சனி, 29 ஆகஸ்ட், 2026

சிறார் கதை - தமிழ் இந்து

 எனது பட்டம் பற்றிய சிறார் கதையினை தமிழ் இந்துவின் மாயா பஜார் பகுதிக்கு அனுப்பியிருந்தேன். சில மாற்றங்களுடன் கதை வெளியாகி இருக்கிறது. கற்றலின் மகிழ்ச்சி...



சனி, 15 ஆகஸ்ட், 2026

நற்கீறல் - ஐம்பத்தி இரண்டு

நற்கீறல் ஐம்பத்தி இரண்டாவது வாரத்தை நேற்று சென்னை பாண்டி பசாரில் மனித முகம் வரையும் பயிற்சியுடன் நிறைவு செய்தோம். இந்த ஒராண்டுப் பயணத்தில் வெளிப்புறத்திற்கு சென்று வரைவதற்கு முக்கியத்துவம் கொடுத்ததன் மூலம்,  வேறுவேறு அளவிலான தூவல் கோட்டோவியங்களில் மரம், நிலப்பரப்பு, கோயில் எனத் தொடர்ந்து வரையும் பொழுதில் கற்றுக் கொண்டவை ஏராளம். ஒவ்வொரு இலையும் கிளையும் நிலமும் வரையும் கோடுகளும் வெவ்வேறு தன்மையுடையவை அவை கொடுத்த இன்பம் அதனினும் மேலானது.

திங்கள், 10 ஆகஸ்ட், 2026

சாவுச் சங்கு

"என்னப்பா ஒழுங்கா ஊத முடியுமா"

"இன்னும் பன்னெண்டு மணி ஆவலடே..முடியுமா"

"எங்க ஊர்ல மணியடிச்சா போதும்னுட்டாங்க"

"சங்கு ஊதும் போது ஒருத்தேன் அந்த எடத்துலயே குளோசு"

"தம் கெட்டணும்லா, முடியாது ப்பா, அடைச்சிக்கிடும்"

"இன்னும் ஒருதரம் ஊதேன்..ஆளுவ வந்து சேரணும்லா"

"இனும செல்லுல போட்டுக்கிட வேண்டியதாங்"

"அதுலாங் ஊதுத மாதி வராதுலா"

"மத்தியானம் நேரமா வந்துரு.. பெறவு நீ பாட்டுக்கு ஊத்திக்கிடாத"

"என்னெ இன்னைக்கி ஒண்ணும் அம்புடல போலுக்கு"

"அர அடிச்சிட்டுத்தான் நிப்பான், இல்லனா வேல நடக்குமாங்கும்"

ஏற்றமும் இறக்கமுமாக குரல்கள் ஏனோதானோவென்று வந்து கொண்டிருந்தது ப்ப்ப்ப்ப்ப்....... ப்ப்ப்ப்ப்ப்...........ப்ப்ப்ப 
ப்ப்ப்ப்ப்ப்....... ப்ப்ப்ப்ப்ப்...........ப்ப்ப்ப 
ப்ப்ப்ப்ப்ப்....... ப்ப்ப்ப்ப்ப்...........ப்ப்ப்ப 
என்ற சங்கொலிக்கு இடையிடையே.

ஒலிப்பு முடிந்ததும் தானொரு திரைப்படத்திற்காக சங்கு ஊதிய கதையை பிய்த்துப் பிய்த்து சாவு வேலைக்கிடையே சொல்லிக்கொண்டிருந்தார் முருகன்.

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

நற்கீறல் 50

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நாங்கள் நற்கீறல் நிகழ்விற்காக வெளிப்புறத்திற்குச் சென்று வரைந்து வருகிறோம். இந்த வாரம் வழக்கம் போல ஒரு இடத்திற்குச் சென்று வரைவதோடு நிறுத்திக் கொள்ளாமல் இந்த நிகழ்வை ஒரு பயணமாகவே மாற்ற நினைத்தோம். அதற்காகக் குன்றத்தூரில் இருந்து கிளம்பி திருப்பெரும்புதூர் சாலை வழியாக சோமங்கலம் அடைந்து, அங்கிருந்து படப்பை நோக்கி செல்லும் வழியெங்கும்‌ கிராமங்களில் உள்ள வீடுகள், கோயில்கள், நிலப்பரப்பு, மரங்கள், குளங்கள், மாடுகள் என அனைத்தையும் பார்த்து வரைந்து பழகினோம்.

 இவை அனைத்தையும் ஒரே நாளில் எப்படி வரைந்து முடித்துவிட்டு வர முடியும் என்று வினா எழலாம். ஆனால் ஒரு படம் வரைவதற்கு ஒரு நிமிடத்திற்கு மேல் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று நாங்கள்  முடிவு செய்தோம்.  ஒரு நிமிடத்திற்குள் எந்த அளவுக்கு வேகத்துடன் கோடுகளைக் கீறுகிறோம் என்பதில் கவனம் குவித்தோம். இந்த கோட்டோவியங்கள் எல்லாம்  என்னுடைய எளிய கிறுக்கல்கள். இவை முழுமையடையாமல் இருக்கலாம், ஆனால் இக்கோடுகளின் வீச்சும் எங்களது மனநிலையும் உணர்வோடு ஒன்றிப் போன நொடிகள் அடுத்த பயணத்திற்கான உந்துதலை தந்திருக்கின்றது.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

அந்த vibe

ஒருநாள் நாங்கள் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள இஸ்கான் கோவிலுக்கு மதியம் மூன்று மணிக்குச் சென்று படியேறினோம். மாலை நான்கு மணிக்குத்தான் நடை திறப்பார்கள் என்று சடைமுடியுடன் இருந்த கிருஷ்ண பக்தர் ஆங்கிலத்தில் "4' O clock" என்று சொல்லி விட்டு அவரது துணிப் பைக்குகள் எதையோ துழாவினார். வெளியில் வந்து அங்கிருந்த வேப்பமரத்தின் அடியில் அமர்ந்து உரையாடினோம். "இந்த இடம் "vibe" ஆக இருக்கிறது" என்றார் எங்களில் ஒருவர். உடனிருந்தவர்களில் இருவர் ஆமாம் என்பது போன்றே தலையசைத்தனர். எனக்குப் பொதுவாக பிடித்தது பிடிக்காதது பற்றி யாராவது கேள்வி எழுப்பினால் மனம் ஒருவித குழப்பத்தில் ஆழ்ந்துவிடும். அத்தாடு இப்படி ஒருவர் தன் மனதிற்கு பிடித்த இடமாக இருப்பதை மேற்சொன்ன சொல்லால் உணர்த்த முன்வருகிறார் என்றதும் திக்கென்றிருந்தது.

மற்றொரு நாள் வேறொரு இடத்தில் நாங்கள் கூடுகையில் (எந்த இடத்தில் என இப்போது நினைவில் இல்லை ஆனால் இதுவும் ஒரு கோவில்)  அவரே சொல்கிறார் " இஸ்கானுக்குப் பிறகு இந்த இடம் தான் 'vibe' ஆக இருக்கிறது" என்று. வரையும் கோடுகளைத் தவிர்த்து அங்கும் இங்கும் எந்தப் புறக்காரணியும் எனது அகத்தைத் தீண்டவில்லை. உண்மையில் புறக் காரணங்களால் நம் அகம் தூண்டப்படுமா என்றால் ஆமாம் என்றே சொல்லலாம். அங்கே எல்.ஆர்.ஈஸ்வரி பாடல் ஒலித்திருந்தால் கொஞ்சம் தலையும் கை காலும் உதறல் எடுத்திருக்கும். அந்த 'vibe'.