புதன், 29 ஏப்ரல், 2015

காட்டிலே மறுபடியும் வீடாம்

காடாம்
காட்டிலே வீடாம்
வீட்டிலே ஆளாம்
ஆளிலே மனமாம்
மனத்திலே ஆசையாம்
ஆசையிலே மண்ணாம்
மண்ணிலே மரமாம்
மரமெல்லாம் காடாம்
காட்டிலே மறுபடியும் வீடாம்

புதன், 22 ஏப்ரல், 2015

விழித்துக்கொண்ட விரல்கள்

சிறு வயதின் பள்ளிப் பாட வேளையில், வகுப்பறைத் தூண் மறைவில்  ஆசிரியருக்கு தெரியாமல் மறைந்திருந்து, குறிப்பேட்டில் இருக்கும் படங்களையும், பென்சில் டப்பாவில் இருக்கும் படங்களையும் வரைந்து நண்பர்களோடு பகிர்ந்து கொண்டிருந்திருக்கிறேன். அதன் பிறகு பருவ வயதில் சில கண்களை மட்டுமே வரைந்து கொண்டிருந்த எனது பேனா சில வருடங்கள் உறங்கிக் கொண்டிருந்தது.

இப்பொழுது ஸ்மார்ட் ஃபோனின் வருகை எனது விரலையே பென்சிலாகவும், வண்ணத் தூரிகையாகவும் மாற்றியிருக்கிறது, முதலில் இருக்கும் முகம் போட்டோஸாப் மென்பொருளின் உதவியோடு கணினியில் வரையப்பட்டது, மற்ற அனைத்துப் படங்களுமே சூப்பர்நோட் எனப்படும் மொபைல் மென்பொருள் உதவியோடு வரையப்பட்டது.



இந்த பையனின் உருவம் நானில்லை என்பதை தெளிவோடு முதலில் கூறிக்கொள்கிறேன், எனது சோம்பேறித்தனத்துக்கு முடிவுகெட்டுவதற்கு போட்டோஸாப் மென்பொருளின் உதவியோடு முதன் முதலாக வரைந்த ஓவியம், இது தீட்டப்பட்ட, இரவின் விளிம்பில் இருந்த பனிக் காலை பொழுதில் என் கண்களின் இமைகள் மூடியதாக எனக்கு நினைவில்லை. இரண்டரை மணிநேரம் என்னை நகர விடாமல் பிடித்துக் கொண்டது.

இந்த பறவையும் மனித முகத்திற்கான மாதிரியும் எனக்கு கிடத்த இடம், நான் சென்னையில் முதல் இரண்டு வருடம் வசித்த, வசித்த என்பதை விட வாழ்ந்த அறையின் கழிப்பறை சுவரின் சுண்ணாம்பு, இப்படி ஒரு கோடுகள் நான் வரைய  உருவம் கொடுத்திருக்கிறது.

காய்ந்து போன ஒரு மரத்தின் கிளைகளை உருவமாக்கியது..

எனது அக்காள் மகன் பிறந்தநாளின் போது, அவனை அல்லாமல் அவன் போல் இருப்பதாக எண்ணிக் கொண்டு கோடுகள் போட்டது.
எதையும் சிந்தனை செய்யாமல் விரலை அதன் போக்கில் நடமாட விட்டதில் விழுந்த கோடுகள், இதனை முகநூலில் பதிவு செய்தபோது என்ன உருவம், என்ன உருவம் என்று கேட்ட சில நண்பர்களை, நீங்களே ஒரு பெயர் வைத்துக் கொள்க எனக் கூறிவிட்டேன், உங்களுக்கு தோன்றும் பெயர்களை பரிந்துரை செய்க நண்பர்களே...

வியாழன், 16 ஏப்ரல், 2015

சாக்கடை புழு

நீரில்லாத
தண்ணீர்ப்பந்தல்

சிரிக்கும்
அரசியல் முகங்கள்

நேற்றைய மழையில்
தேங்கியநீர்

சாமானியனெனும்
சாக்கடைப்புழு

திங்கள், 6 ஏப்ரல், 2015

இறுக்கம்

இரண்டுநாள் மழை ஓய்ந்த 
காலைப்பொழுதின் ஐந்தரை மணி
இருக்கைகள் நிறைந்திருந்த 
சென்னை நகரப் பேரூந்தில் 
"நினைப்பதெல்லாம்.... நடந்துவிட்டால்.....
தெய்வம்.. ஏதுமில்லை....."
என்ற பீபி.சீனிவாசின் குரலுக்கு 
 இறுக்கத்தை 
சுமந்தவர் முகத்தை 
குளிர்காற்று தன்தொழில் மறந்து 
விலகிப்போனதும்
பாடல் வரிகளும் 
பார்...மகளே....பார்..
என மாறிப்போனது....

இன்னொரு மழைநாளின் 
காலைப்பொழுதின் ஐந்தரை மணி 
நெல்லை-தென்காசி பேரூந்தில் 
ஒலித்த 
"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் 
வாசல் தோறும் வேதனை இருக்கும்"
என்ற பீபி.சீனிவாசின் குரலுக்கு 
முருகேசன் அண்ணாச்சி
உதிர்த்த சிரிப்பில் 
அவரின் இறுக்கமும் தணிந்திருக்கக்கூடும்...