சனி, 22 மார்ச், 2025

எது மகிழ்ச்சி

யாருக்கு எது மகிழ்ச்சி அதற்கான அளவீடு என்ன இந்த அளவீடுகளை உறுதி செய்வது யார் போன்ற வினாக்கள் தொடர்ந்து இன்று மனதில் அசைகிறது.

குண்டுமழை பொழியும் இசுரேல் நாடு மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் எட்டாவது இடத்திலும் தீவிரவாதம் தழைத்தோங்குவதாகச் சொல்லப்படும் அல்லது காட்டப்படும் பாகிஸ்தான் இந்தியாவைவிட முன்னிலையில் அதாவது நூற்றியொன்பதாவது இடத்திலும் உள்ளது. பட்டியலில் மொத்தம் உள்ள நூற்றி நாற்பத்தேழு நாடுகளில் இந்தியா நூற்றிப்பதினெட்டாம் இடம் பெற்று மகிழ்ச்சியில் பின்தங்கியுள்ளது. எது மகிழ்ச்சி அதற்கான அளவீடு என்ன என்ற வினாக்கள் மீண்டும் துரத்துகின்றது. 

சமூகவலைத்தளங்களில் காணொளிகள் பகிர்வதிலும் பார்ப்பதிலும் இந்தியர்கள் உலக அரங்கில் முதலிடம். இத்தனையும் மகிழ்ச்சிக்காக செய்யாமல் எதற்காக என்ன நோக்கத்திற்காக அரங்கேறுகிறது மன அழுத்தத்திற்காகவா. ஒருவேளை இருக்கலாம். தெரிந்தோ தெரியாமலோ நாம் கணினியாகிக் கொண்டிருக்கிறோம் என்பது உண்மை.

ஒரு பள்ளியில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறதென்றால் திரைப்படப் பாடல்கள் ஓரளவு இடம்பெறும், முற்றிலும் அதற்கு இடமளிக்காத பள்ளி பாராட்டுக்குரியது. 

இன்று மாலை மூன்று மணி தொடங்கி இரவு ஏழு முப்பது மணிக்கு அந்தப் பகுதியில் இருந்து கிளம்பும் வரையிலும் மதனந்தபுரம் நாராயணா பள்ளியில் தொடர்ந்து திரைப்படப் பாடல்கள் மிகையொலியில் கத்திக் கொண்டிருக்க பள்ளி மாணவ மாணவிகளின் உயர் ஒலிப்பில் கூப்பாடுகளும் ஆட்டங்களும். யாருக்காக இந்நிகழ்வு பணம் கட்டும் பெற்றோர் மகிழ்விற்காகவா இல்லை கல்வி என்ற பெயரில் ஆண்டு முழுவதும் நசுக்கிய பிஞ்சு மனங்களை அவ்வப்போது இப்படி வேண்டாயிசையில் அனலூட்டி குளிர்விக்கவா. பள்ளி என்ன சொல்லிக் கொடுக்கிறது பெற்றோர் என்ன அறிவுடன் இங்கே கல்விக்காக தங்கள் பிள்ளைகளை அனுப்புகிறார்கள் அனைத்து தனியார் பள்ளிகளும் இப்படித்தான் இயங்குகின்றனவா ஒருவேளை இதுதான் மகிழ்ச்சியா என்ற வினாவும் துரத்துகிறது.

கருத்துகள் இல்லை: