செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

குருவி மடம் - கசாரா

ஒட்டகம் கேட்ட இசை எனும் பாவண்ணனின் அனுபவக் கட்டுரைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். குருவி மடம் என்ற கட்டுரை காட்டுக்கே அழைத்துப் போனது. சில ஆண்டுகளுக்கு முன் மகாராட்டிரத்தில் உள்ள கசாரா எனும் பகுதிக்கு தொடர்வண்டி பயணம் மேற்கொண்டு அங்குள்ள பள்ளத்தாக்கை கண்டு பிரமித்து நின்றதை நினைவில் அசைபோட வைத்ததோடு, இன்று காலை எழுந்ததும் இக்கோடுகளையும் கிறுக்க வைத்தது.

வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

இரவு- வாசிப்பினிடையே

வாசிப்பு எதற்கென்று கேட்டால் அதுவொரு தேடுதலுக்கானது எதைப்பற்றிய தேடல் என்பது வாசகனின் எண்ண ஓட்டத்தை பொருத்து மாறுபடக்கூடியது.  மிகச்சாதாரணமான மனிதனுக்கு தன் சுற்றத்தை நேசிக்க ரசிக்கத் தெரிந்தவனுக்கு தன் எதிரே புதிராக இருக்குமொன்றை அதாவது பெயர் அறியாத மலரினை அறிய முற்படுவதுபோலவும் நவீன ஓவியத்தின் உள்ளொளியை உணர்வதும் போலவுமான தேடல். தொழில் காரணமாக கேரளம் செல்லும் சரவணன் காயலுக்கு அருகிலுள்ள ஒரு புதிரான வீட்டு மனிதர்களை அறிய முயல்வதே தேடலின் தொடக்கம் அது இரவைப் பற்றிய தேடலாக தொடர்கிறது. ஓவியர் முகர்ஜி அறிமுகமாகும் இடத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஓவியம் வரைய வேண்டுமென்ற எண்ணம் பீரிட்டு எழுகிறது.

நவீன ஓவியங்களை புரிந்துகொள்ள நவீன இலக்கியங்கள் வழிகோலும் என்பதை பிறழ்வின்றி நிகழ்த்திப்போகிறது இப்புதினம். ஒரு கீற்றிலிருந்து தொடக்கம் கொள்ளும் ஓவியம் பார்வையாளனை அடையும் பொழுதில் கீற்றுகளின் கோர்வையாகவும் உருவங்களை மீறி தனித்தெரியும் கோடுகளாகவும் சிதைந்து போவது நவீனத்தின் ஓட்டம். இரவுக்கும் பகலுக்குமான இடைவெளி எந்த வண்ணத்தால் கோடு கிழிக்கப்படும் அதுவொரு சாம்பல் நிறத்தினை ஒத்ததாக இருக்குமா

புதன், 19 பிப்ரவரி, 2020

முகங்கள்

9:55 இருக்கும் ஞாயிறன்று யாருமில்லா அரைவட்ட திறந்தவெளி அரங்கினைக் கடந்து சென்று, அமர்ந்து வரைய தோதான இடம் தேடிய பொழுதில் உதட்டை மென்று கொண்டிருந்த  ஜோடியொன்று கண்ணில் பட்டது, ஓரிரு அலை கோடுகளை மனதில் கிறுக்கிவிட்டு மணிக்கூண்டு அருகேயிருந்த இருக்கையில் செல்லில் எதையோ வெறித்துக் கொண்டிருந்த சிறுவனின் எதிர் பக்கமாக சென்று அமர்ந்தேன். இலைகளற்ற காய்ந்த காய்கள் தொங்கிக் கொண்டிருந்த மரம், தன்னை வரையச் சொல்வதுபோல் இருந்தது, மெல்ல சிரிக்க முயற்சித்த போது ஏதோவொரு பெயரைக் கூறி இருமுறை உரக்க அழைத்தபின் அச்சிறுவன் தலையை நிமிர்த்தியதும் இன்னொரு சுற்று போய் வருகிறேன் எனக் கூறி நகர்ந்தது அக்குரல், தலையை ஆட்டிவிட்டு தன் நிலையை அடைந்தான் இவன்.

மணிக்கூண்டு எதிரே தெரியும் மரங்களுக்கிடையிலான கோபுரத்தை வரையத் தொடங்கினேன், மனம் ஒருங்கிணையவில்லை.
பின் பக்கம் திரும்பி கூண்டை நோக்கினேன் கோடுகளை நீட்டும் பொழுதில் பின்பக்கம்ல் நாயொன்று "வவ்..வவ்" என்றது, கூண்டு அருகேயிருந்தும் எதிர் ஒலி வந்த பிறகுதான் அங்கும் நாய் இருப்பதை கவனித்தேன். குரைப்புக்கு நடுவே கோடுகளை நீட்டி மடக்கினேன், முடிக்கும் தருவாயில் சரவணன் அண்ணனும் வருணும் திறந்தவெளி அரங்குக்குள் வந்துவிட்டனர். அவர்கள் அருகே சென்று நலம் விசாரிப்புகளுக்குப் பின் வருண் அவரைப் பார்த்து வரைய ஏதுவாக அமர்ந்தார் நானும் பென்சிலையும் தாளையும் எடுக்கவும் "ஓ நீங்களும் வரையுரீங்களா" எனச் சொல்லி சற்று திரும்பி இருவருக்கும் ஏற்றதொரு கோணத்தில் தன்னை இருத்திக் கொண்டார், கீற்றுகளை உருவாக்கிய பொழுதில் நான்கு பெண்கள் அருகில் வந்து அவர்களை வரைந்து தர முடியுமா எனக்கேட்கவும், ஆளுக்கொருவராக இரண்டு பேர் எங்கள் எதிரே புன்னகையோடு காத்திருக்க, சற்று பதட்டத்துடனே அவளின் வலது காதுக்கு மேலுள்ள முடியிலிருந்து கிறுக்குகையில் ஓரப் பார்வையில் வருணின் பலகையைப் பார்த்தேன், அவரது தொடக்கம் வேறொரு கோணம். முதல் முறையாக அறியாததொரு முகத்தை நேரடியாக வரையும் நடுக்கம் இருக்கத்தான் செய்தது மனதளவில்.  இடையில் சிறு குழந்தையொன்று அவளது தந்தையுடன் வந்து மழலையுரையாடி கொஞ்சம் வரைந்துவிட்டும் சென்றாள்.
இடையில் முகேசும், சிறீநாத்தும் எங்களோடு சேர்ந்து கொண்டனர், இவர்களின் வேகம் ஆச்சரியமாகயிருந்தது. சரவணன் அண்ணன் முகேஷ் தீட்டிய நீர்வண்ண மோனலிசா ஓவியத்தை பற்றியும், கல்லூரி அனுபவத்தை பற்றியும்  அவரோடு உரையாடிய கணம் சிறப்பானதாயிருந்தது. முகம் வரைதலிலுள்ள நுணுக்கங்களை இவர்களோடு வருணும் சேர்ந்து பகிர்ந்து கொண்ட விதம் இத்தனை நாளாக இப்படியொரு தொடர்பற்றுப் போய்விட்டோமே என எண்ண வைத்தது.

வருணின் கீற்றுகள்

குழு மற்றும் வரைய முன்வந்த நான்கு முகங்கள்


அன்றைய பொழுதினை முடித்துக் கொண்டு காஃபி அருந்த சென்ற போது ராஜா முருகனும் எங்களோடு இணைந்து கொண்டார். பேச்சுகளுக்கிடையே முகேசின் வாழ்க்கை இன்னல்களையும், வரைதல் சார்ந்த அவரது தேடலும் புரிதலும் வியப்பும் ஆச்சரியமுமாக தொடர்ந்தது. இது தொடர வேண்டும்.

