செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

தென்காசி சாரல்

இரண்டு நாட்களாக குளிர்ந்த காற்றும் சாரலும் சூழலை நிசப்தமாக்கி வைத்திருந்தது கீழப்பாவூரில். பொதுவாக குற்றால சாரலை ரசிப்பதற்கெல்லாம் அப்பா அழைத்துச் சென்றதில்லை "சீசன்" தவிர்த்த அருவியில் நீர் விழும் இல்லை கொட்டும் நாள்தான் செல்வது வழக்கம். சீசன்களுக்கு அப்பா தரும் விளக்கம் "அய்யப்பசாமிகள் பேண்டு போட்டுருக்கும்" என்பதும் "வெளியூராளுவளுக்கு நேந்து விட்டுருக்கும்" என்பதும் தான்.

இப்பொழுதும் நல்ல சீசன் ஊரெல்லாம் சாரல் என்றால் குற்றாலம் எப்படியிருக்குமென உணர முடியும். சில முறை நண்பர்களுடன் சென்று வந்ததுண்டு. நான்கு நாட்கள் ஊரிலிருந்தும் போய்வர இயலாமல் போனது. மாலை தென்காசியில் பேருந்து ஏற வரும் பொழுது இன்னும் குளுமை அதோடு சூடாக இரண்டு உளுந்தவடையும் வாழைக்காய் பஜ்ஜியும் தேங்காய் சட்னியோடு உள் தள்ள இதமானது பொழுது. அதன்முன் லயன் காமிக்ஸ் புத்தகங்கள் நான்கையும் "காக்கைச் சிறகினிலே" இலக்கிய மாத இதழையும் வாங்கி பைக்குள் சொருகிக்கொண்டதை சொல்லாமல் விட முடியுமா.

செங்கோட்டையிலிருந்து ஐந்து மணிக்கு கிளம்பி தென்காசிக்கு ஐந்து இருபதுக்கு வரும் அரசுப் பேருந்தில் ஏறுவது மூன்று வகையில் சிறந்தது. முதலாவது இருக்கைகள் மற்றும் இன்னபிற அம்சங்கள் மற்ற நேரத்து வண்டிகளைவிட அம்சமானது.

இரண்டாவது மதுரை சுங்கச்சாவடி அருகே "ஹரி" என்றவொரு உணவகத்தில் நிறுத்துவது, நான் இதுவரையிலான பயணத்தில் இங்கு உண்டதில்லை, உண்ணுமளவுக்கு பையில் தெம்பில்லை. ஆனால் ஒண்ணுக்கு இரண்டுக்கு போக(கட்டணமில்லாமல்) மற்ற இடங்கள் போல ஐந்து ரூபாய் கொடுத்துவிட்டு மூச்சைப்பிடித்துக்கொண்டு வெளிவரவேண்டியதில்லை என்பது சிறப்பென்றால் அங்கிருக்கும் புத்தகக்கடை வெகுசிறப்பு.

மூன்றாவது காலையில் ஏழுமணிக்கு வீடடைந்து விடலாம். இதைவிட அரசுப்பேருந்தில் வேறென்ன வேண்டும், மற்றைய வண்டிகளையும் இதுபோல் வழங்கலாம் பராமரிக்கலாம்.

1 கருத்து:

ஸ்ரீராம். சொன்னது…

சென்னையிலும் சாரல்!