செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

குன்றத்தூர் முருகா

அப்பனே முருகா 

என்னடா 

உன் சாலையிலும் படியிலும் 
தலைகள் 
கண்டேன் இல்லை கால்களை 
ஓரம் வழிகண்டு 
தார்ச் சாலையில் குன்றேறினேன் 
அவசர ஊர்தியிரண்டு கண்டேன் 
நீயும் கண்டிருப்பாய் என்றெண்ணி 
கடந்து வந்தேன் 
உன் 
திருமேனி காண 
வழியில் அடி தேய 
நெருக்குகிறது உடல்கள்
நீயும் கண்டிருப்பாய் என்றெண்ணி 
விலகி
பின்புறம் சென்றேன் 
சமோசாக்களுக்கும் போண்டாக்களுக்கும் 
மயில் றெக்கைகளுக்கும் 
இடையில் 
வேண்டுதல் பொங்கலும் 
புளிச்சோறும் நிறை கைகள் 
தெப்பம் காண மனம் கொள்ளாமல் 
நகர்ந்த பொழுதில் 
மகள் அடுக்கிய கல்வீட்டை
நீயும் கண்டிருப்பாய் என்றெண்ணி 
தீபத்தின் புகை கடந்து 
உன் அண்ணனைக் கண்டோம் 
அவன் ஏன் வெளியில் இருக்கிறான் 
என்ற மகளின் வில்லங்க வினாவிற்கு 
நேற்று விடையளித்த நினைவோடு 
திருநீறு கொண்டு படியிறங்கினேன் 
முட்டிக்காலில் படியேறிய பெண்ணையும் 
உதட்டுச்சாயத்தைத் தழுவி வந்த 
அரோகராக்களையும் 
வியர்வை வேடிக்கைப் பார்ப்பதை 
நீயும் கண்டிருப்பாய் என்றெண்ணி 
விடைபெறுகிறேன் 

கருத்துகள் இல்லை: