நேற்று குன்றத்தூரில் உள்ள அம்மன் கோவிலுக்குச் சென்றிருந்தோம். வாசலுக்கு அருகில் இருந்த பூ விற்கும் அம்மா அர்ச்சனைக்கும் வாங்கிக்கம்மா என்றார் ஒவ்வொரு சொல்லுக்கும் அடுத்து அவர் சேர்த்துச் சொன்ன அம்...மா.. அம்...மா மிகுந்த கனிவாகவும் நாடகத் தன்மையுடனும் இருந்தது. பூ நூறும்...மா அர்ச்சனை நூறும்...மா மொத்தம் எரணூறும்...மா.
கோயில் மண்டபத்தில் நுழையும் போது ஒரு காலை மடக்கி மற்றொன்றை தொங்கவிட்டிருந்தவர் படபடப்புடன் அர்ச்சனையா என்றார். இவர்தான் பூசாரி போல என்று நினைக்க நேரம் தராமல் சீட்டு ஒன்றைக் கிழித்து நீட்டினார் ஐந்து ரூபாய் என்று தெளிவற்று காதில் விழுந்தது.
உள்ளே பூசாரி இல்லை அர்ச்சகர் நின்றிருந்தார். மண்டபத்தில் ஒரு அம்மா புதுமணப்பெண் போல தலையில் வாழைப்பட்டையில் கட்டிய பூச்சரம் அணிந்து வழிபாடு நடத்திக் கொண்டிருந்தாள். அர்ச்சகர் எங்களிடம் என்ன கோத்திரம் என்று கேட்டார் எங்கள் இருவருக்கும் தெரியவில்லை என்றோம் உடனே சுப கோத்திரம் என்று மந்திரத்தை அவிழ்த்து விட்டார். வெளியில் வந்ததும் மாறி மாறி கேட்டுக் கொண்டோம் அப்படி என்றால் என்னவென்று, எனக்கு திருமணத்திற்குப் பிறகு தான் எனது ராசி பற்றியே தெரியும் என்றேன்.
காலையில் பள்ளிக்குச் செல்லும் வழியில் பேருந்தில் எழுதியிருந்தது "ஓம் ஶ்ரீ சாய்" இந்த முன்னொட்டுகளில் இன்னும் என்னவெல்லாம் சேருமோ. ஆமாம் கோத்திரம் என்றால் என்ன. கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி நாளன்று இங்கே மணிகண்டன் நகரில் உள்ள கோவிலுக்குச் சென்றோம் அங்கிருந்த பூசாரி தமிழில் பாசுரங்கள் பாடியது இனிமையையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. இதற்கு முன்பு இப்படி ஓதுவார் ஓதிக் கேட்டதில்லை.