வியாழன், 14 ஏப்ரல், 2022

தபால் நிலையத்தில் ஒழிந்துகொண்ட கோடுகள்

எப்போதும் மாதத் தொடக்கத்தில் கேட்கப்படும் கேள்விகள் ஒலிக்காமலிருப்பது செயலை நாட்கள் கழித்து செய்ய வைக்குமென்பதில் பிசகு இல்லை. வழக்கத்திற்கு மாறாக தபால் நிலையத்தில் பணம் செலுத்தும் காகிதத்தில் தமிழும் மறுபக்கம் ஆங்கிலமும் கடந்த இரு மாதங்களாக பார்க்க முடிகிறது. அதை பார்த்த பின்னர் வீட்டிற்கு எடுத்துவந்து எழுதிச் செல்லும் பழக்கமும் ஒட்டியிருக்கிறது. நேற்று எழுதுகையில் "என்ன தேதி எழுதாம வச்சிருக்கு" என மாதாமாதம் ஒலித்து இம்மாதம் ஒலிக்காத கேள்விகளின் குரல் கேட்டது. "சமயத்துல கணினி பழுதாயிரும்லா" எனச் சிரித்துக் கொண்டேன். ஒற்றை ஆள் மட்டுமே அந்த அம்மா இருக்கும் மேசையை எட்டிப் பார்க்க இன்று வேலை எளிதாக முடிந்துவிடுமென எண்ணி நுழைந்து இரண்டு வருடங்களுக்கு பிறகு முகக் கவசமில்லாத எனது கற்பனைக் கோடுகள் எங்கோ ஓடி ஒழிந்துகொண்ட அம்முகத்தில் அரசு அலுவலகத்தின் சலிப்பு மட்டும் தீராமல் "அரைமணிநேரம் கழிச்சி வந்து பாருங்க, ஒண்ணும் வேலை செய்யல" . "குடுத்துட்டு போகட்டுமா" எனக் கேட்கவும் "அதெல்லாம் இனிமே கிடையாது" சலிப்பு.

ஆதார் அட்டை பதிவு செய்ய தனியாக கணினி அச்சுப்பொறி என எல்லாம் இருக்கும் மேசை போர்வையா பொன்னாடையா என ஊகிக்க இயலாத துணியால் மூடப் பட்டிருந்தது அதற்குள் அகப்படாமல் கணினிக்குரிய விசைப்பலகையும் அதன் மேலிருந்த பத்து ரூபாய் நாணயமும் புழுதியால் பிணைந்திருந்தது. முகக் கவசத்தை இழுத்து இழுத்து கொட்டாவியை வெளிநடப்பு செய்த அதே அம்மாவிடம் இன்று ஒருமணி நேர காத்திருப்பிற்குப் பிறகு சேமிப்பு புத்தகத்தை நீட்டினேன். எப்படியோ இன்று அச்சுப்பொறி வேலை செய்ததை எண்ணி மகிழ்கையில் முகக்கவசமில்லாத பெண் தபால் காரரை பார்த்ததும் கோடுகள் ஒழிய இடம் தேட மறுத்தது.

கருத்துகள் இல்லை: