சனி, 4 அக்டோபர், 2025
சுதேசி எனும் பரதேசி
சுதேசி என்ற சொல்லை விளம்பரங்களிலும் சில தனிநபர்களிடமும் கடந்த சில நாட்களாக பார்க்கவும் கேட்கவும் செய்கிறேன். இன்றொரு செய்தித்தாளில் கண்டது நகைப்புக்குரியதாக இருக்கிறது, 110 பேருந்துகளைப் பயன்படுத்தி சுதேசி என்ற சொல்லை ஆங்கிலத்தில் உருவாக்கி மகிழ்ந்திருக்கிறது ஒரு ஆங்கிலப் பள்ளி. ஒரு சுதேசியாக எப்போது இவர்கள் தாய் மொழிக் கல்விக்கு மாறுவார்கள் என்ற சிந்தனை தொக்கி நிற்பது ஒரு பக்கம். கொஞ்சம் புத்திக்கு உரைத்திருந்தாலோ அல்லது எறும்பளவு மூளையில் இடமிருந்திருந்தாலோ தன் தாய்மொழியில் எழுதி மார்தட்டிக் கொண்டிருக்கலாம் ஆனால் அதற்கு வாய்ப்பில்லாமல் பரதேசியாக மாறியிருக்கிறது நம் தமிழ் மனம்.
சனி, 27 செப்டம்பர், 2025
அக்கா குருவி 23
உங்களை யார் என்று தெரியவில்லை
உண்மையில் யார் என்று தெரியவில்லை
எனக்கு வேண்டுவது
இரவு
நிலவு
கருமை
எனக்கானது அல்ல
நிறமும் பகலும்
அதற்குள்
உயர்வு தாழ்வு கற்பிக்கும்
உங்களை
உண்மையில் யார் என்றும்
தெரியவில்லை என்றும்
பொய் சொல்லிக் கடக்கிறேன்
அக்கா குருவி 24
வெகுநேரம்
அது ஆந்தை என்பதை உறுதி செய்யவே
நோக்கியிருந்தேன்
ஆந்தை பற்றிய அறிவு எதுவுமில்லை
அதன் முன்னூற்று
அறுபது கோணப் பார்வையன்றி
இதுகூட பிழையென்று
ஒருபக்கம் சிறகசைக்கிறது
பறவையைக் கண்டதும்
மனம் இலகுவாகிறது
தூரம் குறைந்தால்
அதில் குறை ஏற்படலாம்
இப்போது
தொலைநோக்கி இருந்தால் நலம்
என்றிருந்தது
மறுநாள்
வெள்ளைக் கோப்பையில்
குளம்பி ஊற்றி
ஆந்தையின் கண் தேடினேன்
சுடுதண்ணீர்
என்றொரு ஆங்கிலக் குரல்
முகமெங்கும் சிரிப்புடன்
ஒருவேளை
முன்னூற்று அறுபது கோணச் சிரிப்போ!!!
வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025
அக்கா குருவி 22
நேற்றிலிருந்து
பார்த்துக் கொண்டேயிருக்கணும்
போலிருக்கிறது
இன்று அதன் மீது சறுக்கி
தாவித் தழுவி
துள்ளித் திரிந்து
அருவியைக் கண்டதும்
மேகம் என்னை அரவணைத்தது
அய்யோவென்ற ஓலத்துடன்
அழுதுவிடக் கூடாதென்று
நினைத்த பொழுதில்
சாரல் விரலில் சொட்டியது
திங்கள், 28 ஜூலை, 2025
குளம்பிக் கடை
குன்றத்தூரில் நல்ல குளம்பி குடிக்க ஆண்டாள் குப்பத்தில் ஒரு கடை இருக்கிறது. இப்போது அந்தப் பகுதி மேத்தா நகர் என்று மெல்ல மெல்ல உருமாறியிருக்கிறது இந்த பத்து ஆண்டுகளில். இதே இடத்திற்கு "கன்னடா பாளையம்" என்றொரு பெயரும் இருந்திருக்கிறது. இப்போது "ஆக்சிஸ்" வங்கியிருக்கும் சாலையோரத்தில் இருந்த நெடுஞ்சாலைத் துறையின் பலகை இன்று இல்லை ஆனால் அங்குள்ள தமிழ் இல்லாத பிறமொழி (அநேகமாக கன்னடம்) பேசும் மக்கள் அவர்களின் கோயிலில் ஊர் பெயரை தக்கவைத்திருக்கிறார்கள். இருக்கட்டும் நாம் குளம்பிக் கடைக்கு வருவோம். இரண்டு கிழமைக்கு முன் ஊரிலிருந்து வந்தபின் திங்களன்று பள்ளி செல்லும் போதுதான் கவனித்தேன் கடையின் முன்னால் பெரிய பதாகை அவரின் முகத்தைத் தாங்கியிருந்தது. பார்ப்பதற்கு சுறுசுறுப்பாக இருக்கும் ஆள் இந்த இடைப்பட்ட நான்கு நாட்களில் இறந்தது துயரத்தைக் கடத்தியது.
எப்போதும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு அலுவலகத்தில் இருந்து வீடு வரும் வழியில் சரவணன் ஆசானுடன் சேர்ந்து பெரியபணிச்சேரியிலுள்ள மலையாளிக் கடையில் எலுமிச்சைத் தேனீர் அருந்துவது வாடிக்கை. சென்ற புதன் அக்கடையில் தேனீர் கலக்கும் வட இந்தியர் "என்ன ஒரே ஆள்தான் வர்து" என்றார். என்னடா இந்த ஆள் இப்படிக் கேட்கிறாரே என விழி பிதுங்கி பின்னர் ஊருக்கு போயிருந்ததாகச் சொன்னதும் "நான் போவில்லை நீங்க மட்டும் போயிருக்கு" என்றார் ஆசானும் நானும் உரக்கச் சிரித்துவிட்டோம், இது பேரன்பாக இருக்கிறது என்றேன். மறுநாள் சென்றபோது அவர் இல்லை, வேறொருவர் தயாரித்துத் தந்தார். தாமதமாக அவர் வந்தபோது என்ன ஆளைக் காணோம் என்றதும் தனது சுட்டு விரலைக் காண்பித்தார்.
வெள்ளி, 25 ஜூலை, 2025
ஏன் இந்த ஓவியம்
உன்னுடைய ஓவியத்திற்கான விலை என்ன என்ற கேள்வியில் இருந்து தொடங்கியவர் விலையை அறிந்து கொண்டதும், எந்த அடிப்படையில் விலை உறுதி செய்யப்படுகிறது என்று கேட்டார். அதற்கு முன்னர் ஓவியத்தை பார்த்திருந்தவர் இதில் என்ன இருக்கிறது என்றும் தனக்கு அதைப்பற்றிய அறிவு ஏதுமில்லை எனவும் கூறினார்.
பொதுவாக எல்லோரும் ஓவியங்களையோ சிற்பங்களையோ நின்று பொறுமையாக உள்வாங்குவதில்லை. வெறுமனே படம் என்பதைக் கடந்து அங்கே ஓவியத்தில் கோடுகளுக்கும் வடிவங்களுக்கும் வண்ணங்களுக்கும் சில நோக்கங்கள் இருக்கிறது அதை கவனிக்கத் தொடங்கும் பொழுதில் கலை இன்பமானதாகவும் உணர்வுகளை பிணைப்பதாகவும் மாற்றம் கொள்கிறது. எனக்கு கற்பனை ஓவியங்கள் வரைவதில் ஆர்வமுண்டு அது பார்வையாளரை எங்கோவொரு இடத்தில் தான் காண்பதிலிருந்து ஒரு கருத்தையோ கதையையோ உருவாக்கிக்கொள்ளத் தூண்டும் இடத்தில் இருப்பதாக எண்ணுகிறேன்.
ஞாயிறு, 20 ஜூலை, 2025
ஓவியக் கண்காட்சி - சென்னை லலித் கலா கலைக்கூடம்
ஓவியக் குழுவின் ஒருங்கிணைந்த கண்காட்சி சென்னை லலித் கலா கலைக்கூடத்தில் இன்று தொடங்கி அடுத்த சனிக்கிழமை (25 ஜூலை 2025) வரை நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் என்னுடைய மூன்று ஓவியப் படைப்புகளை காட்சிப் படுத்தியிருக்கிறேன். கலைப்படைப்பு கள் உங்கள் பார்வைக்காக காத்திருக்கின்றன, வாருங்கள்!
திங்கள், 30 ஜூன், 2025
ஓவியர் மாற்கு - I Saw I share | ஓவியக் கண்காட்சி
எனக்கு ஏன் கோடுகளை இவ்வளவு தீவிரமாக பிடிக்கிறது எனும் கேள்வி அடிக்கடி எழும்.
இதுவரையில், நேற்று வரையில் ஓவியர் மாற்கு அவர்களது கோடுகளை இணைய வழியில் கண்டு காட்சியிலிருந்து விலகாத கண்களைக் கொண்டிருந்தவனுக்கு இன்று அந்தக் கோடுகளை நேரில் காணும் நற்பேறு கிடைத்தது. ஆசான் சரவணன் அண்ணனுடன் க்ரீம்ஸ் சாலை லலித் கலா கலைக்கூடத்திற்குச் சென்றிருந்தேன்.
தனியாகச் சென்றிருந்தால் அவரது கோடுகளுக்கு பின்னாலிருந்த உழைப்பையும் அவை வெளிப்படுவதற்கான மூலத்தையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவரது அன்பும் பிறருக்கு கற்றளிக்கும் நோக்கமும் முறையும் பாடமாக அமைந்தது. ஒவ்வொரு படைப்பும் நின்று அமர்ந்து பார்த்து கண்களால் கட்டியணைத்து உரையாட வேண்டியவை. நேரத்தினால் நகர இயலாமல் நகர்ந்து வந்தோம்.
சூலை 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது, ஒவ்வொரு ஓவியமும் சன்னலோர இருக்கை, பயணத்தில் இளைப்பாருங்கள்!
புதன், 28 மே, 2025
புதன், 21 மே, 2025
ஞாயிறு, 18 மே, 2025
அக்கா குருவி 21
நாங்கள்
அடுக்கி வைத்து
வாழ்வு நல்கிய செங்கற்கள்
நொறுங்கிக் கிடக்கின்றன
இடிபாடுகளுக்குள்
எங்கள்
ஆட்காட்டி விரலை
தேடிக் கொண்டிருக்கிறோம்
புதன், 14 மே, 2025
யார் கையில் அதிகாரமளிக்கிறோம்
நேற்று மதியம் வீட்டில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது, ஏன் என்று தெரியவில்லை மாலை வரையில் மீளவில்லை. மடிக்கணினி மின்சாரம் தீர்ந்து உறங்கிவிட்டது. பழுது நீக்க கொடுத்திருந்த ஈருருளியை எடுத்து வருவதற்காக வெளியேறினேன். தெருவைக் கடந்து சாலையை அடையும் போது போக்குவரத்து நெருக்கடி. இடது பக்கம் குடிசை வீடுகள் இடித்து நொறுக்கப்பட்டிருந்தது. மக்கள் அவரவர் வீட்டில் இடிபாடுகளுக்கிடையே சோர்ந்து அமர்ந்திருந்தனர்.
அவர்களின் நாளை என்னவாகும் என்ற அதிர்வோடு நடந்தேன். இவர்களுக்கு இடம் ஏதும் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை. முன்பொருமுறை அப்பகுதியில் கடைகளை இடிக்கத் தொடங்கியதும் மக்கள் போராட்டம் செய்தனர், வீடுகளை கை வைக்கவில்லை இப்போது வீடுகள் மொத்தமும் தரைமட்டம். ஆனாலும் இன்று காலையில் இடிந்த பகுதியில் அடுப்பு எரிந்தது, இன்னும் யாரையேனும் நம்பி உள்ளனரா எனப் புரியவில்லை.
இரு வாரத்திற்கு முன்பு பல்லாவரம் குன்றத்தூர் சாலை நான்கு வழிச் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது செய்தியாக வந்தது. தொடர்ந்து அனகாபுத்தூரில் போராட்டம் நடந்ததாகவும் செய்தி. இந்தப்பக்கம் குன்றத்தூரில் அப்படி ஏதும் போராட்டம் நடந்ததாகத் தெரியவில்லை. பொதுவாக இப்பகுதியில் நடக்கும் நிகழ்வுகளில் காணக்கிடைக்கும் அரசியல் முகங்களை இரண்டு நாளாக எங்கும் காணவில்லை. நாம் யார் கையில் அதிகாரத்தைக் கொடுக்கிறோம்...
திங்கள், 12 மே, 2025
மிதிவண்டி
குன்றத்தூரில் உள்ள தமிழ்நாடு மிதிவண்டிக் கடையில் மூத்தவளுக்காக குட்டி வண்டி ஒன்றை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினோம். நான், ரத்திகா மற்றும் இயல் மூவரும் சென்றோம். மிதிவண்டியை வாங்கி ஈருருளியின் பின்னால் கட்டிய போது இயல் தனக்கும் ஒன்று வேண்டுமென அழத் தொடங்கி விட்டாள். இன்னொரு நாள் வாங்கலாம் என்று சொன்ன பிறகும் அழுகையுடன் வீடடைந்தோம்.
நாற்பத்தைந்து நாட்களுக்குள் ஒரு முறை இலவயமாக பழுது பார்த்துக் கொள்ளலாம் என்ற அதியற்புதமான வாய்ப்பும் வழங்கப்பட்டது.
சில மாதங்களில் வண்டி ஓட்டுகையில் சங்கிலி தானாகக் கழன்று கழன்று தொந்தரவுக்கு உள்ளானது. இரு நாட்கள் பார்த்துவிட்டு ஒருநாள் மாலையில் அதனை ஒக்கிடுவதற்காக ஈருருளியில் எடுத்துச் சென்றேன். அங்கே வெளியில் இருக்கும் பழுது நீக்குபவர் பார்த்துவிட்டு கண்ணாடி அறைக்குள்ளிருப்பவரிடம் சென்று கூறியதும் அவர் புதிய சங்கிலி மாற்றவேண்டும் செய்யலாமா என்றதும் விலையை கேட்டுவிட்டுச் சரியென்றேன்.
பின்னர் இன்னும் சில மாதங்களில் மீண்டும் அதே தொந்தரவுக்கு உள்ளானது. என்னடா இது என்று மனம் ஊரிலிருந்த எனது மிதிவண்டியில் சுற்ற ஆரம்பித்தது ஒருமுறை பின் பக்கச் சக்கரத்தில் கல் வெட்டியதால் அங்கங்கே ஏற்பட்டிருந்த பிளவுகளால் மேல் ரப்பர் பகுதியை மாற்றியதும் நிறைய முறை ஓட்டை விழுந்ததால் உள்ளிருக்கும் ரப்பர் குழாயினையும் மாற்றியதும் நினைவில் ஊடாடியது. சங்கிலி மாற்றியது வரலாற்றில் இல்லை என்பது விளங்கியது.
மீண்டும் அந்தச் சங்கிலியை மாற்ற நேர்ந்தது. அடுத்த சில நாட்களில் அதே போல் கழன்று விழுந்தது. இந்தமுறை திசை மாறினேன். நாங்கள் இருக்கும் பகுதி குன்றத்தூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான் வருமென்றாலும், அடையாற்றுப் பாலத்தைத் தாண்டியதும் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனகாபுத்தூர் தான் மிக அருகாமை நகரம்.
பேருந்து நிலையத்தின் மேற்குப் பகுதியில் மிதிவண்டிகள் நிறைந்த தூசி படிந்த ஒரு கடை, பாதாளச் சாக்கடைப் பணிகள் நடந்து கொண்டிருந்ததால் புழுதியை நன்றாகப் பூசிக் கொண்டு மாலை வெயிலுக்கு பழுப்பு நிறத்தை வெளிப்படுத்தியது. மிதிவண்டியை உருட்டிக் கொண்டே சென்றேன். பிரச்சினையை சொன்னதும் கண்ணாடியை உயர்த்தி வண்டியை கவனித்தவர், சில நிமிடங்களில் சங்கிலியின் ஒரு பல்லை மட்டும் கழற்றிவிட்டு பின்னர் இணைத்து மாட்டிவிட்டார் இன்று வரை ஓடுகிறது.
வெள்ளி, 18 ஏப்ரல், 2025
அக்கா குருவி 20
மெல்ல
அணைக்கிறது
முரண்பட்டுச் சிரிக்கிறேன்
தழுவுகிறது
அணைத்துக் கொள்கிறோம்
உறவாடுகிறோம்
தத்தித் தாவுகிறோம்
சிறுவனொருவன்
நுரையைக் கையில் அள்ளி
தாண்டுகிறான்
என்னைப் புரட்டி எறிகிறது
இப்போது
அலையைச் சுவைக்கிறேன்
ஞாயிறு, 6 ஏப்ரல், 2025
அக்கா குருவி 19
திரைப்படம் பார்க்க தனது கைக்குழந்தையுடன் வந்திருந்தாள்
அரங்கம் இருள் சூழவும்
குழந்தை சிணுங்கியது
கைப்பையினுள்
துழாவி திறன் பேசியை எடுத்து
"யூடியூப்" திறந்தாள்
குழந்தை தன் பூவிரல்களால் ஒளியைத் தடவி
சிணுங்கலை துடைத்தது
நாவினைத் தேடி ஒழுகியோடியது
பால்
திங்கள், 24 மார்ச், 2025
அக்கா குருவி 18
ராசபாளையத்தில்
தொடரியின் முகம் பார்த்திருந்தேன் "தென்காசி ஆ"
என்றது வடக்கத்திய குரல்
"வரும்
சங்கரங்கோயில் கடயநல்லூர் தாண்டி"
என்றது தெக்கத்திக் குரல்
இரவு
நெருப்பை கையிலேந்த தொடங்கியது
சனி, 22 மார்ச், 2025
எது மகிழ்ச்சி
யாருக்கு எது மகிழ்ச்சி அதற்கான அளவீடு என்ன இந்த அளவீடுகளை உறுதி செய்வது யார் போன்ற வினாக்கள் தொடர்ந்து இன்று மனதில் அசைகிறது.
குண்டுமழை பொழியும் இசுரேல் நாடு மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் எட்டாவது இடத்திலும் தீவிரவாதம் தழைத்தோங்குவதாகச் சொல்லப்படும் அல்லது காட்டப்படும் பாகிஸ்தான் இந்தியாவைவிட முன்னிலையில் அதாவது நூற்றியொன்பதாவது இடத்திலும் உள்ளது. பட்டியலில் மொத்தம் உள்ள நூற்றி நாற்பத்தேழு நாடுகளில் இந்தியா நூற்றிப்பதினெட்டாம் இடம் பெற்று மகிழ்ச்சியில் பின்தங்கியுள்ளது. எது மகிழ்ச்சி அதற்கான அளவீடு என்ன என்ற வினாக்கள் மீண்டும் துரத்துகின்றது.
சமூகவலைத்தளங்களில் காணொளிகள் பகிர்வதிலும் பார்ப்பதிலும் இந்தியர்கள் உலக அரங்கில் முதலிடம். இத்தனையும் மகிழ்ச்சிக்காக செய்யாமல் எதற்காக என்ன நோக்கத்திற்காக அரங்கேறுகிறது மன அழுத்தத்திற்காகவா. ஒருவேளை இருக்கலாம். தெரிந்தோ தெரியாமலோ நாம் கணினியாகிக் கொண்டிருக்கிறோம் என்பது உண்மை.
ஒரு பள்ளியில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறதென்றால் திரைப்படப் பாடல்கள் ஓரளவு இடம்பெறும், முற்றிலும் அதற்கு இடமளிக்காத பள்ளி பாராட்டுக்குரியது.
இன்று மாலை மூன்று மணி தொடங்கி இரவு ஏழு முப்பது மணிக்கு அந்தப் பகுதியில் இருந்து கிளம்பும் வரையிலும் மதனந்தபுரம் நாராயணா பள்ளியில் தொடர்ந்து திரைப்படப் பாடல்கள் மிகையொலியில் கத்திக் கொண்டிருக்க பள்ளி மாணவ மாணவிகளின் உயர் ஒலிப்பில் கூப்பாடுகளும் ஆட்டங்களும். யாருக்காக இந்நிகழ்வு பணம் கட்டும் பெற்றோர் மகிழ்விற்காகவா இல்லை கல்வி என்ற பெயரில் ஆண்டு முழுவதும் நசுக்கிய பிஞ்சு மனங்களை அவ்வப்போது இப்படி வேண்டாயிசையில் அனலூட்டி குளிர்விக்கவா. பள்ளி என்ன சொல்லிக் கொடுக்கிறது பெற்றோர் என்ன அறிவுடன் இங்கே கல்விக்காக தங்கள் பிள்ளைகளை அனுப்புகிறார்கள் அனைத்து தனியார் பள்ளிகளும் இப்படித்தான் இயங்குகின்றனவா ஒருவேளை இதுதான் மகிழ்ச்சியா என்ற வினாவும் துரத்துகிறது.
செவ்வாய், 18 மார்ச், 2025
ஒளியின் கண்கள் 9
திருவான்மியூர் தொடர்வண்டி நிலையப் பூங்காவில் "Chennai Photo Binnale"-ன் ஒரு பகுதியாக நடைபெற்ற புகைப்படக் கண்காட்சி..
வியாழன், 13 மார்ச், 2025
செயற்கையின் ஈரமின்மை
இந்து தமிழ் நாளிதழில் வியாழக்கிழமை தோறும் எழுத்தாளர் கலாப்ரியா எழுதும் பாற்கடல் தொடர் வாசிப்பிற்கு இனியதும் அன்புமானது.
