திங்கள், 9 ஜனவரி, 2017

மரக்கிளைகளில் காகங்கள்

புத்தகங்கள் வாங்குவது மிகக்குறைவே ஆனாலும் அரங்குகளை சுற்றி வருவதும் படைப்புகளின் தலைப்புகள் என்னை வாங்கிச்செல் என ஏங்கி நிற்பதை கடந்து வருவது அத்தனை எளிதான காரியமில்லை, இருந்தும் முன்னரே குறித்து வைத்தபடி பாகீரதியின் மதியம், சித்திரங்களின் விசித்திரங்கள், நவீன தமிழ் இலக்கிய அறிமுகம் ஆகியவற்றை வாங்கிவிட்டாலும், பிகாசோவின் கோடுகள் கிடைக்காமல் போனது. உயிர்மையில் கூட இல்லை.

பாரதி புத்தகாலய அரங்கில் நுழையும் போது ஒருவர் புத்தகத்தின் பக்கங்களை புரட்டி அச்சிட்ட மிகச்சிறிய துண்டுத்தாளை சொருகி பின் கீழை வைக்கும்போது என் கண்களை வாங்கிக்கொண்டது அப்புத்தகத்தின் அட்டை ஓவியம். நெருக்கமான கிளைகள் உடைய மரத்தில் ஒன்றையொன்று எதிர்நோக்கியும் முன்பின் திரும்பியும் அடுத்தடுத்து காகங்கள் அமர்ந்திருக்கின்றன, பறக்கும் தருவாயில் ஒன்றுகூட இல்லை அல்லது அவை கண்களிலிருந்து மறைக்கப்பட்டிருக்கலாம். உயிர்ப்புள்ள ஓவியம். "டைட்டஸ் ஆன் ஃகெர் டெஸ்க் (Titus on her desk)" எனும் ரெம்ராண்டின் (Rembrandt) ஓவியத்தில் அவள் எதையோ ஆழ்ந்து கவனித்துக்கொண்டிருப்பது போலவே சில நிமிடங்கள் இந்த கல்குதிரை இதழின் அட்டையினை பார்த்ததாக ஓர் எண்ணம்

நம் மரபின் ஓவியங்களை அறிவதில் ஆர்வம் கொண்டு இயங்கத் தொடங்கியிருக்கிறேன், தமிழகத்தை பொறுத்தவரையில் சித்தன்னவாசலையும் மஹாராஷ்ட்டிராவின் அஜந்தா குகை ஓவியங்களும் மரபின் அறிதலுக்கு உரிய புரிதலை கொடுக்கும் எனத்தெரிகிறது. "The Transformation of Nature in Art" என்ற புத்தகத்தை முன்வைத்து பெருங்கட்டுரை ஒன்றுள்ளது வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

சனி, 7 ஜனவரி, 2017

புத்தக கண்காட்சி 2017

வருகிறது புத்தகத் திருவிழா
வாசமுள்ள வாசகர்களுக்காக !
பதிப்பாளர்கள் பட்டியலிட்டு
படையலிடுகிறார்கள் வாசகர்களுக்காக !

சுவாசிக்கும் காற்றையும் மறந்து
வாசிக்கும் வாசகர்களுக்காக !
வரவேற்ப்போம் !
வெற்றிபெற வாழ்த்துவோம் !

மூன்று வருடம் முன் எழுதியது.