திங்கள், 10 மே, 2021

ஓவியர் ஆதிமூலம்

சிறுபிள்ளையில் எவருக்குமே உள்ள தன்மையோடு கையில் கிடைக்கும் எழுது பொருள் வழியே கோடுகளை கிறுக்கும் தனது ஆர்வத்தை அடுத்தடுத்து நகர்த்தும் எண்ணத்தில் மளிகைக் கடையை புறந்தள்ளி சென்னைக்கு பயணித்தவர் ஓவியர் ஆதிமூலம். பி.எஸ். செட்டியார் என்பவரது வழிகாட்டலில் சிற்பி தனபால் அவர்களை அடைகிறார். இவரது வழிகாட்டலில் ஓவியக் கல்லூரிக்குள் நுழையும் ஓவியர், பயிலும் காலத்திலேயே தனக்கென தனி பாணியை உருவாக்கி அதில் தொடர் பயணம் செய்தது போல புரிந்துகொள்ள முடிகிறது.

கோட்டுச்சித்திரங்களில் இவர் நிகழ்த்தியிருக்கும் நிழல் ஒளியில் கிட்டும் அதிகமான இருளுக்குள் மிளிரும் ஒளி, ஓவியத்தை காணும் பொழுதில் உள்ளிழுத்து நகரவிடாமல் செய்துவிடுகிறது. தத்ரூபமான படங்கள் தீட்டியிருக்கிறாரா எனத் தேடியதில் ஒரு பெண்ணின் முகம் தவிர்த்து எதுவும் கிடைக்கவில்லை. கோடுகளிலிருந்து வண்ணக் கலவை புரியும் அரூப ஓவிய முறைக்குள் சென்று தனது படைப்புகளை உருவாக்கியிருக்கிறார். இவரது சில படைப்புகளை "ஆதிமூலம் அழியாக் கோடுகள்" என்ற புத்தகத்தில் வெவ்வேறு ஆளுமைகளின் கட்டுரைகளோடும், பத்திரிக்கைகளில்  வெளிவந்த இவரது பேட்டிகளோடும் வெளியிட்டிருக்கிறார்கள்.

பயிற்சிக்காக இவரது இரண்டு ஓவியங்களை வரைந்து பார்த்ததில் இதுவரை செல்ல மறுத்த இருளுக்குள் சென்று மீண்ட உற்சாகமொன்று தோளில் செல்லமாக தட்டிவிட்டது.

காணொளி வடிவில்


கருத்துகள் இல்லை: