சனி, 31 டிசம்பர், 2016

அடையாளத்திற்கு முன் சில கேள்விகள்

பெயரில்லா அழைப்பு வந்தது மனைவியின் கைப்பேசியில், "புது நம்பரா இருக்கு" என்று தொடர்ந்தவளிடமிருந்து புரிந்துகொள்ள முடிந்தது பேசுவது அவளது அப்பாவென்று. அனைத்து அழைப்புகளுக்கும் பத்து பைசா எனக் கூவி விற்றதால் வாங்கியிருக்கிறார், இதுபோல் அவர் வாங்கி பயன்படுத்தி தூக்கியெறிந்த சிம்கார்டுகளின் எண்ணிக்கை கணக்கிலடங்கக் கூடியதுதான் என்றாலும் நினைவில் இல்லை. மோடியின் ஆதரவாளர், பேசத்தொடங்கினால் கொட்டாவி விட்டபின்னரே நம்மை விடுதலை செய்வார்.

ரிலையன்ஸ் ஒரு ஆதார் அட்டைக்கு மூன்று சிம் கொடுப்பதாக தகவல் உலாவுகிறது, வெளிப்படையாக மூன்று என்றால் மறைமுகமாக எத்தனையோ. இதேபோல் மற்ற நிறுவனங்கள் அதனதன் தகுதிக்கு ஏற்றதுபோல் கொடுக்கலாம். கொடுக்கிறது. தெருவுக்குத் தெரு நிறுத்தத்திற்கு நிறுத்தம் குடை விரித்து, ஆதார் அட்டை மட்டும் போது "No Photo, No Proof" என கூவிக்கூவி விற்கிறார்கள், வாங்கிய 05 நிமிடத்தில் "சிம்" பயன்படுத்தலாம், எவ்வளவு வேகம்!.

உச்ச நீதிமன்றம் ஆதார் அட்டையினை பயன்படுத்த மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்கிறது, மறுபக்கம் மத்தியரசு வலிய வலிய அரசுத்திட்டங்களில் இதனை உள்ளீடு செய்ய பணிக்கிறது. அத்தனை திட்டங்களையும் முறைப்படுத்த முனைவதாக அரசை எண்ணும் பொழுதில் மேற்கொண்ட சிறு உதாரணம் வழியாக மாபெரும் சீரழிவிற்கு விதை போடுவதாகவே கருதவேண்டிய நிலை ஏற்படுகிறது.

ஒன்றரை வருடப் போராட்டத்திற்குப் பிறகு (குடும்ப அட்டையை வாங்க பட்ட பாட்டினை சொன்னால் அது பெருங்கதை), கிடைத்ததை பதிவு செய்ய ஆதார் கட்டாயம் வேண்டுமாம். இப்போ நீ எடுத்துத்தானே ஆகணும் என்ற ரீதியில் சிலர் சிரிப்பது போல தோன்றியது. நிச்சயமாக பிரம்மையோ பிசாசோ அல்ல. இணையத்தில் விண்ணப்பிக்கலாமென்று துளாவியபோது படிவம் மட்டுமே சிக்கியது. இணையமாக்கலை இங்கிருந்தே தொடங்கியிருக்கலாம், இதிலேதும் சிக்கலிருக்குமானால் ஆதாரும் பெருஞ்சிக்கலாகவே இருக்க முடியும்?

நேற்று பல்லாவரம் அல்லது பல்லவபுரம் நகராட்சிக்கு சென்றபோது, குறுக்குமறுக்காக சிலர் நடமாடுகிறார்கள் நம் காதுகளுக்கு கேட்குமட்டும் "ஆதார் அப்ளையா....ஆதார் அப்ளையா...." என்று ஆட்டோ வேணுமா எனக் கேட்பவரைப் போல விசாரிக்கிறார்கள். அவர்களில் ஒருவரிடம் சென்று கேட்டதும் "ஐ.டி புரூப்லாம் வச்சிருக்கியா.... மூணுமாசத்துல வாங்குறியா உடனே வேணுமா" என்றார். உடனே என்றால் எப்படி என வினாவவும் சிரித்தார் அருகிலிருப்பவரைப் பார்த்து. அங்கிருந்து விலகி வெளியிலிருந்த கடையில் படிவம் இருபது ரூபாய்க்கு வாங்கும்போது, ஒருவர் ஒரு பெண்ணை அழைத்துவந்து "இவங்ககிட்ட எரணூறு ரூவாக்குடு நாளைக்கே முடிச்சிவிடும்" என்றார். (அவரின் சிரிப்பிற்கான பதில் வெளிப்படையாக இங்கே) இணையமயமாக்கலின் அடிப்படையே ஊழலில்தான் துவக்கம் கொள்கிறது.

இப்பொழுது சில கேள்விகள். தீவிரவாதமில்லா இந்தியா? இணையமயமான இந்தியா? பணமற்ற பரிவர்த்தனை பொருளாதாரம்?
ஊழலற்ற இந்தியா?

பதில் உங்களிடம்.

வியாழன், 29 டிசம்பர், 2016

பைத்தியம் என்றுகூட சொல்லலாம்

கடந்த சனிக்கிழமை பெரியப்பா ஊரிலிருந்து வந்திருந்தார். அதிமுக தீவிரத்தொண்டர். அக்காள் வீட்டில் நடந்த நிகழ்வை முடித்துவிட்டு மாலையில் மெரினாவை நோக்கி சென்றிருக்கிறார், என் மனைவி, அம்மா, இரண்டு அக்காள்கள் மற்றும் அத்தான்களோடு. அன்று எனக்கு பிறந்தநாளாகையால் என்னைப்பற்றி பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

மனைவியிடம் அக்கா கேட்டிருக்கிறாள் "தம்பி பிறந்தநாளுக்கு என்ன வாங்கிக்குடுத்தடே" உடனே இவள் "ஒங்க தம்பிக்கு புத்தகந்தான் வாங்கிக்கொடுக்கணும்".

"அவன் புத்தகத்த வாசிச்சா பரவாயில்ல, ஆனா அடிமையாயிட்டான்" என்றிருக்கிறாள் அக்கா.

ஜெயலலிதா சமாதியில் கொடுத்த சப்பாத்தியையும் பொங்கலையும் விழுங்கி தண்ணீர் குடித்துவிட்டு இரவில் வீடு திரும்பியிருக்கிறார்கள்.

அடுத்தவருடம் என்னை பைத்தியம் என்றுகூட சொல்லலாம், ஆனால் யார் சமாதியை பார்க்கப்போவார்கள் என்று என்னால் கூற இயலாது.

செவ்வாய், 27 டிசம்பர், 2016

குறைகளின் பின்னே

தீர்வை நோக்கி
செல்வதற்கல்லாமல்
குறைகளின் பின்னே
தேங்கி நிற்கிறோம்

வியாழன், 22 டிசம்பர், 2016

மன்றோவின் உயர்ந்த சிலை

தீவுத்திடலை எட்டி நின்றுகூட பார்த்ததில்லை சென்னை வந்த நான்கரை வருடத்தில், இந்த வருடம் ஜூலை மாதம் நிகழ்ந்த புத்தகத்திருவிழா அதற்கான வழியினை திறந்துவிட்டது. திடலுக்கும் அதன் மற்றொரு பகுதியிலுமிருந்த மரப்பாலம் உடைந்து போனது ஒருபக்கம். முதலில் போகும் பொழுது மெரினா வழியாக சென்று இருட்டியபின்னர் அதே பாதையில் சென்றுவிட்டேன் தொலைக்காட்சி செய்தியாளர்கள் கூட்டத்தின் இடையிலேயே எழுந்துகொண்டு. மற்றொரு பக்கமான அண்ணாசாலை நோக்கி வரவில்லை.

அன்று பார்த்த மரப்பாச்சி பொம்மையை வாங்கவேண்டுமென்று மற்றொரு ஞாயிறு மதியத்தில் செல்ல நேர்ந்தது. பெரியார் பாலத்தருகே இறங்கி நடந்தபோது அந்த சாலையின் அமைதி, அதாவது வாகனங்களில் மக்கள் போகவும் வரவும் செய்கிறார்கள் ஆனால் நடைபாதையில் யாருமில்லா அமைதி. சாலையின் நடுவே பிரமாண்டமான குதிரையின் மீதமர்ந்த மனித உருவச்சிலை. நீச்சயம் ஏதோவொரு ஆங்கிலேயன் என எண்ணிக்கொண்டு சற்று முன் சென்று கவனித்தேன் அல்லது அதன் உயரத்தில் வியந்து நின்றேன்.

சர் தாமஸ் மன்றோ. இதென்ன நகரின் மையச்சாலையில் ஒரு ஆங்கிலேயனின் சிலை என ஏளனப் பெருமூச்சில் நகர்ந்துகொண்டிருந்தவன் அப்படியென்ன இந்த ஆள் செய்தான், கொள்ளையடித்தவனுக்கு கோபுர உயர சிலையா. அதுவும் பராமரிப்பில் காந்தி நேரு காமராசர்களெல்லாம் ஒன்றுமில்லை என எண்ணியதோடு மன்றோவை அறிந்துகொள்ள வேண்டுமெனவும் புழுங்கியது, வாசிப்பிற்கு பின் புழுக்கம் குறையவும் மிகவும் செய்யலாம்.

அட இன்று எதேச்சையாக பாவண்ணனின் பக்கங்களை புரட்டினால் வந்து நிற்கிறது கீழுள்ள இணைப்பு. வாசித்துப்பாருங்கள். ஒரு புத்தக அறிமுகம் காத்திருக்கிறது.

http://writerpaavannan.blogspot.in/2016/11/blog-post_20.html?m=1

செவ்வாய், 20 டிசம்பர், 2016

ஒழுகும் கோடுகள்

எங்கள் இருவருக்குமிடையிலிருந்த இடைவெளியில் மௌனம் நிரம்பி, வெளியேற வழியின்றி ஒழுகிக்கொண்டிருந்தது. அவள் இத்தனை அமைதியாக இருக்கவேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை எனக்கு புரியாமல்கூட இருக்கலாம்.
குறிப்பெடுத்துவந்து யாரேனும் பேசுவார்களா என்ன, படைப்பாளிகள் மற்றவர்களோடு உரையாடும் பொழுதில் தன்னுள் வடிவம் பெரும் வார்த்தைகளை குறித்து வைத்துக்கொள்வார்கள் என அ.முத்துலிங்கம் எழுதியதை வாசித்திருக்கிறேன், அதுவும் மேலை நாட்டவர்கள் மட்டுமே இப்படியான செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள். இவளும் நானும் அளவளாவும் போது அப்படியெதற்கும் அவசியமில்லை. அவளது தற்போதைய அமைதியைப்போல.
இந்நிலையை அமைதியென்று கொள்வதா சிந்தை செய்யும் மனம் இப்படி அமர்ந்துவிடுமோ. இருக்கலாம். ஆனால் இவள் அவ்வப்போது சிரிக்கிறாள் எதற்காக என்பதை ஊகிக்க இயலவில்லை. "கேட்டுவிடலாம்தான், ஆனால் இப்போது வேண்டாம்".

உனக்கு கோடுகளை பிடிக்குமா வண்ணங்களை பிடிக்குமா என்று கேட்டதும் வண்ணங்களை பிடிக்குமென்று பொய் சொல்வதை அவள் அறிந்து கொள்ளவில்லை. இருந்தும் கோடுகளை பற்றியே உரையாடத்துவங்கினாள்.
கோடுகளுக்கும் நவீனத்திற்கும் நெருக்கம் அதிகம் என கூறும் பொழுதில் மாலதியின் இமைகளோடும் புருவங்களுடனும் புதிர் பேசத்துவங்கினேன். நவீனம் என்பதே ஒன்றை புதைத்தும் மறைத்தும் வெளிப்படுத்துவது தானே, பெண்களின் ஆடைகள் போல தற்போது ஆண்களும் இங்கே விதிவிலக்கல்ல.

நவீனத்தை தோற்றுவித்தவன் ஓவியனாகவே இருக்க முடியும் அதுவும் மங்கையின் கூந்தலிலிருந்தே கோடு நீட்டி நீட்சியடைந்திருக்க வேண்டும். இதற்கு பதிலாக அவள் கூறியதில் வியப்பேதும் இல்லை. மாலதி தனக்கு நவீன ஓவியத்தை புரிந்துகொள்வதில் சிக்கலிருப்பதாகவும் காண்கையில் களைப்படைந்து போவதாகவும் சொன்னபோது, கோடுகளுக்கும் நவீனத்திற்கும் நெருக்கம் இருப்பதாக அவள் கூறியதை நினைவுபடுத்தவில்லை. மாறாக இருட்டில் நடந்துபோக பிடிக்குமா எனக்கேட்டதற்கு ம்ஹும் என இசைத்தாள்.
உறக்கத்தில் கோர்வையற்ற கனவுகள் கண்டிருக்கிறாயா அப்படியெதுவும் நினைவிலிருக்கிறதா, ஒருவேளை உன்னால் எழுத்தாகவோ வண்ணமாகவோ கோடுகளாகவோ அதனை வெளிப்படுத்த முடியுமானால் அதை என்னால் புரிந்துகொள்ள முடியுமா, இதற்கு பதிலுண்டா. அவளிடம் மௌனம் மட்டுமே எஞ்சியிருந்தது.

திங்கள், 19 டிசம்பர், 2016

இவ்வருடத்தின் வாசிப்பில்

இந்த வருட வாசிப்பின் சில புத்தக முத்துக்கள். வாசிப்போம் பகிர்வோம்.

காடோடி - நக்கீரன் - காட்டினை அறிமுகம் செய்து அது கொலையுண்டு போகும்வரையிலான அதிர்வுகளை ஏற்படுத்தும் பயணம்தான் புதினத்தின் மையச்சரடு.

வண்ணங்களின் வாழ்க்கை - சுந்தரபுத்திரன் - ஓவியர்களோடு கலந்துரையாடும் கட்டுரைகளின் தொகுப்பு

ஆயிரம் வண்ணங்கள் - எஸ்.ராமகிருஷ்ணன் - ஓவியங்களையும் ஓவிய ஆளுமைகளையும் கண்டடைய உதவும் கட்டுரைகள்.

குற்றப்பரம்பரை - வேலராமமூர்த்தி - வரலாற்றுப்புதினம்.

பறவை வேட்டை - அசோகமித்திரன் - சிறுகதைத்தொகுப்பு.

கதவு - கி.ராஜநாராயணன் - சிறுகதைத்தொகுப்பு.

மயான காண்டம் - லஷ்மி சரவணக்குமார் - சிறுகதைத் தொகுப்பு.

இண்டமுள்ளு - அரசன் - சிறுகதைத் தொகுப்பு.

எம்.எஃப்.உசேன் - ஓவியர் புகழேந்தி - இந்திய சமகாலோவிய ஆளுமையின் வரலாறு.

இந்திய ஓவியம் - சி.சிவராமமூர்த்தி, தமிழில் மே.சு.இராமசுவாமி - கி.மு விலிருந்து சமகாலம் வரையிலான ஓவிய வரலாறு.

இப்போது வாசிப்பில் மௌனியின் படைப்புகள் மற்றும் சத்திய சோதனை (காந்தியின் சுயசரிதை).

திங்கள், 5 டிசம்பர், 2016

இறந்தவன்

இறந்தவன்
பேசுகிறேன்
நாளையேனும் கூறுங்கள்
நான்
இறந்துவிட்டேனென்று...