வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 8 ஜூன், 2022

நீர் நிலம் வனம் - கடல்

கடலை கடலோடியிடம் விட்டுவிடுங்கள் எனும் வறீதையா கான்ஸ்தந்தின் குரல் காது வழி மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மீனவன்னு செய்தில எழுதுறீங்களே அதுவே தப்பு நாங்கள் கடலோடிகள் என்பவரது குரலை மறுக்கவும் மறக்கவும் இயலுமா. ஒரு நகரத்தாளுக்கு ஒட்டுமொத்த விவசாய நிலத்தையும் விவசாய நிலமாகவும், கடல் சாராத ஆளுக்கு ஒட்டு மொத்த கடலும் ஒரே கடலாகவும் புரிதலுக்குள்ளாக வாய்ப்பிருப்பதும் அதை நாம் அல்லது குறைந்தபட்சம் இந்நாட்டின் அரசு அறியாதிருப்பது எவ்வளவு அயற்சியானது.

ஒவ்வொரு விவசாய நிலமும் வெவ்வேறு பண்புகளைக் கொண்டிருப்பது போல் கடலிலும் பல பண்புகள் நிறந்த பகுதிகள் இருப்பதை இந்த நூல் வாசிப்பிற்கு பிறகே அறிதலுக்குள்ளாகிறது. கடலில் மிதப்பது படகு அல்லது கப்பல் என்பதைக் கடந்து அதன் உண்மையான பெயர்கள் புலப்படவும் கடலோடிகளின் வாழ்வைப் புரிந்து கொள்ளவும், கடல் வாணிபத்தில் கொழிக்கும் மனிதர்களையும், இலங்கை ராணுவம் ஏன் கடல் எல்லை தாண்டியதாக தமிழர்களைச் சுடுகிறது, கச்சத்தீவை ஏன் இலங்கை ஈர்த்துக் கொண்டது, தமிழ் நிலத்திற்கும் இலங்கைக்குமுள்ள ஆதி உறவு  மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் நிலமும் கொண்டிருக்கும் வெவ்வேறு பண்புகளை உணர்ந்து கொள்ளவும் மிகப் பெரும் உந்துதலை வழங்குகிறது இந்நூல்.

கடல் புறத்தில் சுற்றுலாவை மேம்படுத்தினால் கிடைக்கும் பொருளாதாரத்தில் அங்கிருக்கும் பெரும் சுரண்டல் ஆலைகளை இல்லாமல் ஆக்கிவிடலாம் எனும் கடலோடியின் குரலை கேட்பாரில்லை என்றே தோன்றுகிறது. 

எங்கிருந்து நம் நிலங்களுக்கான விடுதலையை சுய பண்புகளை வளர்த்தெடுக்க வேண்டும் என எண்ணும் போது நமது கல்வி முறையில் உரிய மாற்றங்களைச் செய்யாமல் இது சாத்தியமில்லை, எப்படி ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்த பண்பிருக்கிறதோ அதை அடிப்படையாகக் கொண்டு அந்தந்தப் பண்பிற்கேற்ற பள்ளிக் கல்வியை ஊக்குவிக்கவும் உருவாக்கவும் வேண்டும். ஆனால் நாம் ஒற்றை கல்விக் கொள்கை எனும் சுருக்கும் கயிற்றில் தொங்கத் தொடங்கிவிட்டோம்.

கொற்கை புதினம் வெளியான நாள்முதல் அதை எப்படியும் வாங்கி வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும் போதெல்லாம் அதன் விலை மீது மாறாத பயமொன்றை சுமந்து கொண்டிருந்தேன். அந்தச் சுமையை புறந்தள்ளி வாசிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் நிற்கிறேன்.



சனி, 9 மே, 2020

நினைவுகளின் சுவட்டில்

அங்கங்கே வெங்கட் சாமிநாதன் அவர்களின் சில கட்டுரைகளையும், கலைவெளிப் பயணங்கள் எனும் கட்டுரைத் தொகுப்பை மட்டுமே வாசித்திருந்தாலும், அதிலிருந்த கருது பொருள் மற்றும் மாற்றுச் சிந்தனை  வியப்பிலாழ்த்தியது உண்மை. 

இந்த தன் வரலாற்று நூலை வாசிக்க இருமுறை கையிலெடுத்து ஒருவரி கூட வாசிக்காமல் அலமாரியில் வைத்துவிட்டு, சென்ற வாரம் மீண்டும் எடுத்தேன் சிற்பி தனபால் அவர்களின் தன்வரலாறு வாசிப்பிற்கு பிறகு, அதற்கும் இதற்கும் கலை சார்பு இருக்குமென்ற கருதுதலே இப்போது வாசிக்கத் தொடங்கியதன் காரணமென எண்ணத் தோன்றுகிறது.

முன்னும் பின்னுமாக காட்சி சித்தரிப்புகளைக் கொண்ட அவரின் வாழ்வு நாவலுக்குரிய தன்மையில் இருந்ததாகப்பட்டது, அதனாலோ என்னவோ தொடர்ந்து வாசிக்க அதன் போக்கில் உள்ளிழுத்துக் கொண்டது. சுதந்திரத்துக்கு முன் மற்றும் பின்னான காலகட்டத்தின் முக்கிய நிகழ்வுகளோடு ஊடோடி வாழ்ந்த இவ்வாளுமையின் ஓட்டம் சுவாரசியமும் வலியும் மிக்கதாகவுள்ளது. ஒரு காலகட்டத்தின் பயணங்கள் எத்தகையதாக இருந்தது என்பதை வாசிக்கையில் அக்காலத்திற்கான ஆவணமாகவும் இப்படைப்பை கொண்டாட முடியும்.

புதன், 30 ஆகஸ்ட், 2017

முட்டக்கண்ணும் சரபோஜியும்

உணவுநேரமானாலும் காபி இடைவேளையானாலும் உப்பு சப்பற்ற பேச்சுகளையே விவாதிக்க பழகியிருக்கிறோம். அடுத்தவரின் அந்தரங்ககங்களையே பேசித்தீர்ப்பது எப்போது தீருமோ என எண்ணுமளவு நடிகர்கள் அரசியல்வாதிகள் தவிர்த்து பேசுவதற்கு எதுவுமற்றே உலாவுகிறோம் ஒரே குட்டைக்குள் உழல்கிறோம். இவர்கள் யாருக்கும் தாம் விவாதிப்பதாக நினைத்து அரட்டை அடிக்கும் பொழுதில் அப்பொருள் அல்லது அதன் தொழில்நுட்பம் சார்ந்து ஆழமான அறிவோ பார்வையோ இருப்பதில்லை கூட்டத்தில் ஒருவன் கொஞ்சம் விளக்க முற்பட்டால் வார்த்தைகளை தடம் புரட்டி வேறு தேவையற்ற பொருள் நோக்கி இயல்பாக நகர்த்திவிடும் ஆட்களுமுண்டு.

சில சமயங்களில் யாருக்கும் பேச வார்த்தைகளின்றி காஃபியை விழுங்கிக் கொண்டிருக்கும் போது தெறிப்பான ஒரு கேள்வியை உதிர்த்து விட்டால் போதும், பற்றிக்கொள்ளும். இத்தருணங்களில் சிலர் இதுவரை அக்கூட்டத்தில் பேசவே பேசாத தகவல்களை அள்ளிவிடுவார்கள். அதுவன்றோ விவாதத்தளம் என்ற நிலை உணரும் இடம்.

புத்தர் எப்படி இறந்தார் எனத்தெரியுமா என்ற கேள்வியை புதிதாக பௌத்தம் அறிந்து கொண்டிருப்பவரிடம் கேட்டதில் தொடங்கியது தாவித்தாவி சரபோஜி மன்னரிடம் வந்தடைந்தது எந்த இடத்தில் தடம் புரண்டு இவரை அடைந்தோம் என நினைவில்லை. மராட்டிய மன்னர்கள் தமிழகத்து பகுதிகளை ஆட்சி செய்த போது இசை ஓவியம் போன்ற கலைகளில் நாட்டம் கொண்டளவு கட்டிடக்கலையில் சிறப்பு செய்யவில்லை மேலும் தமிழ் மொழியிலும் தமிழ் தொன்மக்கலைகளிலும் எவ்வித வளப்படுத்துதலையும் நிகழ்த்தவில்லை, குறிப்பாக சரபோஜி ஆங்கிலேயரை அரவணைத்தே ஆட்சி நடத்தினார் என நீண்ட வார்த்தைகளின் இடையே அந்த புதுக்கோட்டைப்பெண் உற்சாகமான குரலில் "ஏன் இல்லை... இருக்கிறது... மனோரா கோட்டை... சரபோஜி இரண்டாவது மன்னர் கட்டியது" இதோ பாருங்கள் என கூகுளில் காண்பித்தாள். இதுவரை அறியாத தகவல் அது, அலெக்ஸாண்டரிடம் வாட்டர்லூ போரில் மோதி வெற்றிபெற்ற ஆங்கிலேய நண்பனுக்காக நினைவுச்சின்னமாக கட்டப்பட்டிருக்கிறது இக்கட்டிடம். இரண்டு நாள் முன்பு வாஸகோடகாமா பற்றி கேட்டபோது முட்டக்கண்ணை உருட்டியவளின் உணர்விலிருந்து வந்த வரலாற்று தகவல் வாசிப்பிற்கான தளத்தை விரிவாக்கியிருக்கிறது.