேன். கடந்த வருடம் என்ன என்ன வாசித்தேன் என எந்த பட்டியலும் வரிசைப் படுத்தவில்லை ஆனால் இந்த வருடம் அப்படியில்லாமல் கொஞ்சம் தீவிரமாகவே தலைப்புகளை “GOODREADS” உதவியோடு வரிசை படுத்தி வருகிறேன், எனக்கென்னவோ இந்த வருடம் புனைவுகளை நோக்கியே மனம் நகர்ந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது, என்னை சுய பரிசோதனை செய்ய ஏற்ற காலமாக இந்த வருடத்தை பயன்படுத்திக் கொள்ள விழைகிறேன். இத்தோடு அமேசான் கிண்டில் செயலி வழியாகவும் சில நூல்களை வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். முன்னெப்போதும் இல்லாத அளவு தமிழ் எழுத்தாளர்கள் தங்களது புத்தகங்களை இலவசமாக பதிவிறக்க அனுமதியளிக்கிறார்கள் அல்லது இப்பொழுதுதான் எனது கண்களுக்கு அகப்பட்டிருக்கிறது, எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் இதற்கு முழுமுதற் காரணம் என அவரது முகநூல் பதிவுகளால் அறிய முடிகிறது.

எழுத்தாளர் செல்வேந்திரன் எழுதியிருக்கும் வாசிப்பது எப்படி என்ற புத்தகத்தை நேற்று தொடங்கி இன்று நியாவிலைக் கடையில் பொருட்கள் வாங்க தனிமனித இடைவெளி விட்டு நின்று கொண்டிருக்கையில் இப்புத்தகத்தின் பெரும் பகுதியை கிண்டிலில் வாசித்து விட்டேன், மாலையில் குழந்தைகள் மச்சிக்கு சென்று விளையாடும் நேரத்தில் மீதமிருந்த பக்கங்களையும் முடித்துவிட்டேன், இன்னும் நிறைய புத்தகங்களை கிண்டில் நூலகத்தில் பதிவிறக்கியும் விட்டேன். இனி வாசிக்கும் பசியோடு இருப்பதைத் தவிர வேறென்ன.

வெள்ளி, 24 ஜனவரி, 2020

நட்சத்திரவாசிகள் - வாசிப்பனுபவம்

கார்த்திக்-ன் டொரினா, நட்சத்திரவாசிகள் இரண்டுமே இந்த ஆண்டு சென்னை புத்தகக்காட்சியில் வாங்கினேன். எனக்கென்னவோ நாவலை முதலில் வாசிக்கலாம் என்றே எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது, அப்படித்தான் பொங்கல் விடுமுறைக்கு கையோடு அழைத்துச்சென்றேன் நட்சத்திரவாசிகளை. விடுமுறையில் தொடர்ச்சியாக வாசிக்க இயலாததால் அதற்குப் பிறகான மூன்று நாட்களின் சில மணிநேரங்களை எடுத்துக்கொண்டு வாசித்து முடித்தேன்.

மிக இயல்பாக ராமசுப்பு அறிமுகமாகிறார், கற்பனைக்கு எல்லை உண்டா என்றெல்லாம் வியாக்கியானம் செய்ய விரும்பவில்லை, ஆள் புகவியலாத இடத்துக்குள் எப்படி அந்த "ஸ்விகி" வண்டிக்காரன் புகுந்து போயிருப்பான் என வாசிப்பில் ஒரு நிமிடம் அப்புகவியலாத இடத்துக்குள் சென்று மீண்டு, புனைவிலும் ஒரு நியாயம் வேண்டாமா என்றெண்ணிக் கடந்தால். தகவல் தொழில்நுட்பத் துறை சாராதவர்களை அதிகம் குழப்பாமல் அதன் அக புற உலகினை வெளிப்படுத்தக்கூடிய எழுத்து, அத்தோடு சில வார்த்தைகளுக்கான விளக்கங்களை கொடுத்திருப்பது புரியாமையை தவிர்க்க ஏதுவாக உள்ளது. பேப்பர் போடுதல் என்ற சொல்லைக் கண்டதும் கூடுதலாக சில தடவைகள் அதை வாசித்துப் பார்த்தேன், இந்த "போடு" எனும் சொல்லை தமிழன் வாயில் இத்தனை அழுத்தமாக பதித்தது எது என்ற கேள்வியை எனக்குள் அடிக்கடி கேட்டுக்கொள்வதுண்டு, இப்படி ஒரு சில சொற்கள் மட்டும் அன்றாடத்தில் தவிர்க்க இயலாமல் பிறவார்த்தையோடு ஒட்டாக பயன்படுத்துவது நமது சொல் வறட்சி என்றே கருத வேண்டியிருக்கிறது. "கோபாலும்" "சி"யும் என எழுதியிருக்கும் வார்த்தைகளுக்கு சிறு விளக்கம் கொடுத்திருக்கலாம், இந்த மென்பொருள் பற்றி அறியாதவர்களுக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு, கோபாலை மனிதர் என நினைத்து வாசித்துவிட்டேன் முதலில், பின் சிரித்து மீண்டேன்.

பொதுவாக அலுவலகங்களில் காவலாளிகளாக இருப்பவர்களின் உலகம் பெரும் வியப்புகளைக் கொண்டவை, அவர்களின் வேலை நேரம் மற்றும் பணிச் சூழல் அலுப்பையும் மனச் சிதைவையும் தரக்கூடியவையாகவே இருக்கும், அப்படியான ஓர் மனிதரிலிருந்து கதையை தொடங்கியதே இப்புதினத்திற்கு சிறப்பை அளிக்கிறது. அலுவலகத்திற்குள் நுழைந்ததும் முதலில் பார்வையில் விழுவது அவர்களின் கண்களே. இவர்களின் உலகுக்குள் அதிகம் பயணிக்காமல் ஒரு முக்கிய நிகழ்வோடும் அறிமுகத்தோடும் ராமசுப்புவின் கனத்த பொழுதை முடித்துக்கொண்டு மற்றவர்களின் உரையாடல்களுக்குள் நெருடலின்றி நம்மை அழைத்துப்போகிறது கதையின் பாங்கு.

ஆர்.கே மற்றும் அர்ச்சனா இடையிலான உரையாடல் நுனிப்புல் மேய்ச்சலாக அவர்களின் மேல்நிலையிலும் கீழ்நிலையிலும் பணி செய்பவர்களை விமர்சனம் செய்து கொண்டு, அவளின் டிவோர்சியா என்ற ஒற்றை வார்த்தை அவர்களது பேச்சினை மடை மாற்றி உணர்வுப்பூர்வமானதாக்கி, குடும்ப வாழ்வின் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும் காரணிகளை மீரா நித்திலனின் உறவு வழியே நமக்குள் கடத்திவிடுகிறார் கதைசொல்லி கார்த்திக். நாவல் தொடர்கதை போல இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதனால் அத்தியாயத்திற்கு அத்தியாயம் காட்சியும் மனிதர்களும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள், ஆனாலும் இவற்றிற்கிடையேயுள்ள தொடர்பில் எவ்வித குழப்பமுமின்றி எல்லா தரப்பு மனிதர்களையும் கதைக்குள் இழுத்துவர விரும்புவது போல புரிந்துகொண்டு தொடர்ந்து வாசிக்கலாம். அப்படித்தான் பள்ளி முடித்த கையோடு உதவித்தொகையோடும் பட்ட மேற்படிப்போடும் வேலையில் சேரும் விமலும் ராக்கேஷும் கதைக்குள் வருகிறார்கள், இவர்கள் புனைவின் போக்கில் என்னவாக மாறி நிற்பார்கள் என எண்ணிக் கனக்கிறது மனம். ஆனால் இவர்கள் கதையில் வெறும் குறியீடுகளாக மாறி நிற்பதாகப் படுகிறது. நாவலின் போக்கில் இவர்களின் தோற்றம் கல்வி மற்றும் மொழி சார்ந்த சமகாலத்தின் கோட்பாடுகளை  கேள்விக்குட்படுத்தி ஒதுங்கி நிற்கிறது.

நவீனம் அல்லது தொழில்நுட்பம் ஏற்படுத்தியிருக்கும் அவசர வாழ்க்கை முறைக்கு மிக முக்கியமான பங்களிப்பது செல்பேசியும் அதன் அழைப்புகளும், இவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கம் மனச்சிதைவை உண்டாக்கும் வல்லமை கொண்டவை, இச்சிக்கலை மிக சாதுர்யமாக தன் வாக்கியத்தில் உருமாற்றியிருப்பது வாசிப்பை உயிர்ப்புடன் நகர்த்துகிறது. "மனது வகுப்பில் தங்கவில்லை. வராத நேரத்தில் வந்த அழைப்பு. சீட்டுக்கட்டு விளையாட்டில் தேர்ந்தவனின் கைகளிலிருந்து பறக்கும் சீட்டுக்களைப் போல அவன் மனம் அந்தச் சிறுகணத்தில் வாழ்வில் சாத்தியமாகக்கூடிய அத்தனை துயரங்களையும் காட்சி காட்சியாக உருவி வீசியது" என்பதில் இக்காலகட்டத்தின் அதிர்வுக்குள்ளாக்கும் உளச்சிக்கலை காட்சிப் படுத்தியிருப்பது வெகு இயல்பாக நம்மை கதைக்குள் இழுத்துப் போகிறது.

