செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

என்னதோ சுயமாம்

மெழுகுவத்திச் சுடரில் விரல் நீட்டியோ, எச்சில் விழுங்குகையில் தடைநிற்கும் தொண்டை வலியினை நீக்க விறகடுப்பு கங்கலில் துப்புவதற்கு எத்தனிக்கையிலோ உணரும் வெக்கையின் தீவிரத்தால்தான் தீயின் சுடுநிலையை உணர்ந்தறிகிறோம். தீ சுடும் என யார் கூறினாலும் சுயமான சோதனைக்குப் பின்னர்தான் மனமும் உடலும் அதை உறுதியோடு ஏற்றுக்கொண்டு ஓர் பாதுகாப்பான அல்லது பதட்டமான நிலையினை ஏற்றுக்கொள்கிறது. எதிர்பாராத நேரம் பகுத்தறிதலுக்கு முன்னால் சுயம் நிச்சயமாக வெளிப்படும். இந்த வெளிப்படுத்துதலை அவரவர் சுயத்தை சிலர் ரசிக்கிறோம் வேறுசிலர் வெறுக்கிறோம்.

இந்த சுயம் எவ்வளவு உண்மையானது? சுயம் ஒரு போலி வாதம். சிறு குழந்தை தான் வளரும் சூழலைப் பொறுத்தே தனது சுயத்தை உடலிலும் மனதிலும் பூசிக்கொள்கின்றது. வாழத்துவங்குகிறது. சுயம் கல்வியால் பகுத்தறியப்படுகிறது. சுய சாயத்தின் மீது கொஞ்சம் அறிவார்ந்த சாயம் கலக்கிறது. இரண்டாமவதின் சுயம் நீர்த்துப்போனால் சுயம் அப்பட்டமாக ஆட்டம் போடும். அதற்கு வீடு காடு மேடு எதுவும் தெரியாது.

கல்விக்குப்பின் மேலும் மேலும் பூசிக்கொள்ளும் திடமான சாயம் வாசிப்பு. இது வெற்றுக்கதையாக உடலிலும் மனத்திலும் சிதறிப்போகாமல் மொழியாக, இலக்கியமாக, அறிவியலாக, மனிதக்கூறாக விரவிக்கிடக்கிறது. புது வண்ணம் பாய்ச்சுகிறது. சுயத்தை தோற்கடிக்காமல் அதை மிளிரச்செய்கிறது. போலியான சுயம் உண்மை நிலைக்கு கடத்தப்படுகிறது.

வாசிப்பு அவ்வளவு எளிதாக சுயத்தை வென்று நிற்பதில்லை, பாதைகள் சீரமைத்து திசைகாட்டியோடு பயணம் அமைவதுமல்ல. எதுவுமில்லாமல் திசைமாற்றி, குழப்பி, தெளிவு நிலைக்கு அடையவேண்டிய மார்க்கத்திற்கு இழுத்துச்செல்லும் வளமான காடு.

3 கருத்துகள்:

Yarlpavanan சொன்னது…

அருமையான பதிவு
தொடருங்கள்

K. ASOKAN சொன்னது…

சுயம் நன்று

'பரிவை' சே.குமார் சொன்னது…

சுயம் அருமை...
வாழ்த்துக்கள்.