வியாழன், 28 ஏப்ரல், 2022

ஓவியம் தொப்புள் கொடி உறவு

 எல்லாருமே வரையக் கூடியவர்கள் தான் ஆனால் அதைத் தொடர்வதில்லை, வரைதல் என்பது தொப்புள் கொடி உறவு போல நம்மாடு பிணைந்து இருப்பதுதான் என்றாலும் அந்த இணைப்பு பற்றிய சிந்தனை நம்மில் பலரிடம் மறைந்து ஒழிந்து கொள்வதுண்டு. சிலருக்கு அதைப் பற்றிய எண்ண ஓட்டங்கள் ஏதேனும் ஒரு வடிவில் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். வெளிப்படுதல் என்பது பெரிய பெரிய ஓவியங்கள் தீட்டுவதோ அதை காட்சிக்கு வைத்து பெயர் அறியச் செய்வதோ அல்ல. யாரிடமோ அலைபேசியில் பேசும் பொழுதில் எவ்வித புற அழுத்தமும் இன்றி காகிதமொன்றில் கிறுக்குவது கூட ஒரு வகையான வெளிப்பாடு என்றே கருதலாம்.

இந்த கிறுக்கல்கள் அளிக்கும் நம்பிக்கை வரைதல் நோக்கிய அடுத்த தளத்திற்கு நம்மை அழைத்துச் செல்லலாம் அல்லது இப்படி கிறுக்குவதே ஒருவித வெளிப்பாடாகி அதில் பல்வேறு முயற்சியை அலைபேசியில் பேசாத  வேறொரு தனிமை பொழுதில் உருவாக்கிப் பார்க்கும் எண்ணமும் ஏற்படலாம். இதற்கு எல்லையில்லை.

ஒருவேளை அடுத்த கட்ட நகர்வு ஒன்று அமைய நேருமானால் நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கும் என்பதை எப்படி மதிப்பீடு செய்வது, எப்படி வரையத் தொடங்குவது என்ற கேள்விகள் எழும். இதற்கு ஒரே விடை முறையாக ஒரு ஆசானிடம் பயிற்சி பெற்றுக் கொள்வதேயாகும். இன்றைய காலம் நமக்கு அள்ளிக் கொடுக்கும் தகவல்கள் ஏராளம், அவையெல்லாம் முறையாக ஒழுங்கு படுத்தப் படுமானால் அதைவிடப் பெரிய ஆசான் இருக்க இயலாது,  ஆனால் இவ்விடம் நமது பலகீனம் ஆற்றல் மிக்கதாக ஆகிவிடக் கூடிய வாய்ப்பு அதிகம் என்பதால் பலம் வலுவிழந்து விடலாம்.

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

வடக்கனிக்கி போன மேகத்த

வெட்டவெளி வானத்துல
போற ஒத்த மேகத்துட்ட
கேட்டானாம் எங்க
போறன்னு
போக்கு தெரிஞ்சா
பொலம்பலுக்கு ஆளாவேனோன்னு
பொசுங்கிச்சாம்
இப்பிடி அழுவுதியே
பொலம்பல்ல இது சேராதான்னான்
போடா போக்கத்த பயலேன்னு
வடக்கனிக்கி போன
மேகத்த கூப்புட்டு 
சொன்னானாம்
கிழக்கனிக்கி போனா
செத்தேன் சொகமாயிருக்கும்லா

திங்கள், 18 ஏப்ரல், 2022

ஆளில்லா காடு

ஆள் அரவமில்லா காட்டுக்குள்ளே
சருகு ஒண்ணு முணுமுணுத்துச்சாம்
யாருடே அதுன்னு
பதிலொலிக்க ஆளில்லாம
பரிதவிச்சிக் கெடந்தத
காலொண்ணு மிதிச்சிப் போனதாம்
மிதிச்ச காலுக்கு
கண்ணில்லயாக்கும்னு கேக்கத்தான்
தெசையில்ல
லெக்கு தெரியாம பறந்து வந்த
பச்சயெலையொண்ணு
காம்போரமா கண்ணீர
ஊத்துதாம்
ஒக்கிட ஆளில்லாம
ஓஞ்ச மரத்துல
ஒடிஞ்ச இலை நான்னு
ஒப்பாரி வச்சிதாம்
ஒலுங்கொண்ணு
ஒய்யாரமா இலைய
பாத்துக் கேக்காம்
இரத்தமுள்ள ஆளில்லயாக்கும்னு 

வியாழன், 14 ஏப்ரல், 2022

தபால் நிலையத்தில் ஒழிந்துகொண்ட கோடுகள்

எப்போதும் மாதத் தொடக்கத்தில் கேட்கப்படும் கேள்விகள் ஒலிக்காமலிருப்பது செயலை நாட்கள் கழித்து செய்ய வைக்குமென்பதில் பிசகு இல்லை. வழக்கத்திற்கு மாறாக தபால் நிலையத்தில் பணம் செலுத்தும் காகிதத்தில் தமிழும் மறுபக்கம் ஆங்கிலமும் கடந்த இரு மாதங்களாக பார்க்க முடிகிறது. அதை பார்த்த பின்னர் வீட்டிற்கு எடுத்துவந்து எழுதிச் செல்லும் பழக்கமும் ஒட்டியிருக்கிறது. நேற்று எழுதுகையில் "என்ன தேதி எழுதாம வச்சிருக்கு" என மாதாமாதம் ஒலித்து இம்மாதம் ஒலிக்காத கேள்விகளின் குரல் கேட்டது. "சமயத்துல கணினி பழுதாயிரும்லா" எனச் சிரித்துக் கொண்டேன். ஒற்றை ஆள் மட்டுமே அந்த அம்மா இருக்கும் மேசையை எட்டிப் பார்க்க இன்று வேலை எளிதாக முடிந்துவிடுமென எண்ணி நுழைந்து இரண்டு வருடங்களுக்கு பிறகு முகக் கவசமில்லாத எனது கற்பனைக் கோடுகள் எங்கோ ஓடி ஒழிந்துகொண்ட அம்முகத்தில் அரசு அலுவலகத்தின் சலிப்பு மட்டும் தீராமல் "அரைமணிநேரம் கழிச்சி வந்து பாருங்க, ஒண்ணும் வேலை செய்யல" . "குடுத்துட்டு போகட்டுமா" எனக் கேட்கவும் "அதெல்லாம் இனிமே கிடையாது" சலிப்பு.

ஆதார் அட்டை பதிவு செய்ய தனியாக கணினி அச்சுப்பொறி என எல்லாம் இருக்கும் மேசை போர்வையா பொன்னாடையா என ஊகிக்க இயலாத துணியால் மூடப் பட்டிருந்தது அதற்குள் அகப்படாமல் கணினிக்குரிய விசைப்பலகையும் அதன் மேலிருந்த பத்து ரூபாய் நாணயமும் புழுதியால் பிணைந்திருந்தது. முகக் கவசத்தை இழுத்து இழுத்து கொட்டாவியை வெளிநடப்பு செய்த அதே அம்மாவிடம் இன்று ஒருமணி நேர காத்திருப்பிற்குப் பிறகு சேமிப்பு புத்தகத்தை நீட்டினேன். எப்படியோ இன்று அச்சுப்பொறி வேலை செய்ததை எண்ணி மகிழ்கையில் முகக்கவசமில்லாத பெண் தபால் காரரை பார்த்ததும் கோடுகள் ஒழிய இடம் தேட மறுத்தது.