இப்பணி சார்ந்த உட்கட்டமைப்புகளை, அதன் ஒவ்வொரு நிலையிலும் செயல்புரியக்கூடிய மனிதர்களைப் பற்றிய அவதானிப்பும் பண்புகளும் மிக இயல்பாக கூறப்பட்டிருப்பது அவர்களின் வாழ்வை புரிந்து கொள்ள போதுமானதாக இருக்கிறது. நேர மேலாண்மையில் இத்தொழிலில் பணி செய்வோரில் எவ்வளவு பேர் பின் தங்குகிறார்கள் என்பதை குறிப்பிட்டுச் சொல்லியிருப்பது மிகவும் கவனத்திற்குரியது, குறிப்பாக வேலையை ஒதுக்கிவிட்டு விளையாடுவதும், சமூக வலைதளங்களில்  பொழுதை கழிப்பதும் அல்லது வேலைகளுக்கிடையிலேயே (அப்படியும் ஆட்களுண்டு, ஒருவேளை காதில் பாடலோ வசனமோ ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டுமென மரபின் வழி, காடு கழனியில் வேலை செய்த நாட்டுப்புற மக்களின் பாடலிலும் பேச்சிலுமிருந்து நமக்குள் கடத்தப்பட்டிருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது) செல்பேசியில் படம் பார்ப்பதும், பாடல் கேட்பதும்,  இயல்பாக மாறியிருக்கிறது, ஒரு நாளில் எத்தனை முறை நமது விரல்கள் செல்பேசியை தடவிக் கொடுக்கின்றன என எண்ணிப் பார்த்தால் இது விளங்க வாய்ப்பிருக்கிறது. இதுவொரு பொது நோயாகவும் மாறியிருப்பது வருந்தத்தக்கது.

ஒருவன் எவ்வளவு திறமையுடன் வேலை செய்தாலும் அதை பிறர் கண்பட குறிப்பாக மேலாளர்கள் கண்ணுக்கு காட்சிக்குட்படுத்த வேண்டியிருப்பதன் மேனாமினிக்கித்தனம், பணியில் போலிகளை உருவாக்கும் வல்லமை கொண்டதாகப் படுகிறது. நிறுவனத் தலைமையிடம் தனது பணி முன்னேற்றத்தையும், தன் மதிப்பிடுதலிலும் அதன் வழி வழங்கப்படும் நிதி அதிகரிப்பையும் பற்றி எவ்வளவு கேள்விகளை தலைமையின் முன் வைத்தாலும் அதற்கு உரியது போன்ற விளக்கத்தை மட்டும் பதிலாக அவர்கள் எடுத்துரைப்பதை அறிந்த நித்திலனுக்கு இருக்கும் மனநிலையை பெரும்பாலானோரிடத்தில் உருவாக்கி வைத்திருப்பதில் பெருநிறுவனங்கள் வெற்றியடைந்திருக்கின்றன என்றே கருத வேண்டியிருக்கிறது. பார்கவி போன்றோர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் தொடர்ந்து நிராகரிக்கப்படும் பொழுது அவளிடமிருந்து வெளிப்படும் ஆத்திரம் ஒவ்வொருவரிடத்திலும் ஏதேனும் ஒரு காரணத்திற்காக அழுந்திக் கிடக்கும், சிலர் சாஜூவைப் போல கணக்கிடல்கள் மூலம் ஆத்திரங்களை ஆரப்போடுவதுண்டு. அதே பொழுதில் அந்நிறுவனங்கள் பணியாளர்களுக்காக சில திட்டமிடல்களைச் செய்கிறார்கள், அதை சரிவர பயன்படுத்தி குறிப்பிட்ட வெற்றியை அடையவும் வாய்ப்பளிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு ஆங்கில மொழித்திறன் வகுப்புகள், இதர தொழில்நுட்பம் சார்ந்த தகுதி மேம்பாட்டுக்குரிய பயிற்சிகள்.

சத்தியமூர்த்தியின் பழைய அலுவலகத்திலிருந்த பிள்ளையார் தற்போது சாய்பாபாவாக மாறியிருப்பதை பகடி செய்திருப்பது போன்ற சில காட்சிகளை நுட்பமாக அணுகவேண்டியிருக்கிறது. அதற்கிடையே "அவளால் வேலையை விட முடியவில்லை. குழந்தையை டே-கேரில் விட முடிந்தது" என்பது சினிமாத்தனமான வாசகமாக இருந்தாலும் அவ்வளவு எளிதாக கடந்து விட இயலாத இக்காலத்தின் மாற்றம். டீக்கடை பையனிடம் சிட்டையில் தான் கடனாக வாங்கிய பணத்தினை சாஜூ குறித்துக்கொள்ளச் சொல்லும் பொழுதில் "ஐ.டி வேலைய விட்டுட்டு பிரியாணி விக்கிறோம்" எனச் சொல்லி அலுவலகத்திற்கு முன் பிரியாணி விற்ற இருவர் நினைவில் வந்தார்கள். மணியின் கடை அரசாங்கத்தால் இடித்து நொறுக்கப்படுகிறது, காலம் யாரையும் ஓரிடத்தில் நிரந்தரமாக்கி அழகு பார்க்க எண்ணுவதில்லை மாறாக அது தன் நீண்ட தும்பிக்கையால் எல்லோரையும் அசைத்துப் பார்க்கிறது.

