சனி, 31 ஜனவரி, 2026
நற்கீறல் - பச்சைமலை
இயற்கையை ரசிக்கவோ அனுபவிக்கவோ கொண்டாடவோ வேண்டுமென்றால் அதனதன் போக்கில் வேடிக்கைப் பார்க்கலாம். அதே இயற்கையை உணர்வோடு உள்வாங்கவும் அதோடு கலந்து போகவும் அதனை ஓவியமாக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று தோன்றுகிறது. அதிலுள்ள அசையும் தன்மையில் இன்றைய பொழுதையும் அசையாத வகைமையில் நேற்றையும் கோடுகளாக்கி அகம் மகிழ்வது நமக்கு உயிர் கொடுக்கும். ஒவ்வொருவரின் பார்வையும் வரையும் கோடுகளும் வேறு வேறு ஆனால் அடையும் உணர்வில் ஓவியத்துடன் ஒன்றிணைகிறோம்.
தாம்பரம் பச்சைமலையில் கடந்த வெள்ளிக்கிழமை நற்கீறல் நிகழ்வு நடைபெற்றது. நாங்கள் வரைந்து பழகினோம்.
செவ்வாய், 27 ஜனவரி, 2026
நற்கீறல் - திருநீர்மலை
லேபிள்கள்:
ஓவியம்
இருப்பிடம்:
Chennai, Tamil Nadu, India
சனி, 24 ஜனவரி, 2026
சாத்துக்குடி
தனித்துத் தொலைவிலிருந்து வருகையில் பேரூந்தோ ஈருருளியோ எதில் வந்தாலும் எங்கே சாப்பிடுவது என்ற நோக்கத்தில் உணவகத்தை நோட்டம் விட்டுக்கொண்டே வந்தால் வீடு வந்துவிடும். நண்பர்களோடு வெளியில் உணவருந்தும் போது இந்த கடையில் இதுதான் நல்லா இருக்கும் இதை இப்படி உண்டால் சுவையாக இருக்கும் என ஆணித்தரமாக சொல்வார்கள். எது சுவை என்றொரு கேள்வி எழும். எனக்குத் தெரிந்து உப்பு மற்றும் காரச்சுவை தவிர்த்து எதையும் சுவைக்க விடுவதில்லை நவீன உணவகங்கள்.
ஒருமுறை நண்பர் ஒருவர் அரத்தி (ஆப்பிள்) பழச்சாறு அருந்தினார் பக்கத்தில் இருந்தவர் விளையாட்டாக கொஞ்சம் கசப்பாக இருக்கிறது அல்லவா என்று கேட்டதும் ஆமாம் ஆமாம் என்று பரிமாறுபவரை அழைத்து சாற்றை மாற்றச் சொல்லி விட்டார். இவர் எதுவும் சொல்லாமல் இருந்திருந்தால் அவர் வெற்றுக் கோப்பையைத்தான் கீழே வைத்திருப்பார். இங்கே சுவை உணவில் இல்லாமல் இன்னொருவரின் கருத்துக்குள் புதைந்திருந்து வெளிப்பட்டுவிட்டது.
மும்பையில் தானா தொடர்வண்டி நிலையத்தில் இன் முள்ளங்கி (கேரட்) செங்கிழங்கு (பீட்ரூட்) சாறு எடுத்து இனிப்பு ஏதும் சேர்க்காமல் வாங்கிக் குடிக்கலாம். கண் முன்னே செய்து தருவார்கள். சில நாட்களாக அலுவலகம் செல்லும் ஆம்பிட் பூங்கா சாலையில் வட இந்தியர் நடத்தும் அப்படியொரு சாத்துக்குடி கடையில் ஒரு கோப்பை சாறு அருந்துவதும் அதன் தரமும் சுவையும் சிறப்பாக உள்ளது. இனி சுவை அறிய வேண்டும்.
லேபிள்கள்:
குறிப்புகள்
இருப்பிடம்:
Chennai, Tamil Nadu, India
ஞாயிறு, 18 ஜனவரி, 2026
நற்கீறல் - காஞ்சிபுரம் கோவில்
இந்த கிழமை நாங்கள் காஞ்சிபுரம் கோவில்களை வரைவதற்கு கிளம்பினோம்
வரதராச பெருமாள் கோவில் காட்சியை ஐந்து நிமிடத்தில் விரைவான கோடுகளால் வரைந்து பார்த்தேன்.
புதன், 14 ஜனவரி, 2026
எத்தனை கோணம் எத்தனை பார்வை - ஓவியர் ஜெயகுமார்
தனது ஓவியப் பயணத்திற்கு எழுத்தாளர் ஜெயகாந்தனுடனான நட்பு எவ்வளவு உறுதுணையாக இருந்திருக்கிறது என்பதை ஓவியர் ஜெயகுமார் கட்டுரைகளில் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துவதிலிருந்தே உணர்ந்துகொள்ள முடிகிறது. இவரது கோட்டோவியம் பற்றிய திறனாய்வுக் கட்டுரையில் ஏன் இவர் வண்ணங்களுக்கு வருவதற்கு இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டார் என்பதை எண்ணிப் புழுங்கும் கவிஞர் ரவி சுப்பிரமணியின் சொற்களில் தேங்கி நின்று அவரது ஓவியங்களை வாசித்துப் பார்த்தேன். ஓவியங்களில் ஊடாக ஓடிக் களிக்கும் கோடுகள் தான் வடிவங்களையும் அதை நோக்கும் பாதைகளையும் உள்வாங்க உதவுகிறது வண்ணங்கள் குறியீட்டுத் தன்மையுடன் வேறொரு பரிமாணத்தை நமக்கு வழங்குகிறது.
ஊர்வலம் சிறுகதையில் ஒரு உவமை "தனது மனைவியின் உடம்பிலிருந்து அவளது உயிரை தனியே பிரித்து அகழ்ந்தெடுத்து அதையே ஒளியாக பக்கத்தே வைத்தது போல் தோன்றியது அவருக்கு" இதை வாசிக்கையில் இவரது கவிதை மனம் பயணம் செய்து லயிக்கும் திசையில் நடந்து பார்ப்பது அழகாக இருந்தது. இரண்டொருமுறை வாசித்தப் பிறகு "தனியே பிரித்து...அதையே" என்ற சொற்கள் அவ்விடத்தில் தேவையில்லையோ என்று எனக்குத் தோன்றியது.
ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் "அன்று பெய்த மழையில்" திரைப்படத்தில் கலை இயக்குனராக உடன் இணைந்து பணியாற்றும் போது சில்க் சுமிதாவின் தன்னை தீவிரமாக விரும்பும் குணத்தை வெளிப்படுத்துவற்காக நடிகையை நேரடியாக பார்த்து வரைந்து படத்தில் பயன்படுத்தியதை அறிந்துகொண்டதும் அப்படத்தை வலையொளியில் (YouTube) தேடிப் பார்த்தால் இப்படியொரு வயது வந்தோருக்கான படம் வந்திருப்பதை கொஞ்சம் வியப்புடன் கண்டு கண் நகர்ந்தது அந்த ஓவியத்திற்கான தருணத்தைப் பார்த்ததும் நிறுத்திக் கோடுகளில் கண் பதித்தேன் வண்ணங்கள் தெளிவாக இல்லாததால் அதிக கவனம் செலுத்த இயலவில்லை.
ஓவியர் திரு.ஜெயகுமார் அவர்களை சந்திக்கும் ஒவ்வொரு பொழுதும் படைப்பு உருவாக்கம் பற்றிய அறிதலுக்கான வழியையும் உள்ளார்ந்த ஆற்றலையும் பெற்றுக் கொண்டேயிருப்போம். இப்போது அவரது "எத்தனை கோணம் - எத்தனை பார்வை" நூலை வாசிக்கும் போது கலை சார்ந்து அவருக்குள் விளைந்த வகைமைகளை எண்ணிப் பார்ப்பதும் அதனை மூலமாகக் கொண்டு கணக்கற்று விரியும் நமது புரிதல் படிநிலைகளும் பேரனுபவமாக உள்ளது. தனது கலை நுட்பங்களை வெளிப்படுத்த அவர் இன்னும் பல நூல்கள் படைக்க வேண்டும்.
வெள்ளி, 2 ஜனவரி, 2026
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)












