வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

முகங்(கலை)தல்



 கலை அப்படின்னா என்ன அதுவொரு மாய உலகமா எளிதில் எட்டி விடாதா தொலை தூரத்தில் உள்ளதா, எது கலைப் படைப்பு எதனால் அது கலைப் படைப்பாகிறது, எது அழகு எதனால் அது அழகு , எந்த இடத்தில் கலை உருவாகிறது யார் உருவாக்குகிறார்கள் என பலதரப்பு கேள்விகள் நம்மைச் சூழலாம் அல்லது இவை எதுவும் என்னவென்றே அறியாது ஒதுங்கி நிற்கலாம் அப்படி நிற்பதில் கூட கலைக்கான செயல்பாடு எதாவது இருக்குமானால் இருக்கலாம் அதை அறியாததால் என்னவென்றே தெரியாததால் அது காற்றில் கலந்து விடுகிறது அந்த காற்றை எல்லாருமே உள்ளிழுப்பதால் யாருக்காவது அதாவது கலை பற்றிய தேடலில் வானத்தைப் பார்த்து புலம்பிக் கொண்டிருக்கும் உயிரான ஒன்று அதை இழுத்துக் கொள்வதால் ஒரு புன்னகையில் அக்காற்றை வெளியிடுகிறது அல்லது வேக வேகமாக தாளை எடுத்து எதையும் எழுதவோ வரையவோ துணியாமல் மீண்டும் வானத்தையே பார்க்கத் தொடங்கினால் வேரொரு உயிர் தூரிகையால் வண்ணங்களை குதப்பி அப்புகிறது என்னவென்று கேட்டால் தெரியவில்லை என உரத்துச் சிரிக்கிறது வேறு சில அவ்வுயிரியை நவீனம் என்கிறது. நவீனம் பெருங் குழப்பமடைந்து ஆமாம் ஆமாம் என்று தான் தெரியவில்லை புரியவில்லை எனச் சொன்ன வண்ணங்களுக்கு புது மொழி பெயர்ப்பு செய்கிறது, ஆமாம் எழுத்தைத் தானே மொழி பெயர்ப்பார்கள் இதுயென்ன ஓவியத்தையும் பெயர்க்கிறது. கலை என்பதற்கு வடிவம் எதுவுமில்லை அதுவொரு உணர்ச்சிக் கடல் அது எந்த உயிருக்கும் உண்டு இன்னாருக்கு உண்டு இன்னாருக்கு இல்லை என்று எதுவுமேயில்லை. வரைவதும் எழுதுவது இசைப்பதும் நடிப்பதும் ஆடுவதும் மட்டுமே கலையா. கனவிலும் உணர்வுண்டு கழிப்பறையிலும் உணர்வுண்டு என மேம்போக்காக சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால் பொது உயிரிகளிடம் பேசும் போது முகஞ்சுழிக்கக் கூடுமாகையால் இன்னும் கொஞ்சம் விளக்கியும் விலக்கியும் கூறவேண்டியதாகிப் போகிறது. அந்த உயிரி வரைந்த கரிக்கோல் ஓவியத்தை இரண்டு நாள் கழித்து பார்த்துவிட்டு இதை ஏன் வரைந்தேன் என நொந்தது, மீண்டும் ஒரிரு மாதம் கழித்து அதே ஓவியத்தை பார்த்ததும் அதிலுள்ள கோடுகளெல்லாம் தெரிந்தது அட இந்தக் கோடு எவ்வளவு ஒயிலாக திசை மாறுகிறது என்றெல்லாம் தனக்குத் தானே கேட்டுவிட்டு இணையத்தின் ஊடாக சில ஓவியங்களை பார்க்கிறது அங்கேயும் கோடுகளை மேய்கிறது, அப்பாடா என்று இன்னும் சில முகங்களை கோடுகளாக்குகிறது. ஆமாம் எது கலை எது அழகு எது படைப்பு.







புதன், 17 ஆகஸ்ட், 2022

தொடர் வரைவு ஏழும் புத்தகங்களும்

ஒவ்வொரு நாளும் வேறு வேறு ஓவிய வகைமைகளை வரைந்து பார்க்க வேண்டுமென்று நேற்று காலையில் ஒரு எண்ணம் விரிவடைந்தது. முகம், முழு உருவம், நோக்குநிலையில் காணும் பொருளை அல்லது இடத்தை வரைவது, அரை மணி நேரத்தில் ஒரு வண்ண ஓவியம் என ஒரு நாளுக்கு ஒன்று என வரைந்து பார்க்கலாம்.

முகத்தை படம் பார்த்து வரைந்துவிடலாம். கற்பனையிலும் அதேபோல வரைந்து விடலாமே என்று தான் மனத்தில் தோன்றும், ஆனால் உண்மை அப்படியிருப்பதில்லை, கண் மூக்கு வாய் காது தாடை நெற்றி என வரைந்து விட்டாலும் அதை முப்பரிமாண எல்லைக்குள் இழுத்துச் செல்லவும் பயிற்சி வேண்டும். இதற்கு மனித முகம் மற்றும் உருவ அமைப்புகள் குறித்த ஓரளவு புரிதல் இருக்க வேண்டும். எல்லாம் இருப்பது போல் இருந்தாலும் அதிலொரு மேதமை வடிவத்தை உருவக்கத் தேவையான அடிப்படை புரிதலை அடைய வேண்டும், அதற்கான தினப் பயிற்சியாக ஒளி நிழல் பிரித்து முப்பரிமாணத்தை குறுகிய கோடுகளில் அழைத்துவரும் முயற்சி.

நேற்று வரைந்த இவ்விரண்டு முகங்களும் கற்பனை முகங்கள் மற்றும் சில அடிப்படை புரிதலுக்கு என்னை ஆட்படுத்திக் கொண்டு ஒளி நிழல் பிரித்துப் பார்த்தேன், அவ்வளவு துல்லியமாக வரவில்லையென்றாலும் சுமாராகவும் வரவில்லை என்பதே எனது எண்ணம். இதே முறையினை வண்ணத்திலும் பயன்படுத்திப் பார்க்க வேண்டும்.





இப்பதிவு எழுதும் சில நிமிடம் முன் வரைந்தது, போன வாரம் குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்த போது எதேச்சையாக ஒரு கருப்பு தூவல் (பேனா) கண்ணில் பட்டது (Goldex என்று அதன் மீது எழுதியிருக்கிறது, இதுவரை பார்த்திராத கேள்விப் படாத நிறுவனம்), எதிர்பார்த்ததை விட நன்றாகவே இருக்கிறது படம் வரைவதற்கு. எங்கள் வீட்டு அலமாரியில் ஓவியங்களை வைக்க இடம் கொடுத்து கட்டிலில் காத்திருக்கும் கனவான்கள் இப்புத்தகங்கள். தடித்த புத்தகங்களுள் பாகீரதியின் மதியம் மனதுக்கு மிக நெருக்கமான புதினம். பக்கங்கள் அதிகமானாலும் அது கொடுக்கும் பயணம் பேரானந்தம்.



திங்கள், 8 ஆகஸ்ட், 2022

தொடர் வரைவு ஆறு

 இன்று காலை எழுந்ததும் சாரல் பொசுங்கி தெரு மெல்ல தன் மீது நீர் மொட்டுக்களை கோலத்தின் புள்ளியாக்கி பரப்பியிருந்தது பார்வையில் விழவும் வெளியே செல்ல மனமின்றி வாசிக்கலாம் என மூன்றாவது வரியில் இருந்தபோது மூடிவிட்டு நடக்கப் போய்விட்டு வந்ததும் ஒரு கையளவுள்ள வரைவுத்தாளில் எதிரேயிருக்கும் புங்க மரத்தைக் கண்டேன்.


படம் ஒன்றை கண்டு வரைந்தது இவ்வம்மாவும் இக்குழந்தையும்.

கொரோனா முடக்கத்திற்கு பிறகு இரு ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணாநகர் கோபுரப் பூங்காவிற்கு (tower park என்று சொல்வார்கள்) சென்று ஆசானும் நானும் நேற்று வரைந்தோம். இது என்னுடைய பங்களிப்பு. 

கடந்த பதிவில் எண்ணெய் ஓவியம் வரையத் தொடங்கி விட்டதாக பதிவிட்டிருந்தேன் அதன் அடுத்தடுத்த படிநிலையில் நேற்று வரையிலான படம். கோட்டு வரைவுக்குப் பின் முதல் நிலை வண்ணமிடுதலை நேரலையில் முகநூலில் காண்பித்திருந்தேன். அதற்கான சுட்டி https://m.facebook.com/story.php?story_fbid=757354832152752&id=100000025390787

இன்று காலையில் கொஞ்சம் வரைந்திருந்தேன், நாளை இதன் அடுத்த கட்டத்தினை பகிர்கிறேன். 



வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

தொடர் வரைவு ஐந்து இயலோடு

 இன்று இயல் (இளைய மகள்) பள்ளிக்குச் செல்லாததால் தானும் வரைவேன் என தூவலை (பேனா என்று சொன்னால், இல்லப்பா இது தூவல் என்பாள் தமிழில்) எடுத்துக் கொண்டாள், உருவப்படம் ஒன்றை தினந்தோறும் வரைவது போல தொடங்கினேன், அவளும் அதையே வரைவேன் என ஒவ்வொரு கோடாக என்னோடு வந்தாள்.

அவளுக்கு அது சோர்வை தந்தவுடன், எனக்கு பிடித்ததாக வரையலாம்பா என்றவளிடம் நாய் குட்டி வரையலாம் என்று ஒரு பஞ்சு போல் இருந்த குட்டியை தேர்வு செய்து, தொடங்கினோம், என்னப்பா உனக்கு வரையவே தெரியல, என்னைய பாரு அழகா வரஞ்சிருக்கேன் என்று சிரித்தாள். படம் பார்த்து வரைய வேண்டாம் என முடிவு செய்து வலது பக்கமிருக்கும் இரு சின்ன உருவங்கள் அவள் கண்களை மூடிக் கொண்டு வரைந்தவை. இன்னொரு படம் இருவரும் கண்களை மூடி வரையலாமா என்று கேட்டதும் குதூகலமானாள்.


அடுத்த பக்கத்தில் முதலில் அவளும் பின் நானும் கண்களை மூடி வரைந்து பார்த்தோம். அவள் வரைந்ததன் பக்கம் பெயர் எழுதச் சொன்னதும் இயல் என எழுதிய பின் நான் வரைந்ததன் மேல் என்னுடைய பெயரையும் அவளே "பா" வுக்கு துணைக் கால் உண்டாப்பா என ஒவ்வொரு எழுத்தையும் கேட்டு எழுதினாள்.




வியாழன், 4 ஆகஸ்ட், 2022

தொடர் வரைவு நான்கும் - கல்வியும்

 பொதுவாக நாம் எல்லோரிடமுமே (அரசியல் கட்சியின் பக்தர்கள் தவிர்த்து) அரசாங்கம் பற்றிய ஒவ்வாமையும், அரசின் திட்டங்களை பெற்றுக் கொள்வதிலிருந்து ஒதுங்கும் தன்மையும் இருக்கும். அரசாங்கப் பள்ளியில் படிப்பதற்கு பணம் கட்டத் தேவையில்லையாமே என்று ஒருவர் கேட்டதும் எனக்கு பரிதாபமாக இருந்தது அவரின் நிலையை எண்ணி, இது ஒவ்வாமையில்லை முற்றிலுமாக அறியாமை, அவ்விடம் விட்டு அவர் கிளம்பும் போது அவரது இரு சக்கர வாகனத்தில் காவல் என ஆங்கிலத்தில் எழுதியிருந்ததை கவனித்தேன், பரிதாபம் மேலும் கூடிவிட்டது. இப்பாது அரசு பள்ளிகளில் குழந்தைகள் சேர்வதற்குச் சென்றால் நேரடியாக ஆங்கில வழி வகுப்பிலேயே அமர்த்தி விடுவார்கள் என்றே தோன்றுகிறது, இரு வருடம் முன்னர் ஆங்கில வழியில் அரசு உதவி பெறும் நான் படித்த பள்ளியில் படிக்கும் நண்பனின் மகள் புத்தகத்தை காணும் போது அதிர்ச்சி, ஆங்கிலத்தில் இருப்பதை இப்பிள்ளைகள் வாசிக்க தமிழை ஆங்கிலத்தில் அச்சிட்டிருந்தார்கள், இது என்னடா நம் பிள்ளைகளுக்கு வந்த சோதனை என்று மனம் புழுங்கியது.

இப்பாது அதே போன்ற புத்தகம் கிடைக்குமா என இணையத்தில் தேடிப் பார்க்கிறேன் கிடைக்கவில்லை. நேரடி வகுப்பில் கொடுத்திருக்கிறார்களா எனக் கேட்டுப் பார்க்க வேண்டும்.




நேற்று ஒரு எண்ணெய் வண்ண ஓவியம் தொடங்கியிருக்கிறேன், அதன் முதல் கோட்டு வரைவு கீழே.

தொடர்ந்து இதன் அடுத்தடுத்த வரைவுகளை பகிர்கிறேன்.



புதன், 3 ஆகஸ்ட், 2022

தொடர் வரைவு -3ம் வண்ணதாசனும்

ஏன் வண்ணதாசனை எப்போதுக்குமான வாசிப்பில் வைத்திருக்கிறேன் என்று எண்ணுவதுண்டு, முதன்முதல் ஒரு சிறுகதை புத்தகம் என்று வாங்கியது அவருடைய ஒரு சிறு இசை தொகுப்புதான், 2013 அல்லது 14 ஆக இருக்கக்கூடும். அடர்த்தி குறையாத எழுத்து ஓட்டம், கவிதைகளை கையோடு கொண்டுவரும் உரைநடை, தேவையற்ற சொல் என்று எதுவுமே கதைகளில் தென்படாத எழுத்து உபசரிப்பு. எதுவுமற்ற குடத்தில் நீர் நிரப்புவது போல மனதில் நினைவுகளை பரப்பும் அவரது காட்சிகள். கடந்த ஒரு மாதமாக விளையாட்டாக ஏதேனும் ஒரு பக்கத்தை புரட்டி அதிலிருந்து வாசிக்கிறேன், அவை கோடுகளாக வண்ணங்களாக என் மீது படர்கிறது. ஆழ்ந்த ஒரு மூச்சிக் காற்று எனது தேவையாகிறது.


இன்றைய தொடர் வரைவில் முகமும் உருவமும். நேற்று ஒரு எண்ணம், ஏன் ஒரு முகம் எப்படி வரைய வேண்டும் என்பதை ஒவ்வொரு படியாக இந்த வலையில் வரையக் கூடாது என.





செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

தொடர் வரைவு -2ம் கொஞ்சம் வாசிப்பும்

நேற்றைய தொடர்ச்சியாக இன்றைய பதினைந்து நிமிட கோட்டு வரைவுகள்.

முகத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க இயலாது என எண்ணிக் கொண்டேயிருந்தது மனது, முழு உருவம் வரைவதில் இன்னும் சிக்கல் இருக்கிறது.




இப்போது ஒரு எண்ணெய் வண்ண ஓவியமொன்றும் வரைந்து கொண்டிருக்கிறேன், அதன் முதல் கோட்டு வரைவும் நிறமும் சரவணன் அண்ணன் (ஆசான்) முடித்துவிட்டு, என்னிடம் அதன் அடுத்த அடுக்கினை வரையச் சொல்லி கொடுத்து மாதம் இரண்டிருக்கும், இன்னும் அப்படத்திலுள்ள தெப்பத்தின் தாமரைகளை வரைய வரைய மாற்றிக் கொண்டேயிருக்கிறேன் முடிந்தபாடில்லை, இந்த வாரத்திற்குள் முடிக்க வேண்டும். இந்த ஓவிய அனுபவம் பற்றி கொஞ்சம் எழுத வேண்டும் என எண்ணமுள்ளது.


வாசிப்பு: போன வாரம் இறுதியில் தொடங்கிய புத்தகம் "கூவம் நதிக் கரையினிலே" பத்திரிக்கையாளர் அல்லது எழுத்தாளர் சோ எழுதியது, அரசியல் நையாண்டி இதுபோல் யாராலும் எழுத இயலுமா என்று தெரியவில்லை. தமிழக இந்திய கட்சிகளையும் திரைப்படம் உருவாகும் விதத்தையும் எள்ளி நகையாடியிருப்பது வாசிக்க வேடிக்கையாகவுள்ளது. துக்ளக் பத்திரிக்கை ரசிகர்களை படு பயங்கரமாக சிரிக்க வைத்திருப்பார் போலத் தெரிகிறது.

திங்கள், 1 ஆகஸ்ட், 2022

தொடர் வரைவு

ஒவ்வொரு நாளும் எதையாவது வரைய வேண்டுமென்று இருந்தாலும் தொடர் பயிற்சியாக எதையாவது செய்ய வேண்டுமென்று அவ்வப்போது மனதில் எழுதும் போதெல்லாம் அது ஓரிரு நாளில் ஆழ் மனதுக்குள் சென்று படிந்து கொள்ளும்.
இனி...

அதிகப்படியாக பதினைந்து நிமிடத்தில் ஒரு கோட்டு வரைவை முயன்று பார்க்க வேண்டும், இந்த வரைவை மூன்று வகையாக பிரித்து வரையலாம். முதலில் முழு மனித உருவம் இரண்டு அதன் சரியான அளவில் வரைய வேண்டும் (ஒவ்வொரு பதினைந்து நிம்மிடத்திற்கும் ஒரு படம் என்று எண்ணியிருந்தேன், இன்று வரைந்து பார்த்த போது இரண்டையும் இந்த குறிப்பிட்ட நேரத்தில் வரைந்து விட முடிந்தது), அடுத்த பதினைந்து நிமிடத்தில் அப்படங்களை மெருகேற்ற முயற்சி செய்து பார்க்கலாம்.

இரண்டாவது முகம், எவருடைய முகமாகவும் இருக்கலாம் அதே 15 நிமிட நேரத்தில் முடிக்க வேண்டும். மூன்றாவது ஒரு கோட்டு வரைவு சுற்றியுள்ள எதையேனும் நேரடியாக கண்டு வரைதல். இன்று அடுத்தடுத்து வரைய நேர்ந்ததால் கொஞ்சம் பொறுமை இழந்தது போலத் தெரிந்தது, நாளை சற்று இடைவெளி விட்டு வரையலாம் என்று எண்ணுகிறேன்.

இதனால் என்ன பயன் என்பதையும், தோன்றும் எண்ணங்களையும் குறித்து எழுத முயற்சிக்கிறேன்.