இத்துறைசார் மக்களுக்கு "ஆன்சைட்" (வெளிநாடு) செல்லும் கனவு தவிர்க்க இயலாமல் ஒட்டிக்கொள்வது, அதன் மாயத்தோற்றத்தை, மாற்றமற்ற ஒற்றைச் சுழல் தன்மையினை விவேக்கின் உரையாடல்கள் வழி மிக யதார்த்தமாக புனைந்திருக்கிறார் கார்த்திக். எல்லோரும் ஏதோவொரு நிர்பந்தம் காரணமாகவே இத்துறையில் நீடித்திருப்பதாகத் தோற்றமளிப்பது போல ஓர் பிம்பம், அது உண்மைதானா? அதேநேரத்தில் அர்ப்பணிப்போடு வேலை செய்பவர்களை அரவணைக்கத் தவறுகிறதோ பெருநிறுவனங்களின் வேலைப் பண்பாடு, விவாதத்திற்குரியதாக தெரிகிறது. எத்தனை பயிற்சிகள் எடுத்தாலும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மேல், இனி நீ தேவையில்லை என உமிழ்ந்துவிடும் சாத்தியக்கூறுகள் இங்கே அதிகம். இந்த பரமபத விளையாட்டில் சிக்காத ஆளேயில்லை என்பதை  தெளிவாக உணர்த்தியிருக்கிறார் நாவலாசிரியர். பிச்சைமணிக்கு இவர்களின் மீதிருக்கும் பார்வை அல்லது கருத்து எவ்வளவு உண்மையும் கரிசனமும் கொண்டதாக உள்ளது.

நாவலின் வடிவத்தை மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறார் கார்த்திக், உதாரணத்திற்கு,  முப்பத்தியாறாவது அத்தியாயத்தில் அலுவலகத்தை சுத்தம் செய்யும் பிச்சைமணியோடு இரண்டாவது அத்தியாயத்தை முடிச்சிட்டிருப்பது. கடைசி அத்தியாயம் வாசிக்கும் பொழுதில் அது நம்மை முதல் அத்தியாயத்திற்கு அழைத்துச் செல்வதில் இருக்கும் சுழற்சி.

வாழ்வின் நிலையற்ற தன்மையின் காட்சிப் பொருளாகி நிற்கும் அத்தனை மனிதர்களும், இறுதியில் கனத்த அழுத்தத்தை மனிதில் இருத்துகிறார்கள்.




ஞாயிறு, 20 ஜனவரி, 2019

ஓவியமெனும் பெருங்கனவு


கடந்த சில வருடமாக ஓவியங்கள் வரைந்து பழகுவதில் நாட்டம் அதிகரித்திருக்கிறது, இதை ஓர் சுய இச்சை எனக் கூறலாமா எனத் தெரியவில்லை. எனக்கென்னவோ அப்படித்தான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. தொடர்ச்சியற்ற பயிற்சி முறையில் தேடித் தேடி நுணுக்கங்களை கண்டடைந்து கொண்டிருந்தேன். இச்சோதனை முறையின் இடையிடையே இச்செயலை ஏன் செய்கிறேன் எங்கிருந்து இது தொடங்கியது என எண்ணும் பொழுதில் நினைவுகளில் ஆழ்ந்து போவதுண்டு. அப்படியான சூழலில் எனக்குள் ஓர் பெருங்கனவு என்னை அறியாமல் தொடர்ந்து கொண்டிருப்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. இக்கனவை செம்மை செய்யாமல் வெகு சுலபமாக அலட்சியம் செய்திருப்பதை எண்ணி மனம் வெதும்புகிறது. நினைவில் உலாவும் ஒவ்வொரு நிகழ்வையும் எழுத்தாக மாற்றிவிட எண்ணமிருந்தாலும் அதற்கான மொழியை அடைவதற்கான முயற்சியும் வேண்டியுள்ளது.

தற்போது பயிற்சிக்கான புத்தகங்களாக “ஓவியர் புகழேந்தி” எழுதியிருக்கும் “ஓவியம் கூறுகளும் கொள்கைகளும்” – தோழமை பதிப்பகம், “ஓவிய நுண்கலை- ஓவியக்கலை மாணவர்களுக்கான கையேடு- சீ.வி.வடிவேலு- சந்தியா பதிப்பகம் மற்றும் அஜந்தா ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ்-ன் பயிற்சிக் கையேடு, இந்த ஒவியப் பள்ளியும் இப்பெருங்கனவின் அங்கம்.

இப்படங்களுக்கு முன்னதாக வரைந்தவை வெகு சொற்பமேயானலும் அவை தற்போது இல்லை.
ஓவியம் 1- பெரும் இடைவெளிக்குப் பின் துவக்கத்தை உருவாக்கிய படம். ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் படத்தை பயிற்சிக்காக செய்து பார்த்தது.
ஓவியம் 2 - உருவப்பட முயற்சி - புதுமைப்பித்தன்
ஓவியம் 3 - பெரும் தயக்கத்திலிருந்து விடுபட முயற்சித்தது. நண்பன் விஷ்ணு

ஓவியம் 4 - மையினால் ஆன கோடுகள் - தாய்மாமன் தமிழழகன்.


ஒருசில புத்தகங்கள் நாம் எவ்வளவு தேடினாலும் கிடைக்காமல் ஆனால் தேவையான நேரத்தில் கையில் சிக்கிக் கொண்டு நம்மை நமக்கான பாதையில் அழைத்துச் செல்லும். உருவங்களை வரைவது, நிலக் காட்சிகளை வரைவது என சில பக்கங்களை புரட்டியும், காணொளிகளை கண்டும் அறிந்திருக்கிறேன் ஆனால் அவையெதுவும் சொல்லித்தராததை காட்டியிராத பாதையை மேற்ச்சொன்ன புத்தகங்கள் கண்டுகொள்ளவும் அறிந்து கொள்ளவும் உதவிக் கொண்டிருக்கின்றன. அறியாத கோடுகளை வண்ணங்களை புகுத்தத் தொடங்கிவிட்டன, அவை இழுத்துச் செல்லும் பாதையில் பயணித்துவிட்டால் போதுமென எண்ணுகிறேன்.


செவ்வாய், 23 ஜனவரி, 2018

16 - வாசிப்பு

மிகக் கச்சிதமாகத் தொடங்கும் உரையாடல் ஒரு வேகத்துக்குள் நம்மை செலுத்திவிட்டு பின் காட்சியை உணர்த்துகின்ற கதையமைப்பு கடைசியில் ஒற்றை வரியிலோ வார்த்தையிலோ வாசிப்பவரை வெளியேற விடாமல் அக்கதைக்குள்ளே உழன்று வர வைக்கும் முடிவு, "ப்ச்" "பொம்மை" "சித்திரங்கள் ஆகிய கதைகளில் வாசகருக்கான வெளி இறுதி வார்த்தைகளில் தான் நீளத் தொடங்குகிறது. கதைச் சித்தரிப்பு இன்னும் வலுப்பட வேண்டும், ரகசியம் இருப்பதாய் என்ற இரண்டாம் தொகுப்புக் கதைகளை விட ரமேஷ் ரக்சனின் இம்முதல் தொகுப்பு சிறப்பு.

ஞாயிறு, 7 ஜனவரி, 2018

செம்மாரி - வாசிப்பு

ஆடுபுலி ஆட்டம் தான் கதையின் மையம் என்பதை அறிவித்தே தொடக்கம் கொள்கிறது இப்புதினம். முதல் பகுதி பத்தி எழுத்து நாவல் என வாசிக்கும் மனதில் அயர்ச்சியையும் தொடந்து வாசிக்கும் ஆர்வத்திற்கு தடை போடுவதாகவும் உள்ளது, ஆனால் தேசிகர் கதை சொல்லத் தொடங்கியதும் எழுத்து மாற்றம் கொள்வது கதைக்கான தொடர்ச்சி. பழந்தமிழ் நாடு பற்றிய அறிமுகம் நான்காம் தலைமுறை ஆட்சியில் தொடரும் கலைச் சிறப்புகள் என சலிக்காத சொல்லாடல்.

ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் கவனப்படுத்துவதில் அடுத்தடுத்த தலைப்புகளை பயன்படுத்தியிருக்கிறார் படைப்பாளி. சிற்பக்கலைக்காக வெட்டப்படும் மலைகள் அதற்காக உழைக்கும் தொழிலாளிகள் என சொல்லப்படும் விவரணைகளே அவர்களின் உழைப்பையையும் இன்று நாம் காணும் ஒரு சிற்பத்தின் பின்னாலிருக்கும் அடித்தட்டு மக்களின் பங்களிப்பையும் விவரணை செய்கிறது, வென்னீரையும் மரக்குச்சிகளையும் கொண்டு பாறையை பிளப்பதும் நிழலை வைத்து உயரத்தை அளப்பதும் சிற்பிகளால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, கற்கடிகாரம், கல்லில் இசைக்கருவி, நுண் கற்சிற்பங்கள் என பல ஆச்சரியங்கள். இவையெல்லாம்  அறிந்துகொள்ளும் புள்ளியாகக் கருதி தொடர்ந்து வாசிக்கலாம்.

கதையின் மையமான ஆட்டம் செம்மாரியின் காதல் களிப்புகளுக்கு பிறகு வேகம் எடுத்து பக்கங்களை புரள வைக்கிறது. விளையாட்டுக்குப் பின்னான சதி வலை கதையை வேறொரு திசையில் நகர்த்திச் செல்கிறது. அட!! ஆமால்ல எனும் ஆச்சரியமும் இருக்கிறது இடையிடையில். ஒட்டமும் நடையுமான வாழ்க்கையில் புதிய குணங்களை வெளிப்படுத்துகின்ற நாம் ஏற்கனவே அறிந்த கதாப்பாத்திரத்திற்கு அதற்கேற்ப சிறு அறிமுகத்தை போகிற போக்கில் சொல்லிச் செல்வது சிறப்பு.

செம்மாரியின் விளையாட்டு உத்தியை வாழ்வில் நேரும் இன்னலான தருணத்தில் தன்னையும் சார்ந்தோரையும் காத்துக்கொள்ள பயன்படுத்தி வாசிப்போருக்கு சாகச நிகழ்வின் சாத்தியங்களை அனுபவிக்கச் செய்திருப்பது படைப்பாளியின் திறன், அவ்வப்போது செம்மாரி என்ன சிந்திக்கிறான் என்பதை ஊகிக்க வழி கிடைக்கும் பொழுதில் அதை செய்து முடித்துவிடுகிறான்.

ஆடுபுலியாட்ட கட்டங்களை சித்தரிக்கும் காட்சியிலும் நகலன் அதை வரையும் காட்சியிலும் எங்கள் ஊரின் மைதானத்தில் இருந்த வேப்பமரத்தடி மண்டபம் (சோம்பேறி மண்டபம் என்றுதான் அழைப்பார்கள்) தான் நினைவில் வந்துவந்து போனது, அங்கு இவ்வாட்டம் நிகழ்வதுண்டு அதோடு நீச்சல்காரன் (http://tech.neechalkaran.com/2012/05/adu-puli.html?m=1) இணையதளத்திலுள்ள விளையாட்டை விளையாடிப் பார்த்ததும் நினைவில் ஆடியது.
இனி ஆடும் ஆடுபுலியாட்டமும் கண்டால் ஏன் புலியைக்கண்டாலும் செம்மாரியின் நினைவுதான் வரும். 

எழுத்துப்பிழைகளை தவிர்த்தும் நிலப்பரப்பு பற்றிய காட்சி சித்தரிப்பிலும் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம், வாழ்த்துகள்.

திங்கள், 11 டிசம்பர், 2017

தேரிக்காட்டு இலக்கியங்கள் - வாசிப்பு

இன வரலாறு அல்லது இனவரைவியல் எனத் தேடும் பொழுது அது எவ்வளவோ தொலைவுகள் இடம்பெயர்ந்திருக்கின்றன என்பதை வியப்பிற்கு பின்னே தொடர்ந்து பயணம் செய்ய இயலும். மக்கள் தான் வசித்த இடத்திலிருந்து காணா தொலைவு கடந்து வந்தாலும் அவர்கள் மறக்க மறுப்பது தன் மூத்தோர் பெயரையும் குலதெய்வ வழிபாட்டையும், அது கொடுக்கும் பிணப்பை நம்பிக்கையை எப்படி விட்டுவிட்டு நகர இயலும். தனிமனிதனுக்கு இவை தேவையற்றதாகக் கூடும் ஆனால் இனம் என்னும் குழுவிற்கு அதன் தேவை இருக்கிறது.

தேரிக்காட்டை பற்றி வாசிக்க எத்தனை வரிகள் கிடைத்தாலும் அது அமுதமாக உள் வாங்கப்படுகிறது. கீழப்பாவூரில் வசிக்கும் நாடார் சமூகத்து மக்களின் குலதெய்வங்கள் வசிக்குமிடம் தேரிக்குடியிருப்பு அது வரலாற்றின் தொற்று என்பதே முதற்காரணம். "தேரிக்காட்டு இலக்கியங்கள்" எனும் ஆய்வு நூலில் மக்கள் இடப்பெயர்ச்சி பற்றிய சிறு குறிப்பே முதல் கட்டுரையில் எஞ்சியுள்ளது ஆனால் இதில் அதிகமாக எதிர்பார்த்தது இதை பற்றிய முழு தகவலை அல்லது முடிந்தளவிலான விபரங்களை, அது இல்லை.

இரண்டாவது கட்டுரையில் திறனாய்வு செய்யப்பட்டிருக்கும் "பனையண்ணன்" நாவல் வாசிக்கப்படவேண்டிய நூல். கள்ளர்வெட்டு திருவிழாவின் வாய்மொழி கதையின் வழியாக நிகழ்வுகளை புரிந்துணரும் வரிகள் மிக முக்கியமானவை. வலங்கைமாலை புராணத்தினை பனையண்ணன் நாவல் வழியாக தொழில் மற்றும் சமூகங்களின் தோற்றங்களை அறிவதை விடுத்து விவிலியத்தை நாடிச் சென்றது ஏன் என கேள்வி எழுப்பப்படுகிறது. கால்டுவெல்லின் வரலாற்றை எழுதியிருப்பவர்கள் பெரிதாக ஆய்வு செய்ததாக தெரியவில்லை, மிக முக்கியமாக பஞ்சத்தில் உதவினார்கள் கிறுத்துவ பாதிரியார்கள் என்றால் பஞ்சம் உருவானதனை பின்னணியோடு கூறக் கடமை உள்ளதாக எண்ணவேண்டி உள்ளது. ஆனால் சிலச்சில குறிப்புகளை மட்டுமே அடுக்கிச் செல்கிறார் கட்டுரையாளர். இதன் தொடர்ச்சியாக பஞ்சத்தின் வரலாற்றை அறியவேண்டியது அவசியம்.

