சனி, 31 டிசம்பர், 2016

அடையாளத்திற்கு முன் சில கேள்விகள்

பெயரில்லா அழைப்பு வந்தது மனைவியின் கைப்பேசியில், "புது நம்பரா இருக்கு" என்று தொடர்ந்தவளிடமிருந்து புரிந்துகொள்ள முடிந்தது பேசுவது அவளது அப்பாவென்று. அனைத்து அழைப்புகளுக்கும் பத்து பைசா எனக் கூவி விற்றதால் வாங்கியிருக்கிறார், இதுபோல் அவர் வாங்கி பயன்படுத்தி தூக்கியெறிந்த சிம்கார்டுகளின் எண்ணிக்கை கணக்கிலடங்கக் கூடியதுதான் என்றாலும் நினைவில் இல்லை. மோடியின் ஆதரவாளர், பேசத்தொடங்கினால் கொட்டாவி விட்டபின்னரே நம்மை விடுதலை செய்வார்.

ரிலையன்ஸ் ஒரு ஆதார் அட்டைக்கு மூன்று சிம் கொடுப்பதாக தகவல் உலாவுகிறது, வெளிப்படையாக மூன்று என்றால் மறைமுகமாக எத்தனையோ. இதேபோல் மற்ற நிறுவனங்கள் அதனதன் தகுதிக்கு ஏற்றதுபோல் கொடுக்கலாம். கொடுக்கிறது. தெருவுக்குத் தெரு நிறுத்தத்திற்கு நிறுத்தம் குடை விரித்து, ஆதார் அட்டை மட்டும் போது "No Photo, No Proof" என கூவிக்கூவி விற்கிறார்கள், வாங்கிய 05 நிமிடத்தில் "சிம்" பயன்படுத்தலாம், எவ்வளவு வேகம்!.

உச்ச நீதிமன்றம் ஆதார் அட்டையினை பயன்படுத்த மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்கிறது, மறுபக்கம் மத்தியரசு வலிய வலிய அரசுத்திட்டங்களில் இதனை உள்ளீடு செய்ய பணிக்கிறது. அத்தனை திட்டங்களையும் முறைப்படுத்த முனைவதாக அரசை எண்ணும் பொழுதில் மேற்கொண்ட சிறு உதாரணம் வழியாக மாபெரும் சீரழிவிற்கு விதை போடுவதாகவே கருதவேண்டிய நிலை ஏற்படுகிறது.

ஒன்றரை வருடப் போராட்டத்திற்குப் பிறகு (குடும்ப அட்டையை வாங்க பட்ட பாட்டினை சொன்னால் அது பெருங்கதை), கிடைத்ததை பதிவு செய்ய ஆதார் கட்டாயம் வேண்டுமாம். இப்போ நீ எடுத்துத்தானே ஆகணும் என்ற ரீதியில் சிலர் சிரிப்பது போல தோன்றியது. நிச்சயமாக பிரம்மையோ பிசாசோ அல்ல. இணையத்தில் விண்ணப்பிக்கலாமென்று துளாவியபோது படிவம் மட்டுமே சிக்கியது. இணையமாக்கலை இங்கிருந்தே தொடங்கியிருக்கலாம், இதிலேதும் சிக்கலிருக்குமானால் ஆதாரும் பெருஞ்சிக்கலாகவே இருக்க முடியும்?

நேற்று பல்லாவரம் அல்லது பல்லவபுரம் நகராட்சிக்கு சென்றபோது, குறுக்குமறுக்காக சிலர் நடமாடுகிறார்கள் நம் காதுகளுக்கு கேட்குமட்டும் "ஆதார் அப்ளையா....ஆதார் அப்ளையா...." என்று ஆட்டோ வேணுமா எனக் கேட்பவரைப் போல விசாரிக்கிறார்கள். அவர்களில் ஒருவரிடம் சென்று கேட்டதும் "ஐ.டி புரூப்லாம் வச்சிருக்கியா.... மூணுமாசத்துல வாங்குறியா உடனே வேணுமா" என்றார். உடனே என்றால் எப்படி என வினாவவும் சிரித்தார் அருகிலிருப்பவரைப் பார்த்து. அங்கிருந்து விலகி வெளியிலிருந்த கடையில் படிவம் இருபது ரூபாய்க்கு வாங்கும்போது, ஒருவர் ஒரு பெண்ணை அழைத்துவந்து "இவங்ககிட்ட எரணூறு ரூவாக்குடு நாளைக்கே முடிச்சிவிடும்" என்றார். (அவரின் சிரிப்பிற்கான பதில் வெளிப்படையாக இங்கே) இணையமயமாக்கலின் அடிப்படையே ஊழலில்தான் துவக்கம் கொள்கிறது.

இப்பொழுது சில கேள்விகள். தீவிரவாதமில்லா இந்தியா? இணையமயமான இந்தியா? பணமற்ற பரிவர்த்தனை பொருளாதாரம்?
ஊழலற்ற இந்தியா?

பதில் உங்களிடம்.

2 கருத்துகள்:

Yarlpavanan சொன்னது…

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...