சனி, 26 ஆகஸ்ட், 2023

தெரியவில்லை

யாரும்
யாரையோப் போலவே
இருக்கிறார்கள்
ஏன் என்று தான்
தெரியவில்லை

சிலருக்கு
மூக்கு

சிலருக்கு
உதடு

சிலருக்கு
சிரிப்பு 

சிலருக்கு
தொண்டை 

சிலருக்கு
கண் 

ஏனோ
சிலருக்கு
காது 
என்று சொல்லத் தோன்றவில்லை 

புதன், 23 ஆகஸ்ட், 2023

தமிழைப் படுகொலை செய்யும் தமிழினத் தலைவர்கள்

கடந்த காரிக்கிழமை (சனி) வள்ளுவர் கோட்டம் சென்று தமிழ் வழிக் கல்விக்கான போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்று கோட்டத்தை சுற்றி வலம் வந்து நின்றால் அதற்கான சுவடே இல்லாமல் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. என்னவாயிற்று என புலனத்தில் (வாட்சப்-புலனம்) தேடினால் எழும்பூர் ராசரத்தினம் விளையாட்டுத் திடல் அருகில் மாற்றியிருக்கிறார்கள் இரவோடு இரவாக.




தமிழ் தமிழ் என முழங்கி ஆட்சியில் இருப்பவர்கள் இப்போது நீட் நீட் எனக் கூவி வியாபாரம் செய்ய ஒருநாள் சந்தைக்காக வள்ளுவர் கோட்டம் ஆயத்தம் ஆவதை தாய்த் தமிழ் பள்ளியினர் உரை விளக்கியது. ஆளும் கட்சி மத்திய அரசை எதிர்த்து மருத்துவக் கல்விக்கான நீதிக்கு போராடத் துணிகிறார்கள், ஆனால் தமிழ்நாட்டு அரசை திராவிட மாடல் அரசை (இந்த மாடல் என்ற சொல்லை தங்கள் கருத்தியலோடு கலந்திருப்பதிலேயே இவர்களது அகம் தமிழிலிருந்து எவ்வளவு விலகியிருக்கிறது என்பதைச் சுட்டுகிறது) எதிர்த்து பதினெட்டு தாய்த்தமிழ் பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பிற தமிழ் இயக்கத்தினர் கலந்துகொண்ட இந்த அறப்போராட்டம் அரசின் செவிக்குச் சென்று சேராமலா இடத்தை மாற்றியிருப்பார்கள்.

நாங்கள் என்ன வேற்று மாநிலத்திலா தமிழ் மொழியை கட்டாயப் பயிற்று மொழியாக்கக் கூறுகிறோம், எம் நிலத்தில் எங்களுக்கான முதன்மை உரிமையை பெற ஏங்கி நிற்க வைத்தது யார். இருக்கும் அத்தனை அரசுப் பள்ளிகளையும் ஆங்கிலவழிக் கல்வி முறைக்கு மாற்றவும் ஒட்டு மொத்த மக்கள் திறனையும் உலகத்திற்கு அடிமையாக்க ஒப்பந்தமிட்டுச் செயல்படும் இவர்களுக்கு வெட்கமில்லையா தமிழினத் தலைவர் எனக் கூறிக் கொண்டு திரிவதற்கு. 

போராட்டத்தில் ஓர் இயக்கத்து அன்பர் உரைத்தது "ஏன் அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாயப் பாடமாக்க தயக்கம் என கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது கேட்டதற்கு முரசொலி மாறன் "ஆங்கிலப் பள்ளிகளின் எண்ணிக்கை கூடுகிறது, இப்போது நீங்கள் தமிழை கட்டாயமாக்கினால் இவர்களின் வாக்குகள் சிதறிவிடுமென்று" அறிவுரை சொல்லியிருக்கிறார், வாக்கிற்காக நாக்கை அழுகக் கொடுப்பவர்கள்.






மற்றொரு தோழர் பேசுகையில் கூறினார் "ஏன் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழை கட்டாயமாக்கச் சொன்னதற்கு ஆறாம் வகுப்பு வரை மட்டும் செய்திருக்கிறீர்கள் என கருணாநிதியிடம் கேட்டதும், அமைச்சர் பொன்முடியை பதில் சொல்ல அழைத்ததும் "ஆங்கில பள்ளிக்காரன் ஆறாம் வகுப்பு வரைக்கும் தமிழை கட்டாயமாக்குனதுக்கே வழக்கு தொடுத்துவிட்டான், நீங்க போங்கப்பா" எனச் சொல்லி ஒதுக்கியிருக்கிறார்கள். தற்போதைய ஆட்சியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவிடம் கேட்ட போது "செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம் ஆனால் எப்படிச் செய்வது எனத் தெரியவில்லை" என்றிருக்கிறார். என்னக் கொடுமை இது, தெரியவில்லை என்றால் இருக்கும் தாய் தமிழ் பள்ளி முதல்வர்களிடமும் கல்வியியலாளர்களிடமும் கருத்து கேட்டு நடைமுறைப் படுத்தலாம் அதைக் கூடவா செய்யத் தெரியாமல் பொறுப்பில் இருக்கிறார்கள், ஒருவேளை மத்திய முதலாளி இப்படித்தான் பேசவேண்டுமென்று உத்தரவு கொடுத்திருப்பாரோ. மாதிரிப் பள்ளிகள் அமைப்பதற்கு டெல்லி செல்கிறார் முதல்வர். ஆச்சரியமாக இருக்கிறது கூடவே கோவமாகவும்.

 இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் தமிழை படுகொலை செய்தவர்களைக் கண்டு வெகுமக்கள் எதிர்ப்பதற்கு மாறாக ஆங்கில வழிக் கல்வியை  ஏற்றுக்கொள்ள வைத்திருப்பதை இனி எங்கனம் புரிந்து விழிக்கும். 




சனி, 12 ஆகஸ்ட், 2023

திருட்டுக் கும்பல்

சில மாதங்களுக்கு முன் ஊர் குளத்தில் குளிப்பதற்குச் சென்ற ஒரு காலையில் அங்கிருந்த இருவர் இணையத்தில் காணொளி பார்த்து அவ்வப்போது சம்பாதித்ததைப் பற்றி உரையாடினர். கடந்த மாதம் ஒரு நபர் புலனம் (வாட்சப்) வழியே தொடர்பு கொண்டு கூகுள் நிலப்படத்தில் தான் குறிப்பிடும் உணவகத்திற்கு மதிப்பீடு அளித்தால் பணம் கொடுப்பதாக வினவினார். எங்கோயிருக்கும் தெரியாத கடையை மதிப்பு செய்யத் தேவையில்லை என்று தொடர்பை துண்டித்தேன். இன்ஸ்டாகிராமில் பதிவுகளுக்கு விருப்பக்குறி இடுவதற்கு, பின்னூட்டம் இட மற்றும் பின் தொடரவும் பணம் கொடுப்பதாக நிறைய பேர் புலனத்தில் கேட்பது எரிச்சல். 

தொடர்ந்து ஓர் ஆண்டுக்கு இன்ஸ்டாகிராமில் எனது ஓவியங்களை பதிவிட்டு வந்தபோது "NFT" என்ற வணிகமுறையை பயன்படுத்தி ஓவியங்களை எண்ம வடிவிலேயே வாங்கிக் கொண்டு அதற்கு அதிகப்படியான அமெரிக்க டாலர்கள் கொடுப்பதாக அணுகுகிறார்கள், இம்மாதிரியான ஆட்கள் ஒரு குறிப்பிட்ட இணையதள முகவரியை பயன்படுத்துவதில்லை மாறாக அடிக்கடி தங்கள் இணையதளத்தின் பெயர்களை மாற்றி எவ்வளவு பேரிடம் பணம் பறிக்க முடியுமோ அவ்வளவு செய்கிறார்கள். ஓவியங்களை வாங்குவதற்கு முன்னூறு டாலர் தொகையை அவர்களுக்கு முதலில் செலுத்தக் கோருகிறார்கள். நம்பி ஏமாறுவதற்கு வாய்ப்பு அதிகம். ஒரே ஆள் வேறுவேறு இணையதளம் வழியாக என்னையும் சக ஓவியர் ஒருவரையும் குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்பு கொண்டதைக் கவனித்தோம். சில நாட்களுக்குப் பிறகு அந்த ஆளின் பக்கத்தை தேடினால் காணாமல் போயிருக்கும்.

இதே போல் இன்ஸ்டாகிராமில் ஆடை விற்கும் இணையதளத்தை நம்பி பணம் செலுத்தி உடை வாங்கினார் தெரிந்த நண்பர், அவருக்கு அழகான பெட்டியில் கந்தல் துணிகளை அனுப்பியிருந்தது அந்த இணையத்திருட்டு கும்பல். திருப்பி அளிக்கலாம் எனத் தேடியபோது இணையதளம் காற்றில் கலந்துவிட்டது. அதே நண்பர் மற்றொரு நம்பிக்கையான இணையதளத்தில் கைக்கடிகாரம் வாங்கியபோது அவருக்கு கிடைத்தது ஓடாத மண்ணுக்குள் புதைத்து எடுத்தது போன்ற மட்டமான முள்ளில்லாத கடிகாரம், நம்பக்கூடிய விற்பனையாளர் தான் ஆனாலும் பொறுப்பாக பொருளை கையளிக்க வேண்டிய முகவர் செய்த திருட்டால் ஏற்பட்டது இந்நிகழ்வு, பின்  நிறுவனத்திடம் புகார் அளித்ததும் பணத்தை திருப்பிக் கொடுத்தனர். திருட்டாகட்டும் எதுவாகட்டும் காலத்திற்கேற்ப தன் வடிவத்தை மாற்றிக் கொள்கிறது.

இதையெல்லாம் தொழில் போலச் செய்வது வெட்கக் கேடாக இல்லையா, ஒருவேளை வரும் ஆண்டுகளில் இதற்கென சட்டம் இயற்றி அரசு இசைவு கொடுக்கவும் வாய்ப்புண்டு. மட்டைப் பந்தாட்டத்தில் சூதாட்டம் பற்றி இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை மாறி இன்று இணையவழி சூதாட்டம் செய்யும் நிறுவனத்தின் இலச்சினை இந்திய அணியின் சட்டையில் விளம்பரமாக இருப்பதைக் காண்கையில் எந்த ஊழலும் சட்டமாக மாற வாய்ப்புள்ளது.

இரண்டு நாட்கள் முன்பு இன்ஸ்டாகிராமில் ஒரேயொரு பதிவிடுவதன் மூலம் கோடிக்கு மேல் பணம் பெறும் விளையாட்டு வீரர்கள் நடிகர்கள் பற்றி வாசித்ததுமே வியப்பு மேலோங்கியது.

நிற்க....

'இன்ஸ்டாகிராம்' தமிழ் சொல் தேடியபோது படவரி என்று கண்ணில் பட்டது, எவ்வளவு ஒத்துப்போகும் என அறிந்துகொள்ள வேண்டும்.

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

வாடகை மானுடம்

 ஒரு மாலையில் தெருவாசல் ஓரம் குழந்தைகளோடு இறகுப் பந்து விளையாடிவிட்டு உட்செல்ல எத்தனிக்கையில் இருசக்கர வண்டியில் பின்னாலிருந்தவர் இறங்கி வந்து இந்த பகுதியில் இடம் எவ்வளவு போகிறது என்றார். சரியாகத் தெரியவில்லை ஆனால் விளம்பரங்களை பார்க்கையில் நான்காயிரத்து ஐநூறு கிட்ட ஒரு சதுர அடி இருக்கலாம் என்றேன். எவ்வளவு ஆண்டாக இங்கே இருக்கீங்க என்றதும் எட்டு எனச் சொன்னேன், எட்டு ஆண்டுகளா வாடகை வீட்டுலயா என்று எடை போட்டார். இப்போது வண்டியை ஓட்டி வந்தவர் இறங்கினார் அவரது பையனாக இருக்கலாம் எனத் தோன்றியது, சாலையோரம் கட்டடங்களை இடித்திருக்கிறார்களே எதற்காக என்றார், சாலை விரிவாக்கம் என்று கூறுகிறார்கள் ஆனால் உறுதியாக தெரியவில்லை என்றதும். பின்னாலிருந்தவர் இடத்தோட விலை கூடுமா என்றார், மின்ன இருந்ததுக்கும் இப்போதைக்குமே கூடியிருக்கு என புன்னகை உதிர்த்து ஆனால் தெரியவில்லை என்று உட்புகுந்தேன்.


நாங்கள் இங்கு குன்றத்தூரிலிருந்து பல்லாவரம் போகும் பாதையில் உள்ள மணிகண்டன் நகருக்கு வந்த புதிதில் இப்போது குடியிருக்கும் வீட்டுக்குப் பின்புறத்தில் பெரியதொரு தோல் தொழிற்சாலை இருந்தது அதன் சுற்றுப்புறச் சுவரை அடுத்து சாலையோரம் மக்கள் பல தலைமுறைகளாக குடிசையில் வாழ்கிறார்கள். இந்த இடத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு "கம்பெனி" என்றே பெயர். சில ஆண்டுகளுக்கு முன் இந்நிறுவனம் இழுத்து மூடப்பட்டது, மக்கள் குடியிருப்புக்கள் மணிகண்டன் நகரில் அதிகமானதால் இத்தொழிற்சாலை சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் விளைவிப்பது அதற்கான காரணமாகச் சொல்லப்பட்டது.


சில மாதங்களுக்கு முன்பு "G square" என்ற வீட்டு மனைகள் விற்கும் நிறுவனம் இந்த இடத்தினை மனைகளாக மாற்றி விற்கத் தொடங்கியது, அதிலிருந்து சில நாட்களில் சாலையோரம் உள்ள குடியிருப்புக்களை அகற்றுவதற்கு காவலர்கள் துணையாக பெருத்த ஊர்திகள் வந்து முதலில் கடைகளை மட்டும் அகற்றிவிட்டு அடுத்த வாரத்தில் வீடுகள் அகற்றப்படும் என எச்சரித்துச் சென்றிருக்கிறார்கள், இதற்கான காரணம் சாலை விரிவாக்கம் என்று கூறுகிறார்கள் ஆனால் பல்லாவரம் தொடங்கி குன்றத்தூர் வரை நீளும் இச்சாலையில் வேறெங்கும் இடிக்க முனைப்பு காட்டாமல், ஏன் எதிர் பக்கம் ஒரு நூலளவு கூட கை வைக்காமல் குறிப்பிட்ட இப்பகுதியை அப்புறப்படுத்துவதில் மட்டும் அரசு அக்கரை காட்டுவது மக்களுக்கு வினாக்களை ஏற்படுத்தியது. உண்மையில் அரசுதான் இதற்கு காரணமா என போராட்டமும் வினாக்களுமாக ஒவ்வொரு நாளும் விடியல் கொள்கிறது.

இன்னொன்று சொல்லவேண்டும், இந்த சாலையோர கட்டிடங்கள் இடிக்கத் தொடங்கிய மறுநாள் அடையாறு கரையோரம் இருந்த தென்னத்தோப்பு மொட்டையடிக்கப்பட்டு முழித்துக் கொண்டிருக்கிறது.

சிலர் அடையாறு எங்க குன்றத்தூருக்கு வந்ததுன்னு கேக்கலாம், இந்த ஆற்றின் தலை செம்பரம்பாக்கம் ஏரி, அங்கிருந்து வெளியேரும் நீர் இவ்வழி வந்து சென்னைக்குள் சென்று கடலில் கலக்கிறது. அனகாபுத்தூர் குன்றத்தூர் இடையே எல்லை போல் ஓடும் இவ்வாற்றைக் கடக்க தரைப்பாலம் ஒன்றிருக்கிறது, பாலத்திற்கு இந்தப்பக்கம் குன்றத்தூர் காஞ்சிபுர மாவட்டத்தில் அடங்கும், அந்தப் பக்கம் அனகாபுத்தூர் செங்கல்பட்டு மாவட்டம்.


திங்கள், 7 ஆகஸ்ட், 2023

கோபுரப் பூங்காவில்

கடந்த காரிக்கிழமை (சனிக்கிழமை) அண்ணா நகர் கோபுரப் பூங்காவில் சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆசான் ஓவியர் மு.பெ. சரவணன் சித்திரக்காரன் அவர்களும் ஓவிய நண்பர்களும் கூடி வரையத் தொடங்கினோம்.










 


சனி, 5 ஆகஸ்ட், 2023

அவ்வப்போது

என்னென்னவோ வரைய வேண்டும் என எண்ணம் கடல் அலை போல விடாது சிதறித் தெரிக்கும். எந்தவொரு படைப்புச் செயலிலும் வெளிப்படுத்த நினைப்பதை உருக்கொண்டு வர கொஞ்சமேனும் சிக்கல்களுக்கு இடமிருக்கும். 

என்னையும் வரைந்து கொடு என தம்பி, சித்தி மகன் கேட்டவுடன் தீட்டியது.

தம்பி முத்துவின் மகள் மகிழினி. 


ஓவியர் சந்ரு அவர்களுடைய ஓவியக் கண்காட்சி தற்போது தக்சன் சித்திரா ஓவியக் கூடத்தில் நடந்துகொண்டிருக்கிறது. அதைப் பற்றிய ஆங்கில கட்டுரை வாசிக்க கிடைத்தது அதில் அவரது கோட்டோவியத்தில் பறவையொன்று வேர்பிடித்து அசையாமல் நின்று தன் அலகில் வண்ணத்துப்பூச்சி ஏந்தி நிற்கும் காட்சி இயற்கையை இயங்கவிடாமல் சிறை பிடித்திருக்கும் இன்றைய காலத்தில் ஆற்றாமையை வெளிப்படுத்திய விதம் ஏற்படுத்திய தாக்கத்தில் வடிவமைத்து பார்த்த ஓவியம்.


அவ்வப்போது மனதில் தோன்றும் காட்சிகளை வரைந்து வைத்துவிடுவதில் ஒரு அமைதியும் மகிழ்ச்சியும்.


 

தியானம் என்ப

தொங்கும் கை
தொடையிலிருந்து விலக
புகை ததும்பும் விரலிடுக்கு
பார்க்க
மௌனித்தலும்