ஜி.யு.போப் பற்றிய கட்டுரையும் பல தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது. தாமரை செந்தூர்பாண்டி மற்றும் நெல்லை கவிநேசன் எனும் இருவரை தேரிக்காட்டு படைப்பாளிகளாக முன்னிருத்தி அவர்களுடைய படைப்புகளை விமர்சன கட்டுரை எழுதியிருக்கிறார்கள். இன்னும் எழுதியிருக்கலாம் விமர்சித்திருக்கலாம்.

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

கனவுராட்டினம் - படைப்பாளிக்கொரு கடிதம்

வணக்கம் மாதவன்,

எனக்கு கனவுகளை பிடிக்கும் அதைக்கண்ட அன்றைய பொழுது எப்படி குதூகலமாக இருக்குமோ அப்படித்தான் உணர்ந்தேன் கனவுராட்டினம் வாசிக்கும் போதும். புதினம் தொடங்கியதும் எடுக்கும் வேகம் அது முடியும் வரை குறையவேயில்லாமல் ஊடாடுகிறது, வழுக்கிக்கொண்டோடுகிறது.
ஒரு புதினம் வாசிப்பவனின் உள்ளத்தையும் எண்ணத்தையும் என்ன செய்யவேண்டுமோ அதைத் தாராளமாக செய்கிறது.

இறுதியில் சுந்தர் என்பவன் அவனே அல்ல வேறொருவன் என நம்பவைக்கப்படும் பொழுதில் வாசிப்பின் இடையே புனைவை அசைபோட்டபோது தோன்றிய இரண்டு வரிகளை மீண்டும் ஒருமுறை உச்சரித்தேன். 

"இந்த இருக்கையில் நான் இல்லை எனது கனவு இருக்கிறது அதேயிருக்கையில் எதிரில் அவர் எனும் அவரது கனவு இங்கு இருக்கை என்பது யாருடைய கனவு."

வாழ்த்துகள் மாதவன் தொடர்ந்து எழுதுங்கள்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியில் "2o11" என அச்சாகியிருக்கிறது அது "2011" ஆக இருக்குமோ என்ற கற்பனையில் இரண்டுக்கும் அனுப்பியிருக்கிறேன் அது உங்களைச்சேருமா இல்லை நீங்களே ஒரு கற்பனை உருவமா என எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

அன்புடன்..... 
ஜெ.பாண்டியன்
PANDIANINPAKKANGAL.BLOGSPOT.COM

இதை பதிவிடும் பொழுதில் "2011" என முடியும் மின்னஞ்சல் தவறு என பதில் வந்துவிட்டது.

வியாழன், 27 ஜூலை, 2017

சித்திரங்களில் விசித்திரங்கள் - வாசிப்பு

வெர்மரின் ஓவியங்கள் பற்றிய கட்டுரையை வாசிக்கும்முன் "Girl with s pearl earring" திரைப்படம் பார்த்துவிட்டு சிறு குறிப்பு ஒன்றை எழுதியிருந்தேன்.
http://pandianinpakkangal.blogspot.com/2017/07/Girl-With-A-Pearl-Earring.html?m=1

பிக்காசோ, லியோனார்டோ, பால் காகின், செசான், ஃப்ரைடா, வான்கா, ரெம்ராண்ட், டாலி என ஓவியர்களை அறிமுகம் செய்து அவர்களின் ஓவியங்கள் வழி பிறந்த திரைச்சித்திரங்களை முன்வைத்து எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள் ஒளியினையும் ஓவியங்களை பற்றியுமான பரிதல்களுக்கு உதவுகிறது.

இந்திய ஓவியர்களின் வாழ்வில் எம்.எஃப் உசேனின் வாழ்கை புத்தகமாக வந்திருக்கிறது. அதுபோல் இன்னும் எத்தனையெத்தனை ஓவியர்களோ அவர்களை அறியவும் சமகாலத்தைய படைப்புகளையும் அறிந்துகொள்ள மறைவான உந்துதலை அளிக்கிறது புத்தகம்.

சனி, 3 ஜூன், 2017

பாகீரதியின் மதியம் - வாசிப்பு

கடந்த சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கி வந்ததிலிருந்து தினமும் புத்தக அலமாரியை திறக்கும் பொழுதெல்லாம் இந்த புத்தகத்தை எப்படி வாசிக்கப்போகிறோம் என்ற பேரச்சம் மனதில் உருண்டோடும் அதற்கு அதன் தடித்த உருவமே காரணம். அதிலிருந்து சில வாரங்களுக்குப்பின் ஒரு பின்மதியத்தின் புழுக்கம் அடங்காத வேளையில் (முந்தைய இரவுதான் யோசனை எழுந்தது இப்புத்தகத்தை முதல் பக்கத்திலிருந்து வாசிக்கத் துவங்கக்கூடாதென்று) புரட்டியபோது சிக்கியவொரு பக்கத்திலிருந்து தொடங்கினேன், எதிர்பாராதவிதமாக பாகீரதி வாசுதேவனின் நண்பனிடம் ஜெமினியின் மூன்று ஓவியங்களையும் அதன் வண்ணங்களையும் பற்றிய விவரணைகளை அடுக்கும் காட்சி வாசிக்கக்கிடைத்தது.

