ஞாயிறு, 14 ஜூன், 2026

வழியில்

ஏரி மீன் சாப்பிட்டு நாட்கள் ஓடிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணி இருந்தால் பக்கத்தில் இருக்கும் கடையில் ஆட்டுக் கறி வாங்கி வீட்டில் சமைப்பது வழக்கம். விடுமுறை என்றால் மனம் தொலைவு நாடும் குறிப்பாக மீன். நேற்று எண்ணத்தில் அசைவம் பற்றிக் கொண்டதும் "சிலேபி" மீனின் உருவம் கோடுகளாக உருண்டு திரண்டது. 

செம்பரம்பாக்கம் ஏரி அருகில் உள்ள சந்தையில் விறால், கட்லாகெண்ட, சிலேபி, வவ்வால் ஆகியவைதான் பெரும்பாலும் கிடைக்கும். மூன்று கிலோ சிலேபி வாங்கிவிட்டு திரும்பிவரும் போது வாத்துக்கறி கடை அருகே கண்ணாடிக்குள் கண்கள் மட்டும் தெரியும்படி துணி கட்டியப் பெண்மணி கை நீட்டினாள் ஏனோ பச்சைக்கிளி முத்துச்சரம் ஜோதிகா அம்மையார் உளக்காட்சியில் வந்து போனாள். 

வெளிவட்டச்சாலையைக் கடந்து குன்றத்தூர் பாதையில் வரும் போது "பெயர் என்ன" என்றாள் 

"பாண்டியன். நீங்க எங்க இறங்கணும்"

"பல்லாவரம் போகணும் குன்றத்தூர் பஸ்டாண்ல எறங்கணும், மாசத்துக்கு ஒருமுறை இங்கவந்து மீன் வேங்கிட்டு போவேன், மத்திமீன் வேணும்னா காசிமேட்டுக்கு போயிருவேன். ஐஸ்ல வச்ச மீன் சாப்புட முடியாது. இதுன்னா மசாலா தக்காளி எல்லாம் போட்டு மண்பானைல கொழம்பு வச்சிட்டம்னா நாலு நாளைக்குச் சாப்புடலாம் ஒண்ணும் ஆவாது அதனால 66 புடிச்சி இங்கவந்துட்டு 86D புடிச்சி சந்தைல எறங்கிருவேன். உங்கள மாதிரி யாராவது வந்தா உதவி கேப்பேன். சின்னப் பசங்க யாரும் நிக்க மாட்டாங்கா, அதுவுமில்லாம அவங்க போற வேகத்துக்கு. இல்லனா ஆட்டோவுக்கு பத்து ரூபாய் குடுத்து வந்துருவேன்"

இடையிடையே நான் தலையசைத்துக் கொண்டிருந்தேன்.

"நான் மணிகண்டன் நகர் போறேன் அங்க எறக்கிவிடட்டுமா"

"அது எங்கயிருக்கு"

"பல்லாவரம் போற வழிலதான்"

"உங்களுக்கு தொந்தரவு இல்லன்னா அங்கேயே எறக்கிவிடுங்க"

"மத்தி மீன் காசிமேட்டுல எவ்வளவுக்கு தாராங்க"

"அது ஒவ்வொரு நாளும் மாறும், அங்க கூறுதான் வப்பாங்க கிலோக் கணக்கு கெடையாது. செல நேரம் கூறு எரணூறு அம்மாவாச நாள்னா நெறைய பேரு வேங்கமாட்டாங்க அதனால மூணு கூறு எரணூறுன்னு கெடைக்கும்."

இவங்களை 66 பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விடலாமா வேண்டாமா என்று நினைக்கையில் அந்நிறுத்தத்தை கடந்து கொண்டிருந்தோம்.

"உங்க பேர ஏன் கேட்டேன்னு தெரியுமா"

தலையை புரியாதது போல ஆட்டினேன்.

