புதன், 23 ஆகஸ்ட், 2023

தமிழைப் படுகொலை செய்யும் தமிழினத் தலைவர்கள்

கடந்த காரிக்கிழமை (சனி) வள்ளுவர் கோட்டம் சென்று தமிழ் வழிக் கல்விக்கான போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்று கோட்டத்தை சுற்றி வலம் வந்து நின்றால் அதற்கான சுவடே இல்லாமல் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. என்னவாயிற்று என புலனத்தில் (வாட்சப்-புலனம்) தேடினால் எழும்பூர் ராசரத்தினம் விளையாட்டுத் திடல் அருகில் மாற்றியிருக்கிறார்கள் இரவோடு இரவாக.




தமிழ் தமிழ் என முழங்கி ஆட்சியில் இருப்பவர்கள் இப்போது நீட் நீட் எனக் கூவி வியாபாரம் செய்ய ஒருநாள் சந்தைக்காக வள்ளுவர் கோட்டம் ஆயத்தம் ஆவதை தாய்த் தமிழ் பள்ளியினர் உரை விளக்கியது. ஆளும் கட்சி மத்திய அரசை எதிர்த்து மருத்துவக் கல்விக்கான நீதிக்கு போராடத் துணிகிறார்கள், ஆனால் தமிழ்நாட்டு அரசை திராவிட மாடல் அரசை (இந்த மாடல் என்ற சொல்லை தங்கள் கருத்தியலோடு கலந்திருப்பதிலேயே இவர்களது அகம் தமிழிலிருந்து எவ்வளவு விலகியிருக்கிறது என்பதைச் சுட்டுகிறது) எதிர்த்து பதினெட்டு தாய்த்தமிழ் பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பிற தமிழ் இயக்கத்தினர் கலந்துகொண்ட இந்த அறப்போராட்டம் அரசின் செவிக்குச் சென்று சேராமலா இடத்தை மாற்றியிருப்பார்கள்.

நாங்கள் என்ன வேற்று மாநிலத்திலா தமிழ் மொழியை கட்டாயப் பயிற்று மொழியாக்கக் கூறுகிறோம், எம் நிலத்தில் எங்களுக்கான முதன்மை உரிமையை பெற ஏங்கி நிற்க வைத்தது யார். இருக்கும் அத்தனை அரசுப் பள்ளிகளையும் ஆங்கிலவழிக் கல்வி முறைக்கு மாற்றவும் ஒட்டு மொத்த மக்கள் திறனையும் உலகத்திற்கு அடிமையாக்க ஒப்பந்தமிட்டுச் செயல்படும் இவர்களுக்கு வெட்கமில்லையா தமிழினத் தலைவர் எனக் கூறிக் கொண்டு திரிவதற்கு. 

போராட்டத்தில் ஓர் இயக்கத்து அன்பர் உரைத்தது "ஏன் அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாயப் பாடமாக்க தயக்கம் என கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது கேட்டதற்கு முரசொலி மாறன் "ஆங்கிலப் பள்ளிகளின் எண்ணிக்கை கூடுகிறது, இப்போது நீங்கள் தமிழை கட்டாயமாக்கினால் இவர்களின் வாக்குகள் சிதறிவிடுமென்று" அறிவுரை சொல்லியிருக்கிறார், வாக்கிற்காக நாக்கை அழுகக் கொடுப்பவர்கள்.






மற்றொரு தோழர் பேசுகையில் கூறினார் "ஏன் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழை கட்டாயமாக்கச் சொன்னதற்கு ஆறாம் வகுப்பு வரை மட்டும் செய்திருக்கிறீர்கள் என கருணாநிதியிடம் கேட்டதும், அமைச்சர் பொன்முடியை பதில் சொல்ல அழைத்ததும் "ஆங்கில பள்ளிக்காரன் ஆறாம் வகுப்பு வரைக்கும் தமிழை கட்டாயமாக்குனதுக்கே வழக்கு தொடுத்துவிட்டான், நீங்க போங்கப்பா" எனச் சொல்லி ஒதுக்கியிருக்கிறார்கள். தற்போதைய ஆட்சியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவிடம் கேட்ட போது "செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம் ஆனால் எப்படிச் செய்வது எனத் தெரியவில்லை" என்றிருக்கிறார். என்னக் கொடுமை இது, தெரியவில்லை என்றால் இருக்கும் தாய் தமிழ் பள்ளி முதல்வர்களிடமும் கல்வியியலாளர்களிடமும் கருத்து கேட்டு நடைமுறைப் படுத்தலாம் அதைக் கூடவா செய்யத் தெரியாமல் பொறுப்பில் இருக்கிறார்கள், ஒருவேளை மத்திய முதலாளி இப்படித்தான் பேசவேண்டுமென்று உத்தரவு கொடுத்திருப்பாரோ. மாதிரிப் பள்ளிகள் அமைப்பதற்கு டெல்லி செல்கிறார் முதல்வர். ஆச்சரியமாக இருக்கிறது கூடவே கோவமாகவும்.

 இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் தமிழை படுகொலை செய்தவர்களைக் கண்டு வெகுமக்கள் எதிர்ப்பதற்கு மாறாக ஆங்கில வழிக் கல்வியை  ஏற்றுக்கொள்ள வைத்திருப்பதை இனி எங்கனம் புரிந்து விழிக்கும். 




கருத்துகள் இல்லை: