சனி, 23 நவம்பர், 2024

காலவெளி - வாசிப்பு

வாசிப்பின் வழியில் மீண்டும் வந்தடைந்து மேலோங்கிய ஓவியம் பற்றி அறிந்து கொள்ளவும் வரைந்து பழகவும் தொடங்கிய போது எழுத்தாளர் வா.மணிகண்டனின் நிசப்தம் இணையதளத்தில் ஓவியர்களுக்கான காலவெளி நூல் அறிமுகம் கிடைத்தது அப்போதும் அதற்கு சில ஆண்டுகள் கழித்த பிறகும் தேடியபோது புத்தகம் கிடைக்கவில்லை. இரு வாரங்களுக்கு முன்பு எழுத்தாளர் விட்டல்ராவ்-க்கு விளக்கு விருது வழங்கப்படுவதாக முகநூலில் வாசித்ததும் தேடினேன் அமேசானில் இருந்தது ஆனால் பனுவல் புத்தகக் கடையில் வீட்டுக்கு அனுப்பும் செலவையும் சேர்த்து அதைவிட குறைந்த விலையில் வாங்க முடிந்தது.

கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு நால்வர் குழுவாகச் செயல்பட்டு ஓவியக் காட்சிகள் வைத்தவர்கள் பிரிந்து போகிறார்கள். சக்கரவர்த்தி பிரிவுக்குப் பின்னர் கனடா சென்றுவிடுகிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றுகூடி குழுவை மீட்டெடுக்கும் முயற்சியின் பொழுதில் சக்கரவர்த்தி வெளிநாட்டில் இருப்பதால் அவரது படைப்பு மட்டும் தவிர்க்கப்படுகிறது. அதற்கு ரூடால்ப் ஒரு காரண்மாக இருக்கிறான். பிரசன்னன் தன்னிடம் தெரிவித்திருந்தால் செனாய் வாசிப்பவன் ஓவியத்தை தந்து உதவியிருப்பேன் என ஒரு கட்டத்தில் தெரிவிக்கிறான்.

ஓவியன் தன் படைப்புக்குள் பயணிப்பது அதற்கான கருவையும், வண்ணங்களையும் தெரிவு செய்வது, நீர்வண்ணமா எண்ணெய் வண்ணமா, சிற்பமா என படைப்பாளிகளின் மனநிலையை சித்திரம் வடிக்கும் எழுத்து. இந்த புனைவு முன் பின் என மாறி மாறி வருவதனாலும், சக்கரவர்த்தியின் ஓவியம் சிந்தியாவின் ஆங்கிலோ-இந்திய வீட்டினுள் நுழைவதை இருவேறு கோணத்தில் நம் மனக்காட்சிக்கு விருந்தாக்குவது வாசிப்பின்பத்தை பெருக்குகிறது. வரவேற்பறையை தாண்டும் போது அந்த ஆங்கிலோ-இந்திய வீட்டை பற்றி விவரித்துச் செல்வதும், அவர்களது நேற்றைய மற்றும் நாளைய திசைகளைப் பற்றிய கவலையில்லாத வாழ்க்கை சக்கரவர்த்தியின் பார்வையில் விவரித்துச் செல்வது அந்த வாழ்க்கை முறையை அறியாத என்னைப் போன்றோருக்கு புதியது. பொதுவாக அவர்களுக்கு பல்லாவரத்திலும் ராயபுரத்திலும் உறவுகள் இருப்பதையும் கவனப் படுத்தியிருக்கிறார்.

பல்லாவரம் மலையை கடக்கும் போதெல்லாம் எனது மனதில் ஒரு ஏக்கம் தழுவிக் கொள்ளும், எப்போது இந்த மலையிலிருந்து நகரத்தை பார்க்கப் போகிறாம், திரிசூல மலையிலிருந்து வானூர்தி நிலையத்தை பார்க்கப் போகிறோம் என்று. இந்தப் புனைவில் வரும் ஓவியக் குழு பல்லாவரம் மலைக்கு நேரடியாக பார்த்து வரையும் பயிற்சிக்காக செல்வதை வாசித்ததும் ஏக்கம் அதிதீவிரமாக பரவியது.

ஒவ்வோரு ஓவியருக்குமுள்ள தனித்தனி குணநலங்களை விரிவாக அலசி ஆராய்வது இயல்பாகவும் இப்போதைய ஓவியர்கள் இதனை வாசிப்பதன் மூலம் தங்களது எண்ணங்களை இந்த அனுபவத்தின் வழியே செதுக்கிக் கொள்ள இயலும். சக்கரவர்த்தியின் படைப்பாளுமை, தர்மன் மற்றும் முருகேசனின் ஓவிய விற்பனை விளம்பரம் சார்ந்த அணுகுமுறை, உன்னி கிருஷ்ணனின் படைப்புத்திறன், வராகமூர்த்தியின் விமர்சன எதிர்பார்ப்பு, ஓவியத்திற்கு சட்டம் அமைப்பதுவும் விற்பனைக்கும் துணையாக நிற்கும் மதன்லால் போன்றவர்கள் பற்றி ஒரு கண்காட்சிக்கான தயாரிப்பின் பின்னணியில் எழுத்தாண்டிருப்பது எந்த தொய்வுமில்லாத வாசிப்பனுவத்தை வழங்கக்கூடியதாகவும் உள்ளது.

இப்போது அருங்காட்சியகம் அந்த கால கட்டத்தில் அரும் பொருட்காட்சியகம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது, அந்தச் சூழலுக்குள் இப்போது சென்று வருவது நூற்றாண்டு கடந்த கலைப் படைப்புகளோடு உரையாடுவது போன்ற தோற்றத்தையும் மன நிறைவையும் தரக் கூடியது. ஏன் இங்குள்ள தேசிய காட்சிக் கூடத்தின் ஒரு பகுதியை தற்கால ஓவியர்கள் படைப்புகளை காட்சிப் படுத்துவதற்கென ஒதுக்க இந்த அரசு ஆவன செய்ய வேண்டுமென மனது அடித்துக்கொள்ளும். இங்குள்ள நடன அரங்கம் இப்புதினம் நிகழும் காலத்தில் காட்சிக் கூடமாக செயல்பட்டதென்பது வியப்பை அளித்தது.

சக்கரவர்த்தி மற்றும் உன்னி கிருஷ்ணன் இருவரது படைப்பாக்கம் குறித்து விவரிக்கும் அளவுக்கு மற்ற இருவர் பற்றி அவ்வளவாக உள்ளார்ந்து  98 ஆவது பக்கம் வரை சொல்லவில்லை என்று நினைக்கிறேன் இல்லை நான் ஏதேனும் தவர விட்டுவிட்டேனா என்று தெரியவில்லை. உன்னியின் வண்ணங்கள் அடுத்தடுத்த கண்காட்சியில் வெம்மையிலிருந்து குளிர் நிறங்களுக்கு மாறிவருவதும், சக்கரவர்த்தி போர் சூழலால் சிங் வெள்ளை எண்ணெய் வண்ணம் கிடைக்காமல் அந்த வகைமையை விட்டுவிட்டு முழுவதும் வேறு பாணியை கைகொள்கிறார். இவரின் படைப்பு உக்கிரத்தை முழுவதுமாக விவரிக்காமலேயே அதன் தன்மையை உணரும் வடிவில் எழுத்து கைகூடியிருப்பது சிறப்பாக எண்ணத் தோன்றுகிறது.


ஞாயிறு, 10 நவம்பர், 2024

அக்கா குருவி 12

 பட்டத்தின் வால் 

அறுந்து விழுவது போன்ற மாயத்தில்

தங்களை விடுவித்துப் பறந்தன

கிழக்கில் வெளிச்சமில்லா

காலையில் 

ஞாயிறு, 3 நவம்பர், 2024

Manifestoes In The open Air - ஓவியக் கண்காட்சி

                எதிர்பாராத பொழுதில் கண்ணில் பட்டது லலித் கலை கழகத்தில் நடைபெறும் ஓவியக் கண்காட்சியின் ஒளிப்படங்கள். அஸ்விதா கலைக்கூடம் நிகழ்த்தும் இந்த குழு ஓவியக் கண்காட்சியில் ஐந்து ஓவியர்கள் அவர்களது படைப்புகளை காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். சிலருக்கு விருந்து, சிலருக்கு மருந்து, சிலருக்கு பரந்து/பறந்து என்று பெரிய பெரிய ஓவியங்கள். ஏனென்று தெரியவில்லை வழக்கமாக உள்ளே இருக்கும் கருப்பு இருக்கைகள் வெளியே அமர்த்தப் பட்டிருந்தன. கடந்த இரு வாரங்களுக்கு முன் நடைபெற்ற கண்காட்சியின் போது நிதானமாக அமர்ந்து ரசித்து வந்தோம். இந்த முறை அக்கொடுப்பினை இல்லை.

பசிஸ்ட் குமார்
எல்லாமே அளவில் பெரியதான ஓவியங்கள் என்பதை ஏற்கனவே சொல்லிவிட்டாலும் மீண்டுமொருமுறை வலியுறுத்த வேண்டியுள்ளது. இரண்டு கித்தான்கள் ஒன்றாக இணைத்து வைக்கப்பட்டிருந்தது, பார்வையாளருக்கு வலது பக்கம் மார்பளவு வரை வரையப்பட்ட மனிதமுகம் பின்புலத்தில் பச்சையும் வானமும் பரந்திருந்தது இடதுபக்க கித்தானில் அதன் தொடர்ச்சியான நிலப்பரப்போடு கல் தூண் போன்ற அமைப்பு, மனிதனும் இந்த கல்லும் ஒன்று என்று எண்ணிக் கடந்து போனேன். அடுத்து இன்னொரு மனிதன் படுத்திருக்கும் தோரணையில் அவன் மீது வெயில் மேலோட்டமாக படர்ந்திருக்கிறது. அடடா என்று சற்று பின்வாங்கிப் பார்க்க வைத்தது இரண்டு நிலப்பரப்பு ஓவியங்களும்.

மற்றொரு ஓவியம் ஒரு கனவுச் சித்திரம் போல இருந்தது. மனித உருவிலிருக்கும் மரக்கட்டையின் கண்ணாடிப் பிம்பம், அதில் மணல் பரப்பும் தொடு வானமும், ஓவியத்தின் பின்புலமும் மணற்பரப்பு மற்றும் தொடுவானம். நினைவிலிருந்து எழுதுவதால் அது கடல் பரப்பா அல்லது தொடுவானமா என்று இப்போது சற்று குழப்பமாக இருக்கிறது. கண்ணாடி இருக்கும் மர அலமாரியின் மேல் ஆணுக்குத் தேவையான அலங்காரப் பொருட்கள், சிகரெட், கவிழ்ந்து கிடக்கும் தேநீர் கோப்பை, கீழுள்ள அலமாரியில் இருக்கும் பிள்ளையார், பரந்து சென்று விழுந்து கொண்டிருக்கும் தாள், தூரத்து குப்பைகள். சிறந்த ஆழ்மன வெளிப்பாடுடைய ஓவியம். இதனை கண்டு திரும்பிய போது அந்த மார்பளவு மனிதமுகத்தின் கண்ணில் கல் தூணைப் பார்த்தேன்.மாயம்.

நிதி அகர்வால்
வண்ணக் கிறுக்கல்கள், குழந்தைத்தனம், துடிப்புமிக்க வேகம், கனவு என விரியும் இன்னொரு படைப்பாளி.

பருல் குப்தா
கோடுகள் வடிவங்கள் செய்யும் மாயத்தை நீர்வண்ணத்தில் பிசிறில்லாமல் அழகான வடிவமைப்பாக, கொஞ்சம் பொறுமையாக நின்று ரசித்தால் மாய வெளிக்கான திறப்பாக அமையும் ஓவியங்கள் இவருடையது. சில வினாடிகள் பார்த்துவிட்டு கதை கட்டுவது அதற்கு உண்மையாக இருக்க இயலாத தன்மையையே வெளிப்படுத்தும்.

பெனிதா பெர்சியாள்
இயற்கையின் பயணம், தனக்கு கிடைத்த மரம், கல், ஈசலின் இறகு, மண், என சுற்றியுள்ளவைகளைக் கவனிக்கும் தன்மையும் அதனை படைப்பாக்கத்திற்காக எடுத்துக் கொள்வதும் நாம் இன்னும் இயற்கையோடுதான் இருக்கிறோம் என்பதை எடுத்து இயம்புவது போலுள்ளது இவரது படைப்புகள். மரங்கள் தான் புத்தகம் என்பதனை தனது அலமாரியிலுள்ள சிலையாகிப் போன புத்தகங்களைக் கொண்டு நமக்கு ஏதேனும் மறைமுகமாக உரைக்கிறாரா இல்லை அதிலுள்ள பெயர்களும் அவை அடுக்கியிருக்கும் வரிசைகளும் ஏதேனும் சொல்ல முயற்சிக்கின்றனவா என்பதை வாசிக்க இன்னும் பொழுது வேண்டும்.

நீரஜ் படேல்
மின் பொருட்களிலுள்ள அட்டையின் இணைப்புக் கோடுகள் போன்ற வடிவமைப்புள்ள ஓவியங்கள், வடிவங்களை ஒருங்கிணைப்பு செய்து பார்வை விசித்திரத்தை வழங்கும் படைப்புகள்.




ஒளியின் கண் - 2