திங்கள், 10 ஆகஸ்ட், 2026

சாவுச் சங்கு

"என்னப்பா ஒழுங்கா ஊத முடியுமா"

"இன்னும் பன்னெண்டு மணி ஆவலடே..முடியுமா"

"எங்க ஊர்ல மணியடிச்சா போதும்னுட்டாங்க"

"சங்கு ஊதும் போது ஒருத்தேன் அந்த எடத்துலயே குளோசு"

"தம் கெட்டணும்லா, முடியாது ப்பா, அடைச்சிக்கிடும்"

"இன்னும் ஒருதரம் ஊதேன்..ஆளுவ வந்து சேரணும்லா"

"இனும செல்லுல போட்டுக்கிட வேண்டியதாங்"

"அதுலாங் ஊதுத மாதி வராதுலா"

"மத்தியானம் நேரமா வந்துரு.. பெறவு நீ பாட்டுக்கு ஊத்திக்கிடாத"

"என்னெ இன்னைக்கி ஒண்ணும் அம்புடல போலுக்கு"

"அர அடிச்சிட்டுத்தான் நிப்பான், இல்லனா வேல நடக்குமாங்கும்"

ஏற்றமும் இறக்கமுமாக குரல்கள் ஏனோதானோவென்று வந்து கொண்டிருந்தது ப்ப்ப்ப்ப்ப்....... ப்ப்ப்ப்ப்ப்...........ப்ப்ப்ப 
ப்ப்ப்ப்ப்ப்....... ப்ப்ப்ப்ப்ப்...........ப்ப்ப்ப 
ப்ப்ப்ப்ப்ப்....... ப்ப்ப்ப்ப்ப்...........ப்ப்ப்ப 
என்ற சங்கொலிக்கு இடையிடையே.

ஒலிப்பு முடிந்ததும் தானொரு திரைப்படத்திற்காக சங்கு ஊதிய கதையை பிய்த்துப் பிய்த்து சாவு வேலைக்கிடையே சொல்லிக்கொண்டிருந்தார் முருகன்.

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

நற்கீறல் 50

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நாங்கள் நற்கீறல் நிகழ்விற்காக வெளிப்புறத்திற்குச் சென்று வரைந்து வருகிறோம். இந்த வாரம் வழக்கம் போல ஒரு இடத்திற்குச் சென்று வரைவதோடு நிறுத்திக் கொள்ளாமல் இந்த நிகழ்வை ஒரு பயணமாகவே மாற்ற நினைத்தோம். அதற்காகக் குன்றத்தூரில் இருந்து கிளம்பி திருப்பெரும்புதூர் சாலை வழியாக சோமங்கலம் அடைந்து, அங்கிருந்து படப்பை நோக்கி செல்லும் வழியெங்கும்‌ கிராமங்களில் உள்ள வீடுகள், கோயில்கள், நிலப்பரப்பு, மரங்கள், குளங்கள், மாடுகள் என அனைத்தையும் பார்த்து வரைந்து பழகினோம்.

 இவை அனைத்தையும் ஒரே நாளில் எப்படி வரைந்து முடித்துவிட்டு வர முடியும் என்று வினா எழலாம். ஆனால் ஒரு படம் வரைவதற்கு ஒரு நிமிடத்திற்கு மேல் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று நாங்கள்  முடிவு செய்தோம்.  ஒரு நிமிடத்திற்குள் எந்த அளவுக்கு வேகத்துடன் கோடுகளைக் கீறுகிறோம் என்பதில் கவனம் குவித்தோம். இந்த கோட்டோவியங்கள் எல்லாம்  என்னுடைய எளிய கிறுக்கல்கள். இவை முழுமையடையாமல் இருக்கலாம், ஆனால் இக்கோடுகளின் வீச்சும் எங்களது மனநிலையும் உணர்வோடு ஒன்றிப் போன நொடிகள் அடுத்த பயணத்திற்கான உந்துதலை தந்திருக்கின்றது.