வெகுநாட்களுக்குப் பிறகே அதனை முதலிலிருந்தே வாசித்துவிடுவது என்ற முடிவுக்கு வந்து தொடங்கி இன்று முடிக்கும்வரை வேறொரு புத்தகத்தை (பத்திரிக்கைகள் தவிர்த்து) கையிலெடுக்கவில்லை. காரணம் கனவு, அதற்குள் மிதக்கும் காட்சிகள். என்மகளும் இப்பொழுது அத்தையென்ற சொல்லை அழுத்தமாக உச்சரிக்கத்தொடங்கியிருப்பதனால் அட்டைப்பட ஓவியப்பெண் அவளுக்கு அத்தையாகிவிட்டாள் (அப்பழுக்கற்ற அம்முகம் வாஞ்சையோடு வாசிக்க அழைப்பதுபோன்றதொரு தொனி), படத்தை தொடுவதும் அப்பாவை பார்ப்பதும் மெல்லச்சிரித்து "அத்த" என்பதும்.

புதினத்துக்குள் வரலாறும் சமூகநீதிக்கான விவாதங்களும் வாசிப்பிற்கான தூண்டுதலும் ஓவியத்திற்கான பரந்த வெளியும் மிதந்து கொண்டிருக்கிறது.

துரையின் அறைக்குள்ளிருக்கும் ஓவியநூல்களை வாசிக்க ஜெமினிக்கு அனுமதி கிடைத்தபோது ஏற்பட்ட கிளுகிளுப்பு , ஓவியம் பற்றி பாகீரதி அவளின் மனவோட்டத்திற்கேற்ப வெவ்வேறு தருணங்களில் விவரணைகள் செய்வதெல்லாம் கிளர்த்திவிட்டிருக்கும் எண்ணவோட்டங்களை எப்படி விவரிப்பதெனத் தெரியவில்லை.

பாகீரதியை கதைசொல்லி எங்கே செல்ல அனுமதித்திருக்கிறாரென்று தெரியவில்லை ஆனால் ஜெமினியின் சித்திரங்கள் மதுரையில் ஒட்டடை விழுந்த பூட்டிய அவளின் வீட்டினுள்தான் இருக்கிறது.

சனி, 25 பிப்ரவரி, 2017

வன்முறையின் முகம்

2014-ல் தனி பிம்பமாக தன்னை முன்னிருத்தி மத்தியில் ஆட்சியை பிடித்து வாயால் வாள் சுழற்றும் மோடி எனும் பிம்பத்தின் விளைவால் ஏற்பட்ட சீரழிவினை வெளிப்படுத்தும் நூல் "சட்டப்படி நடந்த வன்முறைகள்".
2002 குஜராத்தில் இஸ்லாமியர்கள் படுகொலை சம்பவத்தின் சாட்சியாக உள்ளது இப்புத்தகம்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தினால் மக்களின் எதிர்ப்புக்குள்ளாகும் முதலமைச்சர் மோடி, அடுத்த மூன்று நாட்களில் தன்னை இம்மக்கள் வணங்குவார்கள் எனக்கூறியதோடு நிற்காமல் அடுத்த மூன்று நாளில் இஸ்லாமியர்களை அழித்தொழிக்கும் கலவரத்தினை தூண்டியிருக்கிறார், அதற்காக ரயிலில் எரிந்துபோன உடல்களை ஆங்காங்கே காட்சிக்கு வைத்து உணர்வுகளை வேட்டையாடியிருக்கிறார். இன்னும் பல உரையாடல்கள் சம்பவங்கள் வழக்குகளை பற்றிய தரவுகளை முன்வைக்கின்றது கலவர காலத்தில் காவல்துறை ஆட்சியராக இருந்த ஆர்.பி.ஸ்ரீகுமார் என்பவரால் எழுதப்பட்ட இந்நூல்.
நிலுவையிலிருக்கும் இரண்டாயிரம் வழக்குகளில் இரண்டில் தீர்ப்பு வந்தாலே மோடி அவ்வளவுதான் என நிறைவடையும் புத்தகம் எழுதப்பட்டது 2010-ல், அடுத்த நான்காண்டிலிருந்து தற்போது வரை பிரதமராக நமக்கு காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். என்ன மாதிரியான நீதித்துறையை கொண்டது நமது நாடு. சமீபத்தில் தீர்ப்பு வெளியான சொத்துக்குவிப்பு வழக்கிலும் நீதித்துறை நடந்துகொண்ட விதம் நம்பிக்கையை குலைப்பதாகவே உள்ளது. மீண்டும், என்ன மாதிரியான நீதித்துறையை கொண்டது நமது நாடு??