சனி, 9 ஏப்ரல், 2016

மயான காண்டம் - வாசிப்பு

சிறுகதையோ, புதினமோ எழுதும் எழுத்தாளனின் பெயரைக்கேட்டால் அல்லது கண்டால் கதையின் பாத்திரமும் அதிலுள்ள சிறு பகுதியேனும் நினைவில் வழிந்தோடும். லஷ்மி சரவணக்குமார் பெயர் வந்தால் குதிரை பந்தயக்காரனுக்கும் குதிரைக்குமான உறவைச் சொல்லும் கதை ஓர் அடையாளமாக முன்வந்து முதுகு சிலுத்து நிற்கும். இனி மயான காண்டம் கதை தொடர்ச்சியாக வந்து அகம் குடைவதை மறுக்க இயலாது.


மயான காண்டம் சிறுகதை தொகுப்பில் விகடனில் வாசித்த குதிரை பந்தயக்காரன் கதையும் சேர்ந்திருக்கிறது. ஒரு துண்டு வானம்.


திரையுலகம், நாடக மேடை கலைஞர்கள் பற்றிய கதைகளை நிரப்பிக்கொண்டிருக்கிறது உயிர்மை வெளியீட்டில் வந்திருக்கும் இப்புத்தகம். வள்ளி திருமணம் என்ற கதையில் நாடக மேடைக்கு பின்பக்கமாய் நிகழும் அவசரக் கலவிகளின் காதலையும் வள்ளித்திருமண நாடகத்தையும் ஓர் நேர்கோட்டில் இணைத்து சீரழிந்திருக்கும் கலையையும் மக்களின் ரசனையையும் துகிலுரிக்கிறார்.


மயான காண்டம் கதை அரிச்சந்திர நாடகத்தில் அக்கதாபாத்திரத்தை நிகழ்த்திக்காட்டும் நாயகன் அரிச்சந்திரனாகவே தன்னையுணர்ந்து பொருள் துறந்து காசியின் தெருக்களில் முட்டித்திரிந்து பிணம் எரிப்பவனாக மாற்றம் காண்பதை நிகழ்த்திக் காட்டுகிறது.


ஓரிரு காதல்கதைகள்.
Fake என்றொரு கதை திரையுலகத்தில் இயக்குனர் அவதாரமெடுக்கும் ஒருவனின் மனம் புகழுக்குப்பின்னால் கிளைதாவும் உண்மையை அல்லது பொய்யை சித்தரித்துள்ளது. "விளைவுகளை ஏற்படுத்தாத எந்தவொரு கலைப்படைப்பும் அடிப்படையில் தனக்குள் போலித்தனத்தையே அதிகமும் கொண்டதாகவே உள்ளது " என்ற வாசகத்துடன் தொடங்குகிறது இக்கதை.
ஒரு அவசர கடிதம் கதை திரையுலகிலிருப்பவனின் பொருளாதார இயலாமையை விவரணை செய்கிறது. உதவி இயக்குனராகயிருக்கும் இவரிடம் இருந்து ஆக்கமான திரைக்கதை ஒன்றை எதிர்பார்க்கும் எண்ணங்களை விரித்து காட்சிப்படுத்துகிறது இவரின் கதைகள்.

4 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

விளக்கம் நன்று சந்சர்ப்பம் கிடைத்தால் வாங்கி படிப்பேன் நண்பரே

K. ASOKAN சொன்னது…

நல்ல விளக்கம். பகிர்வுக்கு நன்றி

சீனு சொன்னது…

வாங்க நினைத்த புத்தகம.. சுருங்கச் சொன்னாலும் நல்லதொரு விமர்சனம்..

Yarlpavanan சொன்னது…

அருமையான பதிவு