வெள்ளி, 29 செப்டம்பர், 2017

கனவுராட்டினம்

"கனவுராட்டினம்" பெயரும் பெயருக்கேற்ற அட்டைப்பட ஓவியமும் இப்புனைவின் பதிப்பாளர் அறிமுகப்படுத்திய பொழுதே வாசிக்கவேண்டுமென்று மனதில் எழுத்து பதியப்பட்டது.
அட்டைப்பட ஓவியத்தை ஓர் நீர்சுழல் போல் எண்ணிக்கொள்ளத்தான் மனம் நாடுகிறது. மையத்திலிருந்து பிரிந்துசெல்லும் கோடுகள் ஒரு முடிவற்ற பயணக்குறியீடாக காட்சியளிக்கிறது அதேவேளை அவை நேர்கோடுகளும் அல்ல அதேபோல் மையம் நோக்கி திரும்பப்போவதும் இல்லை.

கனவுகளை ரசிக்காத மனது என்று ஒன்று உள்ளதா என்றால் நிச்சயமாக இருக்க வாய்ப்பில்லை ஒவ்வொரு வயதும் அதன் அளவிற்கேற்ப கனவுகளை சுமந்துகொண்டு அதோடு உரையாடிக்கொண்டுதான் இருந்து வருகிறது. நண்பன் ஓணான் அடிக்கையில் புளியமரத்தின் தடித்த வேரில் மூத்திரத்தை உதிர்ப்பவனுக்கு தொடையில் ஈரம் கிச்சுகிச்சு மூட்டியோ "அம்மை" குண்டியில் அடித்த பின்னோ நனைந்த கால்சட்டையோடு கனவு கலையும் இரவு என பல வடிவில் நினைவுகளின் ஓட்டம் துரத்தும். இதுபோன்ற இன்னும் பல கனவுக்காட்சிகளை நினைவுப்படுத்தி அசைபோட்டு கிளர்ச்சியில் தழைத்தது மனது.

ஒரு மளிகைக்கடைக்காரனுக்கு என்ன பிரச்சினை இருந்துவிட முடியும் என அவனிடம் பொருட்கள் வாங்கும் நீங்களும் நானும் நினைக்கலாம் சுந்தருக்கு பிரச்சினை இருப்பதிலிருந்தே கதை தொடங்குகிறது. தனக்குள் எழும் கேள்விக்கு பதில் தேடி அலைபவன் பாணதீர்த்தம் இருக்கும் மலைக்காட்டில் கனவுப்பயணத்திற்குள் விழுபவன் தொடர்ந்து அவனின் கனவுகளில் வழுக்கிக்கொண்டே செல்கிறான்.
அவனது உறவினர், சிறுவயதில் வேலைபார்த்த மளிகைக்கடை செட்டியார், காதலிகள், என தாவித்தாவி ஓடுகிறான். தான் ஏன் இப்படித்திரிகிறோம் என சிந்திப்பவனிடம் அங்கே சந்திக்கும் ஜெமி எனும் கனவு உருவம் அவனது காதலனை கனவில் தொலைத்துவிட்டதாக கூறுகிறாள். 

சுந்தருக்கு கனவு பற்றிய விளக்கம் இவளால் அளிக்கப்படுகிறது. கனவு பற்றிய ஆராய்ச்சி அந்நிழலுலகில் காட்சியிலிருந்து காட்சி மாற உதவும் சிறு எந்திரம் என ஒரு த்ரில்லர் நாவலுக்குரிய வேகம்.

ஓவியத்தில் மீயதார்த்தம் (சர்ரியலிசம்) என்ற கோட்பாட்டோடு இக்கதையமைப்பை பொருத்திப்பார்க்கலாம். ஆழ்மனத்திற்குள் நுழைந்து எதற்கோ பதில் தேடி வந்தவனை குழப்பத்தில் ஆழ்த்தும் ஜெமியின் விஞ்ஞான மெய்ஞான விளக்கங்கள். இந்த விளக்க உரையாடலில் வரும் வரிகள் வாசிப்பவனை இட்டுச் செல்லுமிடம் வியப்பிற்குரியது.

எனக்கு இப்படித்தான் தோன்றிக்கொண்டிருந்தது "ராட்டினத்தின் பெட்டியில் எதிரெதிர் இருக்கையில் இருப்பது எனதும் அவளதுமான கனவு எனில் இங்கே ராட்டினத்தின் பெட்டி அல்லது அதனை சுழற்றுபவன் யாருடைய கனவு."
ஒரு புதினம் வாசிப்பின்போது ஏற்படுத்தும் நினைவோட்டங்கள் புதுப்புது சித்தாந்தங்களும் புரிதல்களுக்குமான வெளியை திறந்துவிடும் அதற்கான அழகிய வழி இவ்வாசிப்பு. இதில் மிகைப்படுத்தல் எதுவுமில்லை கனவுகளை ரசிப்பவனுக்கு அதை அனுபவிக்க விரும்புபவனுக்கு அதன் சுழல்களை அறிய விரும்புபவனுக்கு ஓர் ஆழ்ந்த வாசிப்புக்குள் புகுத்திவிடும்.

வாசிப்பின் இடையிடையே கதையோட்டத்தின் தர்க்கம் சார்ந்த கேள்விகள் எழாமல் இல்லை ஆனால் தொடரும் பக்கங்கள் அவைகளை தேவையற்றதாக மாற்றிவிடுகின்றன.  இங்கு குறைகள் இருக்கலாம் ஆனால் எனக்கென்னவோ குறைகள் கண்ணிலும் எண்ணத்திலும் விழவில்லை. இறுதியில் நீங்கள் இந்த ராட்டினத்திலிருந்து இறங்காமல் சுற்றிக்கொண்டிருக்கும் அற்புதத்தில் கழற்றிவிடப்படுவீர்கள். கனவு கண்ட அன்றைய தினம் எவ்வளவு குதூகலத்தோடு இருக்குமோ அதுபோன்றதொரு மனநிலையிலேயே தொக்கிநிற்கச் செய்கிறது இவ்வாசிப்பு.

கருத்துகள் இல்லை: