திங்கள், 18 மே, 2020

ஒளியிலே தெரிவது - வாசிப்பனுபவம்

எந்த புத்தகக்காட்சியில் வாங்கியதென்று நினைவில் இல்லை, ஆனால் முதல் கதையான "சிநேகிதிகள்" கதையினை எப்பொழுதோ வாசித்தது போல உணர்வு, ஒருவேளை படித்துறையை காட்சிப் படுத்தும் வேறேதேனும் வண்ணதாசன் எழுதுயிருந்தாலும் இருக்கலாம். "கழுத்துக்கு மேல் முகம் கல்சிலையாகி விட்டதுபோலப் போய்க்கொண்டு இருக்கும்" சேதுவின் இடத்தில் என் தலையை பொருத்திப்பார்த்துக் கொண்டேன். சிநேகிதிகளால் நிரம்பிய கதை, சில நாட்கள் முன் இதுவரை சிரிக்காத முகத்தைப் பார்த்துச் சிரித்ததையும் சிரிக்காமல் கல்லாகிச் சென்றதையும் மனதில் ஓட்டியது.

"இமயமலையும் அரபிக்கடலும்" வாசிக்கத் தொடங்குமுன் தலைப்பை கண்டுகொள்ளாமல் கதைக்குள் தஞ்சமடைவது இயல்பு, பின் முதல் வார்த்தையோ ஏதேனும் காட்சி ஏற்படுத்தும் சிறு சலனமோ பக்கத்தை புரட்டி தலைப்பை அண்ணாந்து பார்க்கச் சொல்லும், இந்நிகழ்வு சிறுகதை வாசிப்பின் பொழுதில் மட்டுமே வெளிப்படும். சோதனைக்குட்பட்டது. "லெக்கு" என்ற வார்த்தையைக் கண்டதுமே ஓர் பேருணர்வு, தன் ஆழ்மனத்தில் காணாமல் கசங்கிக் கிடக்கும் காகித இடுக்குகளில் சிக்கிய ஓர் சொல், இன்று இக்கதையின் வழி தன்னை விடுவித்து கும்மாளமிட்டு குதூகலிக்கிறது. அச்சொல்லை அப்படியே கடந்துவிட விருப்பமின்றி மனைவியிடம் ஓரிரு வரிகள் புலம்பிவிட்டு புத்தகத்துக்குள் வந்தால் மனதுக்குள் பல்வேறு உரையாடல்கள் அத்தனையும் "லெக்கு"வை மையமாக வைத்து நிகழ்பவை. இரண்டு நாளுக்குப் பிறகே கையிலெடுக்கிறேன். நடைபயணத்தின் வழியில் தங்கத்திற்கு ஏற்படும் எண்ணவோட்டங்கள் அவளின் வேலை இடதத்திற்கான லெக்கை (திசையை) மறக்கடிக்கின்றன, இறுதியில் மிதிவண்டிக்காரர் தன் புழுங்கிய உடலை துடைத்துக்கொண்டே தன் பூவிழுந்த கண்ணால் அவளைக் கண்டதோடில்லாமல், அவர் செய்த சிரிப்பும் பள்ளிக்கூடத்துக்கு போயிருக்கியா என்ற கேள்வியும் அவளை உலுக்கிவிடுகின்றன. கதைக்கான எழுத்துகள் நிறைவடைந்த இடத்தில் அடைந்த சிறு குழப்பம், என்னடா கதையிது என்று உள்ளுக்குள் கதைத்துவிட்டு படுத்ததும், கதை அதன் போக்கில் ஒரு ஓட்டம் ஓடியதும் படக்கென கிளர்ந்தது ஓர் உணர்வு.

உறவுகளுக்குள் எத்தனை சாரங்கள், சுந்தரம் மாமாவுக்கும் அவளுக்குமான வெளிப்படையான பகிர்தலுக்கான பொழுதும், தந்தைக்கு மகளிடம் இருக்குமோர் விலகல் மனோபாவம், சரோ அத்தைக்கும் அம்மாவுக்குமுள்ள உறவால் வெளிப்படும் அளப்பரிய உணர்வு, சுந்தரம் மாமா கோடுகளை கிழித்து காகமாக்கிய பொழுதிலிருந்து பொங்கலிடும் வாசலில் கோலமிடும் வரையுள்ள கலையோடு அவருக்குள்ள உறவு, தந்தைக்கும் மாமாவுக்குமான நட்பு.
இத்தனைக்கும் மேலாக காகத்தினை கண்டதும் கா..கா..எனக் கத்தியவனுக்கும் அந்த ஓவியத்துக்குமான உறவே பேரின்பப் பெருவெள்ளம் அதில் மிதக்கும் கப்பல்களே உறவுகள்.

கருத்துகள் இல்லை: