சனி, 18 ஜூலை, 2026

வாசிப்பின் இடையிடையே

சில ஆண்டுகளுக்கு முன்பு "பாகீரதியின் மதியம்" என்ற‌ புனைவு நூலை வாசிக்கும் பொழுதில் தான் ஓவியர் ஆதிமூலம் பற்றியும் அவரது காந்தி ஓவியங்கள், மிதக்கும் வண்ணங்கள் போன்ற படைப்புகளையும் பற்றி அறிந்து அவ்வோவியங்களைத் தேடுகையில் கோட்டோவியங்களில் காந்தியின் உருவங்களையும் ஆங்கிலேய இந்தியாவின் அரசர்கள் ஓவியங்களில் முகம் இழந்து உடை, நகை போன்ற அணிகலன்களை மட்டுமே சுமந்த உருவப்படங்களைக் கண்டு ஏன் இப்படி வரையப்பட்டிருக்கிறது என்ற ஐயத்தில் உலாவந்தபோது அவர்களின் அடிமைத்தனத்தை காட்சிப்படுத்தவே இத்தகைய வடிவமைப்பைக் கையாண்டிருக்கிறார் என்று தெரிந்தது. எப்படி தெரிந்தது என்பது நினைவில் இல்லை. சில நாட்கள் முன்னதாக ஓவியர் சந்ரூ கூறிய கருத்தில் கூட இந்த வகை படைப்புகளுக்கு ஓவியர்கள் கொடுக்கும் விளக்கங்களை நக்கலடித்திருப்பார். இப்போது காந்தியின் சுயசரிதை வாசிப்பினிடையே பதினாறாவது அத்தியாயத்தில் மகாராசாக்கள் பெண்களைப் போல ஆடை அலங்காரங்களை வெறுப்புடன் தங்களுக்கு விருப்பம் இல்லாமலே அணிந்து தர்பாருக்கு வருவதும் அதனை அடிமைத்தனத்தின் குறியீடாக அவர்கள் எண்ணுவதையும் பதிவு செய்திருக்கிறார். ஓவியர் ஆதிமூலம் அவரது மகாராசாக்கள் ஓவியத்திற்கான மூலச் சிந்தனையை காந்தியிடம் இருந்தே பெற்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.


                                                     *

ஒளிப்பதிவு பற்றி அறியக்கூடிய அரிய தகவல்களையும் நுட்பங்களையும் எளிய மொழியில் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ் இந்துவில் சி.ஜே ராஜ்குமார் எழுதி வரும் தொடரில் இன்று ஒப்பனையும் ஒளிப்பதிவும் எவ்விடத்தில் இணைந்து சிறப்புற பணியாற்றி சிறந்த படைப்புகளை உருவாக்க இயலும் என்பதற்குரிய நுட்பங்களை விவரித்திருப்பது தொடர்ந்த தேடலுக்கு உரமூட்டுவதாக இருக்கிறது எப்படி ஓவியத்தில் ஒளிநிழல் பிரித்து படைப்பை உண்மை நிலைக்கு நெருக்கமாக உருக்கொண்டு வருகிறோமோ அதே போலவே ஒளிப்பதிவிலும் ஒளியின் தன்மை மற்றும் ஒப்பனையின் தன்மை இரண்டும் இணைந்து எவ்வகையில் திரைக்கதைக்கு உயிரோட்டம் கொடுக்கிறது என்பது கலைகள் ஒன்றுக்கொன்று பிணைந்து வாழ்வை காட்சிப்படுத்தும் அழகியல். ஓவியம் பற்றிய தேடலுக்கும் இந்த வாசிப்பு உந்துதலை ஏற்படுத்துகிறது.

செவ்வாய், 7 ஜூலை, 2026

அக்கா குருவி 33

ஒரு படுக்கைக் கோடு
அதன் மையத்திலிருந்து செங்குத்தாக
ஒன்று 
இதன் மையத்தில் 
வலப்புறமிருந்தொரு படுக்கை 
படுக்கையின் வலது ஓரம் 
செவ்வகம் 
(செவ்வகம் என்றால் சதுரம் எனக் கொள்க)
இடது ஓரத்திலிருந்து 
கீழ் நோக்கி செங்குத்தாகவும் 
அதன் அடிப்பகுதியையும் 
முதலில் கிழித்த 
செங்குத்தின் அடிப்பகுதியையும்
கட்டிப்போடும் படுக்கைக் கோடு
வரைந்து பார்ப்போம்