"காலைல அப்புறம் சாய்ங்காலம் ப்ரேயர் பண்ணுவேன் அந்த நாள்ல உதவி செய்தவங்களுக்கு எல்லாம் சேர்த்து அதனாலதான் பேர் கேட்டேன். இத நான் சின்னப்புள்ளயில இருந்து செய்யிறேன்"

அவங்க சாய்ங்காலம்னு சொன்னாங்களா இல்ல ஈவ்னிங்னு சொன்னாங்களான்னு இப்போ குழப்பமாக இருக்கிறது.

ஓ அப்படியா நல்லது நல்லது என்று சொல்லலாமா என எண்ணும் போதே இவங்களை மேத்தா நகரில் இறக்கிவிடலாம் என முடிவு செய்துவிட்டேன்.


வியாழன், 11 ஜூன், 2026

வாசிப்பினிடையே

கலை என்பது கலைத்து வைப்பதன் சுருங்கியச் சொல் வடிவாக இருக்கலாம் என்றே அடிக்கடி எண்ணத்தில் ஓடுகிறது. இந்தச் சொல்லின் வேர் அல்லது பெயர் காரணம் என்ன என்றொரு அகத் தேடல். 

க்+அலை என இச்சொல்லை பிரிக்கலாமா அதற்கு இலக்கணம் இடம் தருமா என்று தெரியவில்லை ஆனால்  அலை என்பது அலைந்து கொண்டே இருப்பதன் சுருக்கமா அப்படியென்றால் கடல் அலை எப்போதும் இங்கும் அங்கும் அலைந்து அலைந்து திரிவதால் ஒருவேளை அதற்கு அலை என்று பெயர் வந்திருக்குமோ. இருக்கட்டும்.

க் என்ற ஒலிப்புக்கு ஏதேனும் பொருள் இருக்குமா உயிர் பெற்ற எழுத்துக்குத்தானே பொருள் உருவாக முடியும். நான் நினைப்பது சரிதானா. அலையும் மனம் கலைக்கானதாக பொருந்தி கலை என்ற சொல்லாகவும் உருமாறியிருக்குமோ. தெரியவில்லை செத்தேங் கொழப்பமாத்தாயிருக்கு.

                          ‌      ‌*  *  *
காந்தியின் சத்திய சோதனை வாங்கி சில ஆண்டுகள் இருக்கும். அப்போது தொடங்கி சில பக்கங்களுக்கு மேல் தொடர‌ ஆர்வமில்லாமல் வைத்துவிட்டு இந்த கோடையில் மீண்டும் முயன்று தொடர்கிறது வாசிப்பு. தன்னைப் பற்றிய நிலைப்பாடுகளை அப்பட்டமாக பல இடங்களில் முன்வைக்கும் காந்தியின் எழுத்துப் பிடித்திருக்கிறது. பயத்துடன் கூடிய தனது போராட்ட குணத்தை லண்டனிலும் தென்ஆப்பிரிக்காவிலும் வெளிப்படுத்துபவர் ஒவ்வொரு நிகழ்விலிருந்தும் அவரது நிலைப்பாடுகளை மதிப்பீடு செய்து அடுத்தடுத்து பயணிப்பதில் அவரது தேடலின் பிடிமானம் உணரப்படுகிறது. தனக்கு நேரமில்லாத காரணத்தால் கற்க இயலாத தென்மாநில மொழியைப் பேசும் மக்கள் தான் பேசும் மொழியைக் கற்றுக் கொண்டு தன்னோடு உரையாட வேண்டும் என நினைக்கும் இடத்தில் இருந்து இன்றும் தொடரும் இந்தித் திணிப்பின் அடி வேரைப் புரிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும் தனது பயணத்தின் இடையே தமிழ் கற்கும் வாசிப்பை மேற்கொள்கிறார். மீண்டும் தென் ஆப்பிரிக்காவில் என்ன வகையிலான போராட்டம் தொடரும் என்று எதிர்நோக்குகிறேன்.

                        ‌        ‌* * *