வியாழன், 8 செப்டம்பர், 2016

கதவு - சிறுகதை தொகுப்பு

நேற்றுதான் கி.ராவுக்கு விருது வழங்கும் விழாவில் எஸ்.ராமகிருஷ்ணன் பேசிய உரையை கேட்டேன். கி.ராவின் படைப்பில் அவர் பேசிய கோபல்லபுரத்து மக்கள் புதினத்தை வாசித்திருக்கிறேன்.  இப்பொழுது கதவு சிறுகதை தொகுப்பு. பதிமூன்று சிறுகதைகள் உள்ளடக்கம். முதல் சிறுகதை கதவு, மனதிற்கு மிகநெருக்கமானதாக ஓர் உணர்வு. இதற்கு முன் வாசித்தது போன்ற நினைவெழுந்தது, எங்கள் வீட்டிலும் கதவுக்கும் எங்களுக்குமான உறவு அகக்கிளர்ச்சி நிறைந்தது, அதுவொரு காரணமாயிருக்கலாம். சீனிவாசனும் லட்சுமியும் தொலைத்தது போல நாங்களும் சிலவற்றை தொலைத்திருக்கிறோம்.

இரண்டாவது கதையில் புல்லை (மாடு). சீதனமாக கிடைத்த மாடு இறந்தபின் அயிரக்கா மனமுடைந்து கிடப்பதும், பக்கத்துவீட்டு முத்தையா வந்து திட்டித் தீர்த்து தொட்டண்ணனை அழைத்துக்கொண்டு கோவில்பட்டி போய் மருத்துவரை கூட்டிவர கிளம்புகிறார்கள் மருத்துவர் வர இயலாத சூழலில் ஊர்வந்த பொழுதில் புல்லை கண்மூடியிருந்தது. கூட்டு மாடு சேர்ந்து உழுதவனுக்கு வாக்கு தவறாமல் மூன்று நாள் பிறகு மாட்டிற்கு பதிலாக நுக்காலை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு அவனோடு போவதும் அதை அயிரக்கா பார்த்து முகம் புதைத்து கொள்வதுமாக கதை முற்றுகிறது.

மின்னல் கதை கிராமத்து பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளை பற்றி எழுதியிருப்பது. ஒரு பெண்ணும் குழந்தையும் அந்த சூழலில் பொருந்தும் பொழுதும் விலகிப்போகும் போதும் பேருந்துக்குள் நிகழும் சூழல் மாற்றங்களை ஓவியம் போல் வரைந்திருப்பார்.

படித்ததில் பிடித்தது என்பதைவிட பாதிக்கும் சில கதைகள் இருக்கும் சாவு, மாயமான் மற்றும் கரண்டு அந்த வகையில் சேர்க்கலாம். சுமங்கலியின் கோலம் கணவனை இழந்தபின் பதினாறாம் பக்கம் நாடகம் போல நிகழ்ந்து கலைக்கப்படும் நெஞ்சறுக்கும் பொழுதை சாவில் சொல்லியது போலவே. அரசு கொடுக்கும் உதவித்தொகையை நம்பி கிணறு வெட்டி விவசாயத்தில் தோல்வியுற்று சொத்தை இழந்து ஊர்விட்டு ஊர் பிழைக்கப்போகும் குடும்பத்தை பற்றியது மாயமான் கதை.

பலாப்பழம் கதையில் வருவதுபோல் உண்மையில் நிகழுமா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும், அதில் அனுபவமுண்டு என்பதால் அப்படி கூறமுடிகிறது. ஆமாம் மசக்கை பெண் கேட்பதை வாங்கிக் கொடுக்கவில்லையென்றால் பிறக்கும் குழந்தைக்கு சீழ் வடியுமா?!. பலாப்பழப் கதையில் வடிவதை சிரித்துக்கொண்டேதான் வாசித்தேன். கி.ரா பெரும்பாலும் சிரிக்க வைப்பவர் ஏனென்றால் அவர் எழுதுவது கிராமத்து வெள்ளந்தி உள்ளங்களை. பாலியல் கதைகளை தொகுத்து புத்தகம் எழுதியிருக்கிறார், வாசிக்கணும். நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது.