திங்கள், 12 மே, 2025

மிதிவண்டி

குன்றத்தூரில் உள்ள தமிழ்நாடு மிதிவண்டிக் கடையில் மூத்தவளுக்காக குட்டி வண்டி ஒன்றை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினோம். நான், ரத்திகா மற்றும் இயல் மூவரும் சென்றோம். மிதிவண்டியை வாங்கி ஈருருளியின் பின்னால் கட்டிய போது இயல் தனக்கும் ஒன்று வேண்டுமென அழத் தொடங்கி விட்டாள். இன்னொரு நாள் வாங்கலாம் என்று சொன்ன பிறகும் அழுகையுடன் வீடடைந்தோம்.

நாற்பத்தைந்து நாட்களுக்குள் ஒரு முறை இலவயமாக பழுது பார்த்துக் கொள்ளலாம் என்ற அதியற்புதமான வாய்ப்பும் வழங்கப்பட்டது. 

சில மாதங்களில் வண்டி ஓட்டுகையில் சங்கிலி தானாகக் கழன்று கழன்று தொந்தரவுக்கு உள்ளானது. இரு நாட்கள் பார்த்துவிட்டு ஒருநாள் மாலையில் அதனை ஒக்கிடுவதற்காக ஈருருளியில் எடுத்துச் சென்றேன். அங்கே வெளியில் இருக்கும் பழுது நீக்குபவர் பார்த்துவிட்டு கண்ணாடி அறைக்குள்ளிருப்பவரிடம் சென்று கூறியதும் அவர் புதிய சங்கிலி மாற்றவேண்டும் செய்யலாமா என்றதும் விலையை கேட்டுவிட்டுச் சரியென்றேன்.

பின்னர் இன்னும் சில மாதங்களில் மீண்டும் அதே தொந்தரவுக்கு உள்ளானது. என்னடா இது என்று மனம் ஊரிலிருந்த எனது மிதிவண்டியில் சுற்ற ஆரம்பித்தது ஒருமுறை பின் பக்கச் சக்கரத்தில் கல் வெட்டியதால் அங்கங்கே ஏற்பட்டிருந்த பிளவுகளால் மேல் ரப்பர் பகுதியை மாற்றியதும் நிறைய முறை ஓட்டை விழுந்ததால் உள்ளிருக்கும் ரப்பர் குழாயினையும் மாற்றியதும் நினைவில் ஊடாடியது. சங்கிலி மாற்றியது வரலாற்றில் இல்லை என்பது விளங்கியது.

மீண்டும் அந்தச் சங்கிலியை மாற்ற நேர்ந்தது. அடுத்த சில நாட்களில் அதே போல் கழன்று விழுந்தது. இந்தமுறை திசை மாறினேன். நாங்கள் இருக்கும் பகுதி குன்றத்தூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான் வருமென்றாலும், அடையாற்றுப் பாலத்தைத் தாண்டியதும் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனகாபுத்தூர் தான் மிக அருகாமை நகரம். 

பேருந்து நிலையத்தின் மேற்குப் பகுதியில் மிதிவண்டிகள் நிறைந்த தூசி படிந்த ஒரு கடை, பாதாளச் சாக்கடைப் பணிகள் நடந்து கொண்டிருந்ததால் புழுதியை நன்றாகப் பூசிக் கொண்டு மாலை வெயிலுக்கு பழுப்பு நிறத்தை வெளிப்படுத்தியது. மிதிவண்டியை உருட்டிக் கொண்டே சென்றேன். பிரச்சினையை சொன்னதும் கண்ணாடியை உயர்த்தி வண்டியை கவனித்தவர், சில நிமிடங்களில் சங்கிலியின் ஒரு பல்லை மட்டும் கழற்றிவிட்டு பின்னர் இணைத்து மாட்டிவிட்டார் இன்று வரை ஓடுகிறது.

கருத்துகள் இல்லை: