வெள்ளி, 26 ஜனவரி, 2018

ஓவியக் கண்காட்சியில் சில நிமிடங்கள்

யாருமில்லாத அக்கூடம் அமைதியாகத்தான் இருந்திருக்க வேண்டும் அப்படியில்லை அங்கிருந்த உருவங்கள் உரையாடிக் கொண்டிருக்க அவ்வமைதி அவ்வோவியங்களுக்கு தேவையாக இருந்திருக்கலாம் ஆனால் அதில் உடன்பாடில்லாமல் மரத்தாலும் கண்ணாடியாலுமான கதவைத் தள்ளி உள் நுழைந்தோம், அவைகள் பேச்சை நிறுத்தி விட்டது போலவே புலப்பட்டது. அழகாக இருக்கும் யாருமற்ற நிலவெளி போலத்தான் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது, யாருமில்லாமல் எப்படி அழகாக இருக்க முடியும் அல்லது அப்படி இருப்பது போல் கூற இயலுமா, முடியாதுதான் அங்கே தோழிகளும் காதல் வயப்பட்டவரும் கனவுலகும் இறை நிலையும் ஓவியங்களாக இருந்தனர்.




தாமிர நிறத்தில் நீண்டு நெழிந்த டி.ஜோசப் ராஜ்-ன் திண்மமான கோடுகளுக்கிடையே ஒழுகிக் கொண்டிருந்த வண்ணங்கள் மிக அதிகமான மனித முகங்களையும் உருவங்களையும் பறவைகளையும் புலனாக்கிக் கொண்டிருந்தன. மனிதனுக்கு கலையை அணுக யதார்தத்தை கடந்த ஒரு வெளி தேவையாக உள்ளது அது குதிரை போன்ற குதிரையாகவும், உதடு போன்ற உதடாகவும் இருக்கிறது, ஆம் அவர்கள் பெண்கள் தான் ஆனால் அந்த முகங்களில் நாம் யாரை வேண்டுமானாலும் பொருத்திப் பார்க்கலாம், ஆம் அந்த மூன்று பெண்கள் (தோழிகள் ஓவியம்) இடத்தில் எனக்குள்ளிருந்தோரை என்னால் மனதுக்குள் வரைந்து பார்க்க்க முடிந்தது, என்ன அவ்வோவியத்தின் பெண்கள் மடியில் “பீடித்தட்டு” இல்லை நான் வரைந்து பார்த்த்தில் அதை சேர்த்துக் கொண்டேன்.

அந்தக் கோடுகளின் இடையிடையே தென்படும் உருவங்களை உள்வாங்க முயற்சித்து படுதோல்வி அடைந்தேன், இன்னும் அதிலிருந்து மீளவில்லை எனக்கு என் இரண்டு வயது மகள் பென்சிலால் சுவரில் வட்டம் வட்டமாக வரைந்துவிட்டு “மீனு மீனு” எனச் சொல்லி பூரிப்பதே நினைவில் வந்தது, ஓவியர் முனுசாமி அவர்களின் இக்கோடுகளில் முகங்கள், விலங்குகள் உண்டு யதார்தத்தை மீறி நீண்டு குறுங்கும் எளிய கோடுகள்.

கொற்றவையின் முகத்தையும் ஆயுதங்களையும் கடந்து சுற்றி வரையப்பட்டிருந்த வாசல் வடிவங்கள் மனதை உள்ளிளுத்துக் கொண்டிருந்தபோது என் மகள் என்னைப் பிடித்து இழுத்து மண்டியிட்டு வணங்க மழலைச் சொல் மொழிந்தாள் நான் சிரித்துவிட்டு அரவக்கோன் அவர்களின் அடுத்த ஓவியங்களுக்குள் நுழைந்தேன், சக்தி ஓவியமும் பின் மற்றொரு இறைவி அதிலும் வாசல் வடிவமைப்பு உண்டு அதனை வேறொரு திறப்புகளை உருவாக்கும் வழியாக உணர்ந்து கொள்ளலாம் என அப்பொழுதில் தற்காலிக முடிவொன்றை பெற்றுக்கொண்டு நகர்ந்தேன்.

சின்னஞ்சிறிய நுண் கோடுகள் கொண்டு வரையப்பட்ட இரு ஓவியங்கள் அனேகமாக அது இராமன் அவர்களுடையதாக இருக்க வேண்டும் அதற்குள் மறந்துவிட்டது. இவ்வகை ஓவியங்களை இதற்குமுன் இருமுறை காட்சியில் கண்டிருக்கிறேன் வெகு இலகுவான ஈர்க்கும் ஆற்றல் கொண்ட கோடுகள். சுந்தரமூர்த்தி அவர்களின் பேனா மற்றும் பென்சிலால் தீட்டப்பட்ட கோடுகள் சிக்கலான கோடுகளை கொண்ட தெளிவான உருவங்களை வெளிப்படுத்தும் கலை ஆம் அந்த மீன்கள் மிகு கவர்ச்சியாக இருந்தன. இடையில் ஒன்றிரண்டு பேர் வந்து போக இறுதியில் அவ்வோவியங்களை உரையாட விட்டுவிட்டு வெளியேறினோம் நானும் என் மகளும்.