சனி, 25 ஏப்ரல், 2020

பால் பால்

மனிதர்கள் ஏன் பால்... பால் என்று பித்தர்கள் போல அலைகிறார்கள் எனத் தோணும் அவ்வப்போது.  பிறப்பிலிருந்து கல்லூரி காலம் வரை ஊரிலிருந்த பொழுதுகளில், காலையிலெழுந்ததும் செல்லத்துரை பெரியப்பா வீட்டுக்குச் சென்று கால் பாதங்களின் இடுக்கிலுள்ள பானையில் தயிரை  மத்து கொண்டு வெண்ணையை பிரித்தெடுக்கும் பெரியம்மையிடம் நூறு மில்லி பால் வாங்கி வருவேன். கருப்பட்டி காப்பியை வெண்மையாக்க பாலை கொஞ்சமாக ஊற்றித் தருவாள் எங்கள் அம்மை. தேநீர் கடைகளில் பாலாகிய வென்னீரில் காப்பிக்கொட்டை வடிநீர் அல்லது தேயிலைத் தண்ணீரை சிறிது கலந்து குடிக்கத்தரும் பழக்கமுண்டு இது முற்றிலும் வீட்டுப் பழக்கத்திற்கு எதிர்மறையானது. இம்முறையிலான கடைப் பழக்கம் திருமணம் போன்ற மற்றைய விழாக்களின் போதும் புழக்கத்தில் இருந்தது.

நகரத்து வீடுகளில் 2011-ம் ஆண்டு வரை காப்பியோ தேநீரோ அருந்தியதில்லை அல்லது நினைவிலிருக்கும் படியான அளவில் எண்ணிக்கையில்லாமல் இருக்கலாம், பின் அக்கா வீடுகளிலும் இம்மாதிரியான கடைப்பழக்கம் லிட்டர் கணக்கில் பால் புழங்குதல் எல்லாம் நிகழ்ந்தது. அலுவலகத்தில் பால் பற்றிய பேச்சு எழும் போது எந்த நிறுவனத்தின் பால் சிறந்தது என்று கேள்வி வரும், பாலை கொழுப்பு நீக்கியது, மிதமான கொழுப்புடையது, கொதிக்க வைத்தது என வகை வகையாகப் பிரித்து விற்பனை செய்யும் அரசினுடைய வழியே தவறென்று வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள். இதில் சிறந்தது எதுவென எங்கிருந்து கூறுவது. அப்படின்னா பாலுக்கு என்ன செய்வீங்க, இப்போதான் தெருவில் நேரடியாக வந்து விற்கிறார்களே அதை வாங்கலாமே என இன்னொரு கேள்வி வரும் "அய்யா பால் வேண்டவே வேண்டாங்க" என்றால் அப்போ கால்சியத்துக்கு என்ன பண்ணுவீங்கம்பாறு இன்னொருத்தர், பாலில் மட்டுமே கால்சியம் இருக்குன்னு யாராவது சொல்லியிருக்காங்களா. இப்படியே போகும் பாலுக்கான பாடு. காலையில் வாயிலிருந்து வரும் கெட்ட வாடையின் மிகுதிக்கு காரணம் நுரை ததும்பும் பால் தான் என அதை வாங்குவதை நிறுத்தியுள்ளான் நண்பனொருவன், ஆய்வுக்குரியது.

கடந்த ஞாயிறன்று நாங்கள் குடியிருக்கும் பகுதியில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் சென்று வர அனுமதியளிக்கும் வகையில் விதிமுறைகளோடு நீல நிற அட்டையொன்று வழங்கப்பட்டது, வாங்கிக்கொண்டு வரும் வழியில் பின்னாலிருந்து வந்த தனிக்குரலொன்று கேட்டுத் திரும்பினேன் , புதன் கிழமையும் சனிக்கிழமையும் மட்டும் காலையிலிருந்து மதியம் வரை ஒருவர் மட்டும் வெளியில வரலாம்னு சொல்லுதாங்க அப்படின்னா தினமும் கடைக்குச் சென்று பால் வாங்குதவங்க என்ன செய்வாங்கன்னாரு. இதுவெல்லாம் ஒருமாதிரி ஒருத்தரையொருத்தர் திருப்தியடைய வைக்கும் சம்பிரதாயங்கள் மற்றபடி பக்கத்துக் கடைகளுக்கு நாம போய் வரலாம்னுதான் நினைக்கிறேன் என்றதும், கடைக்காரன் சொன்ன நேரத்துக்குத்தான் வரணும் இல்லன்னா பொருள் கிடையாதென்றுச் சொன்னால் என்ன செய்ய முடியும் என்றார், நல்ல கேள்வி என்ன நடக்குன்னு பாப்போமென்று சொல்லிவிட்டு பிரியும் தெருவில் வலப்பக்கம் நானும் நேராக அவரும் நடந்தோம். பொருட்கள் தட்டுப்பாடு அதிகமாகும் போது அவர் விருப்பம் போல் விலையை அதிகரிக்கும் கடைக்காரர் இந்த நேரத்திற்கு மட்டும் தான் பொருள் தருவேன் என்று சொல்லிவிடுவாரா என்ன.

முந்தாநாள் பத்திரிக்கையாளர் ஒருவருக்கு தொற்று உறுதியானதும், எங்கள் பகுதிக்கான வாசல்கள் அத்தனையும் இரும்புத் தட்டிகளால் அடைத்துப் பூட்டப்பட்டன. தட்டியின் ஓரம் உள்ள இடைவெளியில் பால் வாங்கலாமென பெரியவர் ஒருவர் தெருவில் விசாரிப்போரிடம் நேற்று காலையில் கூறிச் சென்றார். தெருவில் பிரிந்து போனவரின் எண்ணம் என்னவாக இருக்குமென எண்ணிப் பார்க்கிறேன், நேற்றுவரை இருந்த அனுமதி கூட இன்றில்லை நாளை என்னவாகிப் போகுமோ. இதோ நாளை முதல் முழு ஊரடங்கு உத்தரவு.


2 கருத்துகள்:

Kasthuri Rengan சொன்னது…

என்ன இது
சீக்கிரம் அடைப்புகள் அகல பிரார்த்தனைகள்

Pandiaraj Jebarathinam சொன்னது…

மிக்க நன்றி!!