திங்கள், 17 ஜூலை, 2023

கலைப்படைப்பில் மரபு

நுண் கலைகள் பற்றி அறிந்து கொள்ளத் தேடினால் இணையச் சந்தில் மேற்குலகின் பாடங்களே சுற்றிச் சுற்றி அடுக்கி வைத்திருக்கும் பிம்பம். ஓவியராக விரும்பும் எவரும் முதலில் ஐரோப்பிய கலை வடிவங்களை கற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இங்கே தொற்றியிருப்பது காலத்தின் விளைவு இந்த விளைவில் சிக்கியது கலை மட்டுமல்ல கல்வி முதற்கொண்டு அத்தனைத் துறைகளும் என்பதை மறுக்க இயலாது. இங்கே மரபு நோக்கித் திரும்புவதும் அல்லது மரபை புரிந்து கொள்வதும் வாழ்வை பின்னிழுக்கும் செயலாக சிலர் எண்ணினாலும் அதனை நோக்கி நகரும் மனங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

கலை நுட்பங்களைப் பற்றி அறிந்து கொண்டு படைப்புகளை உருவாக்க எத்தனிக்கும் வேளை எண்ணற்ற கேள்விகள் வந்து நெஞ்சில் முட்டுகின்றன. உலகில் காட்சிக்குட்படும் மனிதன் உட்பட எந்த பொருளையும் வரைவதற்கான இலக்கணம் அங்கிருந்தே பெற வேண்டிய நிலை. நம்மிடம் அதற்கான தேடலே இல்லாமல் இருந்ததா பிரம்மாண்ட ஓவியங்களை சிற்பங்களை வடிவமைப்பு செய்வதில் நமக்கென தனி பாணியை உருவாக்கத் தவறினார்களா கலைக் கோவில்கள் படைத்த நம் சான்றோர்கள். அப்படியெல்லாம் இல்லை.

கேள்விகள் கேட்டுக் கொண்டையிருக்கலாம் பதிலை நோக்கி திசை திருப்ப யார் உண்டு அவரவர்க்கான பாதை அவரவர்க்கே வெளிச்சம் என்பதே இயல்பு எல்லாமும் இங்கே இருக்கிறது அதற்கான வழியை மறந்திருக்கிறோம் வினாக்களுக்கு பதில் இல்லாமலில்லை. கடந்த மாதம் சென்னை அருங்காட்சியகம் சென்ற போது கொஞ்சம் நிதானமாகவே சிற்பங்களை கண்டு புரிந்து கொள்ள விளைந்தபோது புத்தர் கால சிற்பங்கள் வடிவமைத்திருந்த விதத்திற்கு முன்னால் மறுமலர்ச்சி கால மேற்கத்திய ஓவியங்கள் வெளிப்படுத்திய அழகியலும் நேர்த்தியும் குறைவு என்றே எண்ணத் தோன்றுகிறது. எத்தனை வகையிலான நடராச சிற்பங்கள் எவ்வளவு நுண்ணிய உருவங்களாக செதுக்கப்பட்டுள்ளது பரவசமூட்டும் சிற்பங்கள். நம் படைப்புகள் சிந்தனை மரபில் ஊறிப்போனவை யதார்த்தங்களை மீறிய வெளியொன்றை உருவாக்க மிகவும் ரசனையோடு செயல்பட்டிருக்கிறார்கள். 

நாங்கள் வசிக்கும் தெருவிற்கு பக்கத்துத் தெருவில் உள்ள கிறுத்தவர் வீட்டின் வெளிப்புறம் ஒரு சிற்பமுண்டு காலில் ஒருவனை மிதித்துக் கொண்டு கத்தியோடு நிற்கும் உருவம். வீரபத்திரர் எனும் சிவனின் அம்சமாக உள்ள உருவம் பெரும்பான்மை தமிழக கோவில்களில் பார்க்கலாம் இவ்விரண்டு வடிவமைப்பும் ஒத்துப்போவதை பார்த்தால் வியப்பாக இருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வீரபத்திரர் சிற்பம் கண்டதும் அடைந்த பிரமிப்பு இன்னும் நிறைந்திருக்கிறது.








கருத்துகள் இல்லை: