என்னடா
உன் சாலையிலும் படியிலும்
தலைகள்
கண்டேன் இல்லை கால்களை
ஓரம் வழிகண்டு
தார்ச் சாலையில் குன்றேறினேன்
அவசர ஊர்தியிரண்டு கண்டேன்
நீயும் கண்டிருப்பாய் என்றெண்ணி
கடந்து வந்தேன்
உன்
திருமேனி காண
வழியில் அடி தேய
நெருக்குகிறது உடல்கள்
நீயும் கண்டிருப்பாய் என்றெண்ணி
விலகி
பின்புறம் சென்றேன்
சமோசாக்களுக்கும் போண்டாக்களுக்கும்
மயில் றெக்கைகளுக்கும்
இடையில்
வேண்டுதல் பொங்கலும்
புளிச்சோறும் நிறை கைகள்
தெப்பம் காண மனம் கொள்ளாமல்
நகர்ந்த பொழுதில்
மகள் அடுக்கிய கல்வீட்டை
நீயும் கண்டிருப்பாய் என்றெண்ணி
தீபத்தின் புகை கடந்து
உன் அண்ணனைக் கண்டோம்
அவன் ஏன் வெளியில் இருக்கிறான்
என்ற மகளின் வில்லங்க வினாவிற்கு
நேற்று விடையளித்த நினைவோடு
திருநீறு கொண்டு படியிறங்கினேன்
முட்டிக்காலில் படியேறிய பெண்ணையும்
உதட்டுச்சாயத்தைத் தழுவி வந்த
அரோகராக்களையும்
வியர்வை வேடிக்கைப் பார்ப்பதை
நீயும் கண்டிருப்பாய் என்றெண்ணி
விடைபெறுகிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக