வியாழன், 15 ஜூன், 2017

செவ்வாய், 13 ஜூன், 2017

காகித மனிதர்கள்

புதினங்களை வாழ்கையை தோண்டிப்பார்க்கும் மண்வெட்டி எனலாம். அதேபோல் மனிதர்களுடனான உரையாடல்கள் கலைந்துகிடக்கும் வாசிப்பின் பக்கங்களை அடுக்கிவைக்கும் அலமாரியாகக் கொள்ளலாமா?

"காகித மனிதர்கள்" பிரபஞ்சன் எழுத்தாக்கத்தில் வாசித்த முதல் புதினம், கதை. பல்கலைக்கழகங்களில் நடைபெறும் அரசியல் ஊழல்களையும் பெண்களை சீரழிக்கும் ஆசிரியர்களையும் பற்றிய கதையாடல். இதை வாசித்து மூன்று வருடங்களிருக்கும். மறக்கவியலாத மனித உருவங்களைப்பற்றியதும் அண்ணா நூலகம் செல்ல ஆரம்பித்த நாட்களில் வாசித்ததிலும் முக்கியமான புதினங்களில் இதுவுமொன்று, அதனாலேயே அலுவலக நண்பர் ஒருவரோடு உரையாடிய ("இத்தனை வருட அனுபவமிருந்தும் ஏன் ஒரு பட்டப்படிப்பை கற்காமல் திரிகிறாய், பதவி உயர்வுக்கு அது தேவையென யாருமே உன்னிடம் இதுவரை கூறியதில்லையா." "யாராவது கூறியும் கூறாமலும் அதைப்பற்றிய எண்ணங்கள் தீவிரமடையும் பொழுது மட்டும் இணையத்தில் சில பல்கலையின் பக்கங்களை படித்துவிட்டு கைவிடுவது வழக்கமாகிவிட்டது."  "எனக்குத்தெரிந்த ஆளொருவர் இருக்கிறார் தேர்வு நாளன்று சென்று திரும்பினால் போதும் மற்றவை அவரது கைகளில் (பணமும் பரீட்சைத்தாளும்), மற்றொரு நண்பரிடம் "நாம பணங்குடுக்க போல பொண்ணுங்கல்லாம் படு உசாரு" என்றார்) பின் அக்கதையின் பக்கங்கள் எழுத்துக்கள் அல்லாத காட்சி உருவங்களாக வந்து போயின.

புதினம் வெளிவந்தது எண்பதுகளில் என்று நினைக்கிறேன். காலமும் கல்வியும் நம்மை எந்த அளவீட்டில் மாற்றியிருக்கின்றன என்ற கேள்வி எழுகிறது, இன்றைய உண்மை நிலை என்னவாக இருக்குமோ (ஒரு மனிதனின் உரையாடலில் முடிவுக்கு வரவியலாதல்லவா, அது அவரின் புனைவுப் பேச்சாகக்கூட இருக்கலாம்)இப்படித்தான் இருக்குமென்றால் யாரை குறை கூறுவது.

படைப்பாக்கத்தில் எதிர்குரல்

"Piss Christ" என்றொரு புகைப்படம் 1987-ல் "சமகால கலைக்கான தென்கிழக்கு மையம்"வழங்கிய "மெய்நிகர் கலை" விருதினை ஓவியரும் புகைப்படக்கலைஞருமான ஆன்ட்ரஸ் செரனோ என்ற அமெரிக்கருக்கு வழங்கியிருக்கிறது.

இந்த புகைப்படத்திற்கான மூலப்பொருட்கள்தான் முக்கிய பங்கு வகிப்பவை, படத்திற்கான பெயரை வெளிப்படையாக வைத்து அதற்கான விளக்கத்தையும் முன்வைத்திருப்பது சிறப்பான எதிர்ப்புக்குரலாகவே கருதவேண்டும். தான் சார்ந்த சமயம் வணிக நோக்கில் சீரழிக்கப்பட்டதை விமர்சிக்கவே இப்படிச்செய்ததாக கூறியிருக்கிறார்.

கண்ணாடிக்குடுவையில் தனது மூத்திரத்தை நிரப்பியவர், அதனுள் இயேசுவை அரைந்த சிறிய சிலுவை ஒன்றை மூழ்கடிக்கச்செய்து படமெடுத்திருக்கிறார். விளக்கமோ சரியான தலைப்போ இல்லாமல் போயிருந்தால் தங்கமாக தகதகக்கும் கிறிஸ்துவாக மாறியிருக்க வாய்ப்புண்டு.

திங்கள், 12 ஜூன், 2017

நாய்களோடு

இரண்டு வாரத்திற்கு முன் நாயொன்று தொலைவிலிருந்து ஓடிவந்து குரைத்துக்கொண்டே பக்கவாட்டில் நடந்துகொண்டிருந்தது, பாய்ந்து கடிக்க எத்தனித்தால் எதிர்க்கமுடியும் என்ற நம்பிக்கையோடு வலது கையின் விரல்களை மடக்கி தாக்குதலுக்கு தயாராக இருப்பதுபோன்ற பாவனையோடு (உள்ளுக்குள்ள பயமா இருந்தது வேற) நடந்துகொண்டிருந்தேன், அது வளர்க்கப்படும் வீடு வந்ததும் சற்று வேகமாக நடந்த நாய் எனக்கு முன்னால் தோன்றி கூர்மையான பற்களோடு அடுத்தகட்டத்திற்குத் தன்னை தயார் படுத்தியது. (எங்கள் வீட்டில் வளர்த்த நாயும், அதற்குமுன் நாயைக் கண்டால் பயந்து ஓடியதும் நொடியில் நினைவுப்படமாக ஓடியது). சாலையின் எதிர்ப்பக்கம் சென்று கல்லை எடுக்கலாம் என குனிந்தபோது கற்குவியலுக்கு மேலொரு நாய் நாக்கில் எச்சில் வடிய குத்தவைத்து உட்கார்ந்திருந்தது. (கல்லை மறந்துவிட்டு நிமிர்ந்தேன்) வழிமறித்த நாய் அதன் விட்டு எல்லையை கடந்ததும் விலகிப்போய்விட்டது. இதன் குரைப்பொலி கேட்டு நாங்கள் வசிக்கும் தெருமுனையில் ஏழு நாய்கள் தெருமுனைக் கூட்டத்தில் சொற்பொழிவு கேட்பவை போல உட்கார்ந்திருந்தவை  ஒவ்வொன்றாக என்னை நோக்கி நகர ஆரம்பித்தன. மெல்ல நடந்து (பயத்தோடத்தான். ஓடுனா கடிக்கும்னு தெரியாதா!) கடந்ததும் அதனதன் இடத்திற்குச்சென்று அமர்ந்துகொண்டன அடுத்த உருவத்திற்கான எதிர்பார்ப்பில்.

இணைப்பிலிருக்கும் பதிவில் நாய்களின் ஓவியங்கள் பற்றி வாசித்ததும் நினைவிலோடியதில் சில....
https://minnambalam.com/k/2017/06/10/1497033010

சனி, 3 ஜூன், 2017

பாகீரதியின் மதியம் - வாசிப்பு

கடந்த சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கி வந்ததிலிருந்து தினமும் புத்தக அலமாரியை திறக்கும் பொழுதெல்லாம் இந்த புத்தகத்தை எப்படி வாசிக்கப்போகிறோம் என்ற பேரச்சம் மனதில் உருண்டோடும் அதற்கு அதன் தடித்த உருவமே காரணம். அதிலிருந்து சில வாரங்களுக்குப்பின் ஒரு பின்மதியத்தின் புழுக்கம் அடங்காத வேளையில் (முந்தைய இரவுதான் யோசனை எழுந்தது இப்புத்தகத்தை முதல் பக்கத்திலிருந்து வாசிக்கத் துவங்கக்கூடாதென்று) புரட்டியபோது சிக்கியவொரு பக்கத்திலிருந்து தொடங்கினேன், எதிர்பாராதவிதமாக பாகீரதி வாசுதேவனின் நண்பனிடம் ஜெமினியின் மூன்று ஓவியங்களையும் அதன் வண்ணங்களையும் பற்றிய விவரணைகளை அடுக்கும் காட்சி வாசிக்கக்கிடைத்தது.

வெகுநாட்களுக்குப் பிறகே அதனை முதலிலிருந்தே வாசித்துவிடுவது என்ற முடிவுக்கு வந்து தொடங்கி இன்று முடிக்கும்வரை வேறொரு புத்தகத்தை (பத்திரிக்கைகள் தவிர்த்து) கையிலெடுக்கவில்லை. காரணம் கனவு, அதற்குள் மிதக்கும் காட்சிகள். என்மகளும் இப்பொழுது அத்தையென்ற சொல்லை அழுத்தமாக உச்சரிக்கத்தொடங்கியிருப்பதனால் அட்டைப்பட ஓவியப்பெண் அவளுக்கு அத்தையாகிவிட்டாள் (அப்பழுக்கற்ற அம்முகம் வாஞ்சையோடு வாசிக்க அழைப்பதுபோன்றதொரு தொனி), படத்தை தொடுவதும் அப்பாவை பார்ப்பதும் மெல்லச்சிரித்து "அத்த" என்பதும்.

புதினத்துக்குள் வரலாறும் சமூகநீதிக்கான விவாதங்களும் வாசிப்பிற்கான தூண்டுதலும் ஓவியத்திற்கான பரந்த வெளியும் மிதந்து கொண்டிருக்கிறது.

துரையின் அறைக்குள்ளிருக்கும் ஓவியநூல்களை வாசிக்க ஜெமினிக்கு அனுமதி கிடைத்தபோது ஏற்பட்ட கிளுகிளுப்பு , ஓவியம் பற்றி பாகீரதி அவளின் மனவோட்டத்திற்கேற்ப வெவ்வேறு தருணங்களில் விவரணைகள் செய்வதெல்லாம் கிளர்த்திவிட்டிருக்கும் எண்ணவோட்டங்களை எப்படி விவரிப்பதெனத் தெரியவில்லை.

பாகீரதியை கதைசொல்லி எங்கே செல்ல அனுமதித்திருக்கிறாரென்று தெரியவில்லை ஆனால் ஜெமினியின் சித்திரங்கள் மதுரையில் ஒட்டடை விழுந்த பூட்டிய அவளின் வீட்டினுள்தான் இருக்கிறது.

வெள்ளி, 2 ஜூன், 2017

அரூபங்களின் வெளி

அரூப ஓவியங்களை அணுகுவதில் சில மனத்தடையுண்டு, களைத்துபோகும் கண்களும் மனமும் அவற்றை வெற்றுக்கோடுகளாகவும் வண்ணங்களாகவும் ஒதுக்கிவிட்டு தத்ரூபத்துக்குள் பதுங்கிக்கொள்ளும். சமீபத்தில் சோழமண்டலம் கலைஞர்கள் கிராமத்திற்கு நண்பன் தங்கராசாவுடன் சென்றபோது பணிக்கரின் ஓவியங்களோடு பிற படைப்பாளிகளின் ஓவியங்களையும் காண வாய்த்தது. பணிக்கரின் ஓவியமொன்றில் வரையப்பட்டிருந்த குறியீடுகளை கண்ட நாங்கள் இதற்கொவ்வொன்றுக்கும் ஓர் விளக்கமுள்ளவை என்ற ரீதியில் கடந்துபோனோம். அவ்வோவியம் பற்றிய கட்டுரையொன்றை வாசித்தபோது அக்குறியீடுகள் மரபின் தொடர்ச்சியாகவும் மொழியின் ஆதியெழுத்தாகவும் அறியக் கிடைத்தது. இப்படி யாரேனும் எழுதிக்கொண்டிருக்கும் தேவை தமிழுலகத்துத்தின் முக்கிய தேவை.

எதாவதொரு உருவம் எங்கு சென்றாலும் பின்தொடர்வது போன்றதொரு மாயவிளைவு மனதளவில் அல்லது கண்ணளவில் தோன்றிக்கொண்டேயிருக்கும். தினமும், இல்லை... எப்பவாவது உடற்பயிற்சி செய்யும் பொழுதில் சுவரை நோக்கி நின்றுகொண்டு இயங்குவது வழக்கம். சுவற்றின் பளபளப்பை மீறி துருத்திக்கொண்டு நிற்கும் பொடிப்பொடி மண்கற்கள் புள்ளிகளாக மாறியும் சிறுசிறு வெடிப்புகள் கோடுகளாக உருவகம் கொண்டு வெளிப்படுத்தும் அல்லது உணரவைக்கும் சித்திரங்களை கண்ணால் வரைந்துகொண்டேயிருக்கலாம். இப்படி பல தருணங்கள். அலுவலக கழிப்பறையில் சிறுநீர்கழிக்கையில் அந்த "Tiles" பார்த்தால் அதில் நீளும் குழையும் வண்ணங்கள். சிதைந்துபோன சாலைகளை நிற்கும் பேருந்தின் சாளரம் வழி சந்தித்தல். வண்ணப்பூச்சிகள் உதிர்ந்துபோன பேருந்து இருக்கை, வீட்டுச்சுவர், மேம்பாலச்சுவர், பழங்கோவிலில் சிற்பம் தவிர்த்த கற்தூண் புள்ளிகள் கலவிக்குப்பின்னான போர்வையின் சுருக்குகள், மட்டையால் வெள்ளையடிக்கப்பட்ட சுவரில் ஒட்டிக்கொண்டிருக்கும் அதன் துரும்புகள் என நம்மோடு அருகிலிருப்பவை இவையே மேற்சொன்ன மாயவிளைவு. இதுதான்  அரூபங்களின் கிடக்கையா? இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.
அரூபம் மட்டுமே நவீனமா? நிச்சயமாக இருக்காது என்றே முன்னகர்வோம்.

தற்போது வெகுநாளாக வாசித்துக்கொண்டேயிருக்கும் "பாகீரதியின் மதியம்" புதினத்தின் பல பகுதிகளில் ஓவியங்களையும் வண்ணங்களையும் பற்றி சிந்திக்கும் முறையினை விவாதிக்கும் அனுபவம் நிறைந்திருக்கிறது. இதைப்பற்றி வேறொரு பதிவில் எழுதுகிறேன்.