வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

முகங்(கலை)தல்



 கலை அப்படின்னா என்ன அதுவொரு மாய உலகமா எளிதில் எட்டி விடாதா தொலை தூரத்தில் உள்ளதா, எது கலைப் படைப்பு எதனால் அது கலைப் படைப்பாகிறது, எது அழகு எதனால் அது அழகு , எந்த இடத்தில் கலை உருவாகிறது யார் உருவாக்குகிறார்கள் என பலதரப்பு கேள்விகள் நம்மைச் சூழலாம் அல்லது இவை எதுவும் என்னவென்றே அறியாது ஒதுங்கி நிற்கலாம் அப்படி நிற்பதில் கூட கலைக்கான செயல்பாடு எதாவது இருக்குமானால் இருக்கலாம் அதை அறியாததால் என்னவென்றே தெரியாததால் அது காற்றில் கலந்து விடுகிறது அந்த காற்றை எல்லாருமே உள்ளிழுப்பதால் யாருக்காவது அதாவது கலை பற்றிய தேடலில் வானத்தைப் பார்த்து புலம்பிக் கொண்டிருக்கும் உயிரான ஒன்று அதை இழுத்துக் கொள்வதால் ஒரு புன்னகையில் அக்காற்றை வெளியிடுகிறது அல்லது வேக வேகமாக தாளை எடுத்து எதையும் எழுதவோ வரையவோ துணியாமல் மீண்டும் வானத்தையே பார்க்கத் தொடங்கினால் வேரொரு உயிர் தூரிகையால் வண்ணங்களை குதப்பி அப்புகிறது என்னவென்று கேட்டால் தெரியவில்லை என உரத்துச் சிரிக்கிறது வேறு சில அவ்வுயிரியை நவீனம் என்கிறது. நவீனம் பெருங் குழப்பமடைந்து ஆமாம் ஆமாம் என்று தான் தெரியவில்லை புரியவில்லை எனச் சொன்ன வண்ணங்களுக்கு புது மொழி பெயர்ப்பு செய்கிறது, ஆமாம் எழுத்தைத் தானே மொழி பெயர்ப்பார்கள் இதுயென்ன ஓவியத்தையும் பெயர்க்கிறது. கலை என்பதற்கு வடிவம் எதுவுமில்லை அதுவொரு உணர்ச்சிக் கடல் அது எந்த உயிருக்கும் உண்டு இன்னாருக்கு உண்டு இன்னாருக்கு இல்லை என்று எதுவுமேயில்லை. வரைவதும் எழுதுவது இசைப்பதும் நடிப்பதும் ஆடுவதும் மட்டுமே கலையா. கனவிலும் உணர்வுண்டு கழிப்பறையிலும் உணர்வுண்டு என மேம்போக்காக சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால் பொது உயிரிகளிடம் பேசும் போது முகஞ்சுழிக்கக் கூடுமாகையால் இன்னும் கொஞ்சம் விளக்கியும் விலக்கியும் கூறவேண்டியதாகிப் போகிறது. அந்த உயிரி வரைந்த கரிக்கோல் ஓவியத்தை இரண்டு நாள் கழித்து பார்த்துவிட்டு இதை ஏன் வரைந்தேன் என நொந்தது, மீண்டும் ஒரிரு மாதம் கழித்து அதே ஓவியத்தை பார்த்ததும் அதிலுள்ள கோடுகளெல்லாம் தெரிந்தது அட இந்தக் கோடு எவ்வளவு ஒயிலாக திசை மாறுகிறது என்றெல்லாம் தனக்குத் தானே கேட்டுவிட்டு இணையத்தின் ஊடாக சில ஓவியங்களை பார்க்கிறது அங்கேயும் கோடுகளை மேய்கிறது, அப்பாடா என்று இன்னும் சில முகங்களை கோடுகளாக்குகிறது. ஆமாம் எது கலை எது அழகு எது படைப்பு.







கருத்துகள் இல்லை: