புதன், 4 ஏப்ரல், 2018

கோடுகளும் நிழல்களின் சேர்க்கையும்






இசை வாகனன்


உட்கார்ந்து கதவை அடைத்ததும் ஒலிச் சரட்டினை (சரடு-Wire) கையில் தந்து பாட்டு போடுங்க கேக்கலாமென்றார். எனக்குள் ஆச்சரியம் பெருகி 6249 எண் கொண்ட வாகனமும் ஓட்டுனரின் முகமும் சடுதியில் தோன்றி மறைந்தது, ஏனென்றால் இதற்கு முன் ஓலா தொடுதிரையை காண்பித்து அதிலுள்ள பாடல்களை தேர்வு செய்து கேட்க அவர் சொன்னதும் அதே போல் இல்லையென்றாலும் அதையொற்ற நிகழ்வென்பதால் சிறு நினைவோட்டம். கடந்த ஓரிரு ஆண்டில் இப்படியொருத்தரும் கேட்டதில்லை.

அவர் பாடல் போடச் சொன்னதும், என்னிடம் பழைய பாடல்கள் தான் இருக்கிறது அது பிடிக்குமோ என்னவோ என்றேன். இப்போதிருப்பது நாமிருவர் தான் அதனால் எதிர்ப்பு எதுவும் வரப்போவதில்லை என தெளிவாகச் சொல்லிமுடிக்கவும் ஒரு பாடலை ஒலிக்க விட்டேன், இதுவரையில் சந்தித்திராத அவரது முகமும் உள்ளமும் ஒருசேர சந்தித்தில் அதற்கேற்றதொரு பாடலிலே விரல் பதிந்தது. அடுத்தடுத்த இரண்டு பாடல்களுக்குப் பின் “அப்பனென்றும் அம்மையென்றும்” என ஒலிக்கத் துவங்கவும் சத்தத்தை மெல்ல உயர்த்தி புன்னகைத்து அனுபவித்தார். ஒலிக்காமல் கிடந்த பேழைகள் உற்சாகமடைந்த உணர்வு எனக்குள்.

ஒரிரு பாரதி பாடல்களுக்குப் பின் இறுதியாக “தீர்த்தக் கரையினிலே” எனும் பாரதி பாடல் ஒலிக்கவும், எஸ்.பி.பி யோட பழைய குரலில்லியா என்றார், நான் மெல்ல புன்னகைத்து ஆரம்ப காலகட்டமாக இருக்கக்கூடும் என்றேன். பாடல் முடியவும் அலுவலக நுழைவாயில் தொடங்கவும் சரியாக இருந்தது. இவரது வாகன எண்ணும் நினைவில் நிற்கக் கூடும்.