திங்கள், 26 ஜூன், 2023

மிதவை மீள் வாசிப்பு

மிதவை வாசித்து ஏழு ஆண்டுகள் இருக்கும் இன்னும் இரண்டாயிரத்து பதினைந்து வெள்ளத்தின் ஈரம் காய்ந்த பூஞ்சை தன்மீது படர்ந்திருக்க மீண்டும் கையிலெடுத்திருக்கிறேன் புதிதாக வாசிப்பது போலிருக்கிறது சண்முகம் பயணிக்கும் தண்டவாளங்கள் தடதடக்கும் பாதையிலிருந்து மீண்டதனாலோ என்னவோ நெருக்கமான புதினமாக என்னிடமுள்ள மறக்கவே இயலாத புத்தகம் என் பிறப்புக்கு ஓராண்டு முன் முதல் பதிப்பு கண்டது என நேற்றுதான் கவனித்தேன் இக்கதையில் சண்முகம் பட்டப் படிப்பில் இரண்டாவதாக வந்து வெற்றி பெற்றதை விவரிக்கும் இடத்தில் "மனம் தண்ணீரில் சிறகு முக்கிப் படபடத்தது" என்றொரு சொல்லாடல் எழுதப்பட்டிருக்கும் அதை இரண்டு நாட்களாக கடன் வாங்கியிருக்கிறேன் முதலில் வாசிக்கும் போது என்ன உணர்வில் இருந்தேன் என்பதை எண்ணினால் ஓரிரு காட்சிகளைத் தவிர்த்து எதுவும் நினைவுகளில் வர மறுக்கிறது சின்னதாக ஒரு குறிப்பு எழுதிய ஞாபகம் அதைத் தேடிப் பார்க்க வேண்டும் வேலையில்லா பட்டதாரிகள் இல்லாத காலமென்று ஏதேனும் உண்டா ஒருவேளை பட்டதாரிகள் இல்லாத காலத்தில் இருக்கலாமோ அங்கும் உணவுக்கும் உடைக்கும் எதற்கும் போராடவேண்டிய சூழல் எப்போதும் இருக்கத்தான் செய்யும் போல. எழுத்தாளர் நாஞ்சில் நாடன் சொல்லாடலில் நிகழ்வுகள் எவ்வித மிகைப்படுத்தலுமின்றி அதற்கான சித்திரங்களை கண்முன் நிறுத்துவதும் உணர்வுகளை நம்முள் கடத்துவதும் இயல்பாக இருக்கிறது.


  வாழ்வை ஒருவித விமர்சனப் பார்வைக்குள் புகுத்தி தன்னைத் தானே விடுவித்துக் கொள்ளும் முனைப்புடன் நகரும் கதையில் வழிநெடுக ஊடாடும் மனித வாழ்வினை எள்ளலுடன் நடைபாதையில் இருந்து விலகி அதனை பார்க்கச் சொல்லும் சொற்கள்.

மிதவை முதல் வாசிப்பின் போது எழுதிய சிறு குறிப்பு இந்த சுட்டியில்

கருத்துகள் இல்லை: