புதன், 30 ஆகஸ்ட், 2017

முட்டக்கண்ணும் சரபோஜியும்

உணவுநேரமானாலும் காபி இடைவேளையானாலும் உப்பு சப்பற்ற பேச்சுகளையே விவாதிக்க பழகியிருக்கிறோம். அடுத்தவரின் அந்தரங்ககங்களையே பேசித்தீர்ப்பது எப்போது தீருமோ என எண்ணுமளவு நடிகர்கள் அரசியல்வாதிகள் தவிர்த்து பேசுவதற்கு எதுவுமற்றே உலாவுகிறோம் ஒரே குட்டைக்குள் உழல்கிறோம். இவர்கள் யாருக்கும் தாம் விவாதிப்பதாக நினைத்து அரட்டை அடிக்கும் பொழுதில் அப்பொருள் அல்லது அதன் தொழில்நுட்பம் சார்ந்து ஆழமான அறிவோ பார்வையோ இருப்பதில்லை கூட்டத்தில் ஒருவன் கொஞ்சம் விளக்க முற்பட்டால் வார்த்தைகளை தடம் புரட்டி வேறு தேவையற்ற பொருள் நோக்கி இயல்பாக நகர்த்திவிடும் ஆட்களுமுண்டு.

சில சமயங்களில் யாருக்கும் பேச வார்த்தைகளின்றி காஃபியை விழுங்கிக் கொண்டிருக்கும் போது தெறிப்பான ஒரு கேள்வியை உதிர்த்து விட்டால் போதும், பற்றிக்கொள்ளும். இத்தருணங்களில் சிலர் இதுவரை அக்கூட்டத்தில் பேசவே பேசாத தகவல்களை அள்ளிவிடுவார்கள். அதுவன்றோ விவாதத்தளம் என்ற நிலை உணரும் இடம்.

புத்தர் எப்படி இறந்தார் எனத்தெரியுமா என்ற கேள்வியை புதிதாக பௌத்தம் அறிந்து கொண்டிருப்பவரிடம் கேட்டதில் தொடங்கியது தாவித்தாவி சரபோஜி மன்னரிடம் வந்தடைந்தது எந்த இடத்தில் தடம் புரண்டு இவரை அடைந்தோம் என நினைவில்லை. மராட்டிய மன்னர்கள் தமிழகத்து பகுதிகளை ஆட்சி செய்த போது இசை ஓவியம் போன்ற கலைகளில் நாட்டம் கொண்டளவு கட்டிடக்கலையில் சிறப்பு செய்யவில்லை மேலும் தமிழ் மொழியிலும் தமிழ் தொன்மக்கலைகளிலும் எவ்வித வளப்படுத்துதலையும் நிகழ்த்தவில்லை, குறிப்பாக சரபோஜி ஆங்கிலேயரை அரவணைத்தே ஆட்சி நடத்தினார் என நீண்ட வார்த்தைகளின் இடையே அந்த புதுக்கோட்டைப்பெண் உற்சாகமான குரலில் "ஏன் இல்லை... இருக்கிறது... மனோரா கோட்டை... சரபோஜி இரண்டாவது மன்னர் கட்டியது" இதோ பாருங்கள் என கூகுளில் காண்பித்தாள். இதுவரை அறியாத தகவல் அது, அலெக்ஸாண்டரிடம் வாட்டர்லூ போரில் மோதி வெற்றிபெற்ற ஆங்கிலேய நண்பனுக்காக நினைவுச்சின்னமாக கட்டப்பட்டிருக்கிறது இக்கட்டிடம். இரண்டு நாள் முன்பு வாஸகோடகாமா பற்றி கேட்டபோது முட்டக்கண்ணை உருட்டியவளின் உணர்விலிருந்து வந்த வரலாற்று தகவல் வாசிப்பிற்கான தளத்தை விரிவாக்கியிருக்கிறது.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அலெக்ஸாண்டரிடம் வாட்டர்லூ போரில் மோதி வெற்றிபெற்ற ஆங்கிலேய நண்பனுக்காக நினைவுச்சின்னமாக கட்டப்பட்டிருக்கிறது இக்கட்டிடம். :-)

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல பகிர்வு.