இத்தொடருக்காக பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவின் ஓவியங்கள் எப்போதும் முகம் சுழிக்க வைக்கும். இன்று வெளியான "வாசனை தாத்தா" கட்டுரைக்கு அச்சிடப்பட்டிருக்கும் படம் கழுத்தை அறுப்பது போலுள்ளது.
இறக்கும் தருவாயில் உள்ள முதியவருக்கு எந்த ஊரில் இப்படி வாயில் நீரூற்றுவார்கள் என்று விளங்கவில்லை. இப்படியொரு காட்சியை கண்டிருக்காத சிலர் இந்த கட்டுரை வாசிப்பிற்கு படத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தவறான புரிதலுக்கு வழிவகுக்குமா இல்லையா. பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டியது பத்திரிக்கை மற்றும் எழுத்தாளரின் அடிப்படை அறம் என்பதனை இவர்கள் உணரவேண்டும்.
திங்கள், 10 மார்ச், 2025
வியாழன், 27 பிப்ரவரி, 2025
திங்கள், 17 பிப்ரவரி, 2025
அந்த முகம்
கண்ணை கசக்கி என்னைப் பார்ப்பதை தவிர்க்க முகத்தை அங்குமிங்கும் அசைத்த சின்னஞ்சிறு குழந்தையை படம் வரைவதற்கு எதிரே தனியாக அமர வைப்பது கடினம் மேலும் முகம் வரைவதற்கு ஏற்ற கோணமாக பார்வை அமையாது என்பதனால் பெற்றோர் மடியில் வைத்துக் கொள்ளவது சரியாக இருக்குமென்று "மடியில வச்சிக்கிடுங்க" என்ற பின்னும் அவள் கண் கசக்கும் நாடகம் தொடர்ந்தது. உடனே அவளது தந்தை எனக்குப் பின்னால் நின்று திறன் பேசியில் காணொளி (அனேகமாக யூ ட்யூப்) ஒளிப்பித்தார், அவளது கை அடங்கிவிட்டது இரு கண்களும் ஒளியை பிரதிபலித்தது. உள்ளே அனல் பரவவும் வரைய முடியாது எனக் கூறிவிடலாம் என மனம் போனாலும் கோடுகள் வெறிகொண்டு கீறலுக்குள்ளானது. இப்படியொன்று மீண்டும் நிகழும் எனில் அடுத்த முறையேனும் சொல்லிவிட வேண்டும்.
செவ்வாய், 11 பிப்ரவரி, 2025
குன்றத்தூர் முருகா
அப்பனே முருகா
என்னடா
உன் சாலையிலும் படியிலும்
தலைகள்
கண்டேன் இல்லை கால்களை
ஓரம் வழிகண்டு
தார்ச் சாலையில் குன்றேறினேன்
அவசர ஊர்தியிரண்டு கண்டேன்
நீயும் கண்டிருப்பாய் என்றெண்ணி
கடந்து வந்தேன்
உன்
திருமேனி காண
வழியில் அடி தேய
நெருக்குகிறது உடல்கள்
நீயும் கண்டிருப்பாய் என்றெண்ணி
விலகி
பின்புறம் சென்றேன்
சமோசாக்களுக்கும் போண்டாக்களுக்கும்
மயில் றெக்கைகளுக்கும்
இடையில்
வேண்டுதல் பொங்கலும்
புளிச்சோறும் நிறை கைகள்
தெப்பம் காண மனம் கொள்ளாமல்
நகர்ந்த பொழுதில்
மகள் அடுக்கிய கல்வீட்டை
நீயும் கண்டிருப்பாய் என்றெண்ணி
தீபத்தின் புகை கடந்து
உன் அண்ணனைக் கண்டோம்
அவன் ஏன் வெளியில் இருக்கிறான்
என்ற மகளின் வில்லங்க வினாவிற்கு
நேற்று விடையளித்த நினைவோடு
திருநீறு கொண்டு படியிறங்கினேன்
முட்டிக்காலில் படியேறிய பெண்ணையும்
உதட்டுச்சாயத்தைத் தழுவி வந்த
அரோகராக்களையும்
வியர்வை வேடிக்கைப் பார்ப்பதை
நீயும் கண்டிருப்பாய் என்றெண்ணி
விடைபெறுகிறேன்
வியாழன், 6 பிப்ரவரி, 2025
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)