சனி, 15 பிப்ரவரி, 2020

இரயில் பயணத்தில்

எந்தவொரு பயணத்திலும் புத்தகமும், ஓவியம் வரையும் புத்தகமும் இன்றி பயணம் சாத்தியமாவதில்லை. வரைகிறோமா வாசிக்கிறோமா என்பதையெல்லாம் வெறும் கேள்வியாக சுருக்கிவிட்டு பயணித்தால் நிச்சயம் ஒரு தருணம் அமையும் வாசிக்கவோ வரையவோ.

கடந்த டிசம்பரில் ஊர் சென்ற போது முன்பதிவு செய்த படுக்கைகள் உறுதி ஆகவில்லை, ஆர்.ஏ.சி-ல் நின்றுவிட்டது எங்களை படுக்க விடாமல், தென்காசியில் இறங்கும் இருவரில் ஒருவர், குழந்தைகளைக் கண்டதும் அவரது படுக்கையை விட்டுத்தந்தார். சன்னலோரம் கீழ் படுக்கையில் அவளும் இயலும் தூங்க, நானும் ரத்திகாவும் மேலே நிலை கொண்டோம். விளக்குகள் எங்கள் பகுதியில் அணைபட்டாலும், அருகில் ஒளிர்ந்தது வரையும் வாய்ப்பை உருவாக்கித் தந்தது.






கல்லூரி மாணவர்களாக இருந்திருக்கக்கூடும், பேச்சும் விளையாட்டுமாக விளக்கை அணையாமல் பார்த்துக் கொண்டார்கள், அவர்களில் ஒருவனை வரையத் தொடங்கினேன். பக்கவாட்டில் மேல் படுக்கையில் அமர்ந்திருந்த, எங்களுக்கு இடம் கொடுத்தவர் எட்டி எட்டிப் பார்த்தார். அவரையும் வரைந்தேன், ரத்திகாவும் சில கோடுகளை கிறுக்கினாள். புத்தகத்தை பார்க்கக் கேட்டார், கொடுத்துவிட்டு அந்த பெட்டி முழுவதும் நோட்டமிட்டேன், நான் கோடுகளாக்கவே வந்தவர்கள் போல சிலர் நின்று கொண்டிருந்தனர். பின் சில நொடிகளில் விளக்கு துயிலடைந்தது.


சனவரி 26 அன்று ஞாயிரோவியம் குழுவோடு என்னை இணைத்துக் கொண்டேன். அண்ணா நகர் கோபுர பூங்காவில் ஒன்று கூடி வரைந்து கலையினை தேடிக் கண்டடையும் ஓர் வினோத விளையாட்டு. ஓவியர் ஜெயக்குமார் அன்றைய நாளை சிறப்பு செய்தார் அவரது கலை பற்றிய உரையாடலை சிறு குறிப்பாக முன்னரே எழுதியிருந்தேன்.

கடந்த ஞாயிரன்று கொஞ்சம் சீக்கிரமாக சென்று விட்டதால், தனியாக அமர்ந்து மரத்தினையும் அதனருகிலிருந்த ஒருவரையும் வரைந்து கொண்டிருந்தேன், ராஜேஷ் என்றொரு நண்பர் வந்தமர்ந்து கலை பற்றி உரையாடவும். பின் சில நேரத்தில் சரவணனும், வருணும் வந்து சேர்ந்தனர். தொடர்ச்சியாக பிற ஓவியர்களும் வந்தமரவும், ஓவியர் முனுசாமி அவர்களும் கலந்து கொண்டு உரையாடினார்கள். சிலருக்கு வெறுப்புண்டு, வரைவதற்காக ஒன்று கூடினால், தொடர் பேச்சுகள் அதை உருவாக்கத்தானே செய்யும்.

பெண் ஓவியம்