செவ்வாய், 28 நவம்பர், 2017

ஓவியத்தை கண்டடைதல்

எதற்காக வரையப்படுகின்றன என்பதைக் கடந்து வரைதல் கொடுக்கும் அகக் களிப்பே முன்வந்து முகம் மலர்கின்றது, எச்செயலுமே அதற்காகத் தான். வரையப்படும் ஓவியங்கள் கொடுக்கும் கிளர்ச்சியும் கற்றலுக்கான தொடர்ச்சியுமே நம்மை தொடர்ந்து இயக்க காரணிகளாக இருக்கிறது. தத்ரூபமான ஓவியம் ஒன்றை வரைந்து முடித்ததும் இல்லை முடிந்துவிட்டது என்பதான தோற்றம் கிடைத்ததும் சில நேரம் அதை பார்த்திருந்த பின் ஏற்படும் வெறுமையை எப்படி கடப்பது.

ஒரு உருவத்தை படத்திலுள்ளது போல அச்சசலாக வரைவதற்கு ஆரம்ப காலத்தில் கட்டங்கள் வரைந்து பயிற்சி எடுக்க தொடங்கியபின் மூன்றாவது படம் எதிர்பார்ப்பை நிறைவேற்ற நன்றாகவே அமைந்தது என்றாலும் மேற்சொன்ன வெறுமை தொற்றிக்கொண்டதாக நண்பரிடம் கூறிக்கொண்டிருக்கும் போதே மனம் அவ்வோவியத்தின் ஊடாக பயணித்தது. வெறும் கோடுகளாக நிழல்களாக அதன் வடிவங்கள் பிரித்துணரப்பட வேண்டும் என சிறு எண்ணம் கீற்றாக விழுந்தது.



அன்று மாலை வீடு அடைந்ததும் டாலியின் முகத்தைக் கொண்ட ஓவியத்தை எடுத்து சுவரில் சாய்த்துவிட்டு சிறு இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டேன். ஒவ்வொரு கோடுகளின் நீளங்களை வளைவு சுழிவுகளை உறுப்புகளை இணைத்திருக்கும் நிழல்களின் மாயத்தை என பார்வையால் தீண்டத் தீண்ட என்னிடமிருந்தே நான் கற்றுக் கொள்ள வெளி உருவாகியிருந்ததை உணர முடிந்தது. அதற்கடுத்த படத்தினை வரையும் பொழுதையும் அதன்பின்னான ஒவ்வொரு நாளையும் இவ்வாறு கடந்தபோது அடைந்த உவகை பேரின்பம்.

2 கருத்துகள்:

K. ASOKAN சொன்னது…

ஓவியம் அருமை பாராட்டுகள்

ஸ்ரீராம். சொன்னது…

ஓவியம் அருமை.