கொரோனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொரோனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 8 ஆகஸ்ட், 2022

தொடர் வரைவு ஆறு

 இன்று காலை எழுந்ததும் சாரல் பொசுங்கி தெரு மெல்ல தன் மீது நீர் மொட்டுக்களை கோலத்தின் புள்ளியாக்கி பரப்பியிருந்தது பார்வையில் விழவும் வெளியே செல்ல மனமின்றி வாசிக்கலாம் என மூன்றாவது வரியில் இருந்தபோது மூடிவிட்டு நடக்கப் போய்விட்டு வந்ததும் ஒரு கையளவுள்ள வரைவுத்தாளில் எதிரேயிருக்கும் புங்க மரத்தைக் கண்டேன்.


படம் ஒன்றை கண்டு வரைந்தது இவ்வம்மாவும் இக்குழந்தையும்.

கொரோனா முடக்கத்திற்கு பிறகு இரு ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணாநகர் கோபுரப் பூங்காவிற்கு (tower park என்று சொல்வார்கள்) சென்று ஆசானும் நானும் நேற்று வரைந்தோம். இது என்னுடைய பங்களிப்பு. 

கடந்த பதிவில் எண்ணெய் ஓவியம் வரையத் தொடங்கி விட்டதாக பதிவிட்டிருந்தேன் அதன் அடுத்தடுத்த படிநிலையில் நேற்று வரையிலான படம். கோட்டு வரைவுக்குப் பின் முதல் நிலை வண்ணமிடுதலை நேரலையில் முகநூலில் காண்பித்திருந்தேன். அதற்கான சுட்டி https://m.facebook.com/story.php?story_fbid=757354832152752&id=100000025390787

இன்று காலையில் கொஞ்சம் வரைந்திருந்தேன், நாளை இதன் அடுத்த கட்டத்தினை பகிர்கிறேன். 



புதன், 13 மே, 2020

கதைகள் உருவாக்கும் பாதை

மூத்தவள் (ஜெபரத்திகா) நடக்க ஆரம்பிக்கும் முன்னால் நெஞ்சின் மீது படுத்துக்கொண்டு அணில் போல என் கண்களை அவதானிப்பாள், சிரித்தால் அவள் வெடித்துச் சிரிப்பாள். கி.ரா-வின் தாத்தா சொன்ன கதைகள் (தலைப்பு சரியாக நினைவில் இல்லை அதோடு இப்புத்தகம் இப்போது யாரிடம் உள்ளது என்றும் நினைவில்லை) என்ற புத்தகத்தில் மொச்சைக் கொட்டையின் வயிறு வெடிப்பது போல் ஒரு கதையின் காட்சி வரும், அதைச் சொல்லி "ட்டமார்" னு வெடிச்சிட்டுன்னு சொன்னால், உரத்தச் சிரிப்பொலி கேட்கும், பொக்கை வாய் சிரிப்பு.

வேலை முடித்து வீடடைய பத்தரைக்கு மேல் ஆகிவிடுமென்பதால், அப்போதெல்லாம் பெரும்பாலான நாட்கள் உறங்கிவிடுவாள், பள்ளி செல்லும் நாட்களில் மட்டும். அதற்குமுன் அதாவது பள்ளியில் சேரும் முன், சில இரவுகள் பன்னிரண்டு மணிவரைக்கும் நீளும் கதையாடலும் விளையாட்டுமாக, இப்போது இரு மாதமாக தொடர்ந்து வீட்டிலிருந்து பணி செய்வதால் ஒன்பதரை மணிக்குப் பாய் விரித்துவிடுவது வழக்கமாகி விட்டது. 

ஒவ்வொரு நாளும் கதைப் பேச்சிற்கு பிறகே உறக்கம் என ஆகிவிட்டது, இளையவளும் (இயல்) இந்த கதைப் பொழுதில் இணைந்துவிட்டாள் வெகு இயல்பாக இவளின் பெயருக்கேற்ப, குழந்தைகளுக்கென வாங்கிய புத்தகங்கள் பெரும்பாலானவை அதன் முகமிழந்து, பின் கை கால் என அத்தனை அங்கங்களும் அற்றுப் போயின இவள்களின் சாகசத்தால், எஞ்சியது குன்றத்தூர் பாவேந்த பள்ளியின் சில புத்தகங்கள், அவை வண்ணமும் கிறுக்கலும் பெற்று கிழிதலிலும் தோற்கவில்லை. மிஞ்சியவை சில கதைப்படங்களும் பாடல்களும்.

சில கதைகளை நானே உருவாக்கி நேரத்திற்கேற்ப கதையை நீட்டி முழக்குவேன், சலிப்பு தட்டிவிடும் பொழுதில் முதல் காட்சியை நானும் அடுத்த காட்சியை அவளுமாக மாற்றி மாற்றி உருவாக்குவோம், இந்த மாதிரியான கதை உருவாக்கலுக்கு முன் ஓரிரு குட்டிக் கதைகளை அவளுக்கு பரிசளிக்க வேண்டும், (சமயத்தில் குட்டிக் கதைகளினூடே தூக்கம் அவளை அள்ளி அணைத்துக் கொள்ளும்). அதற்கு சிறுவர்களுக்கான எழுத்தாளர் விழியன் "வாட்சப் (புலனம்)" வழியே நாள் தோறும் பதிவிடும் கதைகளையும், பாவேந்தர் பள்ளியின் முதல்வரும் கதைசொல்லியுமான ஐயா வெற்றிச்செழியன் அவர்களின் கதையாடல் வலையொளித் (யூ ட்யூப்) தொடரில் சொல்லப்படும் கதைகளையும் வாசித்தும் கேட்டும் மகள்களிடம் கடத்துகிறேன்.

இரண்டு நாட்களாக ரத்திகா கேட்கிறாள் "அப்பா இந்த சிங்கங்கத மாட்டுக்கத மீன்கத அப்றோம் காக்கா கதல்லாம் எங்கப்பா படிச்ச" 

"புத்தகத்துல தாம்டே படிச்சேன்"

"எனக்கு காமியேன்"

"அது செல்லுல இருக்குமா, கடையெல்லாம் துறந்தொடனே புத்தகமா வாங்கித்தாரேன் சரியா, இதுல எழுத்தா இருக்கு பாரு, படமே இல்ல, ச்சீ" என்று செல்லை நீட்டியதும் சிரித்துக்கொண்டே ஓடினாள். 

அப்போ இவள்கள் செல்பேசியில் எதுவுமே பார்ப்பதில்லையா எனக் கேட்டால் அதுவும் உண்டு, அதற்கான அடாவடித்தனங்களுமுண்டு. 
@

எழுத்தாளர் விழியனின் கதைகளை தினமும் வாசிக்க, உங்கள் பெயர் மற்றும் ஊர் உடன் ஒரு வாட்சப் தகவலை "90940 09092" எண்ணுக்கு அனுப்புங்கள். கதைகள் கொட்டும்.

ஐயா வெற்றிச் செழியன் அவர்ளுடைய கதையாடல் தொகுப்பில் இதுவரை இருபத்தியாறு கதைகள் வந்துவிட்டது, அதற்காக சொடுக்குங்கள் https://www.youtube.com/playlist?list=PLh6l104YXvxLkFyFG3NECtykhyqX99DgU

கதைகள் ஒலிக்கட்டும்

சனி, 25 ஏப்ரல், 2020

பால் பால்

மனிதர்கள் ஏன் பால்... பால் என்று பித்தர்கள் போல அலைகிறார்கள் எனத் தோணும் அவ்வப்போது.  பிறப்பிலிருந்து கல்லூரி காலம் வரை ஊரிலிருந்த பொழுதுகளில், காலையிலெழுந்ததும் செல்லத்துரை பெரியப்பா வீட்டுக்குச் சென்று கால் பாதங்களின் இடுக்கிலுள்ள பானையில் தயிரை  மத்து கொண்டு வெண்ணையை பிரித்தெடுக்கும் பெரியம்மையிடம் நூறு மில்லி பால் வாங்கி வருவேன். கருப்பட்டி காப்பியை வெண்மையாக்க பாலை கொஞ்சமாக ஊற்றித் தருவாள் எங்கள் அம்மை. தேநீர் கடைகளில் பாலாகிய வென்னீரில் காப்பிக்கொட்டை வடிநீர் அல்லது தேயிலைத் தண்ணீரை சிறிது கலந்து குடிக்கத்தரும் பழக்கமுண்டு இது முற்றிலும் வீட்டுப் பழக்கத்திற்கு எதிர்மறையானது. இம்முறையிலான கடைப் பழக்கம் திருமணம் போன்ற மற்றைய விழாக்களின் போதும் புழக்கத்தில் இருந்தது.

நகரத்து வீடுகளில் 2011-ம் ஆண்டு வரை காப்பியோ தேநீரோ அருந்தியதில்லை அல்லது நினைவிலிருக்கும் படியான அளவில் எண்ணிக்கையில்லாமல் இருக்கலாம், பின் அக்கா வீடுகளிலும் இம்மாதிரியான கடைப்பழக்கம் லிட்டர் கணக்கில் பால் புழங்குதல் எல்லாம் நிகழ்ந்தது. அலுவலகத்தில் பால் பற்றிய பேச்சு எழும் போது எந்த நிறுவனத்தின் பால் சிறந்தது என்று கேள்வி வரும், பாலை கொழுப்பு நீக்கியது, மிதமான கொழுப்புடையது, கொதிக்க வைத்தது என வகை வகையாகப் பிரித்து விற்பனை செய்யும் அரசினுடைய வழியே தவறென்று வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள். இதில் சிறந்தது எதுவென எங்கிருந்து கூறுவது. அப்படின்னா பாலுக்கு என்ன செய்வீங்க, இப்போதான் தெருவில் நேரடியாக வந்து விற்கிறார்களே அதை வாங்கலாமே என இன்னொரு கேள்வி வரும் "அய்யா பால் வேண்டவே வேண்டாங்க" என்றால் அப்போ கால்சியத்துக்கு என்ன பண்ணுவீங்கம்பாறு இன்னொருத்தர், பாலில் மட்டுமே கால்சியம் இருக்குன்னு யாராவது சொல்லியிருக்காங்களா. இப்படியே போகும் பாலுக்கான பாடு. காலையில் வாயிலிருந்து வரும் கெட்ட வாடையின் மிகுதிக்கு காரணம் நுரை ததும்பும் பால் தான் என அதை வாங்குவதை நிறுத்தியுள்ளான் நண்பனொருவன், ஆய்வுக்குரியது.

கடந்த ஞாயிறன்று நாங்கள் குடியிருக்கும் பகுதியில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் சென்று வர அனுமதியளிக்கும் வகையில் விதிமுறைகளோடு நீல நிற அட்டையொன்று வழங்கப்பட்டது, வாங்கிக்கொண்டு வரும் வழியில் பின்னாலிருந்து வந்த தனிக்குரலொன்று கேட்டுத் திரும்பினேன் , புதன் கிழமையும் சனிக்கிழமையும் மட்டும் காலையிலிருந்து மதியம் வரை ஒருவர் மட்டும் வெளியில வரலாம்னு சொல்லுதாங்க அப்படின்னா தினமும் கடைக்குச் சென்று பால் வாங்குதவங்க என்ன செய்வாங்கன்னாரு. இதுவெல்லாம் ஒருமாதிரி ஒருத்தரையொருத்தர் திருப்தியடைய வைக்கும் சம்பிரதாயங்கள் மற்றபடி பக்கத்துக் கடைகளுக்கு நாம போய் வரலாம்னுதான் நினைக்கிறேன் என்றதும், கடைக்காரன் சொன்ன நேரத்துக்குத்தான் வரணும் இல்லன்னா பொருள் கிடையாதென்றுச் சொன்னால் என்ன செய்ய முடியும் என்றார், நல்ல கேள்வி என்ன நடக்குன்னு பாப்போமென்று சொல்லிவிட்டு பிரியும் தெருவில் வலப்பக்கம் நானும் நேராக அவரும் நடந்தோம். பொருட்கள் தட்டுப்பாடு அதிகமாகும் போது அவர் விருப்பம் போல் விலையை அதிகரிக்கும் கடைக்காரர் இந்த நேரத்திற்கு மட்டும் தான் பொருள் தருவேன் என்று சொல்லிவிடுவாரா என்ன.

முந்தாநாள் பத்திரிக்கையாளர் ஒருவருக்கு தொற்று உறுதியானதும், எங்கள் பகுதிக்கான வாசல்கள் அத்தனையும் இரும்புத் தட்டிகளால் அடைத்துப் பூட்டப்பட்டன. தட்டியின் ஓரம் உள்ள இடைவெளியில் பால் வாங்கலாமென பெரியவர் ஒருவர் தெருவில் விசாரிப்போரிடம் நேற்று காலையில் கூறிச் சென்றார். தெருவில் பிரிந்து போனவரின் எண்ணம் என்னவாக இருக்குமென எண்ணிப் பார்க்கிறேன், நேற்றுவரை இருந்த அனுமதி கூட இன்றில்லை நாளை என்னவாகிப் போகுமோ. இதோ நாளை முதல் முழு ஊரடங்கு உத்தரவு.