செம்பரம்பாக்கம் ஏரி அருகில் உள்ள சந்தையில் விறால், கட்லாகெண்ட, சிலேபி, வவ்வால் ஆகியவைதான் பெரும்பாலும் கிடைக்கும். மூன்று கிலோ சிலேபி வாங்கிவிட்டு திரும்பிவரும் போது வாத்துக்கறி கடை அருகே கண்ணாடிக்குள் கண்கள் மட்டும் தெரியும்படி துணி கட்டியப் பெண்மணி கை நீட்டினாள் ஏனோ பச்சைக்கிளி முத்துச்சரம் ஜோதிகா அம்மையார் உளக்காட்சியில் வந்து போனாள்.
வெளிவட்டச்சாலையைக் கடந்து குன்றத்தூர் பாதையில் வரும் போது "பெயர் என்ன" என்றாள்
"பாண்டியன். நீங்க எங்க இறங்கணும்"
"பல்லாவரம் போகணும் குன்றத்தூர் பஸ்டாண்ல எறங்கணும், மாசத்துக்கு ஒருமுறை இங்கவந்து மீன் வேங்கிட்டு போவேன், மத்திமீன் வேணும்னா காசிமேட்டுக்கு போயிருவேன். ஐஸ்ல வச்ச மீன் சாப்புட முடியாது. இதுன்னா மசாலா தக்காளி எல்லாம் போட்டு மண்பானைல கொழம்பு வச்சிட்டம்னா நாலு நாளைக்குச் சாப்புடலாம் ஒண்ணும் ஆவாது அதனால 66 புடிச்சி இங்கவந்துட்டு 86D புடிச்சி சந்தைல எறங்கிருவேன். உங்கள மாதிரி யாராவது வந்தா உதவி கேப்பேன். சின்னப் பசங்க யாரும் நிக்க மாட்டாங்கா, அதுவுமில்லாம அவங்க போற வேகத்துக்கு. இல்லனா ஆட்டோவுக்கு பத்து ரூபாய் குடுத்து வந்துருவேன்"
இடையிடையே நான் தலையசைத்துக் கொண்டிருந்தேன்.
"நான் மணிகண்டன் நகர் போறேன் அங்க எறக்கிவிடட்டுமா"
"அது எங்கயிருக்கு"
"பல்லாவரம் போற வழிலதான்"
"உங்களுக்கு தொந்தரவு இல்லன்னா அங்கேயே எறக்கிவிடுங்க"
"மத்தி மீன் காசிமேட்டுல எவ்வளவுக்கு தாராங்க"
"அது ஒவ்வொரு நாளும் மாறும், அங்க கூறுதான் வப்பாங்க கிலோக் கணக்கு கெடையாது. செல நேரம் கூறு எரணூறு அம்மாவாச நாள்னா நெறைய பேரு வேங்கமாட்டாங்க அதனால மூணு கூறு எரணூறுன்னு கெடைக்கும்."
இவங்களை 66 பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விடலாமா வேண்டாமா என்று நினைக்கையில் அந்நிறுத்தத்தை கடந்து கொண்டிருந்தோம்.
"உங்க பேர ஏன் கேட்டேன்னு தெரியுமா"
தலையை புரியாதது போல ஆட்டினேன்.
"காலைல அப்புறம் சாய்ங்காலம் ப்ரேயர் பண்ணுவேன் அந்த நாள்ல உதவி செய்தவங்களுக்கு எல்லாம் சேர்த்து அதனாலதான் பேர் கேட்டேன். இத நான் சின்னப்புள்ளயில இருந்து செய்யிறேன்"
அவங்க சாய்ங்காலம்னு சொன்னாங்களா இல்ல ஈவ்னிங்னு சொன்னாங்களான்னு இப்போ குழப்பமாக இருக்கிறது.
ஓ அப்படியா நல்லது நல்லது என்று சொல்லலாமா என எண்ணும் போதே இவங்களை மேத்தா நகரில் இறக்கிவிடலாம் என முடிவு செய்துவிட்டேன்.