திங்கள், 17 மே, 2021

ஒளிநிழலின் மாயம்

 மொத்தம் ஆறு மணி நேரம், மூன்று நாளாக மெல்ல மெல்ல சிக்கிய பொழுதில் வரைந்து முடித்தேன் இந்த வாரத்திற்கான ஓவியர் ரெம்ப்ரான்டினுடைய தன்னுருவப் படம். எந்த வண்ணம் பயன்படுத்துவது என்ற குழப்பம் இருந்து கொண்டேயிருந்தது, நீர் வண்ணமா, எண்ணெய் வண்ணமா, அக்ரிலிக் வண்ணமா என்ற பெரும் யோசனைக்குப் பின் அக்ரிலிக் பயன்படுத்தலாம் என்ற முடிவில் ஏற்கனவே வெள்ளை ப்ரைமர் அடித்து தயாரக வைத்திருந்த பெரிய அளவு கெட்டி அட்டைத் தாளில் அடிப்படை கோடுகளை வரைந்ததும், சிவப்பில் வெள்ளை கலந்தால் சரியாக இருக்கும் என்ற எண்ணத்தை துரத்தியடித்தது அப்படியொரு கலவையை பூசத் தொடங்கியதும், பிறகு தான் மஞ்சளை வெள்ளையுடன் கலந்து பரப்பினால் ஓரளவு ஏற்கக்கூடிய வண்ணத்தை காண முடிந்தது, இப்போது வைத்திருக்கும் பன்னிரண்டு வகை சிறுசிறு வண்ணக் குழல்கள் போதாது, முதன்மை வண்ணங்கள் அதிகமாக தேவை என்பதை. உணர்த்தியது.


பதினேழாம் நூற்றாண்டின் முக்கிய ஓவியர்களில் ஹாலந்தைச் சேர்ந்த ரெம்ப்ரான்ட் மிகவும் கவனிக்கத் தக்கவர், இவரது ஒளி நிழல் சார்ந்த உருவப்படங்களை மேலோட்டமாகக் காண்கையில் குறிப்பிட்ட வண்ணங்களுக்குள் அடக்கிவிடும் கண்கள் அதை நெருங்கி அணுகும் போது, இவரது தூரிகையின் தீற்றல் காட்டும் வண்ணங்களை கண்டு மனம் பூரிப்படையச் செய்கிறது. மனிதர்களை அவர்கள் சார்ந்த சூழல்களை வரைவதை விரும்பிச் செய்தவர். 


இவரது வாழ்வையும் படைப்புருவாக்கத்தையும் திரைப்படமாகக் காண கீழுள்ள தொடுப்பில் சென்று காணலாம்.

https://archive.org/details/Rembrandt

ரெம்ரான்ட் பற்றி சிறு காணொளிகள் தொகுப்பு

https://youtu.be/xxn6dAp1DuU



திங்கள், 10 மே, 2021

ஓவியர் ஆதிமூலம்

சிறுபிள்ளையில் எவருக்குமே உள்ள தன்மையோடு கையில் கிடைக்கும் எழுது பொருள் வழியே கோடுகளை கிறுக்கும் தனது ஆர்வத்தை அடுத்தடுத்து நகர்த்தும் எண்ணத்தில் மளிகைக் கடையை புறந்தள்ளி சென்னைக்கு பயணித்தவர் ஓவியர் ஆதிமூலம். பி.எஸ். செட்டியார் என்பவரது வழிகாட்டலில் சிற்பி தனபால் அவர்களை அடைகிறார். இவரது வழிகாட்டலில் ஓவியக் கல்லூரிக்குள் நுழையும் ஓவியர், பயிலும் காலத்திலேயே தனக்கென தனி பாணியை உருவாக்கி அதில் தொடர் பயணம் செய்தது போல புரிந்துகொள்ள முடிகிறது.

கோட்டுச்சித்திரங்களில் இவர் நிகழ்த்தியிருக்கும் நிழல் ஒளியில் கிட்டும் அதிகமான இருளுக்குள் மிளிரும் ஒளி, ஓவியத்தை காணும் பொழுதில் உள்ளிழுத்து நகரவிடாமல் செய்துவிடுகிறது. தத்ரூபமான படங்கள் தீட்டியிருக்கிறாரா எனத் தேடியதில் ஒரு பெண்ணின் முகம் தவிர்த்து எதுவும் கிடைக்கவில்லை. கோடுகளிலிருந்து வண்ணக் கலவை புரியும் அரூப ஓவிய முறைக்குள் சென்று தனது படைப்புகளை உருவாக்கியிருக்கிறார். இவரது சில படைப்புகளை "ஆதிமூலம் அழியாக் கோடுகள்" என்ற புத்தகத்தில் வெவ்வேறு ஆளுமைகளின் கட்டுரைகளோடும், பத்திரிக்கைகளில்  வெளிவந்த இவரது பேட்டிகளோடும் வெளியிட்டிருக்கிறார்கள்.

பயிற்சிக்காக இவரது இரண்டு ஓவியங்களை வரைந்து பார்த்ததில் இதுவரை செல்ல மறுத்த இருளுக்குள் சென்று மீண்ட உற்சாகமொன்று தோளில் செல்லமாக தட்டிவிட்டது.

காணொளி வடிவில்