திங்கள், 24 மார்ச், 2025

அக்கா குருவி 18

ராசபாளையத்தில் 
தொடரியின் முகம் பார்த்திருந்தேன் 
"தென்காசி ஆ"
என்றது வடக்கத்திய குரல் 
"வரும் 
சங்கரங்கோயில் கடயநல்லூர் தாண்டி" 
என்றது தெக்கத்திக் குரல் 
இரவு 
நெருப்பை கையிலேந்த தொடங்கியது 

சனி, 22 மார்ச், 2025

எது மகிழ்ச்சி

யாருக்கு எது மகிழ்ச்சி அதற்கான அளவீடு என்ன இந்த அளவீடுகளை உறுதி செய்வது யார் போன்ற வினாக்கள் தொடர்ந்து இன்று மனதில் அசைகிறது.

குண்டுமழை பொழியும் இசுரேல் நாடு மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் எட்டாவது இடத்திலும் தீவிரவாதம் தழைத்தோங்குவதாகச் சொல்லப்படும் அல்லது காட்டப்படும் பாகிஸ்தான் இந்தியாவைவிட முன்னிலையில் அதாவது நூற்றியொன்பதாவது இடத்திலும் உள்ளது. பட்டியலில் மொத்தம் உள்ள நூற்றி நாற்பத்தேழு நாடுகளில் இந்தியா நூற்றிப்பதினெட்டாம் இடம் பெற்று மகிழ்ச்சியில் பின்தங்கியுள்ளது. எது மகிழ்ச்சி அதற்கான அளவீடு என்ன என்ற வினாக்கள் மீண்டும் துரத்துகின்றது. 

சமூகவலைத்தளங்களில் காணொளிகள் பகிர்வதிலும் பார்ப்பதிலும் இந்தியர்கள் உலக அரங்கில் முதலிடம். இத்தனையும் மகிழ்ச்சிக்காக செய்யாமல் எதற்காக என்ன நோக்கத்திற்காக அரங்கேறுகிறது மன அழுத்தத்திற்காகவா. ஒருவேளை இருக்கலாம். தெரிந்தோ தெரியாமலோ நாம் கணினியாகிக் கொண்டிருக்கிறோம் என்பது உண்மை.

ஒரு பள்ளியில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறதென்றால் திரைப்படப் பாடல்கள் ஓரளவு இடம்பெறும், முற்றிலும் அதற்கு இடமளிக்காத பள்ளி பாராட்டுக்குரியது. 

இன்று மாலை மூன்று மணி தொடங்கி இரவு ஏழு முப்பது மணிக்கு அந்தப் பகுதியில் இருந்து கிளம்பும் வரையிலும் மதனந்தபுரம் நாராயணா பள்ளியில் தொடர்ந்து திரைப்படப் பாடல்கள் மிகையொலியில் கத்திக் கொண்டிருக்க பள்ளி மாணவ மாணவிகளின் உயர் ஒலிப்பில் கூப்பாடுகளும் ஆட்டங்களும். யாருக்காக இந்நிகழ்வு பணம் கட்டும் பெற்றோர் மகிழ்விற்காகவா இல்லை கல்வி என்ற பெயரில் ஆண்டு முழுவதும் நசுக்கிய பிஞ்சு மனங்களை அவ்வப்போது இப்படி வேண்டாயிசையில் அனலூட்டி குளிர்விக்கவா. பள்ளி என்ன சொல்லிக் கொடுக்கிறது பெற்றோர் என்ன அறிவுடன் இங்கே கல்விக்காக தங்கள் பிள்ளைகளை அனுப்புகிறார்கள் அனைத்து தனியார் பள்ளிகளும் இப்படித்தான் இயங்குகின்றனவா ஒருவேளை இதுதான் மகிழ்ச்சியா என்ற வினாவும் துரத்துகிறது.

செவ்வாய், 18 மார்ச், 2025

ஒளியின் கண்கள் 9

திருவான்மியூர் தொடர்வண்டி நிலையப் பூங்காவில் "Chennai Photo Binnale"-ன் ஒரு பகுதியாக நடைபெற்ற புகைப்படக் கண்காட்சி..



வியாழன், 13 மார்ச், 2025

செயற்கையின் ஈரமின்மை

இந்து தமிழ் நாளிதழில் வியாழக்கிழமை தோறும் எழுத்தாளர் கலாப்ரியா எழுதும் பாற்கடல் தொடர் வாசிப்பிற்கு இனியதும் அன்புமானது.

இத்தொடருக்காக பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவின் ஓவியங்கள் எப்போதும் முகம் சுழிக்க வைக்கும். இன்று வெளியான "வாசனை தாத்தா" கட்டுரைக்கு அச்சிடப்பட்டிருக்கும் படம் கழுத்தை அறுப்பது போலுள்ளது.

இறக்கும் தருவாயில் உள்ள முதியவருக்கு எந்த ஊரில் இப்படி வாயில் நீரூற்றுவார்கள் என்று விளங்கவில்லை. இப்படியொரு காட்சியை கண்டிருக்காத சிலர் இந்த கட்டுரை வாசிப்பிற்கு படத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தவறான புரிதலுக்கு வழிவகுக்குமா இல்லையா. பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டியது பத்திரிக்கை மற்றும் எழுத்தாளரின் அடிப்படை அறம் என்பதனை இவர்கள் உணரவேண்டும்.